புதன், 7 டிசம்பர், 2011

கேள்விகள் [சிறுகதை]

முனைவர் பரமசிவம் படைத்து வழங்கும்.....

                                       உணர்தல். [சிறுகதை]

லட்சோப லட்ச மக்களால் ‘கடவுள் அவதாரம் ‘ என்று போற்றப்படும் அந்த ‘மகான்’ அலங்கரிக்கப் பட்ட’அரியணை’யில் அமர்ந்திருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் சீடர்கள்.

மகானிடம் ‘அருளாசி’ பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம், அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; அவர் யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக் கொண்டு ஒரு ‘மனிதன்’ அவர் எதிரே வந்து நின்றான். பல நாள் காத்திருந்து, சிறப்பு அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருந்தான். ‘இவன் படித்தவன்’ என்று சொல்லத் தக்க தோற்றம் கொண்டவன். ஒரு முறை மகானின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான்.

“மகானே, எனக்குள் சில சந்தேகங்கள். விளக்கம் பெறலேன்னா பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு” என்றான்.

வதனத்தில் மெல்லிய புன்னகை படர, ”சொல்” என்பது போல லேசாகத் தலையசைத்தார் மகான்.

“தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். ஏனோ என்னால் நம்ப முடியவில்லை. அந்தக் கடவுளை ஒரே ஒரு முறை காட்ட முடியுமா?” என்றான் பணிவான குரலில்.

“கடவுளைப் பார்க்க முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. உணர மட்டுமே முடியும். அதற்கு மனம் பக்குவப்பட வேண்டும்”

“ஒவ்வொரு உடம்புக்குள்ளேயும் ஆன்மான்னு ஒன்னு நுழைஞ்சிட்டு, உடம்பு அழியும் போது வெளியேறுவதா சொல்றாங்களே, அந்த ஆன்மாவையாவது பார்க்க முடியுமா?”

“முடியாது; உணரத்தான் முடியும்”

“கடவுள் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவியிருப்பதாகத் தங்களைப் போன்ற ஞானிகள் சொல்றாங்க. என்னுடைய உடம்பிலும் கடவுள் இருப்பார்தானே? அவரைத் தெரிந்து கொள்வதற்கான வழிவகைகளை விளக்கிச் சொல்லுங்கள் மகானே.”

“வழி வகைகள் என்று ஏதும் இல்லை. அவரைச் சோதிப்பது பாவ காரியம். கடவுள் உன்னுள் இருப்பதை உணரத்தான் முடியும்.”

“நன்றி மகானே” என்று அவரைத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுக் கேட்டான் அந்த மானுடன், “தங்களைக் கடவுளின் அவதாரம் என்கிறார்கள். அதற்குண்டான ஆதாரத்தைத் தாங்கள் கூறி அருள வேண்டும்.”

மகானின் முகத்தில் சிறிதே சினம் தோன்றி மறைந்தது.

“ எம்மிடம் ஆதாரம் கேட்பது அபவாதம். நாம் அவதாரம் என்பதை உணர மட்டுமே முடியும். உணர முயற்சி செய். ஒரு நாள் அது சாத்தியப்படும்”

”பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறு பிறப்பு என்று இப்படி ஏதேதோ சொல்றாங்க. என்னால் நம்ப முடியல. நம்பிக்கை பிறக்க நான் என்ன செய்யணும்? தாங்கள்தான் வழி காட்டணும்.”

சில கணங்கள் மவுனத்தில் ஆழ்ந்த மகான் சொன்னார்: “முதலில் கடவுள் இருப்பதை உணர முயற்சி செய். கடவுள் இருப்பதை உணர்ந்தால்... நம்பினால், இவற்றையும் உணர முடியும்; நம்ப முடியும்”

“ஆகட்டும்” என்பது போல் தலையசைத்த மனிதன், “கடைசியாக ஒரு கேள்வி ஐயனே. கடவுளை உணரத்தான் முடியும் என்று சொல்கிறீர்கள். தங்களால் பிறருக்கு உணர்த்தவே முடியாதா?”

“முடியாது”.

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?”

“உணர்ந்திருக்கிறேன்.”

“தாங்கள் உணர்ந்ததைப் பிறர் உணரும்படியாக விளக்கிச் சொல்வது சாத்தியமே இல்லைதானே?”

“சாத்தியமில்லை.”

“தாங்கள் உணர்ந்ததாகச் சொல்லும் கடவுளைப் பிறருக்கு எவ்வகையிலும் உணர்த்த முடியாத போது, கடவுளை நம்பும்படி மக்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ஐயனே?”

மகானின் வதனம் சிவந்தது. உதடுகள் துடித்தன. ”நம்பினால் உனக்கு நற்கதி உண்டு. நம்பாவிட்டால் நரகத்தில் கிடந்து உழல்வாய். போய் வா” என்ரார்.

“போகிறேன். மீண்டும் தங்களிடம் வரமாட்டேன்.என்னை மதித்து என்னோடு உரையாடியதற்கு நன்றி மகானே” என்று சொல்லி விடை பெற்றான் அந்த மனிதன்.

========================================================================




திங்கள், 5 டிசம்பர், 2011

ஒரு நாத்திகன் அழைக்கிறான்.

                                           ஒரு நாத்திகன் அழைக்கிறான்

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக அனுமானித்து, அவரைப் போற்றி வழிபடுகிற அனைத்து மதங்களுமே, அவருக்குரிய முக்கிய குணங்களில் ஒன்றாகக் ‘கருணை’யைக் குறிப்பிடுகின்றன.

‘கருணை வடிவானவன் கடவுள்’

ஓரளவு சிந்திக்கத் தெரிந்த காலக் கட்டத்தில், பேரழிவுகளை உண்டுபண்ணிய வெள்ளப் பெருக்கு, பெரு நெருப்பு, சூறாவளி, கடல்கோள் [சுனாமி], போன்றவற்றைக் கொடிய தெய்வங்களாகக் கருதி அஞ்சி நடுங்கியது மனித குலம்.

சிந்திக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில், அறிவு வளர்ச்சியில் முன்னிலை பெற்றவர்கள், அனைத்துப் பேரழிவுச் சக்திகளுக்கும் மேலாக எல்லாம் வல்ல ஒரு பேராற்றல் இருப்பதாகச் சொல்லி, அதைக் ‘கடவுள்’ ஆக்கினார்கள்.


அந்தக் கடவுளை, ’வெறும் சக்தி’ எனச் சொல்ல மனமில்லாமல், அன்பு, அருள் [கருணை], பரிவு, இரக்கம், அண்டினோரைப் பாதுகாத்தல் என்று அனைத்து நற்குணங்களையும் அவரின் தனி உடைமை ஆக்கி மகிழ்ந்தார்கள்.

அவரை வழி பட்டால், வாழ்வில் துன்பம் விலகி இன்பம் மலரும் என்று நம்பினார்கள். அறிவு வளர்ச்சியில் பின் தங்கிய...சிந்திக்கும் ஆற்றல் குறைந்த மக்களை நம்ப வைத்தார்கள். அவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார்கள்.

இது, மனித குல வரலாற்றில் கடவுள் நம்பிக்கை உருவானதன் ஆரம்ப நிலை மட்டுமே.

இதை எதிர்த்து, ‘கடவுள் பொய்; இயற்கையே மெய்’ என்று எதிர்வாதம் எழுந்தது; மதங்கள் உருவானது பற்றியெல்லாம் சொல்லப் புகுந்தால், அது நீளும்.

அதை விவரிப்பது நம் நோக்கமன்று.


‘கடவுள் கருணை வடிவானவர்’ என்று சொல்லப் பட்டதை...சொல்லப் படுவதை விவாதிப்பது மட்டுமே நம் விருப்பம்.

இது பற்றி விவாதிக்கத்தான் இன்றைய மதவாதிகளையும் ஆன்மிகவாதிகளையும் அன்போடு அறைகூவி அழைக்கிறோம்.

அனைத்து மத குருமார்களே, பரப்புரையாளர்களே, ஆன்மிகச் செம்மல்களே........

நீங்கள் நம்பும் கடவுள் கருணை வடிவானவர் என்பதற்கு, உங்கள் முன்னோடிகள் சொல்லிப் போன அதே காரணங்களைத்தான் நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.


‘இன்பங்கள் நிறைந்த உலகைப் படைத்து,அந்த இன்பங்களைத் துய்க்கும்
பேற்றை உயிர்களுக்கு வழங்கியவர் கருணை வடிவான கடவுள்’ என்று சொன்னார்கள். நீங்களும் சொல்கிறீர்கள்.

நீங்கள் படைத்த கடவுளைப் போலவே.....ஏன், அவரை விடவும் நீங்கள் கருணை நெஞ்சம் படைத்தவராக இருக்கலாம். நாம் மறுக்கவில்லை. ஆனாலும், நாம் எழுப்புகிற வினா ஒன்று உண்டு.


இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்களை உள்ளடக்கிய உயிர்கள் அனுபவிப்பது இன்பம் மட்டும்தானா? துன்பமும்தானே?


இவற்றில் எது அதிகம்?

நடுநிலை உணர்வுடன், ஒரு முறையேனும் சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?


கருணைக் கடலான உங்கள் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களை நெஞ்சுருகச் சொல்லிச் சொல்லி, ஆனந்தப் படுவதற்கும், அவன் பெருமைகளை வியந்து துதி பாடுவதற்கும், விழாக்கள் நடத்திக் குதூகளிப்பதற்குமே உங்களுக்கு நேரம் போதவில்லை. இதற்கெல்லாம் ஏது நேரம்?!

இப்போதாவது சிந்தியுங்கள்.

உயிர்கள்...மனிதர்கள் அதிகம் அனுபவிப்பது இன்பத்தையா, துன்பத்தையா?
[அவையவை...அவரவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணீயத்தைப் பொறுத்தது என்ற அனுமானம் வேண்டாம். எதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். கண்ணால் காணும் நடைமுறை வாழ்க்கையைக் கணக்கில் வையுங்கள்]

“இன்பமே’ என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

இயற்கை அழகை அனுபவிப்பது இன்பம். அது எழுப்பும் இன்னோசைகளைக் கேட்பது இன்பம். உண்பது இன்பம். உறங்குவது இன்பம். நறுமணங்களை நுகர்வது இன்பம். ஆண் பெண் இணைவது மகத்தான இன்பம். மழலைச் செல்வங்களைத் தழுவுவது அலுக்காத இன்பம்........

இவை அனைத்திற்கும் மேலாக...........................


உள்ளம் உருக, உடம்பு சிலிர்க்க, நா தழு தழுக்க ‘அவன்’ கருணையை நாளெல்லாம் பாடிப் பாடிப் பரவசப்பட்டுப் பெறுகிற ‘பேரின்பம்!

இப்படி நீங்கள் இடும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிச் சிந்தித்ததுண்டா?


சிந்தியுங்கள்; நாமும் சிந்திப்போம்.


அடுத்த பதிவில் பட்டியலிடுவோம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




செவ்வாய், 29 நவம்பர், 2011

விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

                     விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருப்பர்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?

அவ்வாறு ஆராய்வதில் பலன் ஏதுமுண்டா? வீண் வேலையா?

விடை எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்பதில் தவறில்லை எனலாம்.

விஞ்ஞானி: ’எந்த ஒன்றையும்’ அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] அது பற்றிய ‘உண்மைகளை’ ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.


மெய்ஞ்ஞானி: ’ஆழ்ந்த சிந்தனையின் மூலமே அனைத்து ‘உண்மைகளை’யும் கண்டறிந்துவிட முடியும் என நம்புபவர்.


விஞ்ஞானி: ‘இவ்வாறு இருக்கலாம்’ என்று, தான் ‘அனுமானித்தவற்றை,
ஆய்வு செய்து,‘உண்மை’ எனக் கண்டறிந்த பிறகே அதை உலகுக்கு 
அறிவிப்பவர். அதை உலகம் ஏற்குமா இல்லையா என்பது பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
தான் அனுமானித்ததை, “இது என் அனுமானம்தான்” என்று ஒப்புக்கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் 
கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர்.
[படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி: பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்வார்.


மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்ததில்லை. “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுவார்..


விஞ்ஞானி: மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.


மெய்ஞ்ஞானி: ஒன்றும் புரியாத நிலை வரும்போது, தொடர்ந்து சிந்திக்கும் திறன் இழந்து, “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி உண்மைகளை ஆராய்ந்து அறியும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பவர்.


விஞ்ஞானி: ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பார்; சேர்த்து வைத்த பொருளை இழப்பார்; ஆய்வுக்குத் தன் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிவார்.


மெய்ஞ்ஞானி: உடல் உழைப்பும் மூளை உழைப்பும் இன்றி, ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்பவர். [தாங்குவதற்குத் தொண்டர்படை உள்ளது. பிறகென்ன.....!]

இந்த ’முன்மாதிரி’  ஒப்பீடு தற்சார்பானதா? நடுநிலை பிறழாத ஒன்றா?

இந்த இருவரில், உண்மையாக மக்கள் நலனுக்கு உழைப்பவர் யார்? நம்பத் தகுந்தவர் யார்? [இவர்களால் விளையும் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுக்கு இங்கு இடம் தரப்படவில்லை]

நம் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் யார்?

முடிவு...?

சிறந்த சிந்தனையாளர்களான உங்கள் கையில்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^




திங்கள், 28 நவம்பர், 2011

மனித நேயம்

                                                   
.....

                                        மனித நேயம் [சிறுகதை]

அன்றைய அலுவல் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கடைவீதியில் நண்பன் வினோதனைச் சந்தித்தேன்.

“காபி குடிச்சிட்டே பேசலாம் வா.” என்று அழைத்தேன்.

”விரதம் இருக்கேன். நீ மட்டும் சாப்பிடு” என்றான்.

எனக்குள் ’குபீர்’ ஆச்சரியம்.

விரதம் பற்றிப் பேச நேர்ந்தால், காக்கா குருவி, ஆடு மாடு விரதம் இருக்கான்னு குதர்க்கம் பேசுவான் வினோதன். இவன் ‘பக்கா’ நாத்திகன் என்பதால் சாமியை வேண்டிட்டு விரதம் இருப்பது சாத்தியம் இல்லை.

மிதமிஞ்சிய ஆர்வத்துடன், “விரதமா! நீ இருக்கியா?” என்றேன்.

“ஆமா. ஒரு நாளைக்கு ஒரு வேளைச் சாப்பாடு மட்டும்” என்றான்.

“எத்தனை நாளா இருக்கே?”

“நாலு நாளா.”

“இன்னும் எத்தனை நாளைக்கு?”

“என் எதிர் வீட்டுக்காரன் சாகிறவரைக்கும்”

எனக்குள் ‘பகீர்’!

“என்னடா உளர்றே?”

“உயிர் கொல்லி நோயால் இம்சைப்பட்ட அவன், இன்னிக்கோ நாளைக்கோன்னு சாவோடு போராடிட்டு இருக்கான். அவனின் கடந்த கால ‘நடத்தை’ பிடிக்காத அவனோட சொந்த பந்தங்கள், எப்போ மண்டையைப் போடுவான்னு எட்ட நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. நான் மட்டும், “நீ குணமடையற வரைக்கும் நான் விரதம் இருக்கப் போறேன்னு சொன்னேன்.
வறண்டு சிறுத்துப் போயிருந்த அவன் முகத்தில் சின்னதாய் ஒரு மலர்ச்சி!
’எனக்காக அனுதாபப் படவும் ஒருத்தர் இருக்கார்’கிற அற்ப சந்தோஷத்தோட அவன் வாழ்க்கை முடியட்டுமே”

வினோதன் சொல்லி முடித்த போது, என்னுள் ஒருவித சிலிர்ப்பு பரவுவதை உணர முடிந்தது.

வினோதன் என் கண்களுக்கு விநோதமானவனாகத் தெரிந்தான்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஞாயிறு, 20 நவம்பர், 2011

கொடுத்து வைத்தவன்.



                      கொடுத்து வைத்தவன் [சிறுகதை]

“உங்க மகனுக்குக் கணையத்தில் புற்று நோய். எங்களால குணப்படுத்த முடியல. உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் ரொம்பக் குறைவு............”

மிகுந்த மன வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்த டாக்டர், “மனம் தளர வேண்டாம். உங்க மகனைத் தினமும் லேசான உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்க. மூச்சுப் பயிற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தக் குழாய்களில் அதிக அளவு பிராண வாயு சேரும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்பும் பலப்படும்.

மனசுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்கணும்; படங்கள் பார்க்கணும்; இயற்கை அழகை ரசிக்கணும்.

பயத்துக்கு இடம் தரவே கூடாது. இருக்கிற கொஞ்சம் வாழ்நாளையும் அது விழுங்கிடும். அளவு கடந்த தன்னம்பிக்கை வேணும்.  ‘நான் வாழ்வேன். நீண்ட நாள் வாழ்வேன்’னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருக்கணும். அப்படிச் சொல்லிட்டு ஆக்ரோஷத்தோட சத்தம் போட்டுக் கத்தினாலும் தப்பில்ல. மன இயல் ரீதியா இந்த முயற்சியில் ஜெயிச்சு உயிர் பிழைச்சவங்க இருக்காங்க.” என்று ஆணித்தரமான குரலில் வலியுறுத்தினார் செல்வராசுவிடம்.

டாக்டர், தன்னைத் தேற்றுவதற்காகவே இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார் செல்வராசு. அவரின் அறிவுரையைப் புறக்கணித்தார்.

மகனின் உடல்நிலையை விசாரிக்க வந்த சொந்தபந்தங்களிடம், மனம் உடைந்து போய், “எல்லாம் நான் செய்த பாவம்...என் தலைவிதி...என்று ஏதேதோ புலம்பித் தீர்த்தார்.

நண்பர் ஒருவர், கடவுளின் அவதாரம் என்று சொல்லித் திரியும் உலகறிந்த’
ஓர் ஆன்மிகப் பிரச்சாரகரின் பெயரைச் சொல்லி, “அவரின் அருட்பார்வை பட்டால் தீராத நோய்கூடத் தீர்ந்து போகும். அவர் கரம் பட்டால் போன உயிரும் திரும்பி வரும். உன் மகனை அந்த மகானிடம் அழைச்சிட்டுப் போ” என்றார்.

“அவருடைய ஆசிரமம் ரொம்பத் தொலைவில் இருக்கு. டாக்ஸி பிடிச்சித்தான் போகணும். ரொம்பச் செலவாகும். இருந்த பணமெல்லாம் எற்கனவே செலவு பண்ணிட்டேன்.” குரலில் கனத்த சோகம் பொங்கச் சொன்னார் செல்வராசு.

“கடன் வாங்கு” என்றார் நண்பர்.

கடனுக்கு அலைந்து, கணிசமான தொகை சேர்ந்ததும், மகனை அழத்துக் கொண்டு புறப்பட்டார் செல்வராசு.

உரிய கட்டணம் செலுத்தி, சில நாட்கள் காத்திருந்த பிறகு, அந்த ’அவதாரி’யைத் தரிசிக்கும் ‘பேறு’ கிடைத்தது.

எட்ட இருந்தே தன் அருட்பார்வையால் அவருக்கும் அவர் மகனுக்கும் அந்த மகான் ஆசி வழங்க, அவரது சீடர் ஒருவர், “ இங்கேயே தங்கியிருந்து
தியான வகுப்புகளில் கலந்துக்கணும். சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைத் தவறாம கேட்கணும்.” என்று நெறிப்படுத்தினார்.

அவர் சொன்னபடியெல்லாம் செய்தார் செல்வராசு. பலன் இல்லை. மகனின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை. பின் இறக்கமே தென்பட்டது.

ஒரு சீடரை அணுகி, “சாமி, என் மகனைத் ’தொட்டு’ ஆசீர்வாதம் பண்ணுவாரா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்.

”அதுக்குத் தனியா பணம் கட்டணும்”

கட்டினார் செல்வராசு.

மகனின் முன்னந்தலையைத் தொட்டு, “கடவுள் கருணை காட்டுவார். கவலைப் படாதே” என்று அவதாரம் அருள் வாக்கு நல்கிய போது செல்வராசு மெய்சிலிர்த்துப் போனார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது!

ஆயினும் என்ன, அடுத்த சில நாட்களிலேயே அவர் மகன் மரணத்தைத் தழுவினான்.

கதறி அழுதவாறு, மகானிடம் சொன்னார்: “என் மகன் என்னைத் தவிக்க விட்டுப் போய்ட்டான் சாமி”

“வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு. உன் மகனின் பொய்யுடம்புக்குத்தான் அழிவு. அவனுடைய மெய்யுடம்பு ஆன்மாவைச் சுமந்து ஆண்டவனின்
திருவடியைச் சென்றடையும். இது எம் தரிசனத்தால் நேர்வது. அவன் கொடுத்துவைத்தவன்.” என்றார் அந்த ஆன்மிகச் செம்மல்.

மகனின் சடலத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் செல்வராசு.

மகனை இழந்த வருத்தத்தோடு, புதிதாகப் பட்ட கடன் சுமையும் சேர்ந்து பெரும் பாரமாய் அவர் நெஞ்சை அழுத்தலாயிற்று.

இதற்கிடையே...............

“டாக்டர் சொன்னபடி நடந்திருந்தா என் மகன் பிழைச்சிருப்பானோ?" என்ற சந்தேகம் அவரின் உள் மனதில் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


புதன், 16 நவம்பர், 2011

ஆன்மாவுடன் ஓர் உரையாடல்.

ன்பமோ துன்பமோ அனுபவிப்பது எதுவாக இருந்தாலும், என்றென்றும்... எக்காலத்தும் ஏதேனும் ஒரு வடிவில் உயிர் வாழவே மனிதன் ஆசைப் படுகிறான்.

மனித உருவில் வாழும் எவரும் இதற்கு விதிவிலக்கல்லர்.

மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய...அதை எதிர் கொள்ளும் மன திடம் அறவே இல்லாத ...ஆயினும் சிந்திக்கத் தெரிந்த... சில புத்திசாலிகளின்  அனுமானமே இந்த ஆன்மா. [கடவுளைக் கற்பித்தவர்களும் அவர்களே]

சிந்திக்கும் திறன் குறைந்த...அதற்கான சூழல் அமையாத மக்கள், இவர்கள் கட்டிவிட்ட கதைகளில் மயங்கி இவர்களுக்கு அடிமைகளாகவும் ஆனார்கள்!

அறிவியல் வளர்ந்து, ஒவ்வொரு மனிதனும் நல்ல சிந்தனையாளனாக உருமாறும் சூழல் அமைந்த நிலையிலும், ஆன்மா பற்றிய பழங்கதைகளை நம்புவது நீடிக்கிறது!

கடவுளின் ஒரு கூறு ஆன்மா என்று சொல்லும் ஆன்மிகவாதிகள், தாங்கள் நம்பும் கடவுள் பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை ஒருபோதும் தந்ததில்லை.[இவ்வலைப்பதிவின் ஆரம்பப் பதிவுகளில் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறோம்]

ஒவ்வொரு உடம்பிலும் ஓர் ஆன்மா பயணிக்கிறது என்கிறார்கள். அது உடம்பில் புகுந்தது எவ்வாறு என்பது பற்றி எவரும் அறிவு பூர்வமாக விளக்கிச் சொன்னதில்லை.

உடம்பில் தங்கியிருந்து, அதன் மூலம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிற அது....

உடம்பு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது, தான் உறையும் உடம்பிலிருந்து வெளியேறி, அலைந்து திரிகிறது என்கிறார்கள்.

என்ன ஆதாரம்?

பெண் உறுப்பு வழியாக உள் நுழைந்த அது [இதைச் சொன்னதும் அவர்கள்தான்] பின்னர் எந்த உறுப்பு வழியாய் வெளியேறியது?

மீண்டும் எப்படி உடம்புக்குள் நுழைந்தது?

கட்டுப்பாடு ஏதும் இல்லையா? [ ஆன்மாக்களைத் தன்னிலிருந்து பிரித்து, பிரபஞ்சத்தில் உலவவிட்டதோடு கடவுளின் கடமை முடிந்துவிட்டதா?]

இது வெளியேறிய தருணத்தில் வேறொரு ஆன்மா இவ்வுடலில் நுழைந்து விடலாமே? அது நிகழ்ந்தால், இது வேறொரு உடலைத் தேடி அலையுமா? இல்லை, அதை எதிர்த்துப் போராடுமா?

ஓர் உடலுக்காக இரண்டோ, அதற்கும் மேற்பட்ட ஆன்மாக்களோ மோதிக் கொள்வதும் உண்டா?

வெளியேறுகிற ஆன்மா ஊர் சுற்றிவிட்டு, தன்னை மறந்த நிலையில் தங்கியிருந்த உடம்பை மறந்து விடுவது அல்லது புறக்கணித்து விடுவதும் சாத்தியமா?

ஆன்மாவைப் பொருத்தவரை, ஐம்புலன் நுகர்ச்சி என்பது இல்லை என்கிறார்கள். அது ஓர் உடம்புக்குள் புகுந்துதான் ஒரு காட்சியைப் பார்க்கவோ ஓர் ஒலியைக் கேட்கவோ முடியும் என்கிறார்கள். உடம்பிலிருந்து வெளியேறி, ஊர் சுற்றிப் ’பார்ப்பது’ என்பது எவ்வாறு சாத்தியம்?

உடம்பின் ஒட்டுறவின்றி, பார்ப்பதும் கேட்பதும், தொட்டு உணர்வதும், நுகர்வதும், சுவைப்பதும் அதற்கு இயலாது என்று சொன்னவர்களும் இவர்கள்தானே?

கதை அளப்பதற்கு ஓர் எல்லை இல்லையா?

உடம்பின் செயல்பாடுகளால் விளையும் நன்மை தீமைகளை இந்த ஆன்மா நேரிடையாக ப் பெறுகிறதா, இல்லை மூளை வழியாகவா?

இது பற்றியெல்லாம் ஆன்மிகங்கள் சிந்தித்திருக்கிறார்களா?

அனுபவிப்பது உடல் மூலமாக என்றால்.....

சிந்திப்பது?

ஆன்மாவுக்குச் சிந்திக்கத் தெரியுமா?

சிந்திக்கும் திறன் இருந்தால், தான் பயணிக்கும் உடம்பை நற்செயல்களில் மட்டும் ஈடுபடுத்தலாமே? தீச்செயலும் செய்ய அனுமதிப்பது ஏன்?

உடம்பு, மூளையின் ஆணையை ஏற்றுக் குற்றங்கள் புரிய, அதனால் விளையும் பாவங்களை ஆன்மா சுமந்து திரியும் பரிதாபம் ஏன்?

கொஞ்சமும் சிந்திக்கும் திறனற்ற ஓர் அஃறிணைப் பொருளைக் கடவுளின் ஒரு கூறு என்று சொல்வது எவ்வாறு?

இப்படி, இன்னும் பல வினாக்களுக்கு அவர்களால் ஒரு போதும் விளக்கம் தர இயலாது என்பது தெரிந்திருந்தும்.......

நண்பர்களே, உங்களில் எவரேனும் ஆன்மா இருப்பதை நம்புகிறீர்களா?

”ஆம்” எனின், அத்தகு நம்பிக்கை கொண்ட என் இனிய ஆன்மா நண்பரே..........

உங்களுடன் பேச எம்மை அனுமதியுங்கள்.

‘நீங்கள்’ என்று நாம் சொன்னால், அது உங்கள் ஆன்மாவையே குறிக்கும்.

நீங்கள் வேறு உங்கள் ஆன்மா வேறு அல்ல.

ஆன்மிகங்கள், ஆன்மாவை ஒருமையில்தான் ...’அது, இது’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்.

எம் நண்பராம் ஆன்மாவே,

ஓர் உடம்புக்குள் ஒளிந்து கொண்டுதான் உன்னால் இன்ப துன்பங்களை அனுபவிக்க முடிகிறது. நீ உறையும் உடம்பு உன்னால் இயக்கப்படுவதில்லை.
அது மூளையின் ஆளுமைக்கு உட்பட்டது. பாவ புண்ணியங்களைச் சுமக்க மட்டுமே உன்னால் முடியும். அவற்றில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ உன்னால் முடியாது. ஆக, ஆறறிவு என்றில்லை, ஓரறிவு கூட இல்லாத ஒரு ஜடப் பொருள் என்று உன்னைச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. என் சந்தேகம் நியாயமானதுதானா?

எது எப்படியோ, உன்னிடம் சில கேள்விகள்.

கடந்த பிறவிகளில் எத்தனை முறை ஆண் உடம்பிலும் எத்தனை முறை பெண் உடம்பிலும் சுக துக்கங்களை அனுபவித்தாய்? ‘அலி’களின் தேகத்திலும் நீ விரும்பிப் பயணித்ததுண்டா? அழகான பெண் கருவில் [உடம்பில்] நீ விரும்பிப் புகுவது உண்டா?

எந்தவொரு உடம்பிலும் புகாமல், வெறுமனே விண்ணில் அலைந்து திரிகிற போது உன் நிலை என்ன? உன்னைப் புரிந்து கொள்வது எப்படி? பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?

கடவுளைப் போலவே உன்னையும் உணரத்தான் முடியுமா? உணரும் சக்தியைக் கடவுள் எமக்கு வழங்குவாரா? அவரை மசிய வைப்பது எப்படி?

ஒரு பிறவியில் வாழ்ந்து முடித்த அனுபவம் அடுத்த அடுத்த பிறவிகளிலும்
உன் நினைவில் தங்கியிருக்குமா?

எம்மைப் பொறுத்தவரை, எம் ஆன்மா பற்றிய எந்தவொரு பதிவும் எம்மிடம் இல்லை. முற்பிறவி பிற்பிறவி என்று எப்பிறவி பற்றியும் எமக்கு எதுவுமே நினைவில் இல்லை. அப்புறம், பாவம் புண்ணியம் என்றெல்லாம் அலட்டிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு பிறவியில் இனியன் உடம்பிலும், இன்னொன்றில் அமுதாவின் உடம்பிலும், அடுத்த ஒன்றில் சூர்யாவின் உடம்பிலும்...இப்படி ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவர் உடம்பில் புகுந்து வெளியேறுவது உன் வழக்கமாக இருந்திருக்கிறது. உண்மையில், மேற்சொன்னவர்களில் எவருக்குச் சொந்தமான ஆன்மா நீ?

தன்னின் ஒரு கூறான உன்னை, வெறும் ‘ஜடப்பொருள்’ ஆக்கி, கூடு விட்டுக் கூடு பாயப் பணித்து, பல பிறவிகள் எடுக்கச் செய்து, அலையவிட்டு , சொல்லொணாத துன்பங்களுக்கு உட்படுத்திக் கடவுள் தண்டிப்பது ஏன்?

இதுவும் அவருடைய திருவிளையாடல்களில் ஒன்றா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் இவற்றிற்கு மட்டும் இப்போது அவசியம் பதில் தேவை.

’ஆன்மாவுடன் பேச முடியாது’ என்று சொல்லி நழுவ வேண்டாம். நீ பயணிக்கும் உடம்புக்கு ஒரு மழலை முத்தமிட்டால், அந்தப் பேரின்பத்தைத் தொடு உணர்ச்சி மூலம் உன்னால் அனுபவிக்க முடிகிறது. அவ்வாறே எதிர் நின்று ஒருவர் பேசுவதையும் உன்னால் கேட்க முடிகிறது. பார்க்க முடிகிறது; சுவைக்க முடிகிறது. ஆக, ஐம்புல நுகர்ச்சி உனக்கு உண்டு. ஆதலால், ஐயத்திற்கு இடமின்றி உன்னால் நீ குடி கொண்டிருக்கும் உடம்பின் வாய் மூலம் எம்முடன் பேச இயலும்.

பேசு...எம் கேள்விகளுக்குப் பதில் சொல்.

'ஆன்மா என்பது வெறும் கற்பனை; அப்பட்டமான பொய்” என்று சொல்லப் படுவதைப் பொய்ப்பிக்க நீ பேசு........................

பேசு ஆன்மாவே பேசு................பேசு......................பேசு...................................

நீ பேசுவதைக் கேட்க நாம் மட்டுமல்ல, இந்த மண்ணுலக மக்கள் அனைவரும்
ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~








































ஞாயிறு, 6 நவம்பர், 2011

நீங்களும் கடவுள்தான்!


                                             நீங்களும் கடவுள்தான்!

இப்பதிவைப் படிக்கும் நண்பர்களே, உங்களிடம் சில வினாக்கள். உங்களின் பதில்களையும் நாமே அனுமானிக்கிறோம். [’நாம்’எனக் குறிப்பிடுவது பத்திரிகையாளர்கள் பின்பற்றும் மரபு. வேறு காரணம் இல்லை]

உங்கள் கையைத் தொட்டு நாம்: “ இந்தக் கை யாருடையது?”

நீங்கள்: “என்னய்யா கேள்வி? என்னுடையதுதான்.”

நாம்: “ இந்தக் கால்கள்?”

நீங்கள்: “என்னுடையதே.”

“தலை உங்களூடையது. உள்ளே இருக்கும் மூளை?”

 சலிப்புடன்,” அதுவும் என்னுடையதுதான்.” என்கிறீர்கள்.

“ஒட்டு மொத்த இந்த உடம்பு...?”

“சந்தேகம் வேண்டாம். என்னுடையதே.”

“எமக்கு எதிரே இருக்கிற இந்த உருவம்?”

“நான்தான்...நானேதான்”

“’நான்’ என்று உங்களைச் சுட்டுகிற நீங்கள், ‘என் கை...என் கால்கள்...என் மூளை... என் உடம்பு... என்று சொன்னதன் மூலம், பல உறுப்புகளை உள்ளடக்கிய உங்கள் உடம்பு வேறு...நீங்கள் வேறு என்றாகிறது. சரிதானே?”

உங்கள் முகத்தில் சினம் பரவுகிறது.  “ முட்டாள்தனமான கேள்வி இது. என் எழுதுகோள்னு சொன்னா, என் எழுதுகோள் வேறு நான் வேறுன்னு ஆகும். என் உடம்புன்னு சொல்லும்போது, நான் வேறு; என் உடம்பு வேறுன்னு அர்த்தம் பண்ணக் கூடாது. [தற்கிழமை, பிறிதின் கிழமைன்னு இலக்கண நூல்கள் சொல்லும்]. ’நான்’னு நான் குறிப்பிடறது, மூளையையும் மற்ற உறுப்புகளையும் உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்பைத்தான். ”

“தவறு. நீங்கள் ‘நான்’ என்று சுட்டியது உங்கள் உடம்புக்குள் ஊடுருவியிருக்கிற 
’ஆன்மா’வை.”

“புரியும்படி சொல்லுங்க.”

“உங்கள் உடம்புக்குள் ஓர் ’ஆன்மா’ ஊடுருவியிருக்கு. நீங்க ‘நான்’ என்றது
அந்த ஆன்மாவைத்தான்.”

“நான் ‘நான்’னு சொன்னது என் ஒட்டு மொத்த உடம்பைத்தான். அப்படிச் சொன்னது என் வாய். சொல்ல வைத்தது என் மூளை. ‘நான் உங்களுடன் வருகிறேன்னு சொன்னா என் உடம்பு வருதுன்னுதான் அர்த்தம். ஒரு ஆன்மா வருதுன்னு அர்த்தம் பண்ணக் கூடாது.”

”நீங்க சொல்றது தப்பு. நீங்க ‘நான்’ என்றது 100% அந்த ஆன்மாவைத்தான்.”

”அப்படீன்னு நீங்க சொல்றீங்களா?”

“இல்ல. ஆன்மிகவாதிகளும் கடவுளின் அவதாரங்களும் சொல்றாங்க.”

“இன்னும் என்னவெல்லாம் சொல்றாங்க?”

”ஆன்மா அழிவில்லாதது; என்றும் இருந்தது; இனி என்றும் இருப்பது; அது கடவுளின் ஒரு கூறு. கடவுளின் கட்டளைப்படி, கரு உருவாகும் போதே அதில்
ஐக்கியமாகி, உடம்பு அழியும்வரை அதில் தங்கியிருந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பாவ புண்ணியங்களைச் சுமந்து...உடல் அழியும் போது வெளியேறிவிடும் தன்மை கொண்டது; பல பிறவிகள் எடுத்து, என்றேனும் ஒரு பொழுதில் கடவுளுடன் ஐக்கியமாவது. இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம்.”

“ கடவுளே ஆன்மா வடிவத்தில் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறாரா?”

“ஆமா.”

“இன்ப துன்பங்கிறது...?”

உடம்பின் இயக்கத்தால்...செயல்பாடுகளால் விளைவது”

“பாவ புண்ணியங்கள்?”

“அவற்றின் விளைவுக்கும் உடம்பே காரணம்.”

“உடம்பை இயக்குவது மூளைதானே?”

“ஆமா”

“மூளையைக் கட்டுப்படுத்தவும், துன்பங்களும் பாவங்களும் சேராமல் தடுக்கவும் ஆன்மாவால் முடியுமே?”

”முடியாது. இன்ப துன்பங்களை ஏற்பதும் பாவ புண்ணியங்களைச் சுமப்பதும் மட்டுமே ஆன்மாவுக்குக் கடவுள் இட்ட கட்டளை. மறுபிறவி எடுக்கும் போது நல்ல உயிரின் [?] உடம்பில் புகுவதும் தீய உயிரின் உடம்பில் நுழைவதும் ஆன்மா சுமக்கும் பாவ புண்ணியங்களின் அளவைப் பொறுத்தது.”

“ஓர் உடம்பு [உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று சொல்லிக் குழப்புகிறார்கள் அதனால்தான், ‘உயிர்’ என்று குறிப்பிடாமல் மூளையால் இயக்கப்படும் உடம்பு என்கிறோம்] செய்யும் பாவத்தை ,உடம்பில் வெறுமனே தங்கியிருக்கிற ஆன்மாக்கள் சுமந்து தண்டனைக்குள்ளாவது என்ன நியாயம்? கடவுளின் கூறுகளான ஆன்மாக்கள் தண்டிக்கப்படுவது கடவுள் தன்னைத்தானே தண்டித்துக் கொள்வது போல் அல்லவா? இது ஏன்?”

“எல்லாம் அவனின் திருவிளையாடல்.”

ஆம் நண்பர்களே, இப்படிச் சொல்பவர்கள் நம் ஆன்மிகவாதிகளும் அவதாரங்களும்தான். கடவுள் திருவிளையாடல் நிகழ்த்துவதாகச் சொல்லி, நீண்ட நெடுங்காலமாக, இம்மண்ணுலகக் கடவுள்களான இவர்களும் மக்களிடையே விதம் விதமான திருவிளையாடல்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக் கொண்டால்........................

இப்போது உரையாடிக் கொண்டிருக்கிற நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் அல்ல; என்றும் அழிவில்லாத ஆன்மாக்கள்! ஆன்மாக்களாகிய நாம் அனைவரும் கடவுளின் அவதாரங்கள். ஆக, நாம் எல்லோருமே கடவுள்தான்!!

பல பிறவிகள் எடுத்து, வறுமைத் துன்பம், நோய்த் துன்பம், பகைத் துன்பம் என்று எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும் நமக்கு மரணம் என்பது எப்போதும் இல்லை; கோடிகோடி கோடியோ கோடி யுகங்களுக்குப் பிறகேனும்
 கடவுளுடன் ஐக்கியமாகப் போகிறோம் என்பதை நினைத்து ஆனந்தக் கூத்தாடலாம்!

ஆயினும், சில சந்தேகங்கள்................................................

இக்கணம் வரை நாம் [நான் ஆகிய பரமசிவம்] எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறோம்?

இனி எடுக்கப் போகும் பிறவிகளைக் கணக்கிட இயலுமா?

ஒவ்வொரு பிறவியிலும் நாம் சுமந்த பாவங்கள் அதிகமா,புண்ணியங்களா?

பாவங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போனால் கடவுளுடன் ஐக்கியமாவது ஒரு போதும் முடியாமல் போகும்தானே?

பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்க அவர் கருணை காட்டுவாரா?

ஒரு வேளை, கடவுளுடன் ஐக்கியமானால், அதன் பிறகு ஆன்மாவின் செயல்பாடுகள் என்னவாயிருக்கும்? அப்புறம் எப்போதும்... வரையரையற்ற நீ...........ண்..........ட....
நெடு...நெடு...நெடு...நெடுங்காலத்துக்கும் சும்மா இருப்பதுதானா? அதுவே
பேரானந்தமா?

 இவ்வினாக்களுக்கெல்லாம் விடை காண்பதற்கு நம் அவதாரங்கள் உதவி செய்ய வேண்டும்.

செய்வார்களா?

எப்போது?

அவர்களின் பதிலுக்காகப் பேரார்வத்துடன் காத்திருப்போம்!

**********************************************************************************

















இப்பதிவைப் படிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பான 




















                

வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஆன்மாவும் மறுபிறப்பும்

 பிரபஞ்சப் பொருள்கள் உருவாகக் காரணமான மூலக்கூறுகளைப் பஞ்ச பூதங்கள் என்கிறார்கள்.

இவற்றில், நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு மட்டுமே மனித அறிவால் விளக்கிச் சொல்லப்பட்டவை.

ஐந்தாவது பூதமான ‘வெளி’யை, தாம் விளங்கிக் கொண்டு, பிறர் அறிய விளக்கிச் சொன்னவர் எவருமிலர்.

நான்கு மூலக் கூறுகளும் இயங்கும் இடமாக ‘வெளி’ அமைந்துள்ளது என்று சொல்வதன் மூலம் ஐந்தில் ஒன்றாக அதை ஏற்கலாம்.

வெளியைத் தவிர்த்து, ஏனைய நான்கு மூலக் கூறுகளின் சேர்க்கையால் உருவானவையே அனைத்துப் பொருள்களும் எனக் கொள்வதே அறிவுடைமை.

உடம்பு மட்டுமல்ல, அதனை இயக்குகிற மூளையும் மூலக்கூறுகளால் உருவானதே.

உடம்பானது மூளையால் இயக்கப் படும்போதுதான், அந்த இயக்கத்தை வைத்து, உடம்பில் உயிர் இருப்பதாக நம்புகிறோம்.

மூளை இல்லையேல் இயக்கம் இல்லை; உயிரும் இல்லை.

அதாவது............

‘உடம்பு’ என்பது உண்மை. அதை மூளை இயக்குகிறது என்பது உண்மை. 
மற்றபடி, ‘உயிர்’ என்று ஒன்று இருப்பதாகச் சொல்வதும், உடம்பு அழியும் போது அது வெளி யேறுவதாகச் [ஆவி அல்லது ஆன்மா வடிவில்]  சொல்வதும் பொய்.

மூளையை உள்ளடக்கிய இந்த உடம்பு அழியும் போது நாம் இல்லாமல்
போகிறோம்.

‘நான்’ என்று உணருவதெல்லாம் இந்த மூளையின் செயல்தான்.

மரணத்தைத் தழுவியதும் நம் வாழ்வு முடிந்து போகிறது. அதற்கப்புறம் நாம் எப்போதும் எக்காலத்தும் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணும் போது நம் மனதில் தோன்றும் அளவிறந்த அச்சமே, செத்த பிறகும் ஏதோவொரு உருவில் வாழ்கிறோம் என்னும் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

இந்த நம்பிக்கையின் விளைவாகவே, ஆவி, பேய், பிசாசு, ஆன்மா போன்றவை
ஆறறிவு கொண்ட மனிதனால் கற்பனை செய்யப்பட்டன.

மூலக்கூறுகளின் இணைப்பு இன்றி, தனித்து இயங்கும் எந்த ‘ஒன்றும்’ இந்நாள் வரை அறிவியலாளரால் கண்டறியப் படவில்லை; ‘கடவுள்’ உட்பட.

உடம்பு அழியும் போது, அதிலிருந்து ‘ஆவி’ [சமைக்கப்படும் உணவிலிருந்து
ஆவி வெளியேறுவதைப் பார்த்ததன் விளைவு இது] வெளியேறி வான வெளியில் அலைவதாகச் சொல்வது கலப்படமில்லாத கற்பனை.

அதைப் பார்த்ததாகச் சொல்வதும் பொய்யே.

நமக்குள்ள புலன்களால் பருப்பொருளைத்தான் பார்க்க முடியும். ஆவி ஒரு பருப்பொருளன்று. அதுபற்றி உறுதிபட எவரும் விளக்கிச் சொன்னது இல்லை.

ஏதோ சில நிழல் உருவங்களைப் [அறிவியல் மூலம் அவற்றை விளக்குவது, முயன்றால் சாத்தியப்படும்] புகைப்படம் எடுத்து, அவற்றை ஆவி என்று கதைப்பது குற்றச் செயல் ஆகும்.

மீடியேட்டர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தரையில் குறித்து வைக்கப்பட்ட எழுத்துகளை நோக்கி அவர்களின் கைகளை நகர்த்தி ஆவிகள் பதில் சொல்வதாகக் கதை விடுவது தண்டிக்கப்பட வேண்டிய பெரும் குற்றம்.

மூலக் கூறுகளால் உருவாகாத ஒன்று மூலக் கூறுகளால் ஆன ஒன்றை நகர்த்துவது எவ்வாறு சாத்தியம்?

ஆவியால் ஒரு பொருளை நகர்த்த முடியும் என்றால்...அதே ஆவியால், தான் உயிர் வாழும்போது தனக்குக் கேடு செய்தவரை அடித்துத் துன்புறுத்த முடியுமே? ஒரு ஆவி இன்னொன்றைத் தாக்க முடியுமே? 

ஆவி ஆணாக இருந்தால், ஆவியாக உலவும் பெண்ணை மட்டுமல்ல, உயிர் வாழும் ஒரு பெண்ணைக் கூடக் கற்பழிக்க முடியும்!!

பேய், பிசாசு, பூதம் என்பனவெல்லாம் ஆவியின் வேறு பெயர்களா? அவை இதனின்றும் வேறுபட்டவையா?

இதை ஆராய்வது வீண் வேலை.

ஆவி போன்றவற்றை நம்பாதவர்கள் கூட ஆன்மாவை நம்புகிறார்கள்.

ஆன்மா, கடவுளின் ஒரு கூறு என்னும் ஆன்மிகவாதிகளும் உளர்.

இறைவனிலிருந்து பிரிந்த ஆன்மாக்கள், விண்ணில் அலைந்து திரிந்து, ஏதோ ஒரு நிலையில் பெண்ணின் கருப்பையில்... உயிர் உருவாகும் போது... அதனுள் புகுந்து வாழ்ந்து, உடல் அழியும்போது அதிலிருந்து வெளியேறி, மீண்டும் விண்ணில் அலைந்து திரிந்து.....மீண்டும் கருவில் நுழைந்து பிறந்து.............................

இப்படியாக, கருவில் நுழைந்து நுழைந்து ஆன்மா பல பிறவிகள் எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

கடவுளிடமிருந்து பிரிந்து அல்லது என்றென்றும் கடவுளைப் போல்
தோற்றமும் அழிவும் இல்லாத ஆன்மாக்களின் எண்ணிக்கை என்ன?

லட்ச லட்சமா? கோடிகோடியா? கணக்கில் அடங்காதவையா?

இவை விண்ணில் அலைவது பல்லாண்டு பல்லாண்டுகளா? அலையும் கால அளவு என்ன?

கருவில் நுழைகையில், நான் நீ என்று கடும் போட்டி நிலவுமே? முறை வைப்பா? முன்னுரிமையா? மிகக் கடுமையான போர் நிகழுமா!?

எப்படி நுழைகின்றன?

பெண்ணுறுப்பில் பாயும் கோடிக் கணக்கான உயிரணுக்களுடன் தானும் ஒன்றாக ஆன்மா நீந்திச் செல்லுமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்மாக்களும் நீந்திச் செல்வதும் சாத்தியமா?

ஆற்றல் மிக்க , ஆணின் ஓர் உயிரணு பெண்ணின் கருமுட்டையில் பிரவே சிக்கும் போது, வெற்றி வீரனான ஓர் ஆன்மாவும் உள் நுழையுமா?

ஆன்மா ஓர் உடம்புக்குள் நுழைவது, விதிப்படியா, இல்லை, தன் இச்சைப்படியா?

தன் விருப்பப்படி என்றால், உடம்பு துன்பத்துக்கு உள்ளாகும் போதோ, அதன்மீது சலிப்பு ஏற்படும்போதோ அது வெளியேறிவிடலாமே? உடம்பு அழியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

உடம்பை இயக்குவது முழுக்க முழுக்க மூளையின் வேலைதானே?

அவ்வாறாயின், ஆன்மாவுக்கு எந்தவொரு வேலையும் இல்லையா?

உடம்புக்கு நேரும் இன்ப துன்பங்களை அனுபவிப்பது மட்டுமே அதன் கடமையா?

ஆன்மாக்களுக்குள்ளேயும் பால் வேறுபாடு உண்டா?

ஓர் உடம்புக்குள் நுழைந்த பின்னரே அது நிர்ணயிக்கப் படுகிறதா?

பக்த கோடிகளே! ஆன்மிகவாதிகளே! இவ்வினாக்களை...இம்மாதிரி இன்னும் பல வினாக்களை எழுப்பி விடை காண நீங்கள் முயன்றது உண்டா?

இல்லைதானே?

அப்புறம் ஏன் யாரோ சிலர்..... ஆன்மா, ஆவி, பேய், பிசாசு என்று கட்டிவிட்ட கதைகளை நம்பி, அளவற்ற மூட நம்பிக்கைகளுக்குப் பலியாகி, மகிழ்ச்சியாக வாழ வேண்டிய கொஞ்ச நாட்களையும் வீணடிக்கிறீர்கள்?!

இனியேனும் சிந்திப்பீர்களா?

***************************************************************************************************************




திங்கள், 26 செப்டம்பர், 2011

புரியாத ‘கடவுள் கணக்கு’ !



                           புரியாத ‘கடவுள் கணக்கு’ !
                                                         [சிறுகதை]

கண் மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த இறைவனை நீண்ட நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் இறைவி.

அதை மனக்கண்ணால் உணர்ந்த இறைவன், ”ஏதோ சொல்ல நினைக்கிறாய் போல. சொல்” என்றார்.

“சொல்ல நினைக்கல. கேட்க நினைக்கிறேன்” என்றார் இறைவி..

“கேள்”

“கடவுள் நீங்க ஒருத்தர்தானா?”

ஒரு முறை அதிர்ந்து அடங்கியது இறைவனின் பொன் நிற மேனி.

“நான் ஒரு போதும் அப்படிச் சொன்னதில்லை” என்றார் இறைவன்.

“நீங்க சொன்னதில்லை. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் சொல்கிறார்கள்.”

’எல்லாரும் சொல்வதில்லை. ‘நான் ஆன்மிகவாதி’, ‘கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் சொல்கிறார்கள்.”

“அதென்ன கணக்கு, ‘ஒன்று’? கட்டற்ற...கணிப்புக்கு உட்படாத... அதிபிரமாண்ட பிரபஞ்சத்தில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர்தான் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார் என்பது என்ன கணக்கு? ஒருவருக்கே அத்தனை நற்குணங்களையும் நிகரற்ற பேராற்றலையும் உரித்தாக்கிக் கொண்டாடுவது
ஏன்? நற்குணங்கள் கொண்ட பல நல்ல கடவுள்கள், ஆதிக்க மனப்பான்மை இன்றி, ஒத்த மனப் போக்குடன் ஒருங்கிணைந்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளுவது சாத்தியமான ஒன்றுதானே?.......இப்படிச் சிலர் கேட் கிறார்கள்! அவர்கள்.....”

குறுக்கிட்ட இறைவன்,”அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்...
பகுத்தறிவாளர்கள்.” என்றார்.

”எது? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகள் விடை காண முடியாத
புதிர்கள். மேம்போக்காக நோக்கும் போது, பிரபஞ்ச இயக்கம் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் கடவுள் என்ற ஒருவரின் கட்டுப்பாட்டில் அது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கடவுள் என்ற ஒருவர் தேவையற்றவர் ஆகிறார். என்று சொல்பவர்களும் நிலவுலகில் இருக்கிறார்கள்” என்றார் இறைவி.

“அவர்கள்தான் நாத்திகர்கள்.” மெலிதாகப் புன்னகைத்தார் இறைவன்.

“கடவுள் உண்டுங்கிறாங்க. இல்லைன்னும் சொல்றாங்க. செத்த பிறகு,நரகம்
சொர்க்கம்கிறாங்க. ஆவியா பேயா அலையணும்னு அடிச்சிப் பேசறாங்க.
. அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்தா மண்ணு. அவ்வளவுதான்னும் அலட்சி யமா சொல்றவங்களும் இருக்காங்க. ஒன்னும் புரியல. மனுசனா ஏன் பிறந்தோம்னு தெரியல........இப்படிப் புலம்பறவங்களும் அங்கே இருக்காங்க.”
என்று இறைவி சொல்ல.......................

”அவர்கள் எல்லாம் சராசரி மனிதர்கள்” என்றார் இறைவன்.

“இப்படி இன்னும் என்னவெல்லாமோ கேள்விகள் கேட்கிறாங்க பூலோகவாசிகள். இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலையேங்கிற உறுத்தல் இருந்துட்டே இருக்கு. எல்லார்த்துக்கும் நீங்கதான் விடை சொல்லணும்” என்று தன் கேள்விகளுக்கு முத்தாய்ப்பு வைத்தார் இறைவி.

முகத்தில் சிறு விரக்திப் புன்னகை மலர்ந்து மறைய, இறைவன் சொன்னார்:

“ யுகம்... யுகம்...யுகம்...யுகம்...யுகமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்தவொரு கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியாது.”

மோனத்தில் புதைந்து போனார் இறைவன்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


                                                               
                     





சனி, 24 செப்டம்பர், 2011

மனிதனுக்கு ஆயிரம் வயது!!!

                                     மனிதனுக்கு ஆயிரம் வயது!!!


சாவைப் பற்றிய அச்சம் உருவாவதற்கான காரணங்களில் முதலாவது, மரணம் அடையும் போது நம் உடம்பை வருத்தும் ‘வலி’ அல்லது ‘வேதனை’ பற்றிய சிந்தனை ஆகும்.


குறையில்லாத உடல் நலத்துடன் ஒருவர் சாவைத் தழுவுகிற போது, எந்தவொரு வலிக்கோ துன்பத்திற்கோ அவர் ஆளாவதில்லை என்பது நிரூபிக்கப் பட்டுவிட் டால் இந்தப் பயத்திலிருந்து ஓரளவுக்கு மனிதன் விடுபட்டுவிடுவான்.


இந்த நிரூபணம் அறிவியலால் மட்டுமே சாத்தியப்படக் கூடிய ஒன்று.


இதற்கு விஞ்ஞானிகளின் கடின உழைப்பு தேவை.


அவர்களைப் பேரார்வத்துடன்...ஏன்...ஒருவித வெறியுடன் ஆராயத் தூண்டுவது ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.


கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு, மக்களின் மனங்களில் கணக்கற்ற மூட நம்பிக்கைகளைத் திணித்துத் தம்மை வழிபட வைத்து, சுக
போகங்களில் திளைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளின் பின்னால் ஓடுவதை.......
அவர்களின் கால்களில் விழுவதை நிறுத்தி, அறிவியல் அறிஞர்களைத் தேடிச் சென்று, அவர்களைப் போற்றுவதற்கும் புகழ்வதற்கும் நாம் கற்க வேண்டும்.


தேவைப்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியும் செய்தல் வேண்டும்.


எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெறும் கற்பனையில் உருவாக்கப்பட்ட கடவுளுக்கு விழா எடுப்பதைத் தவிர்த்து, சாதனைகள் நிகழ்த்தும் அறிஞர்களுக்கு விழா எடுத்துச் சிறப்பித்துப் போற்றும் மனப் போக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுகபோகப் பற்று


மரணத்தை எதிர்கொள்ளும் தெம்பும் திராணியும் மனிதருக்கு இல்லாமல் போனதற்கான அடுத்த காரணம்.....

பற்று!

வாழ்க்கையில் அனுபவித்த இன்பங்களின் மீது கொண்ட பற்று! அவற்றை வாரி வழங்கிய இம்மண்ணின் மீது கொண்ட பற்று!

வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவித்துத் துவண்டவனும்கூட, இம்மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து, ஆசைப்பட்டதெல்லாம் அனுபவிக்க நினைக்கிறானே தவிர இங்கிருந்து விடுபட்டுப் போகச் சம்மதிப்பதில்லை!

இன்பங்களின் மீதான...இம்மண்ணுலகின் மீதான பற்றுதலிலிருந்து விடுபட வழி உண்டா எனின் இல்லை என்றே சொல்லலாம்.

’இந்தப் பிரபஞ்சத்தில் அழிவுறாதது எதுவும் இல்லை. பழையன அழிவதும் புதியன தோன்றுவதுமான மாறுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாம் மட்டும் விதி விலக்கா என்ன?’ என்பன போன்ற சிந்தனைகளால் நம்மை நாமே ஆற்றுப் படுத்துவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இயலாமையைப் பயன் படுத்தித்தான் ஆன்மிகவாதிகளும் அவதாரங் களும் மக்களை நிரந்தர முட்டாள்களாக ஆக்கி வருகிறார்கள்.


மரணத்தைத் தவிர்ப்பது ஒரு போதும் சாத்தியமற்ற ஒன்று என்றாலும், மனித னின் ஆயுளை ஐநூறு ஆயிரம் பல்லாயிரம் இலட்சம் கோடி என்று நீட்டித்துக் கொண்டே போவது அறிவியலால் சாத்தியப்படுவதுதான் என்பதை எண்ணி மனித இனம் ஆறுதல் கொள்ளலாம்.


ஆக, இம்மண்ணின் மீதுள்ள பற்றால் மரணத்தை எதிர் கொள்ள நாம் அஞ்சும்
கோழைத்தனத்தை அறிவியலின் துணையுடன் படிப்படியாகக் குறைக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மரண பயம்!

 ஆறறிவு வாய்த்ததால் மனிதனுக்கு நேர்ந்த தீய விளைவுகளுள் தலையாயது
மரண பயம். இது இவனின் தனி உடைமை!

உயிருக்கு ஆபத்து நேரும் சமயங்களில் மட்டுமே பிற உயிர்கள் மரணத்தை உணர்ந்து அஞ்சுகின்றன. மற்ற நேரங்களில் அது பற்றிய சிந்தனை அவற்றிற்கு இல்லை.

மரணம் பற்றிய இடையறாத சிந்தனையால் ஒரு முறை சாவதற்குப் பதிலாகப் பல முறை செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதன் மட்டுமே!

மன நிலை பாதிக்கப் பட்ட மனிதர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.

மிகக் குறைந்த அளவில் சிந்திக்கும் அறிவு பெற்ற சாமானியர் முதல் மிகப் பெரிய ஞானிகள் என்று சொல்லப் படுகிறவர்கள் வரை மரணத்தை எண்ணி அஞ்சாதவர் எவரும் இலர்.

“கடவுளைச் சரணடைந்தால்...அவன் கருணைக்கு ஆளானால் ‘மரணமில்லாப் பெரு வாழ்வு’ வாய்க்கும் என்று சொல்லப் படுவதெல்லாம் நிரூபணம் ஆகாத
...சாத்தியப் படாத வெறும் நம்பிக்கைகளே.

அப்படி வாழ்ந்தவர்கள்... வாழ்பவர்கள் எத்தனை பேர்?

எத்தனை நூறு பேர்?

எத்தனை ஆயிரம் பேர்?

லட்சக் கணக்கிலா? கோடிக் கணக்கிலா?

எண்ணிக்கை கடந்தவர்களா?

அவர்களின் உறைவிடம்...வாழ்விடம் எங்கே?

நீண்ட நெடுங்காலமாக.....யுகம் யுகமாக.....காலம் கடந்து கடவுளைப் போலவே[?] அவர்களும் ‘இருந்து’ கொண்டிருக்கிறார்களா?

இவற்றையெல்லாம் அறிந்து சொன்னவர்.....சொன்னவர்கள் யார்?

எவரும் இல்லை...இல்லை...இல்லை...இல்லவே இல்லை.

பகைமை, வறுமை, நோய்மை...என்று எதை எதையோ நினைந்து அஞ்சுவது மனித இயல்பு.

எனினும், எந்த வகையான அச்சத்திலிருந்தும் அவனால் விடுபட முடியும்...
மன வலிமையால்...இடைவிடா முயற்சியால்.

ஆனால், மரண பயத்திலிருந்து விடுபடுவது மட்டும் அவனுக்குச் சாத்தியமே இலலாத ஒன்று.

இந்தச் சாவைப் பற்றிய அச்சம்தான் மனிதன் கடவுளை நம்புவதற்கான தலையாய காரணம்.

கடவுளை நம்பியதால் அந்த அச்சத்திலிருந்து அவன் விடுபட்டுவிட்டானா?

இல்லையே!

கடவுளை நம்புகிற...பிறரையும் நம்பும்படி வற்புறுத்துகிற ’அவதாரங்கள்’ இந்தச் சாவைப் பற்றிய அச்சத்திற்கு ஆளாவதில்லையா?

“ஆம்” என்றால், எள்ளளவும் மரண பயத்திற்கு ஆளாகாமல், எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தவாறே மரணத்தைத் தழுவியவர்கள் எத்தனை பேர்?

“அவர் அருட்பெரும் ஜோதியில் கலந்தார்!”...”இவர் செத்துப் பிழைத்தார்!”... “இவர் பூத உடலோடு சொர்க்கத்தில் புகுந்தார்!”...என்பன போன்ற கட்டுக் கதைகள் வேண்டாம்.

’உண்மை அறியும்’ நடு நிலை நெஞ்சம் நம் அனைவருக்கும் தேவை.

கடவுளின் பெருமைகளை...அவதாரங்களின் மகிமைகளை வாய் கிழியப் பேசிக்
கொண்டிருப்பது வெட்டி வேலை.

நம்மை நிரந்தரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘மரணம்’ பற்றி ஆராய்ந்து
“உண்மை’களைக் கண்டறிந்து, மரண பயத்தைப் போக்க...அல்லது...குறைக்க
முயல்வது அறிவுடைமை...இன்றியமையாத் தேவையும்கூட.

இந்த அச்சத்தைப் போக்க ‘என்றும் இருப்பவர்’ ஆன கடவுளாலும் முடியாது.
ஏனென்றால்.............................

“நமக்கும் ஒரு நாள் மரணம் சம்பவிக்குமோ?” என்ற அச்சம் அவருக்கும் இருக்கக் கூடும்!

எனவே, நமக்கிருக்கும் ஆறாவது அறிவை நம்புவதே அறிவுடைமை.

அந்த அறிவின் துணையுடன் மரணம் பற்றி ஆராய்வதும் , அது பற்றிய அச்சத்தைப் போக்க, அல்லது, குறைக்க முயல்வதும் மனிதருள் சிந்திக்கத் தெரிந்தவர்களின் கடமை.

******************************************************************************************************************












செவ்வாய், 26 ஜூலை, 2011

26] கடவுளிடம் ஒரு சிபாரிசு

26-07-2011

அகங்காரனின் கற்பனையில்,

                                           26] கடவுளிடம் ஒரு சிபாரிசு
                                                          [சிறுகதை]


சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளி
விட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு, அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்க ராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியி ருக்கார். ரொம்ப நன்றிங்க.”என்று சொல்லி, தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு; ”என் ரெண்டு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கடவுளை வேண்டாத நாளில்லை. அவர் கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க கேட்காமலே உங்களுக்கு உதவியிருக்கார். நீங்க சொன்னா கடவுள் கேட்பாரு. தயவு பண்ணி என் பிள்ளையைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க.”

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

**********************************************************************************


திங்கள், 4 ஜூலை, 2011

இறைவியின் சீற்றம்

                         


                                                                
                        இறைவியின் சீற்றம் [சிறுகதை]

இறைவனும் இறைவியும் [அரூபமாக], வாகனங்களின் ஓட்டத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டம் இட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய
தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, ”அங்க பாருங்க” என்று குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் 
காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.


முகம் சுழித்த இறைவன்,  “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.


“பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது அப்பட்டமா தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே? இவளைப் பைத்தியம் ஆக்கியது யாருன்னு கேளுங்க” 
என்றார் இறைவி.


அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.


”உங்க ஆசீர்வாதத்தோட நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க”


வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, ”என்ன உளறுகிறாய்?” என்றார்.


“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப் படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்:


“இவளுக்கு அப்போ பதினாறு வயது. மக்கள் நடமாட் டம் குறைந்த தெருவில் இவள் தனியே போன போது, நான்கு ’காலிகள்’ இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி , அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க.........................”


ஐயோ........என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சி கூக்குரல்  
எழுப்பினா இவ.. இவள் கற்பைக் காப்பாத்த யாருமே முன் வரல......


கடவுளே....ஏ ஏ ஏ.........ஓ ஓ ஓ கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே, அழுது புலம்பி 
அபயக்குரல் எழுப்பினா.......

துடிதுடிச்சி, ஓடோடிப் போயி காப்பாத்த வேண்டிய நீங்களும் இவளைக் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க; அந்த வினாடியே மோனத்திலும் மூழ்கிட்டீங்க.....................

சாதாரண மனுசங்களுக்கு இந்த மோனமும் தியானமும் தேவைப் படலாம்.
முழுமுதல் கடவுளான நீங்க எதுக்கு அடிக்கடி மோனத்தில் மூழ்கிக்
கிடக்கிறீங்கன்னு எனக்குப் புரியல..........

அது கிடக்கட்டும். உங்க மெத்தனத்தால நடக்கக் கூடாத ஒரு கொடூரம் நடந்து முடிஞ்சி போச்சி.

சூது வாது அறியாத ஒரு இளம் வயசு அப்பாவிப் பொண்ணைச் சீரழிச்சி,
சித்திரவதை பண்ணி, அந்த நாலு கயவர்களும் நடுத் தெருவில் அலைய
விட்டுட்டாங்க.

தனக்குக் ‘கடவுள் தந்த பரிசை’ நினைச்சி நினைச்சி எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையற இந்தப் பைத்தியகாரியைப் பாருங்க; ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்து ரசிங்க” என்று குரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் வழிந்திட சிரமப் பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி,  ” இப்படிக் கொடூரமா
தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன? சொல்லுங்க” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்” உணர்ச்சியற்ற குரலில் சொன்னார் இறைவன்.

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியாது.அது ஒரு நீ.........ண்.....ட சங்கிலித் தொடர். எப்போதெல்லாமோ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணும்கிறது ஏற்கனவே விதிக்கப் பட்டது.
கேட்கப்படுற ஒவ்வொரு கேள்விக்கும் கணக்குப் பார்த்துப் புள்ளிவிவரம் தர்றது என்னுடைய வேலை இல்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம்
பண்ணினவள். அதுக்கான தண்டனையை இந்தப்பிறவியில் அனுபவிக்கிறாள். அவ் வளவுதான்.”

இனியும் பேச விரும்பாதவர் போல் நடையில் வேகம் காட்டினார் இறைவன்.

”நில்லுங்க”.

கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட அந்த வார்த்தை இறைவனை மேலும் நகரவிடாமல் ஆணி அடித்தாற்போல் நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாள். சரி........... இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஸ்டம் அந்த நாலு மனுச நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு, அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் என்னய்யா?” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மீண்டும் மோனத்தில் புதையுண்டார்!

**********************************************************************************











          

செவ்வாய், 28 ஜூன், 2011

கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி

                                                 கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி


கடவுளே,


கடந்த ஒரு வினாடி வரை உம்மை நாம் நம்பியதில்லை.


’நீர் எப்படித் தோன்றினீர்? உம்முடைய தோற்றம் எப்போது, எவ்விடத்தில்,
எவ்வாறு நிகழ்ந்தது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, விடை தெரியாத நிலையில்....................................................

ஆன்மிகவாதிகள் தரும் உம்மைப் பற்றிய விளக்கங்கள் வெறும்
அனுமானங்களே தவிர, அறிவு பூர்வமானவை அல்ல என்ற காரணத்தால்..........

நீர் ‘இருப்பதாக’ நாம் ஒப்புக் கொண்டதும் இல்லை. இருப்பினும்.............................

ஆன்மிகவாதிகள் எம் போன்றவர்கள் மீது வீசுகிற சில கேள்விக் கணைகளை எம்மால் புறம் தள்ள முடியவில்லை.

அவை............................

“ஏன், எப்படி.....என்பன போன்ற கேள்விகள் கிடக்கட்டும், உன் கண் முன்னால்
கோள்களும் நட்சத்திரங்களும் எல்லையில்லாத பெரு வெளியில் இறைந்து
கிடப்பதையும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறாய். இவையெல்லாம்
பொய்; மாயை என்கிறாயா? இல்லையே. ‘உண்மை’ என ஒப்புக் கொள்கிறாய்தானே?

நீ இருப்பது; நாம் இருப்பது; நாம் இயங்குவது.............எல்லாம் உண்மைதானே?

உனக்கு ஆறாவது அறிவு இருப்பதை நம்புகிறாய்.

 அந்த அறிவைக் கொண்டுதான் சிந்திக்கிறாய்.

கடவுளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கிறாயே, எல்லாம் அந்த ஆறாவது அறிவு இருப்பதால்தானே?

இந்த அறிவு ‘உண்மையானது’ என்பதை நீ மறுக்க முடியாது.

ஆனால், ஓர் உண்மையையும் நீ மறந்துவிடக் கூடாது.

உனக்கு வாய்த்திருக்கிற இந்த அறிவு நிரந்தரமானது அல்ல; அழியக் கூடியது.

அழியக் கூடிய இந்த அறிவு தானாகத் தோன்றியிருக்க முடியாது; இதைத் 
தோற்றுவிக்க இதைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் அறிவு தேவை.

 விவரிப்புக்கு அடங்காத அந்தப் ‘பேரறிவைத்தான் ‘கடவுள்’ என்கிறோம்.

அந்த அறிவு எப்படித் தோன்றியது என்ற கேள்வி அவசியமற்றது. ஏனென்றால்...

கோள்கள் இருப்பது போல, நீ இருப்பது போல, நாம் இருப்பது போல, நமக்கு
ஆறாவது அறிவு இருப்பது போல நம் அறிவுக்கும் மேலான ஓர் அறிவு 
இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்”.

கடவுளே,

இவ்வாறாக எழுப்பப்படுகிற கேள்விகளை எம்மால் அலட்சியப் படுத்த
முடியவில்லை என்பது உண்மைதான்.

ஐம்புலன்கள் இல்லாமல் நீர் எப்படிப் பார்க்கிறீர், கேட்கிறீர்......என்பன போன்ற    
எத்தனயோ கேள்விகளை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு.........................

நீர் ஒருவர் ‘இருக்கிறீர்’ என்று தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு..........................

உம்மிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சம், எந்தவொரு அளவுகோலும் கொண்டு அளந்து அறிய
முடியாதது; நீளம், அகலம்,மேல்,கீழ் மையப்புள்ளி என்று எதுவுமே இல்லாதது; விளிம்பு நிலை அற்றது என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.

இந்தப் பிரமிக்கத் தக்க.......................................................................................

கற்பனக்கு எட்டவே எட்டாத..........................................................................

பிரபஞ்ச வெளிக்கு நீர் ஒரே ஒரு கடவுள்தானா?

நீர் கடவுளாக இருந்தாலும் உம்மாலும் கணிக்கவே இயலாத....அளந்தறியவே இயலாத அனைத்து அண்டங்களுக்கும் நீர் ஒருவர்தான் கடவுள் என்று உம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

உம்மைப் போல இன்னும் எத்தனை கடவுள் இருந்தால், முழுமை பெறாத பிரபஞ்ச வெளியைக் கட்டி ஆள்வது சாத்தியமாகும்?


கடவுள்கள் பலர் என்றால், உங்களுக்குள் ஆதிக்கப் போட்டி வருமே?

போட்டியை எப்படித் தவிர்த்தீர்கள்?

சமரசமா? இல்லை, சமர் புரிந்து மற்றவர்களை அழித்துவிட்டு நீர் மட்டுமே அனைத்தையும் ஆள்கிறீரா?

பிரபஞ்சப் பரப்பையே அளந்தறிய முடியாத போது கடவுளரின்
எண்ணிக்கையையும் கணக்கிட முடியாதே?

கடவுளே,

கேள்விமேல் கேள்விகளை அடுக்கி உம்மை நோகடிப்பதோ, இழிவு படுத்து
வதோ எம் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.


நீர் எமக்குத் தந்த பகுத்தறிவு இவ்வாறு கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.
அதைத் தடுக்க இயலவில்லையே ஐயா.

கேள்விகள் கேட்பதுகூடக் குற்றமா கடவுளே?

நீர் இருப்பது உண்மையானால், எல்லாம் வல்லவரான உம்மை இந்தக் கேள்விகள் களங்கப் படுத்திவிடுமா!?

ஓ.....கடவுளே,

இன்னும் உம்மிடம் கேட்பதற்குக் கேள்விகள் உள்ளன. அவற்றை இப்போதே முன் வைக்க நாம் விரும்பவில்லை.

இந்த ஒரு கேள்விக்கு நீர் பதில் தந்தால் போதும்.

அற்ப மனிதனான எம்மை மதித்து நீர் எம்முடன் தொடர்பு கொள்ள மாட்டீர்
என்பது எமக்குத் தெரியும்.

சரியான பதிலை உம்முடைய ‘அவதாரங்கள்’ மூலமாக அனைத்து மக்களும் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தும்.

உமது பதில் எமக்கு முழுத் திருப்தி அளித்தால் உம்மை நாம் நிரந்தரமாகஏற்றுக் கொள்வோம். கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எம் ஐயனே.

**********************************************************************************
**********************************************************************************

















திங்கள், 20 ஜூன், 2011

கடவுளின் ஓர வஞ்சனை

                                          கடவுளின் ஓர வஞ்சனை


மனிதர்களால் நம்பப்படும் விதியில் ’இரண்டு வகை’ உள்ளது.

ஒன்று ’தீய விதி’. இன்னொன்று ’நல்ல விதி’

உயிர்களுக்குத் தீமை பயப்பது தீய விதி; நன்மை பயப்பது நல்ல விதி.

உயிருள்ள.....உயிரற்ற அனைத்தையும் இயக்குவது இந்த விதி[கள்]தான். அதாவது , கடவுளே நல்ல விதி மூலம் உயிர்களுக்கு நன்மையையும், தீய விதி மூலம் தீமையும் செய்கிறார். [பக்தர்கள் முகம் சுழிக்க வேண்டாம்]

இதோடு நில்லாமல் உயிர்களுக்குச் ‘சுய அறிவும்’ கொடுத்திருக்கிறார்.

சுய அறிவு என்பது, உயிர்கள் ‘தன்னிச்சையாய்’ச் செயல்பட உதவுவது.


உயிர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடவுள், உயிர்கள் சுயமாகச் செயல்படுவதற்கான அறிவை ஏன் கொடுத்தார்?

தம் விதியையும் உயிர்களின் மதியையும் மோத விடுவதற்குத்தானே?


அந்த மோதலில், உயிர்கள் படும் பாட்டை.....துன்பங்களை.....துயரங்களை.........
அடையும் வேதனைகளைக் கண்டு ரசிக்கத்தானே?

வேறென்ன காரணம்.....காரணங்கள்? சொல்லுங்களேன்.

“இதெல்லாம் கடவுளின் விளையாட்டு. இந்த விளையாட்டில் உயிர்கள் இன்பம் துன்பம் இரண்டுமே அனுபவிக்க நேரிடும். முழு நம்பிக்கையோடு அவனை வழிபட்டால் வீடு பேறு எய்தலாம்”.

இப்படிச் சொல்பவர்கள் யார்?

ஆன்மிக வாதிகள்; மதவாதிகள்.

இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களின் ஆறாவது அறிவை மழுங்கடித்து
விட்டார்கள்.

இந்த “ஆறாவது அறிவு’ மனிதர்களுக்கு எப்படி வாய்த்ததோ யாருக்கும்
தெரியாது. [இது கடவுளால் அருளப்பட்டது என்று கதை விடாமல், ‘தெரியவில்லை’ என்று மனப்பூர்வமாய் உண்மையை ஒப்புக் கொள்ள
வலியுறுத்துவது இந்த ஆய்வுரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

எதையும் ஏன், எப்படி, எப்போது, எங்கே என்றெல்லாம் மனிதனைக் கேள்விகள் எழுப்பத் தூண்டியது இந்த அறிவுதான்.

அயராது சிந்தித்து, விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அரிய பல
சாதனைகளை நிகழ்த்த அடிப்படையாய் அமைந்தது இந்த அறிவுதான்.

இந்த அறிவில், சராசரி மனிதன் பயன்படுத்துவது மிக மிகக் குறைந்த
அளவுதான் [ஐந்து அல்லது ஆறு சதவீதம்தான். விஞ்ஞானிகள்
பயன்படுத்துவதே13% தான்(?) என்கிறார்கள் அறிஞர்கள்.]

மனிதன், தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு ஆளாகி, கடும்
துன்பங்களுக்கு உள்ளாகக் காரணம் அவன் தன் அறிவை முழுமையாகப் பயன்படுத்தாததே.

படிப்படியாக, தன் அறிவை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான பயிற்சி.......
அயராத முயற்சி.....கட்டுக்கடங்காத ஆர்வம் எல்லா மனிதர்களுக்கும் தேவை.


பகுத்தறிவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் சந்திக்க நேரும் தோல்விகளின் எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் சக்தி நாளும் வளரும்.

மனிதன் தன் அறிவை முழுமையாக [100%] பயன்படுத்தும் காலம் வந்தால், அப்போது மனித சமுதாயம் எய்தும் இன்ப நிலையை எண்ணிப் பாருங்கள்.

நாம் அனுபவ ரீதியாக அறிந்து வைத்திருக்கும் இந்த ‘அறிவை’ப்
பயன்படுத்துவதைத் தவிர்த்து, நம்மால் கொஞ்சமும் அறியப்படாத, நம்பவே முடியாத விதியை நினைத்து..........................................

”விதி வலியது. அதை நம்மால் வெல்ல முடியாது. விதியால் விளையும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடவுளைச் சரணடைவதுதான் வழி’ என்று
புலம்புவதால் பயன் இல்லை.

இன்றுவரை பலன் விளைந்ததும் இல்லை. [தற்செயலாக நடந்ததையெல்லாம் கடவுளின் அருட்செயல் என்று சாதிக்க வேண்டாம்]

கடவுள் உருவாக்கிய விதி ’உண்மை’ எனக் கொண்டால்..............................

விதிப்படி எல்லாம் நடந்தே தீரவேண்டும்.

கடவுளை வழிபடுவதால் விதியின் பிடியிலிருந்து தப்பலாம் என்றால்..........

கடவுள், விதியை உருவாக்காமலே இருந்திருக்கலாமே?

ஏன் உருவாக்கினார்?

மனிதர்கள் தன்னை வழிபட வேண்டும் என்ற ஆசை காரணமா?

கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து, காணிக்கைகள் செலுத்த வேண்டும் என்னும் பேராசை காரணமா?

என்னதான் காரணம்? சொல்லுங்களேன்.

கடவுள் பற்றிய மதவாதிகளின் கருத்துகளையும் அவர்களின் செயல்பாடு களையும் ஆராய்ந்தால் ஒன்று நன்றாகப் புரியும். அது?

கடவுள் ஓர் ஓரவஞ்சனையாளர்!

பகுத்தறிவால் இயற்கையின் நடைமுறைகளை வென்று புதிய 
கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியல் அறிஞர்கள் [விஞ்ஞானிகள்] பலர், மதவாதிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் 
இடம் பெற்றுள்ளன.


அந்தக் கொலைகாரர்களில் யாரையேனும் கடவுள் தண்டித்தது உண்டா?

எனவே, கடவுள் என்று ஒருவர் இருந்தால்........................................

அவர் வஞ்சக நெஞ்சம் கொண்டவர் என்கிறோம்.

உங்கள் பதில் என்ன?

********************************************************************************























ஞாயிறு, 19 ஜூன், 2011

கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]



                                      கடவுள் பரப்பிவிட்ட புரளி [சிறுகதை]

                   இந்த மண்ணுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் பிரபஞ்சத்தின் மையத்திலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண் டிருந்தார்கள்.

“இன்னும் கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள்
பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; எல்லாரும் உயிர் இருந்தும் நடைப் பிணமா அலையறதையும்
கவனிச்சேன்” என்றார் இறைவன்.

“இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” சந்தேகம்
எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று
சொன்ன இறைவன், விரிந்து பரந்த ‘வெளி’யே அதிரும்படியாக, ஊழிக்
காலத்தில் சிரிப்பது போன்ற அதி பயங்கரச் சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்!

அதிர்ச்சிக்குள்ளான இறைவி,”ஏன் அப்படிச் செய்தீங்க?” என்றார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க,
மனிதன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமாயிடிச்சி.
எதிரியை உயிரோட தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கி றான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்றான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..................................”

நீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்ட இறைவன், “இவன் செய்யற அக்கிறமங்களை என்னால் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல. மண்ணுலகத்தையே அழிச்சிடறதா முடிவு பண்ணிட்டேன்.” என்றார்.

“உடனே அழிச்சிட வேண்டியதுதானே. எதுக்காகப் புரளியைக் கிளப்பி விட்டீங்க?”

“எல்லோரும் ஒட்டு மொத்தமா அழியப் போறாங்கன்னு தெரிஞ்ச அப்புறமாவது மனுசன் திருந்துறானா பார்ப்போம்”.

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க”.

இறைவனின் கரம் பற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார் இறைவி.

*********************************************************************************




வியாழன், 9 ஜூன், 2011

'ஏதோ'வும் கடவுளும்!

உயிர்களுக்குப் ‘புலன்கள்’ உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், அவற்றால் உருவாக்கப்படும் ஒலிகளை உள் வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும்[மெய்] உதவு கின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ ஓர் உயிரினத்தைப் பொறுத் தவரை மூளைதான் எல்லாமே.

உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிரினங்களின் அனைத்துச் செயல் களுக்கும்  மூளையே ஆதாரம்.

மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு புதியனவற்றைப் படைப் பதற்குப் பயன்படுவதும் இந்த மூளையே.

ஆக, அறிவதற்கும் உணர்வதற்கும் படைப்பதற்கும் மூளை ஓர் இன்றியமையா தேவை ஆகிறது.

அனைத்தையும் அறிந்து வைத்து, படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைச் செய்கின்ற தீராத விளையாட்டுப் பிள்ளையான கடவுளுக்கும் இந்த மூளை இருக்கும்தானே?

இம்மாதிரி, அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் பொத்தாம் பொதுவாகக் கடவுளை நம்புவது அறிவீனம்.

கடவுளின் மூளை எத்தன்மையது?

உயிர்களின் மூளையைவிட, ஆறாவது அறிவு படைத்த மனிதனின் அபார மூளையைக் காட்டிலும் அவருடைய மூளை மிக மிக மிக.......................................
நுட்பமான, அதி அற்புதமான, அளவிட முடியாத சக்தி படைத்ததாகத்தானே இருக்கும்!

மூளை என்று ஒன்று இல்லாமல்,அதைவிட சக்தி வாய்ந்த நுட்பம் மிகுந்த
'ஏதோ' ஒன்றைப் பயன்படுத்துகிறாரா அவர்?

அந்த 'ஏதோ' எப்படி இருக்கும்?
----------------------------------------------------------------------------------------------------------------------



                                                                             
                                                                                 






வெள்ளி, 27 மே, 2011

பக்தர்களுக்குப் பத்து கேள்விகள்

27-05-2011


                                          பக்தர்களுக்குப் பத்து கேள்விகள்


1]கடவுள் இருப்பதாகப் பிறர் சொல்லி நம்புகிற நீங்கள், அவர் தோன்றியது ஏன்? 
எப்படி? எப்போது என்றெல்லாம் நீங்களாகவே கேள்விகள் கேட்டு, உங்கள் சுய அறிவால் விடை தேட முயன்றது உண்டா?


2] நீங்கள் நம்புகிற கடவுளின் படைப்பில், ’உயிர்களுக்கு நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?’ என்பது பற்றிச் சிந்தித்துப் பட்டியலிட்டுப் பார்த்ததுண்டா?


3] ’நாம் பாவம் செய்தோம். கடவுளால் தண்டிக்கப் படுகிறோம்’ என்று 
உணருகிற அறிவு வாய்த்த பிறகு,  குற்றம் புரிந்தவர் அல்லது பாவம் செய்தவர் தண்டிக்கப் பட்டால் பரவாயில்லை. அறிவு வளர்ச்சி பெறாத நிலையில், ஏதும் அறியாத ஒரு குழந்தை அல்லது குழந்தை மனம் கொண்டவர்கள், அவர்கள் செய்த குற்றத்திற்காக [கடந்த பிறவிகளில்] கடவுளால் தண்டிக்கப் படுவது [உதாரணம்: துடிதுடித்து அலறிக் கதறி, அழுது, விவரிப்புக்கு அப்பாற்பட்ட வேதனைக்குள்ளாகிட, கயவர்களால் சிறுமி ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்படுதல்] என்ன நியாயம்?


இத்தகைய சிறுமைச் செயல்கள் புரிவது ஏன் என்று உங்கள் கடவுளிடம் நீங்கள்
கேட்டதுண்டா?


4]மனிதர்களிலேயே சிலரைக் கடவுளின் அவதாரம் என்கிறீர்கள். அவர்களின்
சிறு நீர் இனிக்குமா? அவர்கள் வெளியேற்றும் மலம் மணக்குமா? அழுக்குத் தேய்த்துக் குளிக்காவிட்டால் அவர்களின் திருமேனி சந்தணம் போல் கமகமக்குமா? அவர்கள் செத்தாலும் உடம்பு அழுகி நாறி, புழுக்கள் தின்றது போக மிச்சம் மீதி மண்ணோடு மண் ஆகிறது. எரித்தால் சாம்பல் ஆகிறது.

உண்மை இதுவாக இருக்க, அவர்கள் கடவுளின் அவதாரம் ஆனது எவ்வாறு?


5] கடவுள் உங்கள் முன்பு, உங்களுக்கு அறிவிக்காமல் தோன்றப் போவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவர், தான் விரும்பிய ஒரு மனிதனின் உருவிலோ விலங்கின் உருவிலோ உங்கள் முன்பு காட்சியளித்து, ”நான்தான் கடவுள்” என்று சொன்னால் அவரை நம்புவீர்களா?  எந்த உருவில் வந்தால், எப்படியான குரலில் பேசினால் உங்களை நம்ப வைக்க முடியும்?

6] கடவுளுக்குக் கோயில் கட்டுகிறீர்கள்; விழாக்கள் எடுக்கிறீர்கள். விதம் விதமாய்த் துதி பாடுகிறீர்கள். கடவுளும் மனிதனைப் போல புகழ்ச்சிக்கு மயங்குகிற சாதாரண ஆள்தானா?

 “அவரைப் புகழ்வது எங்கள் மனதைச் சுத்தப்படுத்த” என்று நீங்கள் சமாளிக்கிறீர்களா?

நாம் கேட்கிறோம். பிற உயிர்களின் துன்பம் கண்டு கலங்கினால் மட்டுமே மனம் தூய்மை பெறும் என்பதே உண்மை.அவ்வாறிருக்கையில், கடவுளைப் புகழ்வதால் மனம் தூய்மை அடையும் என்கிறீர்களே, இது அடுக்குமா? நம் மனதைத் திருத்தும் முயற்சியில் நாம் முழு ஈடுபாடு காட்டாமல், கடவுளை வேண்டி, அவர் உத்தரவு போட்டால்தான் நாம் திருந்துவோமா?! யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்?

7] உங்கள் துதி கடவுளை மகிழ்விக்கிறது; உங்கள் வேண்டுகோள் அவரைச் சென்று சேர்கிறது என்பதை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? உங்களை நம்ப வைத்தவரின் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்ததுண்டா?

8] கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கைகள், படையல்கள் எல்லாம் சில மனிதர்கள் [பலர் ஏமாற்றுக்காரர்கள்] வசம் சேர்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிந்தும் தொடர்ந்து ஏமாறுகிறீர்களே, கடவுளின் பெயரால் ஏமாற்றப் படுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்களா?

9] கடவுள் இந்த மண்ணுலகில் உங்களைத் தோன்றச் செய்ததற்காக அவருக்கு
நன்றி சொல்கிறீர்கள். அதே கடவுள்தான் உங்களுக்குக் கணக்கற்ற துன்பங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். [இதெல்லாம் தீய சக்தியின் வேலை என்று கதை விடாதீர்கள். தீய சக்தியைக் கடவுள் ஏன் அழிக்கவில்லை என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை] அதே கடவுள்தான் உங்களை மரணமடையச் செய்கிறார். அந்த மரணம் பற்றிய நினைப்புதான் உங்களைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது என்பதை அறியாதவரா நீங்கள்?. அறிந்தும் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே? இது அடிமுட்டாள்தனம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?


10] உங்களிடம் கேள்விகள் கேட்டுச் சிந்திக்கத் தூண்டிய எம்மை மனதாரப் பாராட்டுவீர்களா? இல்லை.............


“அடே நாத்திகா, நீ நரகத்துக்குத்தான் போவாய்” என்று சாபம் கொடுப்பீர்களா? 


********************************************************************************
                                         



   






     

ஞாயிறு, 22 மே, 2011

கடவுளுக்குத் தெரியுமா? [சிறுகதை]

                                  கடவுளுக்குத் தெரியுமா?
                                                          [சிறுகதை]

ஒரு வசந்தத்தின் மாலைப் பொழுதில்..........

யுக யுகமாக ‘மோனத்தில்’ புதையுண்டு கிடந்த இறைவன் மெல்லக் கண் விழித்தார்.

வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவரை அணுகிய இறைவி,  ”பூலோகத்தில் நம் மத குருமார்களின் நிலைமை ரொம்பக் கவலைக்கிடமா இருக்குங்க” என்றார்.

“ஏன்? என்ன ஆச்சு?” என்றார் இறைவன்.

“ஒரு மண் பானை இருக்குன்னா, அதை உருவாக்க...படைக்க ஒரு குயவன் 
வேணும். அது மாதிரி, உலகங்களையும் உயிர்களையும் படைக்க ஒருவர் வேணும். அவர்தான் கடவுள். அவரை வழிபட்டா துன்பங்கள் நீங்கி எப்பவும் 
இன்பமா வாழலாம். சுவர்க்கத்தில் இடம் கிடைக்கும்.....இது மத குருமார்கள் எப்போதும் மக்கள் மத்தியில் செய்யுற பிரச்சாரம்.........”

கடவுள் குறுக்கிட்டார்: ”உலகங்களைக் கடவுள் படைச்சார்னா கடவுளைப் படைச்சது யார்னு நாத்திகவாதிகள் எதிர்க்கேள்வி கேட்பாங்க. ’கடவுளை யாரும் படைக்கல’ன்னு இவங்க சொல்ல, ’உலகங்களை மட்டும் ஒருத்தர் படைக்கணுமா என்னன்னு?’அவங்க கேட்க, ’உலகம்கிறது ஜடப்பொருள். அது
தானாகத் தோன்ற முடியாது; நிலையானதாகவும் இருக்கமுடியாது. உயிர்கள்
அரைகுறை அறிவுடையவை. கடவுள் மட்டுமே முழுமையான அறிவுடையவர்; அவர்தான் படைப்புத் தொழில் செய்பவர். அவரை யாரும் படைக்கவில்லை. அவர் சாசுவதமானவர்; ’எப்போதும் இருப்பவர்’............

...............இப்படியெல்லாம் எதை எதையோ சொல்லி....கேள்வி கேட்கிற
நாத்திகர்களின் வாயை மதவாதிகள் அடைச்சுடுவாங்க. இதுதானே
பூலோகத்தில் வழக்கமா நடக்கிறது?”

இறைவன் கேட்க, இறைவி சொன்னார்...........

“ஆமா. ஆனா, இப்பெல்லாம், ”கடவுள் சாசுவதமானவர்; ‘எப்போதும் இருப் பவர்’னா அது மட்டும் எப்படி சாத்தியமாச்சு? அதைச் சாத்தியம் ஆக்கியவர் யார்?”னு நாத்திகவாதிகள் கேள்விமேல் கேள்வி கேட்டு மதவாதிகளைத் திணற
அடிக்கிறாங்களாம்........

அது மட்டுமில்ல, ’இதுக்குப் பதில் தெரியலேன்னா சும்மா இருக்கணும்.
எல்லாம் தெரிஞ்ச மாதிரி, ‘கடவுள், ஆன்மா, சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம்னு கதை அளந்து மக்களை அடிமுட்டாள் ஆக்க வேண்டாம்’னு எச்சரிக்கை பண்றாங்களாம். பாவம் நம்ம பிரதிநிதிகள்! இதுக்கெல்லாம் பரிகாரம் கேட்டுப் பிரார்த்தனை பண்ணிட்டே இருக்காங்க.........”

சொல்லி முடித்த இறைவி, சிறிது இடைவெளி கொடுத்து.......

“நீங்க சாசுவதமானவர்; ’எப்போதும் இருப்பவர்’.....சரி, ’இது மட்டும் எப்படி சாத்தியமாச்சு? சாத்தியப்படுத்தியது யார்?னு நாத்திகர்கள் கேட்கிற கேள்வி களுக்கு உங்களுக்கு மட்டுமே பதில் தெரியும். அதை எல்லோருக்கும் புரியும் படி விளக்கமா சொல்லிடுங்க” என்றார்.

“எனக்கு மட்டும் பதில் தெரியுமா என்ன? இதுக்கான விடை தேடித்தான் நான் அடிக்கடி மோன தவத்தில் மூழ்கிடறேன்” என்று சொன்ன இறைவன்.........

மீண்டும் மோனத்தில் புதைந்து போனார்!

**********************************************************************************

”கடவுளுக்கும் தெரியாது என்று சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது? கடவுளுக்கும் மேம்பட்ட அறிவுடையவனா நீ?” என்று இறை நம்பிக்கையாளர்கள் எம் மீது சீற்றம் கொள்வதை உணர முடிகிறது.

அவர்கள் முன் நாம் சமர்ப்பிக்கும் எதிர்க் கேள்வி இதுதான்:

’எல்லாம் அறிந்தவர் கடவுள்’ என்று சொன்னவர்களும் மனிதர்கள்தானே? மனித இனத்தைச் சார்ந்த நாம், ‘கடவுளுக்கும் தெரியாது’ என்று சொல்வது மட்டும் எப்படித் தவறாகும்?

‘அவர்கள் ஞானிகள்; நீ சாமானியன்’ என்று வாதம் செய்வதெல்லாம் பகுத்தறிவுக்கு உகந்ததன்று.

*******************************************************************************