திங்கள், 31 டிசம்பர், 2012

’குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனுக்கும் ’குங்குமம்’ ஆசிரியருக்கும் ஒரு போட்டி!!!

கீழ் வரும் ‘தப்புத் தப்பாய் ஒரு காதல்’ என்னும் ஒ.ப.கதையின் ‘முடிவு’ என்ன???

குமுதம், குங்குமம் ஆகிய இரண்டு முன்னணி வார இதழ்களும் போட்டி போட்டிக்கொண்டு ஒ. ப. கதைகளை வெளியிடுகின்றன. இதன் ஆசிரியர்களுக்கான ‘சிறப்புப் போட்டி’ இது.

வெற்றி பெறுபவர்களுக்கு, ‘சிறந்த இதழாசிரியர்’ என்னும் விருது வழங்கப்படும்!

தோற்றால்..........

பாதகமில்லை. இத்தளத்தில் வெளியாகும் ஒ.ப.கதைகளைத் தொடர்ந்து படித்துத் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இதோ கதை..........

தலைப்பு:                    தப்புத் தப்பாய் ஒரு காதல் !

ந்தக் கல்லூரி வளாகத்தின் வடகிழக்குத் திசையில், சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த புங்கமரத்தடியில் குப்புசாமி காத்திருந்தான்.

நேற்று அவன் ரதிரேகாவுக்குத் தந்த காதல் கடிதத்திற்கு இன்றே பதிலை எதிர்பார்த்தான்.

தன்னோடு படிக்கும் அத்தனை குமரிகளுக்கும் அவரவர் அழகுக்கேற்ப மதிப்பெண்கள் போட்டு, நீண்ட பட்டியல் தயாரித்து, தீர யோசித்து இந்த ரதிரேகாவைத் தேர்வு செய்தான் குப்புசாமி.

அவளை நினைத்து நினைத்து உருகுவதாக ஒரு காதல் கடிதம் தீட்டினான்.

ஆய்வுக்கூடத்தில், எல்லோரும் கருமமே கண்ணாய் இருந்தபோது, ஓசைப்படாமல், அவள் கையில் கடிதத்தைத் திணித்து, “நாளை பகலுணவு இடைவேளையில் உனக்காகப் புங்க மரத்தடியில் காத்திருப்பேன்” என்று அவன் கிசுகிசுத்தபோது, அவள் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா! அப்போதே முக்கால் கிணறு தாண்டிவிட்டதாக நினைத்தான் குப்புசாமி.

குப்பு தப்பு வழியில் போகிற பையனல்ல. தானுண்டு தன் படிப்புண்டு என்றுதான் இருந்தான். வயசுக் கோளாறு கரணமாகக் கன்னியரைப் பற்றிய நினைப்புக்கு மனதில் இடம் தந்துவிட்டான்.

அந்த ஆண்டுதான் கல்லூரியில் காலடி வைத்த வேலுச்சாமி,  “இருபத்தொரு வயசில் இருபத்தேழு பெண்களைக் காதலிச்சிட்டேன்” என்று தம்பட்டம் அடித்தது, குப்புசாமிக்குள் அடங்கிக் கிடந்த காதல் பேயை உசுப்பி விட்டுவிட்டது.

தன் வகுப்புத் தோழி மோகனாவுக்கு மட்டும் முப்பத்தேழு ‘மோக மடல்கள்’ தீட்டிவிட்டதாக முரளிமோகன் பீற்றித் திரிந்தது, இவனுக்குள் காதல் பித்தம் பெருக்கெடுக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.

கையில் விரித்துப் பிடித்த கடிதமும், கழுத்தில் உயர்த்திவிட்ட காலருமாக, “சரிதா என் காதலை ஏத்துகிட்டா. என்னை மனசாரக் காதலிக்கிறா” என்று சொல்லிச் சொல்லி, செல்வராசு கர்வப்பட்டது, ‘நானும் காதலிக்கப்பட மாட்டேனா” என்ற ஏக்கத்தை இவனுக்குள் வளரச் செய்துவிட்டது.

குப்புசாமி தீவிரமாக யோசித்தான். தானும் காதலித்துப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். ரதிரேகாவுக்குக் காதல் கடிதம் தந்தான். புங்க மரத்தடியில் காத்திருந்தான்.

அதோ.....

தோழியர் குழாமிலிருந்து விடுபட்டு, புங்கமரத்தைக் குறிவைத்து விரைந்து வந்துகொண்டிருப்பது...........

ரதிரேகாவேதான்.

அவள் கரத்தில் படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கடிதம்.....?

இவனுக்கு அவள் தீட்டிய தீஞ்சுவை மடலோ?

குப்புசாமியை நெருங்கிவிட்டிருந்தாள் ரதிரேகா.

குப்புசாமியின் நெஞ்சில் படபடப்பு. “ரதி...வந்து...” என்று ஏதோ சொல்ல முயன்றான்.

வார்த்தைகள் வெளிவரும் முன்னரே, ரதிரேகா தன்னிடமிருந்த கடிதத்தைக் [நம் குப்பு எழுதியதுதான்!] கசக்கிச் சுருட்டி, “இந்த குரங்கு மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?” என்று இவன் முகத்தில் வீசியடித்துவிட்டு, வந்த வேகத்தில் திரும்பிப் போனாள்.

குப்பு லேசான அதிர்ச்சிக்கு ஆளானான். சுதாரித்துக் கொண்டு வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள்; இதழ்களில் புன்னகை!

தொடரும்......................

குறிப்பு: கதையின் முடிவு என்ன?

சிந்திப்பதற்குச் சிறிது அவகாசம்.

முடிவு கீழே......................................












முடிவு:

“அடேய் குப்பு, அழகுக்கு மதிப்பெண் போட்டு நீ தயாரித்த மதிப்பெண் பட்டியலில், இந்த ரதிரேகா கடைசி ஆள். இவளே உன்னை நிராகரிச்சிட்டான்னா, வேறு எவளும் உன்னைச் சீந்தப் போவதில்லை. இனி, காதல் கத்தரிக்காய்னு மனசைத் தவிக்க விடாம நிம்மதியா படி. பெரிய உத்தியோகத்துக்குப் போ. கவுரவமா வாழ்ந்து காட்டு. அப்புறம், இந்த ரதியென்ன, தேவலோகத்து ரதியே வந்து, ‘என்னை ஏத்துக்கோ’ன்னு கியூவில் நிற்பா” என்று தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, புங்கமரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கலானான் குப்புசாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






திங்கள், 24 டிசம்பர், 2012

காமம் பொல்லாதது!

’காமம் வலியது: பொல்லாதது’ என்பதை உணர்த்த முயலும் கதைகள்!!!

காமக் கதை1:                        நடுநிசிக் காமம்

தூக்கம் கலைந்து புரண்டு படுத்தான் தங்கராசு.

அவனுடைய ஒரு கை, முந்தானை விலகிய மருக்கொழுந்துவின் மார்பகத்தின் மீது விழுந்தது.

மனதில் காமம் துளிர்விட, அதை இன்னும் சுதந்திரமாகப் புழங்கவிட்டபோது....

“எடுய்யா கையை.” மருக்கொழுந்து அதட்டினாள்.

கையைப் பின்னுக்கு இழுத்தான் தங்கராசு.

‘என்னய்யா நடு ஜாமத்தில் சேட்டை பண்றே?”

“அது வந்து மருக்கொழுந்து.....தூக்கக் கலக்கத்தில்.....” வாய் குழறியது தங்கராசுக்கு.

“உன் கை பட்டவுடனே எனக்கு விழிப்பு வந்துட்டுது. மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் தூங்குற மாதிரி நடிச்சேன். இதோ பாருய்யா, இந்த மாதிரி அர்த்த ராத்திரியில் எல்லாம் இது வெச்சுக்கக் கூடாது. உடம்பு கெட்டுடும்னு சொல்லியிருக்கேன் இல்லியா? நல்ல தூக்கத்தைக் கெடுத்துட்டியே.”

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாத நிலையில்,  “என்னை மன்னிச்சுடு மருக்கொழுந்து. காத்தால இருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும் மூட்டை சுமந்துட்டு வர்றேன். சுடு தண்ணியில் குளிச்சுட்டு, சுடச்ச்சுட நீ போடுற சோத்தை வயிறு முட்டத் தின்னதும் அடிச்சிப் போட்ட மாதிரி படுத்துத் தூங்கிடறேன். ஒரு தூக்கம் தூங்கி முழிக்கும் போது, பக்கத்தில் உன்னைப் பார்த்ததும் ‘அந்த நினைப்பு’ வந்துடுது.....”

அவன் பேசி முடிப்பதற்குள் அவசரமாய் அவனை இழுத்து அணைத்து, “நீ தப்புப் பண்ணல. நான்தான் உன் நிலைமை புரியாம தப்பாப் பேசிட்டேன். இனி, உன் மனசறிஞ்சி நடந்துக்குவேன்” என்றாள் இன்னும் ’புதுசு’ மாறாத மருக்கொழுந்து!

                        *                                            *                                          *

காமக் கதை 2:                    திணவு    

“மல்லிகா,   எங்கடி போய்ட்டு வர்றே?”

வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.

“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.

“இல்ல. அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைப் பாத்ரூமிலிருந்து கேட்டேன்.

மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.

“புருஷன் இருக்க வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”

“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ’அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.

மனதைத் தேற்றிக் கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு.

சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன்.

நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. ஆனா நீ.....

புருஷன் இருக்கும்போதே, அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே. இதோ பாருடி.......மற்றதில் எப்படியோ, இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்’னு திணவெடுத்துத் திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா”

“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.

**************************************************************************************************************************************

குறிப்பு: இரண்டு கதைகளுமே நான் கிறுக்கியவைதான்!

**************************************************************************************************************************************




சனி, 22 டிசம்பர், 2012

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் படைத்த ஒரு பக்கக் கதை!

அற்புதமான ‘சஸ்பென்ஸ்’ கதை இது!!

1981 ஆம் ஆண்டில், ‘ராணி’ இதழில் [26.07.81] ராஜேஷ்குமார் எழுதிய கதை இது.

கதையைப் பிரதி எடுக்கவில்லை. எழுதி வைத்த குறிப்பின் துணைகொண்டு என் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன்.

எழுத்தாளரின் கொள்கையைப் பின்பற்றி, ‘ஆபாசம்’ கலவாத நடையைக் கையாண்டிருக்கிறேன்.

சாதனை எழுத்தாளருக்கு என் மனப்பூர்வ நன்றி.

ஒரு பிரபல படைப்பாளரின் ஒரு பக்கக் கதையைப் படிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்.

கதைத் தலைப்பு:                அவளுக்கு வெட்கமில்லை     

“என்னடா யோசிக்கிறே? காரியத்தில் இறங்கு” என்றான் துரைசாமி.

”அண்ணே, பட்டுப் புடவையில் ரூபி ஒரு அப்சரஸ் மாதிரி இருக்கா. பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது” என்றான் செல்வம்.

“சும்மா பார்த்துட்டே இருந்தா காரியத்தை எப்போ முடிக்கிறது. போடா. சீக்கிரம் போயி அவள் சேலையை உருவு.” அதட்டும் தொனியில் சொன்னான் துரைசாமி.

”துரையண்ணே, நீங்க எனக்கு சீனியர். நீங்க ஆரம்பிச்சி வைங்க.”

“இதுல என்னடா சீனியர் ஜூனியர்? போடா. உன் திறமையைக் காட்டுடா.”

“அவ கட்டியிருக்கிறது விலை உயர்ந்த பட்டுச்சேலை. கண்டபடி கை வெச்சா சீலை பாழாயிடும். பக்குவமா கையாளணும்.....” தயங்கினான் செல்வம்.

இவர்கள் பேசுவதை ரூபி நின்ற நிலையில், புன்னகை தவழும் முகத்துடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“யாரும் வந்துடுவாங்க. போ. சீக்கிரம்  ஆரம்பிச்சுடு.” துரிதப்படுத்தினான் துரைசாமி.

தயக்கத்துடன் அவளை நெருங்கினான் செல்வம்.

அப்போது..........

அவர்களின் முதுகுப்புறத்திலிருந்து காலடி அரவம் கேட்டது.

இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

முதலாளி நின்றுகொண்டிருந்தார்!

“ரெண்டுபேரும் அரட்டை அடிச்சிட்டு நிக்கிறீங்களே. வாடிக்கையாளர் வர்ற நேரமாச்சில்ல. ’ஷோகேஸ்’ பொண்ணு ரூபிக்குச் சீக்கிரம் சேலையை மாத்துங்கப்பா...ம்ம்ம்...சீக்கிரம்” என்றார் அந்த ஜவுளிக்கடை முதலாளி.

கையில் புதிய பட்டுச்சேலையுடன் இருந்த செல்வமும் துரைசாமியும் பொம்மையை நெருங்கினார்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

          


செவ்வாய், 18 டிசம்பர், 2012

நீங்கள் ‘குமுதம்’ ஆசிரியராக இருந்திருந்தால்.....

கீழ் வரும் ’ஒ.ப.கதைகளை’த் தேர்வு செய்திருப்பீர்களா?

நீங்கள் வாசிக்கவிருக்கும் இரண்டு ஒ.ப.கதைகளும் அடியேன் எழுதியவை.

குமுதம் ஆசிரியரால்  அண்மையில் நிராகரிக்கப்பட்டவை!

குமுதம் ஆசிரியர்  பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

மனம் திறந்து உங்கள் முடிவைப் பதிவு செய்யலாம். செய்வீர்களா?

கதை 1:

தலைப்பு:                          விருது

ரு விருது வழங்கும் விழாவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் நீதிவாணன்.

கடைவீதியைக் கடந்தபோது அந்த அசம்பாவிதம் அவர் கண்ணில் பட்டது.

நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

“என்னைக் காப்பாத்துங்க” என்று அவள் அவலக் குரல் எழுப்பி, அவர்களிடமிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தாள்.

மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, அவளுக்கு உதவ எவருமே முன்வரவில்லை!

அவள் கடத்தப்பட்டாள்!

விழா தொடங்கியது.

வரவேற்புரை நிகழ்த்த ஒருவர் முன்வந்தார்.

அவரைக் கையமர்த்திய நீதிவாணன், என் எழுத்தைப் பாராட்டி எனக்கு விருது வழங்கவே இந்த விழா. நான் வந்துகொண்டிருந்தபோது, ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியில், நான்கு ரவுடிகள் ஒரு இளம் பெண்ணைக் கடத்திக்கொண்டு போனார்கள். நானூறு கோழைகள் வேடிக்கை பார்த்தார்கள். அவளைக் காப்பாற்றுவதற்கான சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை.

சமுதாயத்தைத் திருத்தப் பலரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன்.

எழுத்துக்களால் விளைந்த பயன் என்ன?

ரவுடிகள் இன்னும் ரவுடிகளாகவே இருக்கிறார்கள். கோழைகள் கோழைகளாகவே இருக்கிறார்கள்.

நான் இவர்களை மட்டுமல்ல, இவர்களைத் திருத்தாத எழுத்துகளை, குறிப்பாக என் எழுத்தையே நான் வெறுக்கிறேன்; விருதுகளையும் வெறுக்கிறேன்.

என்னை மன்னியுங்கள்.

                                     *                                     *                                    *


கதை 2:

தலைப்பு:                            ஏழை மனசு

வேலை நாட்களில் பேருந்துக்குக் காத்திருக்கும்போது அந்தப் பிச்சைக்காரக் கிழவி கண்ணில் படுவதுண்டு.

இறந்துபோன என் பாட்டியின் சாயலில் இருந்ததாலோ என்னவோ, அவளைப் பார்க்கும்போதெல்லாம் என் நெஞ்சில் இரக்கம் சுரந்துவிடும். சில்லரை இருந்தால் தவறாமல் பிச்சை போடுவேன். போன வாரத்தில் ஒரு ரப்பர் செருப்புக்குப் பணம்கூடக் கொடுத்தேன்.

இன்றும் அவள் என் கண்ணில் பட்டாள்.

இன்று, இரக்கத்திற்குப் பதிலாக, என் மனதில் கோபம் தலை தூக்கியது.

“கிழவி இங்கே வா.” அழைத்தேன்.

வந்தாள்.

“பணம் கொடுத்தேனே, ஏன் செருப்பு வாங்கல?”

”வாங்கிட்டேன் மவராசரே.”

“உன் காலில் செருப்பு இல்லியே?”

”அதுவா? பழைய பஸ் ஸ்டாண்டில் என் புருஷன் பிச்சையெடுக்குது. அதுக்குக் கொடுத்திட்டேன் சாமி” என்றாள் கிழவி.

புருஷன் மீதான கிழவியின் பாசம், என் உடல் முழுக்க லேசான சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

இன்னொரு ஜோடி ரப்பர் செருப்புக்குக் கிழவியிடம் பணம் கொடுத்துவிட்டுப் பஸ் ஏறினேன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால், பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதில் சற்றே தாமதம் ஏற்படும். மன்னித்திடுக.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





ஞாயிறு, 18 நவம்பர், 2012

ரிலீஸ் படம், படு செக்ஸியா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்தப் பதிவு, சினிமா [செக்ஸ்] பைத்தியங்களுக்கு மட்டும்!!!

ஏறத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” என்று கேட்டேன்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் பிய்த்துக்கொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாவகமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யான்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

”இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

****************************************************************************************************************************************

மிக முக்கிய குறிப்பு:

கடந்த இரு பதிவுகளுக்கும் ‘ஹிட்ஸ்’ குறைந்து போனதால், இந்த ’அதிரடி ஆபாசப் பதிவு’!! பெருந்தன்மையுடன் மன்னித்திடுக!

****************************************************************************************************************************************





வெள்ளி, 16 நவம்பர், 2012

ஒரு கதாசிரியனின் கதை

இது, ’சிரிப்புக் கதை’ அல்ல; ஓர் எழுத்தாளனின் ’கண்ணீர்க் கதை’!

“சே, என்ன மனிதர்கள் இவர்கள்! எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டா, ஸ்ரீதேவி ரசிகர் மன்றத்தில் விசாரிக்கச் சொல்கிறார்களே! எழுத்தாளனை மதிக்காத இந்தச் சமுதாயம் உருப்படுமா?”

மனித குலத்தைச் சபித்தவாறு, ‘அய்யாசாமி நகரில்’ தெருத்தெருவாக அலைந்துகொண்டிருந்த அந்த மனிதருக்கு வயது எழுபதுக்குக் குறையாது.

பெரியவருக்கு ஒடிசலான உடம்பு. வேட்டி ஜிப்பாவில் மேலே தலை மட்டும் தெரிந்தது. அடி மண்டையில் கொஞ்சம் முடி அடிக்கோடிட்டிருந்தது. தோளில் தொங்கும் ஜோல்னா பையின் சுமையால் முதுகுத் தண்டு கொஞ்சம் வளைந்து காணப்பட்டது.

வீடு வீடாய்ப் படிகளை எண்ணினார். அழைப்பு மணியில்தான் எத்தனை வகை என்பதை அனுபவத்தில் கண்டு ஆச்சரியப்ப்ட்டார். கதவு திறந்து, ”என்ன?” என்று கேட்டவர்களிடமெல்லாம், “எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமா?” என்று கேட்டார்.

“சுவர் சுவரா விளம்பரம் எழுதுற ஒருத்தர் தெருக்கோடியில் இருக்கார். கேட்டுப் பாருங்க” என்றார் ஒரு வீட்டுக்காரர்.

“பருவ சுகம், பாமா நீ வாம்மா, இளமை ராகம்ங்கிற மாதிரி, ‘ஒரு மாதிரி’ புத்தகங்கள் எழுதிக் குவிச்சாரே, அவரா?” என்று பல்லிளித்தார் இன்னொருவர்.

“அம்மா...தாயி...சீதேவி...” என்று அவர் மிச்சமிருந்த வார்த்தைகளைக் கக்குவதற்குள்ளாகவே, “இன்னும் சமையல் ஆகல. போய்ட்டு அப்புறமா வாப்பா” என்றாள் ஒரு குடும்பத் தலைவி.

விரக்தியின் விளிம்பைத் தொட்டுவிட்ட பெரியவர், அய்யாசாமி நகர் வாசிகள் சிலரிடம், “சீதேவிதாசன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைத் தெரியலீன்னு சொல்றீங்க. ஆச்சரியமா இருக்கு” என்றார்.

“இந்த மாதிரி கேள்வி கேட்டுத் திரியற உம்மைப் பார்த்தாத்தான் ஆச்சரியமா இருக்கு. நீர் என்ன சீதேவிதாசனின் தம்பி மூதேவிதாசனா?” என்று அவர்கள் திருப்பிக் கேட்ட போது, பெரியவர் மனம் உடைந்து போனார்.

எழுத்தாளரின் பெயர் சொன்னவுடனே, அய்யாசாமி நகரமே திரண்டு வந்து தமக்கு வழி காட்டும் என்று எதிர்பார்த்தார். நடக்கவில்லை.

“என்ன ஐயா, சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டீங்களே, அவரைத் தெரியாதவங்க இருக்கீங்களான்னு கேட்டிருக்கணும்.”

“இயல்பான கதை; மனதைச் சுண்டியிழுக்கிற வர்ணனை: ஆளைக் கட்டிப் போடுற அட்டகாசமான நடை. சீதேவிதாசன் ஒரு பிறவி எழுத்தாளருங்க.”

“எங்க நகருக்கு அவர் குடி வந்தது நாங்க செஞ்ச புண்ணியம்.”

இப்படியெல்லாம், இன்னும் எப்படியெல்லாமோ நகர மக்கள், எழுத்தாளருக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார் அவர்.

அவர்களோ, எழுத்தாளருக்கு ஒரு எருக்கமாலைகூடப் போடவில்லை.

பெரியவர் துவண்டுவிடவில்லை. “அய்யாசாமி நகர், துப்புக்கெட்டான் தெரு, கழுத்தறுத்தான் சந்து, கதவு எண் 18. இதுதானே எழுச்சி எழுத்தாளர் சீதேவிதாசன் வீடு?” என்று வீடு வீடாகச் சந்தேகம் கேட்டார். கடைசிவரை அவர் சந்தேகம் தீர்க்கப்படவில்லை என்றாலும், ஒரு வீடுகூட அவர் மிச்சம் வைக்கவில்லை.

ஒரு வழியாக, மனதைத் தேற்றிக்கொண்டு, சீதேவிதாசனின் வீடு நோக்கி நடந்தார், பெரியவர்.

அவர் அங்கு செல்வது இது முதல் தடவையல்ல. கடந்த ஏழெட்டு மாதங்களில், எத்தனை தடவை அங்கு சென்றிருக்கிறார் என்பதை எண்ணிச் சொல்வது அவசியமில்லை.

“என்ன செய்ய, இந்த ஏழை எழுத்தாளனை எவனுமே கண்டுக்க மாட்டேங்குறான். வீடு தேடி வருகிற நண்பர்கள் வேறு, ‘என்னய்யா பெரிய எழுத்தாளன் நீ? நீ இங்கே குடி வந்து ஏழெட்டு மாசம் ஆச்சு. உன்னைப் பத்தி இந்த நகர்ல ஒருத்தருக்குமே தெரியல.’ என்று குத்திக் காட்டுகிறார்கள். அதனாலதான், இப்படியொரு ஓரங்க நாடகம் போட வேண்டியதாப் போச்சு” என்று தம் மனசாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே நடந்தார் எழுத்தாளர் சீதேவிதாசன்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ








வியாழன், 15 நவம்பர், 2012

’கரு’ ஒன்று...’கதை’ இரண்டு!!

ஒன்று ‘குமுதம்’ கதை! மற்றொன்று ‘ராணி’யில் வெளியானது! சிறந்தது எது?

கதை 1

தலைப்பு:நீ தொட்டால்...’ [குமுதம் 08.09.10]

படைத்தவர்: பரமசிவம்

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறே. கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ் முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?” என்றாள் கல்யாணி.

”ஏண்டி பொய் சொல்றே.”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலே’ன்னு கோவிச்சுட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்குறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் இடையில் கை போட்டான் கண்ணுச்சாமி.

“குடிச்சுட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா ’எப்பத் தொட்டேன்’னு சந்தேகமா பார்ப்பே” என்றாள் அவள்.

“இதோ பாருடி, நான் தாலி கட்டின புருசன். படுன்னா படுக்கணும்” என்று அவள் தோளைத் தொட்டான் அவன்.

அவனைத் தள்ளிவிட்ட அவள், “நான் சொன்னா சொன்னதுதான். இனியும் குடிச்சிட்டு வந்து என்னைத் தொடக் கூடாது. மீறித் தொட்டா என் உடம்பில் உசுரு இருக்காது” என்றாள் கண்டிப்பான குரலில்.

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் கண்ணுச்சாமி.

கதை 2

தலைப்பு: ‘தொட்டுப்பார்...’

படைத்தவர்: ‘பசி’

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

”போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




ஞாயிறு, 11 நவம்பர், 2012

விகடன், குமுதம், குங்குமம் இதழ்களின் கவனத்திற்கு.....

இது, புதுமையான ஓர் ‘ஊடல் உறவு’க் கதை!

தரமான ஒரு பக்கக் கதை கிடைக்காமல் அல்லாடும், ’நம்பர் 1’ வார இதழ்களான குமுதம், விகடன், குங்குமம்  இதழ்களின் ஆசிரியர்களுக்கு எமது அன்பான அழைப்பு.

முற்றிலும் மாறுபட்டதும், தரமானதும், புதுமையானதுமான ஒரு ஒ.ப.க. இது.

ஊடலில் தொடங்கிக் கூடலில் முடியும் இந்தப் புத்தம் புதிய கதையை உங்கள் இதழ்களில் எம் அனுமதியின்றியே பிரசுரித்துக் கொள்ளலாம்.

சன்மானம் எதுவும் தேவையில்லை!

கதைத் தலைப்பு:           என்னைத் தொடாதே!

தன்னைத் தொட வந்த வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையைத் தீண்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.

“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” என்றான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.”

வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

மருண்டான் அவன்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரிய எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கி வீசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி கோழைங்க, ’அந்த சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் ஏதோ ஒருவித சுகம்.

நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு எழுதி வெச்சேன். நீ அதைப் படிக்கல.

இதை அழிச்சிருக்கணும். நான் ஒரு அடிமடையன். அதைச் செய்யல.

என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே.”

சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா புரண்டு படுத்தாள், அவனுடன் இணைந்தாள்; இழைந்தாள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ











வெள்ளி, 9 நவம்பர், 2012

குமுதம்[14.11.12] தீபாவளிக் கதைகளும் ஒரு ’குஷ்பு’ கதையும்!

’இந்திரா சவுந்தர்ராஜன்’ முதலான ’முன்னணி’ப் படைப்பாளர்களின் ‘பல்சுவை’க் கதைகள்!

”பேய் பிசாசுகளை நான் நம்புவதில்லை” என்றார் அவர்.

அவருக்கு அருகே நின்றுகொண்டிருந்தவர், ”நீர் நம்பவில்லையா? நான் நம்புகிறேன்” என்று சொல்லிக்கொண்டே மாயமாய் மறைந்து போனார்!

இது வழக்கிலுள்ள ஒரு திகில் கதை.

தென்னை மரத்தின் உச்சியில் ஒரு திருடனைக் கண்டுவிட்ட அதன் சொந்தக்காரர், “எதுக்கய்யா மேலே ஏறினே?” என்று அதட்ட, “புல்லுப் பறிக்க ஏறினேன்” என்று அவன் சொல்ல, “தென்ன மரத்தில் ஏது புல்லு?” என்று இவர் மடக்க, “ஏறினப்புறம்தான் தெரிந்தது இதில் புல்லு இல்லேன்னு” என்று சமாளித்து, இறங்கி ஓடினான் அந்தத் தேங்காய்த் திருடன்!

இந்தத் ‘திரில்’ கதையும் நம்மில் பலரும் கேள்விப்பட்டதுதான்.

அடுத்த வீட்டுக் கோவிந்துவை அழைத்துக் கமர்கட் கொடுத்த குஷ்பு, “குளிக்கும் மறைப்புத் தட்டி முழுக்க ஓட்டைகள் இருக்கிறதால, நான் குளிச்சி முடிக்கிறவரை யாரும் வராம பார்த்துக்கோ” என்று கூறி, அரைமணி நேரம் போல அழுக்குப் போகத் தேய்த்து, ஜாலியாகக் குளித்துத் முடித்து, ஒட்டைகள் வழியாக நான்கைந்து வாலிபர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதறிந்து திடுக்கிட்டு, கோவிந்துவைத் தேட, வாலிபர்கள் கொடுத்த ‘அன்பளிப்பில்’ மில்லியடித்து ‘மஜா’வாக இருக்கும் அவனை நையப் புடைத்தாள்!

குஜாலான இந்த ஒரே வாக்கியக் குஷ்பு கதையை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.

இது, பழைய ’குங்குமம்’[07.08.83] இதழில் வெளியானது. [கதாசிரியர் பெயரைக் குறித்து வைக்கவில்லை. மன்னித்திடுக].

மேற்கண்ட கதைகள் எல்லாம் ‘பொழுது போக்கை’ மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டவை.

’நகைச் சுவை’ சார்ந்த கதைகளும், மர்மக்[crime] கதைகளும் இவ்வகை இலக்கிய வகையுள் அடங்கும்.

தேவன், துமிலன் போன்றோருக்குப் பிறகு பாக்கியம் ராமசாமி மட்டுமே நகைச்சுவைக் கதைகள் எழுதுகிறார்.

மர்மக் கதைகளைப் பலரும் எழுதுகிறார்கள்.

இவ்வகைக் கதைகளின் சம்பவங்கள் கற்பனையானவை எனினும், அவை உண்மையானவை என வாசகன் நம்பும் வகையில் இருப்பது அவசியம். அவ்வாறு எழுதப்படும் கதைகளே தரத்தில் உயர்ந்து நிலைத்த வாழ்வைப் பெறும்.

இன்று, முன்னணி மர்மக் கதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் இந்திரா சவுந்தர்ராஜன்.

14.11.12 தேதியிட்ட குமுதம் இரட்டைத் தீபாவளி மலரில், ‘தந்திரமாய் ஒரு கொலை’ என்னும் இவரின் சிறுகதை வெளியாகியிருக்கிறது.

பொழுதுபோக்குக் கதை என்றாலும் வாசகரின் அறிவை மழுங்கடிக்கக் கூடாது; நினைத்து நினைத்து மகிழ வைப்பதாக இல்லையெனினும், கணநேர இன்புறுத்தலுக்கேனும் அது பயன்படுவதாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் இவரின் கதையை அணுகுவோம்.

இந்தக் கதையின் அதி முக்கிய கதை மாந்தர்களான [அதாங்க கதாபாத்திரங்கள்] சண்முக ராஜு, ரைஸ்மில் ஆறுமுகம், கேசவரங்கன் ஆகியோரால்,  ”அய்யா” [மரியாதை காரணமா அவருக்குப் பேர் வைக்கலஎன்று அழைக்கப்படுபவர் தஞ்சை மாவட்டத்தின் ‘பெரிய புள்ளி’. வரவிருக்கிற தேர்தல்ல ‘எம்.பி’ ஆகக் கனவு காண்பவர்.

கேசவரங்கனுக்கும் இதே கனவு இருந்துச்சி. இருபது அடியாட்களைச் சேர்த்துட்டு அவரைப் போட்டுத் தள்ளிட்டான். [அவர் உடம்புல 64 குத்துங்களாம்! படிக்கப் படிக்க என் உடம்பு வெடவெடன்னு நடுங்கிச்சி. இன்னமும் நடுக்கம் போகலீங்க!!!]

அய்யா மண்டையைப் போட்டதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனார் ரைஸ்மில் ஆறுமுகம். காரணம், ஒரு ரசீதுகூட இல்லாம, அய்யாகிட்ட இருபது லட்சத்தைக் கொடுத்திருந்தார் அவர்!

அய்யாவோட மகன்கிட்ட பணத்தைக் கேட்டாரு. அவன், “எனக்கு எதுவுமே தெரியாது. அய்யா, நகை நட்டு, பணம் எல்லார்த்தையும் ரகசிய இடத்தில் வெச்சுட்டார்”னு சொல்லிட்டான்.

பாவம் நம்ம ரைஸ்மில் ஆறுமுகம்!

’எம்.பி’ ஆக ஆசைப்பட்டுட்டிருக்கிற சண்முகராஜுவிடம், “அய்யாவோட ஆவிகிட்டப் பேசிப் பணம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கணும். ஆவியோட பேசுற ஒருத்தரை உனக்குத் தெரியுமாமே, கூட்டிட்டுப் போ”ங்கிறார்.

இவரைப் பயன்படுத்தி, எம்.பி பதவிக்குப் போட்டியா இருக்கிற கேசவரங்கனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் போடுறான் சண்முகராஜு.

பம்புசெட் ரூமுக்குள்ள தன் சொந்தப் பணம் 20 லட்சத்தை ஒளிச்சி வெச்சுட்டு...

ஆவியோட பேசுற ஒருத்தனைக் கைக்குள்ள போட்டு, அவனை அய்யா ஆவியோட பேச வெச்சி [எல்லாம் ’செட்டப்’தாங்க] , “எம்.பி. பதவிக்குப் போட்டி போட இருந்த என்னைக் கேசவ ரங்கன்தான் கொலை பண்ணிட்டான்”ன்னு சொல்ல வைக்கிறான்.

அய்யா ஆவி, பணம் இருக்கிற இடத்தை ரைஸ்மில் ஆறுமுகத்துக்குச் சொன்னதோட, கேசவரங்கனைக் காலி பண்ணிடச் சொல்லி, ஆறுமுகத்துக்கு உத்தரவு போடுது.

20 லட்சம் திரும்பக் கிடைச்ச சந்தோசத்தில், ஆறுமுகம் கேசவரங்கனைக் காலி பண்ணிடறான்.

சண்முக ராஜு ஆனந்தத்தில் மிதக்கிறான்.

இதோட கதையை முடிச்சுட்டா, தீயவனான சண்முகராஜு தண்டிக்கப்படலையேன்னு நீங்களும் நானும் வருத்தப்படுவோம் இல்லீங்களா?

அதனால..............

சண்முகராஜு, ஜாலியா காரில் போகும்போது, பின் சீட்டில் பதுங்கியிருக்கிற கேசவரங்கன் ஆவி, ஒரு புகை மூட்டம் போல இருந்து, “என்கிட்டேவா உன் தந்திரம்?”ன்னு கேட்டுச்சாம். [ஹா...ஹா...ஹான்னு சிரிச்சுதுன்னு வெச்சுங்குங்க].

சண்முகராஜுக்கு உதறல் எடுக்க, அவன் ஓட்டிட்டுப் போன கார், மேம்பாலத்தை உடைச்சுட்டுக் கீழே கீழே விழ ஆரம்பிச்சுதுங்களாம்!

இப்படியொரு மர்மக் கதையை இதுக்கு முந்தி நீங்க படிச்சதில்லைதானே?

உங்க வீட்டில் உள்ள அத்தனை பேரையும் இதைப் படிக்கச் சொல்லுங்க. உங்க ஃபிரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லுங்க.

நீங்க அனுபவிச்ச இன்பத்தை அவங்களும் அனுபவிக்கட்டும்.

ஆனா, ஒன்னு.............

”அய்யா ஒரு பெரிய புள்ளியாச்சே, அவர் போயி 20 லட்சத்தை பம்ப்செட்ல ஒளிச்சி வைப்பாரா?”ன்னு அவங்க கேள்வி கேட்டா, ‘திருதிரு’ன்னு முழிக்காதீங்க. “வரிவரியா பத்து தடவை படி. புரியும்”னு சொல்லிச் சமாளிச்சுடுங்க. “ஆமா, எவ்வளவு பெரிய எழுத்தாளர். இப்படி மடத்தனமா எழுதியிருக்காரே?”ன்னு உளறிக் கொட்டிடாதீங்க.

“அய்யா கிட்ட கொடுத்த 20 லட்சமும் கிடைச்ச பிறகு. அவர் சொல்றார்னு ரைஸ்மில் ஆறுமுகம் ஒரு கொலைக் குற்றவாளியா ஆவாராங்கிற சந்தேகம் சண்முகராஜுக்கு ஏன் வரலை?”ன்னும் அவங்க கேள்விக்கணை தொடுக்கலாம். 

“ரைஸ்மில் ஆறுமுகம் மூலமா, தன்னைத் தீர்த்துக் கட்டினது சண்முகராஜுதான்னு கேசவரங்கன் ஆவிக்கு எப்படித் தெரிஞ்சுது?”

இப்படியெல்லாம் மேலே மேலே கேள்விகள் கேட்டு அவங்க உங்களைத் திணறடிப்பாங்க. எப்படிச் சமாளிக்கறதுன்னு நல்லா யோசிச்சி வெச்சுக்கோங்க.

என்ன................இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கு. எங்கே ஓடுறீங்க?

                                *                                    *                                        *

அடுத்து வருவது, புஷ்பா தங்கதுரையின் ‘அஞ்ஞானம்’ என்னும் கதை.

ஆல்பர்ட் ஸ்டீபன் என்னும் விஞ்ஞானி ஒரு கருவி கண்டிபிடித்தார்.

‘ஏ’என்பவனின் காதுகளுக்குச் சற்று மேற்புறமாக, இரு பக்கங்களிலும் இரு ‘ரிஸீவிங் ஆண்டெனாக்களை’ப் பொருத்திவிட வேண்டியது. பாக்கெட் சைஸ் கருவியை, ஆறு வோல்ட் பாட்டரி போட்டு, பாண்ட் பைக்குள் அவனைப் போட்டுக் கொள்ள வைப்பது.

அதே மாதிரி, ‘பி' என்பவன் காதுகளுக்கு மேல் ஒரு ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்களைப் பொருத்திவிட வேண்டியது.

இப்போது விசையைத் தட்டிவிட்டால் போதும். ‘பி’ என்ன உணர்ச்சிகளை அடைகிறானோ, அதை அப்படியே இம்மி பிசகாமல் ‘ஏ’ என்பவனும் அனுபவிப்பான்.

’ நாஸா’ விஞ்ஞானிகள், நான்கு பேரை ‘செவ்வாய்’க்கு அனுப்புகிறார்கள்.

அவர்களின் காதுகளில் ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்கள் பொருத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்று, துரிதகதியில் உற்பத்தி செய்த, ‘ரிஸீவிங் ஆண்டெனா’க்களை அமெரிக்க மக்கள் பொருத்திக் கொள்கிறார்கள்.

செவ்வாயில், வீரர்கள் பெற்ற உணர்ச்சிகளை இந்த மக்களும் உணர்வார்கள்.

செவ்வாய் மனிதர்கள் வீரர்களைத் தாக்குகிறார்கள்.

அவர்கள் அலற, அமெரிக்க மக்களும் அலறுகிறார்கள்.

இதுதான், புஷ்பா தங்கதுரை எழுதிய பெரிய கதையின் சிறிய சுருக்கம்.

கருவியைப் பற்றிச் சொல்லும் போதே, ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா பொருத்திக் கொண்டவரின் நல்லது கெட்டது என அனைத்து உணர்ச்சிகளையும், ரிஸீவிங் ஆண்டெனா பொருத்திக் கொள்பவர் அனுபவிப்பார் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

அப்புறம் என்ன நாஸா, பூஸா, செவ்வாய், ஆராய்ச்சி எல்லாம்?

இப்படிப்பட்ட கருவிகளக் கண்டுபிடிப்பது சாத்தியமா? அது எப்போது? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இப்போதே இப்படியொரு கற்பனைக் கதை படைத்து, அமெரிக்க விஞ்ஞானிகளையும் நாஸாவையும் சாடுகிறார் புஷ்பா தங்கதுரை! ”விஞ்ஞானத்தைக் கொல்லுங்கள்” என்று மக்கள் கோஷங்கள் எழுப்புவதாகக் கதையை முடிக்கிறார்.

இக்கதை மூலம் அதே கோஷத்தை இவரும் எழுப்புகிறாரா?

அறிவியல் துறையில் வளர்ச்சி பெறாத[???] இந்தியா திருப்தியோடு வாழ்வதாகப் பின் குறிப்பில் குறிப்பிடுகிறார். இது எத்தனை சதவீதம் உண்மை?

”ஐயா எழுத்தாளரே, நீண்ட பெரிய கட்டுரையில் விரிவாகச் சொல்லவேண்டியதை ஒரு சிறுகதைக்குள் அடக்க முயன்றிருக்கிறீகள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

                             *                                           *                                            *

இதையடுத்து, வெ.இறையன்பு படைத்த, ‘துறந்தான்! மறந்தான்’ சிறுகதை.

தரமான ஒரு படைப்பைத் தர வேண்டும் என்றுதான் இறையன்பு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவர் எண்ணம் ஈடேறவில்லை.

ஒரு மன்னன், 20 ஆண்டுகள் உழைத்துத் தன் நாட்டை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறான்.

மக்கள் அவனைத் தெய்வமாக மதிக்கிறார்கள்.

இரண்டாண்டுகள் மழை பொய்த்துப் போகிறது.

துயரத்தில் மூழ்குகிறான் மன்னன்.

ஒரு மடாலயத் தலைவரைத் தேடிப் போகிறான்.

”யாரோ செய்த பாவம்தான் மழை பொய்த்ததற்குக் காரணம். அதற்கான பிராயச்சித்தமே நாட்டைக் காப்பாற்றும்” என்கிறார் அவர்.

“பிராயச்சித்தமாக என் உயிரைத் தியாகம் செய்வேன்” என்று சொல்லிப் பாடலிபுத்திரம் திரும்புகிறான் மன்னன்.

மழை பெய்தது. நாடு செழித்தது.

மன்னன், ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, ’ஷ்ரவணகுண்ட்’ என்னும் இடத்தை அடைகிறான்.

தியானத்தில் அமர்ந்து, உண்ணா நோன்பிருந்து உயிர்விடத் துணிகிறான். [மன்னன் பெயர் சந்திரகுப்த மவுரியன் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்]

இது இந்தச் சிறுகதையின் சுருக்கம்.

கதையின் தொடக்கத்திலிருந்தே பல சந்தேகங்கள் எழுகின்றன.

மழை பெய்து நாடு வளம் பெறுவதும், அது பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடுவதும் இயற்கை என்பது யாவரும் அறிந்தது. அதனை மன்னனும் அறிந்திருக்க வேண்டும்.

அவ்வாறிருக்கையில், வறட்சியை நினைத்து அவன் துவண்டு போவதும், ஒரு மடாலயத் துறவியைத் தேடிப் போவதும் ஏன்?

யாரோ பாவம் செய்ததாகத் துறவி சொல்கிறார். அவர் யார்?

யாரோ செய்த பாவத்துக்கு, மிக நல்லவனான மன்னன் எப்படிப் பொறுப்பாவான்?

இது பற்றி, எழுத்தாளர் ஏன் சிந்திக்கவில்லை?

மன்னன் நோன்பிருந்து உயிர் துறப்பதாக முடிவெடுத்ததும் மழை பெய்ததே, அது எப்படிச் சாத்தியமாயிற்று?

வெ. இறையன்புவின் அடுத்த கதை முழுமை பெற்ற ஒன்றாக அமைய நமது வாழ்த்துகள்.

                                 *                                             *                                  *

ஆறு சிறுகதைகளைப் படித்து மனம் சலித்த நமக்கு ஆறுதல் தருவதாக அமைவது, ’மேலாண்மை பொன்னுச்சாமி’யின் ‘காவல் வேட்டை’

ஏழைப் பாட்டாளி மக்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எதார்த்தமான கதைகளாக வடித்துத் தருகிற பொன்னுச்சாமி, இந்தக் கதையில், ஒரு ஏழை விவசாயி ஆன முத்துசாமி, அறுவடைக்குக் காத்திருக்கும் தன் நிலத்துக் கடலைப் பயிரைக் கொள்ளை போகாமல் காப்பதற்குப் படும் பாட்டை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்.

இருளைக் கண்டால் அஞ்சி நடுங்கும் முத்துசாமி நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிடுகிறார். அந்த அளவுக்குப் பாத்திரப் படைப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

இரண்டு நபர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவர் கடலைக் காட்டைக் காவல் காக்கச் செல்லும் நிகழ்வை, நகைச்சுவை உணர்வுடன் அவர் விவரித்திருக்கும் பாங்கு வெகுவாகப் பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், குமுதம் தீபாவளி மலருக்குக் கதை வழங்கிய எழுவரில் ,மேலாண்மை பொன்னுச்சாமி மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

































வியாழன், 8 நவம்பர், 2012

குமுதம் தீபாவளி மலர்[14.11.2012] சிறுகதைகளும், குமுறும் ஒரு வாசகனும்! - பகுதி1

7 பிரபல கதாசிரியர்களின் சிறுகதைகளுக்கான ‘காரசார’ விமர்சனம்!

எஸ்.ராமகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், கவுதம சித்தார்த்தன், வெ.இறையன்பு, புஷ்பா தங்கதுரை, இந்திரா சவுந்திரராஜன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகிய  பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளைச் சிறப்பிதழாக்கித் தமிழ் வாசகர்களுக்குத் ’தீபாவளி’ப் பரிசு வழங்கியிருக்கிறது  குமுதம்[14.11.2012].

இந்தப் பரிசால், குமுதத்தின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி. பிரபலக் கதாசிரியர்கள் மேலும் பிரபலம் ஆவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

இவை பற்றியது அல்ல நம் சிந்தனை.

மாறுபாடுகளும் போராட்டங்களும் நிரந்தரம் ஆகிப்போன மனித வாழ்வில், தொல்லைகளும் துயரங்களும் பெருகிக் கொண்டே போகிற அவலம் நீடிக்கிறது.

இந்த அவலத்தைப் போக்க, இவர்களின் படைப்புகள் உதவுமா?

சாதி மதப் பிணக்குகள், மூட நம்பிக்கைகள் போன்ற பல்வேறு நோய்களால் நலிவுற்றிருக்கும் சமுதாயத்தை இவர்களின் எழுத்துகள் சீர்திருத்துமா?

மனித நேயத்தை வளர்க்குமா?

கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளைப் படிக்கும் போது, இத்தகைய கேள்விகள் நம் மனதில் எழுவது இயல்பாகிப் போன ஒன்று.

பயனுள்ள இத்தகைய வினாக்களுடன் மேற்கண்ட ஏழு பிரபலங்களின் சிறுகதைகளையும் படித்த போது முகிழ்த்த எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

கதைத் தலைப்பு: மழையாடல்.

கதாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

இரவு நேரம்.

மழை கொட்டோகொட்டுன்னு கொட்டுது.

’பத்மவிகாரை’யில், தம்மசூத்திரம் படிக்கிற, சங்கவை முதலான ஏழு புத்த பிக்குணிப் [இளம்] பெண்கள், தங்களுடைய மழைக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் கதை. [உயிர் வாழும் இக்காலப் பெண்களை உரையாட விட்டுக் கதை சொல்லியிருக்கலாமே என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இவர் தயாரித்த பட்டியலின்படி, நூறு சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இது பற்றிச் சிந்தித்திருக்க மாட்டாரா என்ன?]

பெண்கள் நிகழ்த்தும் உரையாடல் மூலம், மழை சார்ந்த தத்துவக் கருத்துகளையும் வாரி இறைத்திருக்கிறார் கதாசிரியர்.

’அபரா’ என்ற பெண்ணிடம், “மழையைப் பற்றி நீ  என்ன நினைக்கிறாய்?” என்று சங்கவி கேட்க, [இந்தக் காலத்து நவநாகரிகக் குமரிகளுக்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்கத் தெரியுமா என்ன?!] அவள் சொல்கிறாள்.....

“உலகிலேயே மிகப் பெரிய தியானம் மழை...”

‘மழை’...புரியுது.

தியானமும் புரியுது. உலகிலேயே மிகப் பெரிய தியானம்.....ஏதோ புரிகிற மாதிரி இருக்கு. சரி.....

அதென்னங்க ‘தியானம் மழை?

மழை என்பது தியானமா? தியானமே மழையா?

அதாவது, மழை என்பது மிகப் பெரிய தியானத்துக்குச் சமம்னு திரு. ராமகிருஷ்ணன் சொல்றாருங்களா?

எனக்குப் புரியல. உங்களுக்குப் புரிஞ்சா விளக்கமா ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.

அபரா தொடர்ந்து சொல்லுது: “வானிலிருந்து பெய்யும் போது மழை ஓசை எழுப்புவதில்லை. ஏந்திக் கொள்ளும் மண்தான் ஓசை எழுப்புகிறது. அப்படித்தானே மனமும்?

இங்கே மனம் என்பது மழையா, மண்ணா? மனம் எப்போதெல்லாம் ஓசை எழுப்பும்?

ஒரு மண்ணும் புரியலையே ஐயா!

இம்மாதிரி, கேட்டற்கரிய தத்துவங்களுக்கெல்லாம் விளக்கம் தர ஆரம்பிச்சா, ஆறு பக்கத்தில் முடிந்த இக்கதை அறுபது பக்கங்களுக்கு நீளும்னு படைப்பாளர் பயந்துட்டாரோ?

’ஹரிகா’ என்கிற துறவிப் பொண்ணு சொல்லுது: “மழையை நான் வெறுக்கிறேன். “அது புதையுண்ட ஆசைகளைக் கிளரச் செய்கிறது...”

சிறுசிறு குழைந்தைகளிலிருந்து குடுகுடு கிழங்கள் வரை அத்தனை பேர் ஆசையையும் கிளறிவிடுமா?

.”மழை ஒரு தண்டனை. மழை ஒரு ரகசிய உரையாடல். மழை ஒரு பிதற்றல்.”

இப்படி ஏதேதொ சொல்லுதுங்க அந்தப் பொண்ணு.

இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்குத்தாங்க புரியும். நான் ஒரு மரமண்டைங்க.

’பிரஜா’ங்கிற பொண்ணு, ”இருட்டு நம் அந்தரங்க முடிச்சை அவிழ்க்குது”ன்னு சொல்லுது.  மழையைப் பற்றி அல்ல; இருட்டைப் பற்றிய தத்துவம் இது. ஆனாலும் புரியுது.

அப்புறம், ஒரு பொண்ணு, மழைக் காலத்தில் தன் அப்பா செத்துப் போனதைச் சொல்லுது. அதுக்கப்புறம் அம்மா உபவாசம் இருந்து மறைந்து போனதெல்லாம் சொல்லி வருத்தப்படுது.

இப்படி, மத்த பருவங்களில் நடப்பதற்குச் சாத்தியமான சம்பவங்களையும் மழைக் காலத்தில்  நடக்குற மாதிரி ’நிகழ்ச்சித் திணிப்பு’ம் செய்திருக்கிறார் எழுத்தாளர்.

மழைக்கு ஒதுங்கின ஒரு பிச்சைக்காரன், ”மழை பின்னாடியே வருது. நான் அதைத் துரத்துறேன்”ன்னு தத்துவம் பேசுறதை இன்னொரு பெண் மூலமா சொல்லி நம்மை விழி பிதுங்க வைக்கிறார் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன்!

கதையில்........

மழைக்குள் சக்கரம் மாட்டிக் கொள்ள, மாடு இழுக்க முடியாமல் கீழே விழ, மாட்டுக்காரன் அதை ஓங்கி ஓங்கி அடிக்க, மாடு அவலக் குரல் எழுப்புகிற ஒரு காட்சி மட்டுமே நம் நெஞ்சைப் பிசைவதாக இருக்கிறது.

மற்றபடி, கதை முழுக்க, எவருக்கும் புரியாத தத்துவ மழைதான்!

எஸ்.ராமகிருஷ்ணன் விரும்பினால், இந்தத் தத்துவங்களை விளக்கி ஒரு தனிக் கட்டுரை எழுதலாம்.

செய்வாரா?


                      *                                                  *                                          *


அடுத்து வருபவர், ‘முன்னணி’ எழுத்தாளர் ‘சுப்ரபாரதி மணியன்’.

சுய புத்தியோடு இருக்கிற ஒருவருக்குப் புத்தி பேதலிக்கணும்னா, இவருடைய, ‘தங்கமே தங்கம்’ சிறுகதையைப் படிக்கலாம்.

அரை லூஸாக இருப்பவர் படித்தால் முழு லூஸாவர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!

அந்த அளவுக்கு அரை வேக்காட்டுக் கதை இது.

அன்றாடம், தங்கத்தின் விலை அறிவதில் ஆர்வம் காட்டும் சந்தானலட்சுமியின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது கதை.

இவளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கிறாள் சந்தியா. இருவருக்குமிடையே உரையாடல்.

இருவருக்கும் என்ன உறவு என்பது கதையின் முடிவு வரை சொல்லப்படவில்லை.

கதையின் இறுதிப் பகுதியில் வருகிற செண்பகலட்சுமிக்கும் இதே சந்தியா வெற்றிலை மடித்துத் தருகிறாள். இங்கேயும் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

கதையின் ஆரம்பப் பகுதியில், சந்தானலட்சுமி, பேருந்தில் போகும் போது, காதுத் தோடு கழன்று விழ ஒரு பெரியவர் எடுத்துத் தருகிறார்.

சந்தானலட்சுமி தொடர்பான இந்த நிகழ்வுகளுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை!

இதனை அடுத்துத் தொடங்கும் காட்சியில்.....

செண்பகலட்சுமியை அறிமுகப் படுத்துகிறார்.

‘இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில், அவளுடைய சம்பாத்தியம் முழுதும் போய்விட்டது’ என்று குறிப்பிடுகிறார்.

ஒரு அக்கா, ’கலா’ என்பது தெரிகிறது. இன்னொரு அக்கா யார் என்பது கதை முடிந்த பிறகும் புரியாத புதிராகவே உள்ளது.

அக்காக்களைக் கரையேற்றுவதற்காகப் பொட்டு நகைகூட அவள் போட்டுக் கொள்ளவில்லை என்று படிப்பவர் காதுகளில் பூச்சுற்றுகிறார் ஆசிரியர்.

குளியலறையில் கிடந்த மோதிரத்தைத் தன் விரலில் போட்டுக் கொள்கிறாள் செண்பகவல்லி. சித்தப்பா மகள் வந்து கேட்க, அவளிடம் கொடுத்துவிடுகிறாள்.

’செண்பகலட்சுமிக்குப் பிடித்திருந்தது அந்த மோதிரம்’ என்று முடிகிறது கதை.

”இரண்டு தமக்கைகளுக்கு மணம் செய்து வைத்தவளுக்கு இத்தனை காலமும் ஒரு மோதிரம் போட்டுக் கொள்ளக்கூட வக்கில்லையா? மனம் இல்லையா?” என்னும் நம் கேள்விகளுக்குக் கதையில் எங்கேயும் விடையில்லை.

கதையில் கருவே இல்லை. நிகழ்ச்சியமைப்பிலும் தெளிவான திட்டமிடல் இல்லை. பாத்திரப் படைப்பிலும் குழறுபடி.

‘பரவாயில்லை’ என்று சொல்லத்தக்க குறைந்தபட்ச இலக்கியத் தகுதிகூட இல்லாத இந்தக் கதையைக் குமுதம் பிரசுரம் செய்தது எப்படி ?

குமுதம்தான் பதில் சொல்ல வேண்டும்.


                               *                                             *                                  


அடுத்து, கவுதம சித்தார்த்தனின்,  ’எப்படிச் சொல்வது முதல் காதலை’ என்னும் 
சி.கதை.

இது சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கதையின் முதல் அத்தியாயம்!

இவரிடம், வலியப் போய், தீபாவளி மலருக்குக் கதை கேட்டதால், நிராகரிப்பது நாகரிகம் அல்ல என்று கருதிக் கதையை வெளியிட்டுவிட்டது குமுதம்!

ஆண்டுதோறும்,  சித்திரை மாதத்தில், ’வேட்டைக்காரன்கோயில்’ என்னும் ஊர்வாசிகள் பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு வேட்டையாடச் செல்வது வழக்கம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை. [இது எங்கும் உள்ள வழக்கம்தான்]

ஒரு காட்டுப் பன்றியின் நெற்றியில் திலகம் வைத்து ஓடவிட்டு, வானத்தில் அம்பெய்து வேட்டையைத் தொடங்கி வைக்கிறார் கோயில் பூசாரி.

பன்றியை விரட்டிச் செல்கிறது ஆடவர் கூட்டம்.

சிலம்பனும் தனியனாகப் பன்றியைத் தொடர்கிறான்.

கதை நாயகனான சிலம்பனுக்குப் போட்டியாகத் தலைப்பாகை கட்டிய ஓர் இளைஞன்!

பன்றியை வீழ்த்தியதில் இருவருக்கும் பங்கு.

வீழ்த்தப்பட்ட பன்றிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வாக்குவாதம் செய்கையில் தலைப்பாகை வாலிபன் ஒரு பெண் என்பது தெரிகிறது.

இருவருமே, மற்றவருக்கு விட்டுக் கொடுக்க முன் வந்த நிலையில், வேட்டை நேரம் முடிந்ததற்கான சங்கநாதம் ஒலிக்கிறது.

அப்புறம்..........மீதிக் கதை..........?

[வெள்ளித் திரையில் காண்க!]

ஒரு சினிமா கதையின் முதல் சீன்,  நம்பர் 1 வார இதழின் தீபாவளிச் சிறப்பிதழில் ’சிறுகதை’யாக இடம் பெற்றது எவ்வகையில் என்று கேட்க நினைக்கிறீர்களா?

இதோ விடை...........

கதை எழுதியவர், உயர்ரகச் சிறுகதைப் படைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கவுதம சித்தார்த்தன்!

                            *                                       *                                            *

குறிப்பு:  எஞ்சிய நான்கு சிறுகதைகள் பற்றிய விமர்சனம், நாளை[09.11.2012] வெளிவரும்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

































செவ்வாய், 6 நவம்பர், 2012

காதலா, காமமா?

'குமுதம்' வழங்கும் 'மிக உயர்தர’ ஒ.ப.கதை!

‘புகுமுன்’ உரை:

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா  உறக்கம்’   

இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான்.

இவை முற்றிலும் செயற்கையானவை.

இந்தத் தேவையற்ற ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.
................

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தடங்கல் ஏதுமின்றி, உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது.


மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு
, இது சாத்தியம் இல்லாமல் போனது. 


பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களுமே, தனிமனிதனின் இயல்பான உடலுறவு சுகத்திற்குப் பெரும் தடைக் கற்களாக அமைந்துவிட்டன. 

தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே ஆண்டுக் கணக்கில் செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இதிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலை தொடர்ந்த போது, ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து உருகுவதிலும் முழுத் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரிக் கற்பனை சுகங்களுக்குக் கவிதை, கதை, ஓவியம், சிற்பம் என்று பல்வேறு கலை வடிவங்கள் தரப்பட்டன.  

இம்மாதிரியான கற்பனை சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’ என்று பெயர் சூட்டினார்கள்.

முற்றிலும் பொய்யான, கற்பனையான இந்தக் காதல், வாலிப உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது; படுத்துகிறது;


காதல் தோல்வியால், பலர் தம் அரிய உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனி, கதையைப் படியுங்கள்.

கதை: காதல் போயின்...

இதழ்: குமுதம்[17.08.2000]

கதாசிரியர்: ப.பரமசிவம்

திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.

அவள் போகும்போது, ”உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.

செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.

’விஷம் தின்று சாகலாமா? ‘

‘எது விஷம்?’

’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’

ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.

’தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.

அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.

அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.

மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.

“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.”- ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.

ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.

“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, ’அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.

ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.

*************************************************************************************************************************************************

















வெள்ளி, 2 நவம்பர், 2012

குமுதம், தரத்திலும் ’நம்பர்1’ ?!?!

குமுதத்தில் என்[’பசி’பரமசிவம்] கதைகள்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் எழுதிய இரண்டு ஒரு பக்கக் கதைகள் ‘குமுதம்’ இதழில் வெளியாகியுள்ளன.

குமுதம்: 24.10.2012.

கதை: பட்டாசு [ப.பரமசிவம்]

புள்ளைகளுக்குப் பட்டாசு வாங்கணும்.ரூபா குடு” என்றான் முருகேசன். அவனை முறைத்த மரகதம், ”குடுக்கிற பணத்தைக் குடிச்சே தீர்த்துடுவே. உன் வேலையைப் பாரு” என்றாள்.

வெளியே தட்டாம்பூச்சி பிடித்துக் கொண்டிருந்த மகன் ராசுவிடம், “அம்மாகிட்டே பணம் வாங்கி வா. பட்டாசு வாங்கப் போகலாம்” என்றான்.

“பட்டாசு வேண்டாம்” என்றான் ராசு.

“ஏண்டா?”

போன வருசம் தீபாவளி அன்னிக்கு நீ குடிச்சிட்டு வந்து அம்மா மண்டையை உடைச்சுட்டே. அது ஆஸ்பத்திரியில் இருந்துச்சு. நாம தீபாவளி கொண்டாடல. போன வருசம் வாங்கின பழைய பட்டாசு அப்படியே இருக்கு” என்றான் ராசு.

அதிர்ச்சியடைந்த முருகேசன், நீண்ட நேர யோசனையில் ஆழ்ந்தான்.முதன் முறையாக, ‘இனி குடிப்பதில்லை’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டான்.

                     *                                         *                                                  *

குமுதம்: 12.09.2012

கதை: அப்பா [நாமக்கல் பரமசிவம்]

”அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார்” என்றான் பரணி.

“எந்தச் சீனுடா?” சும்மா கேட்டு வைத்தான் மாதவன்.

“என் கிளாஸ்மேட்பா. புதுக் கார்ல கோயிலுக்குப் போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.”

“வாங்கலாம்”

“நாளைக்கே வாங்கணும்.”

மகனை இழுத்து அணைத்துச் சொன்னான் மாதவன். “கார் வாங்க நிறையப் பணம் வேணும். இன்னும் அஞ்சு வருசத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னைக் காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்துப் புள்ளையா விளையாடிட்டு வா.”

“நம்ம ரெண்டு பேருமே அத்தக் கூலி. அஞ்சு வருசத்தில் கார் வாங்கிடுவேன்னு 
குழந்தைகிட்டே எதுக்குப் பொய் சொன்னீங்க?” மாதவனின் மனைவி கேட்டாள்.

“இப்போ அவனுக்கு அஞ்சு வயசு. அஞ்சு வருசம் போனா நம்ம பொருளாதார நிலைமை அவனுக்குப் புரிய ஆரம்பிச்சுடும். அந்தப் பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களைத் திணிக்க வேண்டாம்.”

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு: 

இப்பதிவுக்கு நான் எதிர்பார்க்கும் பின்னூட்டமும், அதற்கான என் பதிலும்.....

“உன்னோட ரெண்டு கதை வெளியிட்டதால, குமுதம் ‘தரத்திலும் நம்பர் 1’ன்னா ஒசந்திடிச்சா?”

“அது வந்துங்க.....ஹி...ஹி...ஹி...”

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

முக்கிய குறிப்பு:

நாளைய [06-11-2012] பதிவின் தலைப்பு.............. 


 ‘காதலா, காமமா?’

படிக்கத் தவறாதீர்!



ஞாயிறு, 28 அக்டோபர், 2012

நரிகளிடம் கற்போம் ! புறாக்களைப் போற்றுவோம் !!

அதிசயம்! இது பேராச்சரியம்!! 

சிறுகதைகள் தொடர்பாக மட்டுமே பதிவு எழுதிவரும் நான், இன்றைய ‘வார மலரில்’ [28’10’12] டாக்டர் கோவிந்தராஜ் [சென்னிமலை] அவர்களின் தொடர் கட்டுரையைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக, மிதமிஞ்சிய ஆர்வத்துடன், ஒரு மாறுபட்ட இடுகையை உங்களுடன் பகிர்கிறேன்..........

’நரி, நாய் இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், ஒரு வாலிப ஆண் நரி, ஒரு இளைய பெண் நரியை, ஏதோ ஒரு வகையில் ஈர்த்துப் புணர்ந்துவிட்டால், ஆயுசுக்கும் அவள்தான் அதற்கு ஆதர்ச மனைவி.

இப்படி ஜோடி சேர்ந்த பின்பு ’மிஸ் யூனிவர்ஸ்’ நரியே வந்தால்கூட, நம் ஆண் நரியார், தடம் பிறழாமல் மனைவியே கதியென்று ஏகபத்தினி விரதனாக வாழ்வார்!’

இப்படி, மனிதன் உட்படப் பிற உயிரினங்கள் பின்பற்ற வேண்டிய நரி இனத்தின் ‘கற்பொழுக்கத்தை’க் கண்டறிந்து சொன்ன டாக்டர், மேலும் ஓர் அதிசயத்தை முன் வைத்து, வியப்பின் எல்லைக்கே நம்மை இட்டுச் செல்கிறார்.

‘இணை சேர்ந்துவிட்ட பெண் நரியைப் பிற ஆண் நரிகள் ஒரு போதும் அணுகா. அப்பப்பா.....கிரேட் ஆச்சரியம்!’ [நாயைப் போலவே, புணர்ச்சியின் போதான ’இழுபறி’ அவஸ்தை நரிக்கும் உண்டு என்பது கொசுறு தகவல்!]

நீண்ட நேர வியப்பிலிருந்து விடுபட்ட பிறகு எனக்குள் எழுந்த  கேள்விகள்.......

இணை சேர்ந்த ஜோடியில் ஒன்று, ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால், தனிமையில் தவிக்கும் மற்றொன்று,  ’இணையை இழந்த புறாவைப் போல’ ஒரு புதிய இணையைத் தேடிக் கொள்ளும்தானே?

நரி இனம் போல, இவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழும் மற்ற விலங்கினம் எது, அல்லது எவை? [விரும்பினால் / இயன்றால் ஒரு பட்டியல் போடுங்களேன்]

ஒட்டு மொத்த மனிதர்களும் நரிகள் போலவும் புறாக்கள் போலவும் வாழும் நாள் வருமா? எப்போது?

************************************************************************************************


சனி, 20 அக்டோபர், 2012

பழைய குமுதத்தில்[?] திருடிய [படித்த], ‘சிரிப்பு’க் கதை!

என் சொந்த நடையில்...’live’ ஆக...

கதைத் தலைப்பு:  “உங்களுக்குப் பக்கத்தில்.....”

கதாசிரியர்:             “எங்கிருந்தாலும் வாழ்க!”

அன்று முகூர்த்த நாள்.

மக்கள் வெள்ளம் பேருந்து நிலையத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

அங்கு நிற்கும் பஸ்களைவிட, நிற்பது போல் ‘பாவ்லா’ காட்டிவிட்டுப் பறந்துகொண்டிருப்பவையே அதிகம்.

எப்படியோ தொத்திக் கொண்டால் போதும் என்று, எத்தனையோ உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு மனம் சலித்துப் போன மகானுபவர்களைப் பார்த்து நானும் ஒரு முடிவுக்கு வருகிறேன்.

பயணத்தை ஒத்திப் போடுவதுதான் அது. 

வீடு நோக்கி நடக்கலானேன். அப்போது.....

“சார்” என்னும் அழைப்பு, ‘சடக்’கென மிதிக்கப்பட்ட ‘ஏர் பிரேக்’காக என்னைத் தடுத்து நிறுத்துகிறது.

திரும்பிப் பார்க்கிறேன்.

என்னை அழைத்தது ‘குயில்’ என நான் நினைத்திருக்க, வண்ண ’மயில்’ ஒன்று என்னருகே, மிக நெருக்கமாக நின்றுகொண்டிருக்கிறது!

“சார், நீங்க சென்னைக்கா?”. செழித்த கன்னங்குழியச் சிரித்துக் கொண்டே கேட்கிறது அந்தப் பஞ்சவர்ணக் கிளி!

“சென்னைக்கென்ன, உன் முகவரி தெரிஞ்சா அங்கேயும் வரக் காத்திருக்கிறேன்” என்று சொல்ல நினைக்கிறேன்.

இப்படித் தத்துப்பித்தென்று எதையாவது நினைப்பது எனக்குச் சாதாரணம். அதை வெளியே சொல்வது அசாதாரணம்.

கிளி தொடர்ந்து கொஞ்சுகிறது. “உங்களோடு சேர்த்து, சென்னைக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தருவீங்களா? ப்ளீஸ்.....”

நான் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் வீடு திரும்ப நினைக்கும் போது உறங்கிக் கொண்டிருந்த என் ஆண்மை விழித்துக் கொள்கிறது. அலைகடலெனப் புரண்டுகொண்டிருந்த ஜனக் கூட்டத்தை ஒரு முறை அலட்சியமாகப் பார்த்துக் கொள்கிறேன்.

“ஒரு டிக்கெட்தானே, கவலைப் படாதீங்க” என்று சொல்லிக் கொண்டே சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டு, ‘கோதா’வில் இறங்கத் தயாராகிறேன்.

“இங்கிருந்து சென்னைக்கு எத்தனை கிலோமீட்டர் சார்?” மயில் அகவுகிறது.

“இருநூத்திச் சொச்சம்”.

“வெரி லாங் ஜேர்னி. நல்ல வேளை உங்க துணை கிடைச்சுது”. அவள் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

“ஐயோ, துணை கிடைச்சதுன்னு சொல்றாளே! கடவுளே, ரெண்டு டிக்கெட்டுக்கு வழி பண்ணிடு. உனக்கு லட்சார்ச்சனை பண்றேன்” என்று என் குல தெய்வத்தை மானசீகமாய்த் தொழுகிறேன்.

“சார், இன்னொரு முக்கியமான விசயம்.....” என்று என் கவனத்தை ஈர்த்தவள், “தூரப் பயணம் இல்லீங்களா. ஒரு ஓரமா இடம் பிடிச்சிட்டா வசதியா இருக்கும்” என்கிறாள்.

 ‘வசதியா இருக்கும்’ என்ற வாசகத்தை மட்டும், கிறங்கும் குரலில் இரண்டு முறை சொல்கிறாள்.

இனம் புரியாத இன்ப உணர்வு, ‘ஜிவுஜிவு, என்று என் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கையில்.....................

“டிக்கெட் வாங்கின உடனே, நீங்க பஸ் ஏறி, ஜன்னல் ஓரத்தில் இடம் பிடிச்சி உங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு இடம் போட்டுடுங்க” என்கிறாள்.

எனக்குள்  திடீர்க் குழப்பம்.

’ஒரு வயசுக் குமரி, முன்பின் தெரியாத வாலிபனான என் பக்கத்தில் இடம் போடச் சொல்கிறாளே, மன நிலை பாதிக்கப் பட்டவளோ?’

அவளைக் கூர்ந்து ஆராய்கிறேன்.

தெளிவோடுதான் காணப்படுகிறாள். “என்ன சொன்னீங்க? எனக்குப் பக்கத்திலா?” என்கிறேன்.

“ஆமாங்க. உங்களுக்குப் பக்கத்தில்தான்”

‘பக்கத்தில்’ என்ற வார்த்தைக்கு, செம அழுத்தம் கொடுத்துச் சொல்கிறாள்.

அடுத்த வினாடியே,  பீர் குடித்த ரேஸ் குதிரையாக நான் திணவெடுத்து நிற்கிறேன். ”இரண்டு டிக்கெட்டுகள் வாங்கியே தீருவேன்” என்று சபதமும் எடுக்கிறேன்.

”சார், பஸ் வருது” அவள் அலறுகிறாள்.

பேருந்திலிருந்து இறங்கி நின்ற நடத்துனரைக் கண்டதும் எனக்குள் ‘குபீர்’ உற்சாகம்.

கண்டக்டர், என் பால்ய நண்பன்!

“டேய் வாசு நீயா?” என்னை மறந்து கூச்சலிடுகிறேன்.

“ஆமாடா. எங்கே போகணும்?” என்கிறான் வாசு.

“சென்னைக்கு. ரெண்டு டிக்கெட்” என்று இரு விரல் காட்டிவிட்டு, ”இடம் பிடிக்கிறேன். நீ மெல்ல ஏறு” என்று உரிமையுடன் என் தேவதையிடம்  சொல்லிவிட்டுப் பேருந்தில் பாய்கிறேன்.

அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் பொறாமையில் வெந்து புழுங்குவீர்கள்.

இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சீட்டே காலியாக இருக்கிறது!

கைக் குட்டையால் தூசு தட்டி இடம் போட்டுவிட்டு அவள் வருகையை எதிர்பார்த்துத் திரும்புகிறேன்.

என் உடம்பெங்கும் லேசாக வியர்க்கிறது; மெலிதான பதற்றம்; தடுமாற்றம்!

ஆமா, அவள் ஒரு கிழவியைக் கைத்தாங்கலாக அழைத்து வருகிறாளே, எதற்கு?

இருக்கையை நெருங்கியதும், “பாட்டி, நீ ஜன்னலோரமா உட்கார்ந்துக்கோ. நான் சொன்னேனே அந்த ஜெண்டில்மேன் இவருதான். சென்னை வரைக்கும் உனக்குத் துணையா இருப்பாரு” என்றவள், என்னைப் பார்த்து, ”சென்னையில்தான் என் அண்ணா வீடு இருக்கு. பாட்டி அங்கேதான் வர்றாங்க. அவங்களைத் தனியே எப்படி அனுப்புறதுன்னு கவலைப் பட்டுட்டிருந்தேன். அந்த ஆண்டவன்தான் உங்களை இப்போ அனுப்பி வெச்சிருக்கார். ரொம்ப நன்றி பிரதர். பை......” என்றவள் என் பதிலை எதிர்பாராமல் நடையைக் கட்டினாள்.

என் நிலை.............?

உங்கள் மனம் போனபடி கற்பனை செய்து சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு: தொடர்ந்து எழுதப்படும் ‘கதை விமர்சனம்’, படிப்போரைச் சலிப்படையச் செய்யும் என்பதால், மாற்றம் வேண்டி இச்சிறுகதை!

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000










செவ்வாய், 16 அக்டோபர், 2012

குமுதம், விற்பனையில் ’நம்பர்1’ ?

இரண்டாம் இடத்தில் விகடனா, குங்குமமா?

குமுதம், விகடன், குங்குமம் ஆகிய மூன்று முன்னணி வார இதழ்களுமே தத்தம் அட்டையில், ‘நம்பர் 1’ வார இதழ் என்று போட்டுப் பீத்திக் கொள்வதால், தமிழ் வாசகர் உலகம் நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருக்கிறது!

”எனக்கே முதலிடம்” என்று இவர்கள் ‘டமாரம்’ அடிப்பதை நினைத்து அறிவு ஜீவிகள் சிரிப்பாய்ச் சிரிப்பார்களே என்ற உறுத்தல் இவர்களில் எவருக்குமே இல்லை.

மற்ற மொழிப் பத்திரிகைகள் எப்படி?

எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தானோ?!

A B C [Audit Bureau of Circulation / பத்திரிகைகளைத் தணிக்கை செய்து, அவற்றின் விற்பனை பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிடும் நிறுவனம்] தரும் புள்ளிவிவரங்களை முழுமையாக வெளியிடும் நாகரிகமும் இவர்களிடம் இல்லை.

அப்புறம் எப்படி இந்த இதழ்களின் தர வரிசையைத்  தெரிந்து கொள்வது?

தமிழ் வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகள் பற்றி, அடுத்தடுத்து நான் எழுதிய பதிவுகளுக்குக் கிடைத்த ‘பக்கப் பார்வைகளை’க் [ஹிட்ஸ்] கவனித்த போது, ஏதோ புரிவது போலிருந்தது.

குமுதம் இதழைக் கடுமையாகச் சாடி, ‘குமுதமே! திருந்து...திருத்து!’ என்னும் தலைப்பில் நான் வெளியிட்ட பதிவுக்கான ‘பார்வை’, முதல் நாளில் மட்டும் 1800 ஐக் கடந்தது; மறு நாளும் 1200 ஐத் தாண்டியது!

குமுதம் குறித்த மற்ற பதிவுகளுக்கும் 1500க்குக் குறையவில்லை.

இதே வேளையில், விகடன் கதைகள் குறித்த எந்தவொரு பதிவுக்கான  ஹிட்ஸும் 800 ஐத் தாண்டியதில்லை.

குங்குமம் பதிவுகளுக்கான ‘பார்வைகள்’ 500க்குள்.

கல்கியையும் பாக்கியாவையும் இணைத்து எழுதிய பதிவுக்கும் அதே எண்ணிக்கைதான்.

பிற தலைப்பிலான பதிவுகள் 300 ஐத் தாண்டுவதற்கே மூச்சுத் திணறின!

ஆக, என்னுடைய வலைத்தளப் பதிவுகளுக்கான ஹிட்ஸைக் கொண்டு இதழ்களின் விற்பனையைக் கணித்தால்..........

தமிழ் வார இதழ் உலகின் ‘முடி சூடா மன்னன்’ ஆகக் குமுதம் திகழ்வதை அறிய முடிகிறது!

குமுதத்திற்கு அடுத்த இடத்தில் விகடனும், அதற்கு அடுத்த இடத்தில் குங்குமமும் இருப்பதாகத் தெரிகிறது.

விற்பனையை வைத்து, இதழ்களை வரிசைப் படுத்துவதற்கு இன்னொரு வழிமுறையும் உண்டு. அது?

இதழில் இடம்பெறும் விளம்பரங்கள்.

கீழ் வரும் பட்டியலைக் கவனியுங்கள்.

குமுதம் [17.10.12]-----------------------26 பக்கம் [நிறுவனத்தின் பிற   பத்திரிகைகளுக்கான விளம்பரங்கள் நீங்கலாக]

விகடன் [17.10.12].......................11 பக்கம்

குங்குமம்[15.10.12].....................15    “

ராணி [  .09.12]..............................9    “

கல்கி [30.09.12].............................8   “

பாக்யா[செப்28-அக்04]...............  3   “

விளம்பரம் பெறுவதிலும் குமுதத்தின் சாதனையைப் பிற இதழ்கள் நெருங்கவே முடியவில்லை என்பதை இப்பட்டியல் புலப்படுத்துகிறது. [ஒரு இதழின் விற்பனையைக் கணக்கிட்டுத்தான் வணிக நிறுவனங்கள் விளம்பரம் தருகின்றன]

மிக அதிக ஹிட்ஸ், மிக அதிக விளம்பரம் பெறும் இதழ் என்ற வகையில், குமுதம் மட்டுமே தமிழ் வார இதழ்களில் ’நம்பர் 1’ தகுதியைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

ஹிட்ஸ் பெறுவதில், குங்குமத்தை முந்திய விகடன், விளம்பரம் பெறுவதில் பிந்திவிட்டது.

உண்மையில், நெ.2 இடத்தைப் பெறுவது இந்த இரண்டில் எது என்பதை அறிய, மேற் சொன்ன இரண்டு ‘வழி’கள் போதா என்பது தெரிகிறது.

ராணியும் கல்கியும் சம அளவில் விளம்பரம் பெறுகின்றன எனினும் [ராணியில் விளம்பரங்கள் சீரான எண்ணிக்கையில் உள்ளன. கல்கியின் சில இதழ்களில் மிகக் குறைந்து காணப்படுகின்றன]..........................

ராணி, பட்டிதொட்டிகளில்கூடக் கிடைக்கிறது; கல்கி, நகர்ப்புறங்களில், குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது என்பதைப் பார்க்கும் போது, விற்பனையில் 4 ஆவது இடம் ராணிக்கே என்று உறுதியாகச் சொல்லலாம்.

பாக்யாவில், விளம்பரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனினும், அதிக எண்ணிக்கையிலான கடைகளில் அது விற்பனைக்குத் தொங்கவிடப்பட்டுள்ளதைக் காணும்போது, அதுவும் கல்கியை மிஞ்சிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

எது எப்படியோ, மற்ற இதழ்களை வரிசைப் படுத்துவதில் தெளிவற்ற நிலை இருந்தாலும்....................

தமிழ் வார இதழ்களில் ’நம்பர் 1’ இடம் குமுதத்துக்கே என்று தயங்காமல் தமுக்கடித்துச் சொல்லலாம்!

=========================================================================================================================

குறிப்பு
: ’நம்பர் 1’ குமுதத்துக்கு ஜால்ரா போட்டுத் தமிழ்மணம் 'சூடான இடுகை’ வரிசையில் முதலிடம் பிடிக்கலாம் என்னும் ஆசையெல்லாம் இந்த ‘அறுவை’க்கு இல்லை. நம்புங்கள்.

=========================================================================================================================















வெள்ளி, 12 அக்டோபர், 2012

குமுதம்[17.10.12] இதழைக் ’குப்பைத் தொட்டி’ ஆக்கிய எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

'நம்பர்1' குமுதத்தில் 'நம்பர்1' எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் சிறுகதை!

ராஜேஷ்குமார், தமிழின் நம்பர் 1 புனைகதை எழுத்தாளர் மட்டுமல்ல; ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதினங்கள் [நாவல்கள்] எழுதிச் சாதனை நிகழ்த்தியவர்;

இவரது பங்களிப்பில் கணக்கற்ற சிறுகதைகளும் உண்டு

இவர் கதைகளை வெளியிடாத பருவ இதழ்களே இல்லை எனலாம்.

அந்த அளவுக்குப் ‘பிரபலம்’ ஆனவர்.

"பிரபலம் என்பதால் ஏதேனும் அனுகூலம் உண்டா?"

நல்ல கேள்வி!

பத்திரிகைகள், இவர்களிடம் கதைகளைக் ‘கேட்டு வாங்கி’ப் போடும்.

உதவி ஆசிரியர்கள், இவர்களின் படைப்புகளைப் பிரித்துப் பார்க்கவே அஞ்சுவார்கள். பார்த்த மறு வினாடியே ‘பரிந்துரைத்து’ ஆசிரியருக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆசிரியரும் படித்துப் பார்க்காமலே அச்சுக்கு அனுப்புவார்.

‘திருத்தியே ஆகவேண்டிய’ பிழை தென்பட்டாலும், பிரபலத்தின் அனுமதியோடுதான்’திருத்தம்’ செய்வார். அவர் இசைவு தர மறுத்தால், இவர் ‘தேமே’ன்னு விழிப்பாரே தவிர, படைப்பை ஒருபோதும் ‘நிராகரிக்க மாட்டார்!

பிரபலம் ஆகத் துடிக்கும் ‘கத்துக்குட்டி’ எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் இவர்களுக்கான சன்மானம் மிக அதிகம். 

சில நேரங்களில், படைப்போடுகூட, இவர்களின் புகைப்படமும் இடம் பெறுவதுண்டு.

கத்துக்குட்டிகளின் இம்மாதிரி ஆசை கனவுகளில் மட்டுமே நிறைவேறும்.

ஆக, பிரபலம் ஆகிவிட்டால், வணிக இதழ்’க்காரர்கள் வழங்கும் சலுகைகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதென்ன வணிக இதழ்?

விற்பனையையும், வருமானத்தையும் பிரதான நோக்கமாகக் கொண்ட பத்திரிகைகளைத்தான் ’வணிக இதழ்கள் என்கிறார்கள். ’மசாலா பத்திரிகைகள் என்றும் சொல்வார்கள்.

இந்தப் பிரபலங்கள், ஒருபக்கக் கதையெல்லாம் எழுத மாட்டார்கள். நாவல்களும் நீண்ட சிறுகதைகளுமே படைப்பார்கள். அது அவர்களின் ‘கவுரவத்தை’ப் பாதிக்குமாம்.

எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் குமுதம் ஆசிரியராக இருந்த போது, சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற பிரபலங்களிடம் ஒரு பக்கக் கதைகளைக் கேட்டு வாங்கிப் போட்டாராம்! [என் தாத்தா தந்த தகவல் இது]

அதன் பிறகு எந்தவொரு பிரபலமும் ஒ.ப.கதை எழுதியதாக வரலாறு இல்லை.

இத்தகைய பிரபல வணிக இதழ் எழுத்தாளர்களில் முதல்நிலை பெற்ற ராஜேஷ்குமாரின் உன் இதயம் பேசுகிறேன்’ சிறுகதையைப் [குமுதம் 17.10.2012] பலரும் படித்திருக்கக் கூடும்.

நம்பர் 1 எழுத்தாளரின் சிறுகதை, தரத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறதா என்று ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

யாழினி, கோவையைச் சேர்ந்த ஒரு செல்வந்தரின் பெண் வாரிசு.

தன் மனம் கவர்ந்த ஒருவனை மணக்கிறாள்.

பெற்றோர் மற்றும் சகோதரனின் எதிர்ப்பு காரணமாக தனியே வசிக்கிறாள்.

”அவரை மணந்த பிறகு ஒரு நாளும் என் கண்கள் கலங்கியதில்லை. சந்தோசமா இருக்கேன்”. என்று இவள் சொல்வதிலிருந்தே இவள் கணவன் எத்தனை நல்லவன் என்பது புரியும்.

இந்தக் கதையின் ஆரம்ப நிகழ்வில், ‘உன்னோட கணவர் நல்லவர். நீ சந்தோசமான வாழ்க்கை வாழ்வதை உனக்குக் கல்யாணம் ஆன ஒரு மாசத்திலேயே நான் தெரிந்து கொண்டேன்” என்று யாழினியின் தந்தையும் சொல்கிறார்.

கதை முடியும் தறுவாயில், இவளுடைய அண்ணனும் இவளின் கணவனைத் தேடிப் போய், ”மாப்ளே, அண்ணன்னு நான் ஒருத்தன் இருக்கும் போது, என் தங்கை நகைகளை நீங்கள் அடகு வைக்கலாமா?” என்று கேட்டுப் பண உதவி செய்ய முன்வருகிறான்.

ஆக, யாழினி நல்ல பெண்.

அவள் கணவனும் நல்லவன்.

தந்தையும் அண்ணனும்கூட நல்லவர்களே.

உண்மை இதுவாக இருக்கையில்......................

யாழினி, தான் ஒரு நல்லவரைக் காதலிப்பதாகச் சொன்ன போதே, அந்தக் காதலனைப் பற்றித் தீவிரமாக விசாரித்துத் தந்தையும் அண்ணனும் பச்சைக் கொடி காட்டியிருக்கலாமே?

எதிர்ப்புத் தெரிவித்தது ஏன்? ஏன்? ஏன்?

கதாசிரியர் ராஜேஷ்குமார் குமுதத்தில் ஒரு ‘விளக்க அறிக்கை’ வெளியிடுவாரா?

கதை படிப்பவரை மண்டை காய வைக்கிற இன்னொரு புதிர்...............

யாழினியின் தாய் ‘தற்கொலை’ செய்து கொள்கிறாரே, அது ஏன்?

மருமகன் நல்லவன் என்பதைத் கல்யாணமாகி ஒரே மாதத்தில் தந்தையும் அண்ணனும் புரிந்து கொள்ள முடிகிற போது, தாயை மட்டும் தற்கொலை செய்து கொள்ள வைப்பது தவறு என்பது பிரபல எழுத்தாளருக்குப் புரியாமல் போனது எப்படி?

ஓடிப்போன யாழினி, தன் தந்தையின் நிதி நிறுவனத்திற்கு, நகை அடகு வைத்து ஐந்து லட்சம் கடன் வாங்க வருவதாகக் கதை தொடங்குகிறது.
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதும், குறைந்த வட்டிக்குக் கடன் வழங்குவதுமான நிறுவனம் என்பதால் அங்கு வந்தாளாம். [கோவையில் இது போன்ற வேறு நிறுவனமே இல்லையா?]

தந்தையும் அண்ணனும் அவளை மிகக் கடுமையாகத் திட்டி, கடன் வழங்காமல் விரட்டுகிறார்கள்.

வேறு நிறுவனம் தேடி யாழினி போகும் போது, காரில் பின்தொடர்ந்து சென்ற தந்தை, அவளுக்குக் கல்யாணமான ஒரு மாதத்திலேயே மாப்பிள்ளை நல்லவர் என்பதைப் புரிந்துகொண்டதாகச் சொல்லி, மகள் மீது அன்பைப் பொழிகிறார்; அவளுக்குப் பண உதவி செய்யவும் முன் வருகிறார்.

அதே போல, அவள் அண்ணனும் உதவ முன் வருகிறான்.

இப்படி யாழினி மீது அன்பைப் பொழிகிற இருவருமே, அவள் முன்னிலையில் அவளை அளவு கடந்து வெறுப்பது போல் பாசாங்கு செய்து, நெருப்பாய்க் கொதிக்கும் வார்த்தைகளை உமிழ்வது ஏன் என்றே புரியவில்லை.

"உன் மீது நான் பாசம் வைத்திருப்பதை [காதல் கல்யாணத்திற்குப் பிறகு] உன் அண்ணன் அறிந்தால் எமோஷனல் ஆயிடுவான். நம் வீட்டிலிருந்த உன் ஃபோட்டோக்களையெல்லாம் அவன் எரிச்சிட்டான்” என்று தந்தை மகளிடம் புலம்புவதும், ”என்னமோ தெரியல. யாழினி மேல அப்பாவுக்கு அப்படியொரு கோபம்” என்று அண்ணன்காரன், அப்பாவுக்குத் தெரியாமல் தங்கை மீது கரிசனம் காட்டுவதும் எதன் பொருட்டு?

வாசகரை மறை கழன்ற கேஸுகளாக நினைத்துக் கொண்டு, அரை வேக்காட்டுப் பாத்திரங்களை உருவாக்கி நடமாடவிட்டுக் கதை பண்ணுவது யாரைத் திருப்திப்படுத்த?

குமுதம் ஆசிரியரைத்தானே?

வாசகர்களின் இரண்டு காதுகளிலும் கதாசிரியர் பூச்சுற்றப் பார்க்கிறீர்! அது நடக்கவே நடக்காது.

ஒரு தந்தையும் மகனும் மனம் விட்டுப் பேசுவதற்கு எது தடையாக இருந்தது என்பதற்குக் கதையில் எந்தவொரு விளக்கமும் இல்லை.

கதையில், வாசகரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் திடீர்த் திருப்பங்களைத் தர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு உண்மை நிலையை மறைக்கிறார் என்பது  மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

மர்மக் கதைகளில் திடீர்த் திருப்பங்கள் தந்து தந்து நிகழ்ச்சிகளில்
விறுவிறுப்பு ஏற்றிப் பழக்கப்பட்ட பிரபலம், ஒரு குடும்பக் கதையிலும் இதே தந்திர உத்தியைக் கையாண்டிருப்பது, சிந்திக்கத் தெரிந்த வாசகனுக்கு அளவற்ற எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

சரளமான நடையில் கதை சொல்லிச் செல்கிறார் என்பதைத் தவிர, இப்படைப்பில் மனம் திறந்து பாராட்டும்படியாக ஒன்றுமே இல்லை என்பதே நான் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவாகும்.

பிரபல எழுத்தாளரான ராஜேஷ்குமார் எழுதிய இதே கதையை ’அறுவை மருத்துவன்’ என்னும் என் பெயரில் அனுப்பியிருந்தால் குமுதம் பிரசுரித்திருக்குமா என்பதே இறுதியாக நான் கேட்கும் கேள்வி.

குமுதமே, பதில் சொல்வாயா?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பிம்குறிப்பு:

இதைப் படித்து முடித்துவிட்டு, இவ்வாரக் குமுதத்தில் வெளியாகியுள்ள ஒ.ப.கதைகளைப் படிக்கும் போது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது!

அவை பற்றிய விமர்சனப் பதிவு நாளை வெளிவரக்கூடும்!

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
































.