ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!




                     கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!.....


[இது பண்பற்ற செயல் என்பது புரிந்தும்.....கருத்துகள் மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காகச் சற்றுக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துயிருக்கிறோம். மன்னியுங்கள்]

“நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? உங்களுடன் அது பற்றிய எமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

அதற்கு முன்னதாக, கடவுள் வழிபாடு பற்றி நாம் எழுப்ப விரும்பும் கேள்விகளை ஆராய்வது மிக அவசியம் எனக் கருதுகிறோம்.

கேள்வி 1:

“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரியும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா?”

கேள்வி 2:

உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருக்கிறார்?
அதற்கு ஒரு பட்டியல் தயார் செய்ய முடியுமா?

கேள்வி 3:

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப் பட்டதில்லையா? இல்லையென்றால், எந்தவொரு பயனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்காமல் அவரை 100% நம்பும் முட்டாளாக நீங்கள் ஆனதெப்படி என்று சிந்திப்பதில்லையே, ஏனோ?

உங்களை முட்டாள் ஆக்கிய அவதாரங்களின்...ஆன்மிகங்களின் அருகதை பற்றி ஆராயும் எண்ணம் உங்கள் மனதில் உதிப்பதே இல்லையே, ஏன்...ஏனோ?

கேள்வி 4:

உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா?

“ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்று கேள்விகள் எழுப்பி ஆராய்ந்ததுண்டா?

இல்லையெனின், நீங்கள் ஓர் அடிமுட்டாள் என்பதை உங்களுக்குப் புரியும்படி எவருமே எடுத்துச் சொல்லவில்லையா?

கேள்வி 5:

அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். அவரைப் போற்றித் துதி பாடுவது அறிவீனம் என்ற தெளிவு உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையே, ஏன்?

கேள்வி 6:

துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அது நிகழ்ந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களே, அது வடிகட்டின முட்டாள்தனம் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லையா?

கேள்வி 7:

உங்களோடு தொடர்புடையவர்களுக்கு என்றில்லாமல், ஊர் உலகத்திற்காகவும் பிறருடன் இணைந்து, ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையும்படி கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். அதாவது, கூட்டுப் பிரார்த்தனை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

உங்கள் பிரார்த்தனைக்கு நெகிழ்ந்து, உயிர்கள் வறுமையில் உழன்று, கடும் துன்பத்திற்கு உள்ளாகி அழிவதையும், தீராத நோய்களின் கொடூரப் பிடியில் சிக்குண்டு சித்திரவதைப்பட்டு மாண்டு போவதையும், சுனாமி போன்ற கொடூர நிகழ்வுகளில் அகப்பட்டு பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் செத்தழிவதையும் இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை ஒருபோதும் நீங்கள் நொந்து கொண்டதில்லையே, அது ஏன்?...ஏன்?...ஏன்?

இவ்வாறாக, நாம் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் ஆத்திக நண்பர்களிடமிருந்து ஏற்புடைய பதில்கள் வந்ததில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இப்போது நினைவு கூர்கிறோம்.

“இப்படியெல்லாம் லாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு நாம் கடவுளைக் கும்பிடுவதில்லை.. ’கடவுளை நம்பு. நல்லது நடக்கும்’னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அவங்க அறிவுரைப்படி நடக்கிறோம்.” என்று சொல்லி, நாம் எழுப்பிய அத்தனை கேள்விகளையும் அர்த்தமற்றதாக்கச் சிலர் முயல்வதுண்டு.

‘கடந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னவை எல்லாம் இன்றைய காலக் கட்டத்திலும் நல்லனவாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. பொத்தாம் பொதுவாகப் பெரியவகள் சொன்னார்கள் என்று சொல்லி, செய்கிற தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதும் இன்று சகஜம் ஆகிவிட்டது.

மனத்தளவில் அல்லது தத்தம் வீட்டளவில் கடவுளை வழிபடுவதோடு நில்லாமல், கோயிலுக்குச் சென்று வழிபடுவது ஏறத்தாழ அத்தனை கடவுள் பக்தர்களின் வழக்கமாக உள்ளது.

அவர்களின் முன் நாம் சமர்ப்பிக்கும் ஒரு கேள்வி.......................

கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் நீங்கள் பெறும் கூடுதல் பயன் என்ன?

“ கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.

தாம் பொய் சொல்வதை உணராமலே பலரும் இப்படியொரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆறறிவு கொண்டு இன்றுவரை அறியப்படாத, சிந்தித்து உணரப்படாத, கற்பனை செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஊரூருக்குக் கோயில் கட்டி வைத்து, அங்கு சென்று வழிபட்டால் மனம் தூய்மை பெறும் என்பது அப்பட்டமான ஒரு பொய். இந்த அனுமானக் கடவுளை நம்புவதால் மனம் தூய்மை பெற்று விடாது என்பது உறுதி.

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தான். அத்தனை பேர் மனமும் சுத்தமானதா என்ன? [வழிபடாதவர்களில் அத்தனை பேர் மனதும் சுத்தம் என்று நாம் சொல்லவில்லை]

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு ஒரு மருத்துவ மனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும். கெட்ட எண்ணங்கள் அகன்று தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களுக்குப் போகலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பார்க்கலாம். அவர்களுடைய பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும் போது மனசில் கருணை பிறக்கும்; அன்புணர்ச்சி பெருகும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம்னு நம் மனதைத் தூய்மைப் படுத்துற இடங்கள் நிறையவே இருக்கின்றன.

இம்மாதிரி, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதை விட்டுட்டு, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் மனம் சுத்தமாகும் என்று சொல்வது கலப்படமில்லாத பொய்; பித்தலாட்டம்; ஏமாற்று வேலை.

நாம் மேற்குறிப்பிட்ட நல்ல பழக்கங்களை எல்லாரும் கடைபிடித்தால், நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும். ஒருவருக்கொருவர் மனப்பூர்வமா உதவுகிற மகோன்னதமான நிலை உருவாகும். அத்தனை மனங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி வழியும்.

மக்கள் சிந்திப்பார்களா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++









39 கருத்துகள்:

  1. மிகசிறந்த வினாக்களை கேட்டு சிந்திக்க தூண்டும் விடையையும் தந்து உண்மையான விடியல்லை கண்முன் காட்டி இருக்கிறேர்கள் . கடவுள் கடவுள் மறுப்பு என்று இல்லாமல் உண்மையில் மிகசரியான விவாதத்தை தொடக்கி வினைத் தொடுத்தமை சிந்திக்க கூடியது புண்படுதல் என்பது விமர்சனகளை தங்கி கொள்ளாமை. அறியாமை. கடவுளை கற்பித்தமைக்கும்... கடவுள் கொள்கைக்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை அது மனிதனை மடையன் ஆகுவதும் இருப்பதய் காத்தலும்... பாராட்டுகள்.....

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்து படித்துணர்ந்து மனப்பூர்வமாய்ப் பாராட்டியிருக்கிறீர்கள்.
    நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  3. மக்கள் சிந்திப்பார்கள் தோழர், ஆனால் மாக்கள் ?

    பதிலளிநீக்கு
  4. மக்கள் உருவில் நடமாடும் மாக்கள் சிந்திக்கவே மாட்டார்கள்.
    நன்றி என் அன்பு ஜீவா.

    பதிலளிநீக்கு
  5. நான் தினமும் கோவிலுக்கு போகிறேன் நண்பா

    பதிலளிநீக்கு
  6. வருகை புரிந்த தங்களின் அன்புள்ளத்துக்கு நன்றி.
    தாங்கள் கோவிலுக்குப் போவதன் மூலம் தங்களுக்கு நன்மை விளைந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
    வெறுமனே ‘பின்பற்றுதல்’ என்றில்லாமல், ’சிந்தித்துச் செயல்பட’த் தூண்டுவதே என் பதிவின் நோக்கம்.
    அன்பைத் தேடும் அன்புக்கு அள்ளக் குறையாத என் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க வைத்த கட்டுரையை தந்தமைக்கு நன்றிகள்.
    ஆனால், சிலருக்கு கோயிலுக்கு சென்றால் நிம்மதி, சிலருக்கு சினிமாவுக்கு போனால், வேறு சிலருக்கு பூங்காவுக்கு சென்றால், மற்றும் சிலருக்கு பீச்சுக்கு சென்றால் நிம்மதி. அதேபோல உங்களுக்கு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை நலம் விசாரிப்பதில் அல்லது முதியோர் இல்லம்/மனநல காப்பகம்/அனாதை இல்லம் செல்வதில் நிம்மதி அடைகிறீர்கள். நல்ல முயற்சி.

    உங்களின் ஏழு கேள்விகளுக்கும் பதில்காண நான் ஒரு சிறு உதவி செய்கிறேன். முயற்சி செய்து பாருங்களேன்!
    எங்கெல்லாம் கடவுள் என்ற வார்த்தை வருகிறதோ அதை தாய்/தந்தை/பெற்றோர் என்று போட்டு பதிலை சொல்லுங்கள்.





    அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது நீ புசிப்பது தீமை.
    நோயாளிகளை நலம்விசாரிப்பது, இறந்தவர் வீட்டிற்கு சென்று ஆறுதலளிப்பது நன்மை.
    குடும்பத்தை காக்க உழைப்பதற்கு பதிலாக வழிப்பாட்டுத்தலமே கதி என்றோ அல்லது சன்னியாசம் வாங்கிக்கொள்வதோ பெரும் தவறு.
    வியாபாரத்தில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. எடைகளில் ஏமாற்றக்கூடாது.
    யாரும் யவருக்கும் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது.
    வயதான பெற்றோர்களை "சீ" என்றும் கூறிவிடாதே.

    //நாம் மேற்குறிப்பிட்ட நல்ல பழக்கங்களை எல்லாரும் கடைபிடித்தால், நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும்//

    கடைசியாக, நல்லவர் நல்லவர்ன்னு சொல்றீங்களே அப்படின்னா யாரு?

    பதிலளிநீக்கு
  8. கடவுள் இருப்பது ’உண்மை’என்று நிரூபிக்கப் படவில்லை. என் தாய் தந்தையர்கள் உண்மையானவர்கள்.
    கடவுள் என்ற சொல்லுக்குப் பதிலாக பெற்றோரை ஏன் போட வேண்டும்?
    புரியும்படி சொல்லப் பழகுங்கள்.

    நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது உங்களைப் போன்ற அடியவர்களின் கடமை.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் படுபவர்களை நல்லவர்கள் என்கிறேன். இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?

    நல்லவர்களுக்கான செயல்பாடுகளை நீங்களே சிறு பட்டியலாக வெளியிட்டிருக்கிறீர்களே! அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?

    ’சிந்திக்க வைக்கும் நல்ல கட்டுரை; நல்ல முயற்சி’என்று பாராட்டியிருக்கிறீர்கள். மிக மிக மகிழ்கிறேன்.

    என்னை...என் பதிவை ஒரு பொருட்டாகக் கருதி, வருகை புரிந்து, மனதாரப் பாராட்டி, ஆலோசனையும் வழங்கியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல சிந்தனைக்கான கட்டுரை

    பதிலளிநீக்கு
  10. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தமிழன்.

    பதிலளிநீக்கு
  11. \\“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரியும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா?”\\ சும்மா உங்க பிளாக் பக்கம் வந்தேன். வந்ததுக்கு ஏதோ ரெண்டு கமண்டு போட்டா உங்களுக்கு சந்தோஷமா இருக்குமேன்னு போடுறேன். இதற்க்கு வேற ஒன்னும் முக்கியத் துவம் இல்லை!! சரி இப்ப மேட்டருக்கு வருவோம். இறை வழிபாடு என்பது, இறைவனை நேசிக்கக் கற்றுக் கொள்ளுதல். ஒரு தாய் எப்படி எந்த லாபத்தையும் கருதாமல் தனது குழந்தையை நேசிக்கிறாளோ, அது போல இறைவனையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நேசிக்க வேண்டும். கஷ்டத்தை தீர் என்று மன்றாடியும் கோவிலுக்குச் செல்லலாம், இறைவன் எல்லாம் வல்லவன் என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொடுவிட்டார்கள் என்ற வகையில் அதுவும் பக்திதான், ஆனால் அது முதல் தரமான பக்தி அல்ல.

    பதிலளிநீக்கு
  12. \\உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருக்கிறார்?
    அதற்கு ஒரு பட்டியல் தயார் செய்ய முடியுமா?\\ நாம் சொல்வதெல்லாம் செய்வதற்கு இறைவன் நம்முடைய சர்வர் அல்ல. அவரு ஒரு கணக்கு வச்சிருப்பாரு, அந்தக் கணக்குப் படிதான் செய்வாரு. He knows what is best for you, He is not only supremely powerful, but ultimate Autocrat too !!

    பதிலளிநீக்கு
  13. \\உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப் பட்டதில்லையா? இல்லையென்றால், எந்தவொரு பயனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்காமல் அவரை 100% நம்பும் முட்டாளாக நீங்கள் ஆனதெப்படி என்று சிந்திப்பதில்லையே, ஏனோ?

    உங்களை முட்டாள் ஆக்கிய அவதாரங்களின்...ஆன்மிகங்களின் அருகதை பற்றி ஆராயும் எண்ணம் உங்கள் மனதில் உதிப்பதே இல்லையே, ஏன்...ஏனோ?\\ சரி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. உங்கள் கணக்குப் படி இல்லாத கடவுளுக்கு இந்த கொத்தி கொதிக்கும் நீங்கள், நாட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கும், நாட்டை ஆண்டவன் சுவிஸ் வங்கியில் 3௦,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதற்கும், அரசு அலுவலகங்களில் தாண்டவமாடும் லஞ்ச லாவண்யத்துக்கும், மந்திரிகளே நில அபகரிப்பு செய்ததற்கும் என்றாவது கொதித்ததுண்டா? அதற்க்கு நீங்கள் போராடியதுண்டா? அதனால் ஏதாவது மாற்றத்தை உங்களால் கொண்டு வர முடிந்ததா?

    பதிலளிநீக்கு
  14. \\உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா?

    “ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்று கேள்விகள் எழுப்பி ஆராய்ந்ததுண்டா?

    இல்லையெனின், நீங்கள் ஓர் அடிமுட்டாள் என்பதை உங்களுக்குப் புரியும்படி எவருமே எடுத்துச் சொல்லவில்லையா?\\ இறைவன் எல்லா ஜீவன்களும் வாழ சூரிய ஒளி, நதிகள், காற்று, தாவரங்கள், விலங்குகள் என்னென்ன தேவையோ அத்தனையும் கொடுத்திருகானே! இன்னும் வேற என்ன ஐயா வேண்டும் உங்களுக்கு? பணம் என்ற ஒன்றை உருவாக்கியது மனிதன், அதை உபயோகித்து எல்லோருக்கும் சேர வேண்டியதை ஒரு சிலரே அடக்கியாள வழி கண்டுபிடித்தவன் மனிதன். அவ்வாறு செய்து மற்றவர்களை துயரத்தில் ஆழ்த்தியவன் மனிதன். எதற்காக இறைவனை தூற்றுகிறீர்கள் ஐயா?

    பதிலளிநீக்கு
  15. \\துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அது நிகழ்ந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களே, அது வடிகட்டின முட்டாள்தனம் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லையா?\\ நோய் வருகிறது. அதனால் துன்பம் வருகிறது. வைத்தியரிடம் போகிறீர். அவர் கசப்பானத்தை தினாச் சொல்கிறார். உடலில் கத்தியால் வெட்டுகிறார், ஊசியால் குத்துகிறார். அவை எல்லாம் நோய்த் துன்பத்தை விட பெரிய துன்பமாக இருக்கிறது. ஆனால், பொறுத்துக் கொண்டால் நோய் போகும், துன்பங்கள் மறையும்.

    பதிலளிநீக்கு
  16. \\உங்கள் பிரார்த்தனைக்கு நெகிழ்ந்து, உயிர்கள் வறுமையில் உழன்று, கடும் துன்பத்திற்கு உள்ளாகி அழிவதையும், தீராத நோய்களின் கொடூரப் பிடியில் சிக்குண்டு சித்திரவதைப்பட்டு மாண்டு போவதையும், சுனாமி போன்ற கொடூர நிகழ்வுகளில் அகப்பட்டு பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் செத்தழிவதையும் இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை ஒருபோதும் நீங்கள் நொந்து கொண்டதில்லையே, அது ஏன்?...ஏன்?...ஏன்?\\ அது சரி, மக்கள் கோவிலுக்குச் செல்வதால் தான் இவையெல்லாம் நடக்கின்றனவா? அவர்கள் அதை நிறுத்திவிட்டால் இவை யாவும் சரியாகி விடுமா?

    பதிலளிநீக்கு
  17. \\இவ்வாறாக, நாம் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் ஆத்திக நண்பர்களிடமிருந்து ஏற்புடைய பதில்கள் வந்ததில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இப்போது நினைவு கூர்கிறோம்.\\ சரியான ஆளுகிட்ட நீங்க போய் கேள்வி கேட்கவில்லை. முனைவர் பட்டம் வாங்கிய நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாத ஏமாளி மக்களிடம் போய் லாஜிக்கே இல்லாத கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள், அவர்களுக்குப் பதில் தெரிந்திருந்தாலும், வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  18. \\ நாம் எழுப்பிய அத்தனை கேள்விகளையும் அர்த்தமற்றதாக்கச் சிலர் முயல்வதுண்டு.\\ உண்மையே அதுதானே......

    பதிலளிநீக்கு
  19. \\கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் நீங்கள் பெறும் கூடுதல் பயன் என்ன? \\ இப்படி கேட்க, பத்து ரூபாய் போட்டால் ஆயிரம் ரூபாய் திரும்ப வருமா என்று கேட்கும் வியாபாரிகள் நாங்கள் அல்ல.

    பதிலளிநீக்கு
  20. \\ஆறறிவு கொண்டு இன்றுவரை அறியப்படாத, சிந்தித்து உணரப்படாத, கற்பனை செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஊரூருக்குக் கோயில் கட்டி வைத்து, அங்கு சென்று வழிபட்டால் மனம் தூய்மை பெறும் என்பது அப்பட்டமான ஒரு பொய். இந்த அனுமானக் கடவுளை நம்புவதால் மனம் தூய்மை பெற்று விடாது என்பது உறுதி.\\ பெரியார் சிலைக்கு மாலை போடுவதால் மன நிம்மதி வருமா? கோவிலுக்கு போவது ஏன் மனதுக்குப் பிடித்திருக்கிறது போகிறேன், அதாலென்ன தப்பு?

    பதிலளிநீக்கு
  21. \\நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தான். அத்தனை பேர் மனமும் சுத்தமானதா என்ன? [வழிபடாதவர்களில் அத்தனை பேர் மனதும் சுத்தம் என்று நாம் சொல்லவில்லை]\\ வீட்டிலேயே உட்கார்ந்திருக்கும் உங்கள் மனது சுத்தமா?

    பதிலளிநீக்கு
  22. \\கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு ஒரு மருத்துவ மனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும். கெட்ட எண்ணங்கள் அகன்று தூய்மை பெறும்.

    அனாதை இல்லங்களுக்குப் போகலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

    மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பார்க்கலாம். அவர்களுடைய பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும் போது மனசில் கருணை பிறக்கும்; அன்புணர்ச்சி பெருகும்.

    இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம்னு நம் மனதைத் தூய்மைப் படுத்துற இடங்கள் நிறையவே இருக்கின்றன.\\ இங்கெல்லாம் போவது உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்க போங்க சார். அதுக்காக கோவிலுக்கு போவது தப்பென்று எப்படி சார் சொல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
  23. \\நாம் மேற்குறிப்பிட்ட நல்ல பழக்கங்களை எல்லாரும் கடைபிடித்தால், நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடும். ஒருவருக்கொருவர் மனப்பூர்வமா உதவுகிற மகோன்னதமான நிலை உருவாகும். அத்தனை மனங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி வழியும்.\\ அப்படி எங்க வழியுதுன்னு அட்ரஸ் குடுங்க. பார்த்துட்டு நாங்களும் முடிவு செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  24. நண்பர் ஜகதேவ்,
    தங்கள் வருகைக்கு நன்றி; எனக்கு மகிழ்ச்சி இல்லை.
    “சும்மா வந்தேன்” என்கிறீர்கள்! ‘சும்மா’ போக வேண்டியதுதானே? எதற்காகக் கமெண்ட் போட்டீர்கள்?
    என்னை சந்தோசப்படுத்த என்கிறீர்கள்!!!
    நான் என்ன உங்கமாதிரி ஆட்களின் கமெண்டை எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தேனா?

    ஒன்னும் முகியத்துவம் இல்லை என்கிறீர்கள்! இதெல்லாம் உங்களுக்குப் பொழுது போக்கா?
    பொழுது போக்க என் வலைப்பதிவுதான் கிடைத்ததா!!!
    பதில் சொல்லாமல் விட்டுவிடலாம் இருந்தாலும் சொல்கிறேன்.

    என் பதிவின் நோக்கத்தையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பொழுது போக்காக மற்ற பதிவுகளையும் படியுங்கள்.
    ”தாய் குழந்தையை நேசிப்பது போல”
    என்கிறீர்.
    எதற்கு நேசிக்கணும்? அதன் பலன் என்ன? என்பதுதான் என் கேள்வியே.
    பலனை எதிர்பாராமல் கடவுளை வணங்கு. அவன் அருள் புரிவான் என்று சொல்லிச் சொல்லியே மக்களை ஏமாற்றினார்கள்; ஏமாற்றுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. டாக்டர் சிகிச்சை தருகிறார்.வலியைப் பொறுத்துக் கொள்கிறோம்.
    கடவுள் துன்பம் தந்தது போல ,டாக்டரா நோயைக் கொடுத்தார்?
    துன்பம் தந்த கடவுள் எத்தனை பேருக்கு அதைப் போக்கினார்?
    பட்டியல் போடச் சொன்னால் குதர்க்கம் பேசுவீர்கள்.
    உங்களுக்குத் தெரிந்தது இதுதான்.ஆராயப் பகுத்தறிவு வேண்டும். இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  26. //கடவுள் சர்வரல்ல; கணக்கு வச்சிருப்பாரு//
    அது என்ன கணக்கு?
    எத்தனை காலமா மக்கள் காதுக்குப் பூ சுத்துறீங்க?
    கடவுள் சர்வரில்ல. பின்ன யாரு?
    என்ன செய்யுறாரு?

    பதிலளிநீக்கு
  27. நாட்டில் நடக்கும் ஊழல்களுக்காகப் போராடச் சொல்கிறீர்.
    உங்க அவதாரங்களும் ஆன்மிகங்களும் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்?
    நான் இம்மாதிரிப் போராட்டங்களின் ஈடுபட்டதில்லை என்று உமக்கு எப்படித் தெரியும்?

    பதிலளிநீக்கு
  28. //சூரிய ஒளி, ஆறு.... அத்தனையும் கொடுத்திருக்கிறான்//
    என்ன ஆதாரம்?
    கெட்டதும் கொடுத்திருக்கிறான் என்றால் ஒத்துக் கொள்வதில்லை.
    நல்லதுக்கெல்லாம் அவன் காரணம் என்கிறீர்கள்!
    இப்படிச் சொல்வது அறிவீனம் அல்லாமல் வேறு என்ன?

    பதிலளிநீக்கு
  29. கோயிலுக்குப் போயி நீங்க கிழிச்சது ஒன்னுமில்ல.
    மக்களை அடிமுட்டாள்கள் ஆக்கினீர்கள். மூட நம்பிக்கைகளை வளர்த்து உங்க மாதிரி ஆட்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்.
    அதனாலதான் அங்க போகாதே; ஏழை எளியவங்ககிட்டே போன்னு சொல்றேன்

    பதிலளிநீக்கு
  30. //இறைவனை ஏன் தூற்றுகிறீர்கள்?//
    கடவுள் நம்பிக்கையால் உருவான மதங்கள். அவை நிகழ்த்திய கொடுஞ்செயல்கள்.பல்லாயிரம் உயிர்ப்பலிகள். கணக்கு வழக்கில்லாத மூட நம்பிக்கைகள்.........
    இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
    உங்களைப் போல கடவுள் பெயரைச் சொல்லிப் பலன் அடைந்தவர்கள் அவருக்காக வக்காலத்து வாங்கவே செய்வார்கள்

    பதிலளிநீக்கு
  31. முனைவர் பட்டம் வாங்கிய நான் ஏமளிகளீடம் கேள்வி கேட்கவில்லை. உம்மை மாதிரி படித்த முட்டாள்களிடம்தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. என் மனது சுத்தம்தான் .உன் மனசில் இருக்கிற அழுக்கு உன் பின்னூட்டத்திலேயே தெரியுது.

    பதிலளிநீக்கு
  33. \\ மூட நம்பிக்கைகளை வளர்த்து உங்க மாதிரி ஆட்கள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்.\\ ஆமா சார், வீரமணியும், கருணாநிதியும் சேர்த்து வைத்துள்ள சொத்துகளும், அவர்கள் வாரிசுகளை அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு தயார் செய்து வருவதுமே இதற்க்கு சாட்சி. பெரியார் சொன்னார்னு தான் அவரது வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி சாராயக் கடைகளைத் திறந்து விட்டார். நீங்க, பகுத்தறிவாளர், ஆனா இவர்கள் செய்துள்ள அநியாயங்களை கேட்கத்தான் உங்களுக்கு நேரமே இருக்காது.

    பதிலளிநீக்கு
  34. \\ உம்மை மாதிரி படித்த முட்டாள்களிடம்தான் கேட்கிறேன்.\\ கேளுங்க சார், நல்லா வைக்கிறோம் ஆப்பு.

    பதிலளிநீக்கு
  35. \\உங்க அவதாரங்களும் ஆன்மிகங்களும் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்?
    நான் இம்மாதிரிப் போராட்டங்களின் ஈடுபட்டதில்லை என்று உமக்கு எப்படித் தெரியும்?\\ ஆன்மீக வாதிங்க தான் பிராடுகலாச்சே, அவங்களை ஏன் சார் கணக்கில் சேர்க்கிறீங்க. நீங்க போராடியது சரி, ஆனா அதனால பிரயோஜனம் உண்டா? கருணாநிதி கூடத்தான் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடினார், காலை உணவுக்கும் மதிய உணவுக்கு நடுவில் உள்ள கேப்பில் உண்ணா விரதமெல்லாம் இருந்தார். அந்த மாதிரி நீங்க போராடி என்ன சார் பிரயோஜனம்?

    பதிலளிநீக்கு
  36. இதுவரைக்கும் ஆப்பு வெச்சிக் கிழிச்சே. இன்னும் கிழி.

    பதிலளிநீக்கு
  37. \\தங்கள் வருகைக்கு நன்றி; எனக்கு மகிழ்ச்சி இல்லை.\\ அப்புறம் எதுக்கு சார் நன்றி எல்லாம்...

    பதிலளிநீக்கு
  38. \\ எதற்காகக் கமெண்ட் போட்டீர்கள்?\\ நீங்க எதற்கு கமெண்டு பாக்சை வைத்திருக்கிறீர்கள்? கேள்வியே கேட்காம இருக்க இது என்ன உங்க முனைவர் பட்டம் வாங்க நீங்க கொடுத்த Viva Voce- ஆ?

    பதிலளிநீக்கு
  39. உங்க மாதிரி ஆட்கள் உள்ளே நுழைந்து, பதிலுக்குப் பதில் தராமல், விவாததைத் திசை திருப்பி, அநாகரிகமாகக் கமெண்ட் போடுவார்கள் என்பதை எதிர்பார்க்காதது என் குற்றம்.

    இனி, என் அனுமதிக்குப் பின்னரே கமெண்ட்டுகள் வெளியாகும் என்பதைப் பண்பாளரான தங்களுக்கு நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு