திங்கள், 18 ஜூன், 2012

அழுது கொண்டே சிரிக்கிறார் கடவுள்!

         அழுதுகொண்டே சிரிக்கிறார் கடவுள்!

’கடவுள் உண்டா இல்லையா?’

மிகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெறும் இவ்விவாதத்தில், ‘அனுமானம்’ என்னும் ‘உத்தி’ யைத் துணைக் கொண்டு, வெகு எளிதாகக் கடவுளின் ‘இருப்பை’ நிலை நாட்ட முயன்று வருகிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

ஒரு மண்பாண்டத்தைப் பார்க்கிறோம். அதை வனைந்தவர், அதாவது, படைத்தவர் ஒரு குயவர் என்பதை அறிகிறோம்.

நார்களாலும் களிமண் போன்ற பிற உபகரணங்களாலும் உருவாக்கப்பட்ட , ஒரு கூட்டைக் காணுகிற போது, அதை உருவாக்கியது ஒரு பறவை என்பதை அறிய முடிகிறது.

இவையெல்லாம் அரதப் பழசான எடுத்துக் காட்டுகள்.

இன்று புதிய புதிய உதாரணங்கள் தரப்படுகின்றன.

ஓர் ஓவியத்தைக் கண்ணுறும் போது. அது தானாக உருவாகவில்லை; அதை வரைந்தவன், அதாவது படைத்தவன் ஓர் ஓவியன் என்பதையும், ஒரு கணினி தானாகத் தோன்றிவிடாது; அதைத் தோற்றுவிக்க ஒரு தொழில் நுட்ப அறிஞன் தேவை என்பதையும் மிக எளிதாக நம்மால் உணர முடிகிறது. [இப்படிப் பல எ-டுக்கள் தருகிறார்கள்]

இம்மாதிரி அனுபவங்களை விவரித்து,, ஒரு பொருள், தானாக உருவாவதில்லை; அதை உருவாக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை என்று பிறரை நம்ப வைக்க முயலுகிறார்கள்.

மண்பாண்டம் ,கணினி போன்றவற்றைப் போல, நாம் பார்க்கிற இந்தப் பிரபஞ்சப் பரப்பிலுள்ள ஒவ்வொரு பொருளையும், உயிரையும் பிறவற்றையும் தோற்றுவிக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை. என்ற முடிவுக்குப் பிறரை இட்டுச் செல்கிறார்கள்.

இவ்வாறு முடிவெடுப்பதைத்தான் ‘அனுமானம்’ என்பார்கள்.

‘இது இப்படி நிகழ்ந்தது. எனவே, அதுவும் இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்’ என வாதிப்பது இதன் அடிப்படை அம்சம்.

ஒன்றை இங்கு மிக ஆழமாக மனதில் பதித்தல் அவசியம்.

அனுமானம் என்பதும் ஒருவகை நம்பிக்கைதான். எல்லா அனுமானங்களும் ‘உண்மை’ ஆகிவிடா. காரணங்கள் பல உள்ளன.
அவற்றில் ஒன்று............

ஓவியத்தைப் பார்த்ததும், அதை வரைந்தவர் ஓர் ஓவியர் என்று முடிவெடுப்பதிலேயே தவறு நிகழ்கிறது.

ஓர் ஓவியர் ’தானே தனியராய்’ வெறுங்கைகளுடன் அதைப் படைத்தாரா?

அதை உருவாக்க, வண்ணம், தூரிகை, தாள் போன்ற மூலப் பொருள்கள் தேவையாயிற்றே. [செய்பவன்,கருவி,காரியம் என்றெல்லாம் நம் முன்னோர்கள் இது பற்றி ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்கள்].

இங்கே, படைப்புக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் பொருள்கள் மற்றும் சாதனங்களை ‘மூலப் பொருட்கள்’ எனக் கொள்வோம்.

மூலப் பொருள்களை வழங்கியவர்களும் படைப்புக்குத் துணைக் காரணமாக இருக்கையில், ஓவியத்தை ஓவியன் மட்டுமே ’படைத்தான்’ என்று முடிவெடுப்பது தவறல்லவா?

ஒரு பொருளின் தோற்றம் பற்றிச் சிந்திக்கும் போது, அதை ‘ஒருவர்’ படைத்தார் என்று முடிவெடுப்பதில் நம்மவர்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்பது புரியாத புதிராக இருக்கிறது!

அவ்வாறு முடிவெடுப்பதால் விளையும் பயன் என்ன என்பதும் விளங்கவில்லை.

’வெளி’யிலுள்ள அத்தனை பொருள்களையும் உயிர்களையும் பிறவற்றையும் கடவுள் என்று ஒருவர் படைத்தார் என்று அனுமானிக்கும் போதும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இதே தவற்றைத்தான் செய்கிறார்கள்.

அனைத்தையும் உருவாக்குவதற்கான ‘மூலப் பொருள்களை அவருக்குப் பிறர் வழங்கினார்கள் அல்லது, அவை கடவுளைப் போலவே ‘என்றும் இருப்பவை’ எனக் கொண்டால்....................

 ‘முழு முதலானவர்’, ‘எல்லாம் வல்லவர்’ எனப்படும் அவரது தகுதிகளுக்குப் பங்கம் நேர்ந்துவிடும் என்பதால்..........

மூலப் பொருள்கள் அனைத்தையும் அவரே படைத்துக் கொண்டார் என்றால் அது ஏற்புடையதுதானா?

தானே தனக்குள் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டாரா கடவுள்?

இது சாத்தியம் எனின்.....இதுவே உண்மை எனின், அனைத்துப் பொருள்களும்,உயிர்களும் பிறவும் முழுக்க முழுக்கக் கடவுளின் பிரதிகள் அல்லது கூறுகள் என்றாகிறது.

நீங்களும் நானும் கடவுளின் பிரதிகள்!

நாமும் கடவுளே!

நாம் சிரித்தால் அவரும் சிரிப்பார். நாம் அழுதால் அவரும் அழுவார். நாம் அழுதுகொண்டே சிரித்தால் அவரும் அவ்வாறே செய்வார்.

நினைக்கும் போது மனம் பேரானந்தத்தில் மூழ்கித் தவிக்கிறது.

ஆனாலும் ஒரு சந்தேகம்.....................................

அடுக்கடுக்கான துன்பங்கள் அலை அலையாய் வந்து நம்மைத் தாக்கிச் சிதைக்கிற போது, கடவுளின் மறு பிரதியான நாம் வேதனையில் கிடந்து துடிக்கிறோமே, அது ஏனய்யா???

ஏன்? ஏன்? ஏன்?

எல்லாம் அவரின் ‘திருவிளையாடல்’ என்கிறார்களோ ஆன்மிகவாதிகள்?!

இந்தத் திருவிளையாடல் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?

விடை தெரிந்தவர் யார்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நண்பர்களே,

இப்பதிவு பற்றிய தங்களின் கருத்துகளைச் சொல்வதற்கோ, விவாதம் புரிவதற்கோ வாய்ப்பில்லாமல் ‘கருத்துப் பதிவு’க்கான [comment box] சாளரத்தை [?] அடைத்து வைத்துள்ளேன்.

“மாறுபட்ட கருத்துகளை எதிர் கொள்ள உன்னிடம் சரக்கு இல்லை ; தைரியம் இல்லை”

“சாளரத்தைத் திறந்துவிட்டால், உன் டவுஸர் கிழிந்துவிடும்”

“நீ ஒரு மேதை என்பது போலப் பலரை நம்ப வைத்திருக்கிறாய். விவாதத்துக்கு வந்தால் அந்த மாயை அகன்று விடும்”

இப்படிச் சிலர் என்னை விமர்சிக்கிறார்கள்.

அவர்களிடம், உங்கள் கேள்விக்கு நான் தரும் சரியான விளக்கத்தை ஏற்க மறுத்து, மனம் போன போக்கில் தலைப்புக்குத் தொடர்பில்லாத கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். உங்களுடன் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை என்று நான் சொல்வதை ஏற்க மறுத்து, comment box ஐ நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்! அவர்களுக்குப் பதில் சொல்வதே முழு நேர வேலை என்றாகும் நிலை!

மதிப்பாய்வை [moderation] நடைமுறைப் படுத்தும் போதும், “ஏன் ஸட்டரை இழுத்து மூடிக் கொண்டாய்? வெளியே வா. நீயா நானா பார்த்து விடலாம்” என்று சவால் விடுகிறார்கள்.

கடும் சினத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், நானும் அவர்களைச் சாடுவதற்குத் தரமற்ற சொற்களைப் பயன்படுத்த நேர்கிறது.

[ஒப்புக்கு, ‘xxxxx' என்பது போல ஒரு தலைப்பில் வலைப்பதிவு தொடங்கி, அதில் ஏதும் எழுதாமல், மாற்று மதத்தவரின் பெயரில், அடுத்தவர் பதிவில் புகுந்து விளையாடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் இவர்கள்]

இது போன்ற..... இன்னும் சில காரணங்களால், comment box யே எடுக்க நேர்ந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பதிவில் பயன்தரும் கருத்துகள் இருந்து [அப்படி ஏதேனும் இருந்தால்!], தாங்கள் விரும்பினால், அவற்றை நண்பர்களுடன் பகிருங்கள். தவறுகள் அல்லது மறுக்கப்பட வேண்டிய கருத்துகள் இருந்தால், அவை பற்றித் தங்கள் வலைப்பதிவில் [விருப்பம் இருந்தால்] எழுதுங்கள்.

நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++









வியாழன், 14 ஜூன், 2012

தாழ்த்தப்பட்ட கடவுள்.

இது ‘குமுதம்’ இதழில் வெளியானது.

                             தாழ்த்தப்பட்ட கடவுள்! [ சிறுகதை]

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குல தெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது. என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். ஞாயிற்றுக் கிழமை போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. ஆறு மாசம் முந்தியே சாமியை நேர்ந்துட்டேன். அதுக்கான நேர்த்திக் கடனை உடனே நிறைவேத்தியாகணும். நாளைக்கு நல்ல நாள்”.

“அப்படியென்ன பெரிய நேர்த்திக் கடன்!? உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப் போறியா?”. மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காச்சிகளுக்கு ஏதுங்க வசதி?”

“வேறென்ன, உன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் மொட்டை போடப் போறீங்களா? இதுக்குச் செலவு கம்மிதான்”- மீண்டும் கிண்டல்.

“எங்க குல தெய்வம் சாமியும் எங்கள மாதிரியே பரம ஏழை மேஸ்திரி. வசதியுள்ள யாரும் இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்தி எருக்கஞ் செடியும் முள்ளுச் செடியும் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குது. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும்” என்றான் பழனி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இது என் படைப்பாக, 28-05-2008 ‘குமுதம்’ வார இதழில் வெளியானது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 1 ஜூன், 2012

கடவுளின் சொந்தங்கள் [சிறுகதை].

                      கடவுளின் சொந்தங்கள் [சிறுகதை].

சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, மாயமாய் மறைந்து போனது அந்த வாகனம்.

தூக்கி வீசப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்தச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து, அவனின் அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தகவல் அனுப்பினான் தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி, தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

“கடவுள்தான் என்னை அனுப்பி வெச்சார்னு சொல்றீங்களா?”  -அப்பாவியாய்க் கேட்டான் தங்கராசு.

“ஆமாங்க. நான் நாள் தவறாம கடவுளை வழிபடுறவன். அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு.”

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு: “நானும்தான் நாள் தவறாம சாமி கும்பிடுறேன். என் ரெண்டு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கோயிலுக்குப் போயி சாமி முன்னால நெடுஞ்சாண்கிடையா விழுந்து தினம் தினம் கண்ணீர் விட்டு அழறேன். சாமி கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க சொன்னா கேட்பாரு. தயவு பண்ணி என் புள்ளயைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க ஐயா”.

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

                                         மன்னிப்பு வேண்டல்.

திறந்த வீட்டில், தெருத் தெருவாய்த் திரியும் 'வெறி’ பிடித்த சொறி நாய் புகுந்தது போல, ஒரு ’இழிபிறவி’ அடிக்கடி என் வலைப்பதிவில் நுழைந்து ஆபாசமாக எழுதித் தொல்லை கொடுக்கிறான்.

எனவே, தற்காலிகமாக, என் பதிவுகளுக்கு ’மறுமொழி’ இடுவதைத் தடை செய்திருக்கிறேன்.

நண்பர்களே, மன்னியுங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^