ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஜோதிடம் ஒரு கலையா, இல்லை, கொலை ஆயுதமா???

 இது, ஜோதிடப் பித்தேறிய பெற்றோருக்கான சிறுகதை!!! [திருத்தப்பட்டது]

ரகர் வந்து போன சிறிது நேரத்தில், வெளியே கிளம்பினார் வேல்சாமி.

“தரகர் சொன்ன வரனுக்கும் அக்காவுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போறீங்களா அப்பா?- கேட்டவள் அவரின் கடைசி மகள் யாழினி.

“ஆமாம்மா”.

“கொஞ்சம் உட்காருங்க”.

உட்கார்ந்தார் வேல்சாமி.

“மனசைத் திறந்து சொல்லுங்கப்பா. மூனும் பொண்ணாப் பெத்திருக்கீங்களே, ஏம்ப்பா”.

“அது வந்தும்மா...........” உடைந்து சிதறிய வார்த்தைகள் தொண்டையை அடைத்துக் கொண்டன.

“அம்மா சொல்லியிருக்காங்கப்பா.  உங்க ரெண்டு பேர் ஜாதகப்படி, முதல் குழந்தை ஆண்பிள்ளைதான்னு நம்புனீங்க. அது நடக்கல. பெரிய அக்கா சாரு பிறந்ததுக்கு அப்புறமும் பையன் வேணும்னு ஆசைப்பட்டீங்க. ஜோசியரைப் பார்த்தீங்க. அடுத்தது பையன்தான்னு அவர் அடிச்சிச் சொன்னாரு. ஆனா, பையனுக்குப் பதிலா, அகல்யா அக்கா பிறக்கவும் ஆடிப் போனீங்க. அப்புறமும் ஆண் வாரிசு ஆசை உங்களுக்குப் போகல. ஒரு வி.ஐ.பி.ஜோதிடரைத் தேடிப் போய் உங்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினீங்க. அடுத்தது ஆண் சிங்கம்தான்னு அவர் உத்தரவாதம் தந்தாரு. என்ன ஆச்சு?.............................”

பேசுவதை நிறுத்தி, பெத்த அப்பன் முகத்தை ஒருவித விஷமப் புன்னகையுடன் ஆராய்ந்தாள் யாழினி.

“மேலே சொல்லும்மா”. பின்னாலிருந்து அம்மாவின் குரல். அவருக்குப் பின்னால் சாருவும் அகல்யாவும்.

“.....நீங்க எதிர்பார்த்த ஆண் சிங்கத்துக்குப் பதிலா ஒரு பொட்டச் சிறுக்கி  நான் பொறந்து தொலைச்சிட்டேன். இதெல்லாம் ஒரு ’ஃப்ளாஷ் பேக்’தான். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஜோசியத்தை நம்பி மூனு பொம்பளப் புள்ளைகளைப் பெத்து ஏமாந்த நீங்க, அதே ஜோசியத்தை நம்பி அவங்களக் கரையேத்த நினைக்கிறீங்களே, இது நடக்குமா அப்பா?

கல்யாணம்கிற ஓட்டப் பந்தயத்துல, ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், செவ்வாய் தோஸம், புதன் தோஸம், மூலம், கேட்டை, கூமுட்டை, வரதட்சணைன்னு பல தடைகளையும் தாண்டி ஜெயிச்சி வந்தாத்தான்  ஒரு கன்னி கழுத்தில் ஒரு ராஜகுமாரன் மாலை சூட்டுவான். நடுவுல தடுக்கி விழுந்துட்டா அவ நித்திய கன்னிதான். உங்க மூனு பொண்ணுகளும் நித்திய கன்னிகளாவே இருந்துடட்டும்னு நினைக்கிறீங்களா?”

சொல்லி முடித்தாள் யாழினி.

”ஜோதிடமே பொய்யின்னு சொல்றியா சாலினி?” -கேட்டார் வேல்சாமி.

“திருமணம் செய்துக்கிறதுக்கான தகுதியும் விருப்பமும் இருந்தும்கூட, திருமணம் ஆகாத முதிர் கன்னிகள், முதிர் காளைகளின் எண்ணிக்கை கூடிட்டே போகுது. அவங்கள்ல பல பேர் மனநிலை பாதிக்கப்பட்டவங்களாக இருக்காங்க. கணிசமானவங்க தற்கொலை செய்துட்டிருக்காங்க. திருமண வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தப்பான வழிகளில் சுகம் தேடிக் கெட்டுப் போனவங்களும் நிறைய. இதுக்கான காரணங்களில், முதல் காரணம் இந்த ஜாதகப் பொருத்தம்தான். அதனால, ஜோதிடம் பொய்யின்னு நான் சொல்ல வரல. அதைப் பத்தின கவலையும் எனக்கில்ல. ஜாதகப் பொருத்தம் பார்க்கிறதுதான் தேவையில்லைன்னு நான் சொல்ல வர்றேன். ஒரு பொண்ணா...அதுவும் உங்க மகளா இருந்துட்டு இப்படி அதிகப்பிரசிங்கித்தனமா பேசினதுக்கு என்னை மன்னிச்சுடுங்கப்பா.” என்றாள் சாலினி.

வேல்சாமி, சிறிது நேரம் மவுனத்தில் புதையுண்டார்.

கையிலிருந்த ஜாதகத்தைப் பரண் மீது கடாசினார்.

”உங்க குடும்பம் கவுரவமானதுன்னு எனக்குத் தெரியும். உங்க மூத்த பொண்ணையும் எனக்குப் பிடிச்சிருக்கு. ஜாதகப் பொருத்தம் இல்லேங்கிறதைப் பத்தி எனக்குக் கவலை இல்லைன்னு சொன்ன அந்த சேலத்துப் பையன் வீட்டாரிடம் என் சம்மத்தத்தைச் சொல்லிட்டு வர்றேன்.”

புத்துணர்ச்சியுடன் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டார் வேல்சாமி.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




.




திங்கள், 23 ஜூலை, 2012

பகுத்தறிவாளன்

’ராணி’யில் வெளியான சிந்தனையைத் தூண்டும் படைப்பு.....அசத்தல் நடையில்! இது நடந்த கதை என்றால் நம்புவீர்களா?

                               பகுத்தறிவாளன்  [சிறுகதை]

”நீ இந்த ஊரைவிட்டே ஓடிப்போகணும். அப்பத்தான் மழை பெய்யும்னு  மாரியாத்தாவே சொல்லிட்டா. உம்...உம்...புறப்படு. திரும்பிப் பார்க்காம ஓடு. ஊர் எல்லையைத் தாண்டிப் போயிடு.”

“சாமி இல்ல பூதம் இல்லன்னு பிரச்சாரம் பண்றவன் நீ. நல்ல நேரம் கெட்ட நேரம்னு எதுவும் இல்ல; சகுனம் பார்க்குறது தப்பு; சாந்தி கழிக்கிறது தப்புன்னு என்னென்னவோ சொல்லிட்டுத் திரிஞ்சே. நாங்க கேட்டுட்டுச் சும்மா இருந்தது தப்பாப் போச்சி. இந்த ஊர் தெய்வக் குத்தத்துக்கு ஆளாயிடிச்சி. நீ வெளியேறினாத்தான் மழை பெய்யும். இப்பவே நடையைக் கட்டு.”

ஒட்டு மொத்த ஊரும் பிறப்பித்த உத்தரவை மீற முடியாத நிலையில், அந்த அந்தி நேரத்தில், புதுப்பாளையத்துலிருந்து வெளியேறி, ஊரின் மேற்கு எல்லையில் உள்ள பெரிய ஏரிக்கரை மீது நடந்துகொண்டிருந்தான் மணிமொழியன்.

“சே, இந்தக் கணினி யுகத்திலும் இப்படியொரு காட்டுமிராண்டிக் கூட்டமா? இந்த முட்டாள்களை மூடநம்பிக்கைச் சேற்றிலிருந்து ஈடேத்த நான் பட்ட பாடெல்லாம் வீணாயிடிச்சே. நல்ல வேளை.....சாமியாடி சொன்னா, கனவில் வந்து சாமி சொல்லிச்சி, பூதம் சொல்லிச்சின்னு என்னையே அம்மனுக்குப் பலி போடாம விட்டாங்களே!” என்று சொல்லி வாய்விட்டு நகைத்தான் மணிமொழியன்.

அவன் நகைப்புக்கு எதிர் நகைப்புப் போல வானம் ‘கடகட’ என முழங்கியது.

அவன் அண்ணாந்து பார்த்தான்.

இது என்ன விந்தை! வானமெங்கும் கறுத்து, கைக்கெட்டும் தூரத்தில் சூல் சுமந்து மிதக்கிறதே மேகக் கூட்டம்!

மழை பெய்யப் போகிறதா?

முட்டாள் மனிதர்களின் முடக்கு வாதத்தை இயற்கையே நியாயப்படுத்தப் போகிறதா?

மணிமொழியன் ஆச்சரியப்பட்டான். கூர்த்த பார்வையால் இருண்ட வானத்தைத் துழாவினான்.

எங்கிருந்தோ மிதந்து வந்த ‘மழை வாசம்’ ஒரு பேய் மழைக்கு முன்னோட்டம் தந்தது.

“பட்...பட்” ஓசையுடன் சடசடவென இறங்கிய மழைத் துளிகள், மணிமொழியனின் மண்டையைப் பதம் பார்த்தன.

அது செம்மண் பூமி. ‘குப்’ பென எழுந்த மண் வாசனை காற்றில் மிதந்து வந்து கமகமத்தது.

நனைந்து கொண்டே சிறு பிள்ளைகள் போல ஆடிப்பாட அவனுக்கு ஆசைதான். அப்போதிருந்த மன நிலையில் அது சாத்தியப்படவில்லை. வேகமாக ஓடி, ஏரியை ஒட்டியிருந்த எல்லையம்மன் கோயிலில் அடைக்கலம் புகுந்தான்.

மழை வலுத்தது. வருணனுடன் வாயுபகவானும் களத்தில் இறங்கினான்.

”சளேர்...சளேர்” என்று தரையில் அறைந்து ஆக்ரோசத்துடன் மழை கொட்டியது. கோயில் கூரை மீதும் அதனை ஒட்டியிருந்த தகரக் கொட்டகை மீதும் தாளமிட்டு அட்டகாசம் புரிந்தது.

பேயாட்டம் ஆடும் மரமட்டைகளை உசுப்பிவிட்டு விசிலடித்தது சூறாவளி. மேகக் கூட்டம் இடித்து முழக்கி டமாரம் கொட்டியது.

இத்தனை ஆரவாரங்களுக்கிடையே அது என்ன ஒரு வித்தியாசமான ஓசை?

மணிமொழியன் உற்றுக் கேட்டான். புதுப்பாளையம் இருந்த திசையில் கவனத்தைப் பதித்தான்.

மழையைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் புதுப்பாளையம் வாசிகள், தாம்பாளம், தகரடப்பா என்று எதையெல்லாமோ தட்டிக் கொண்டு, ஆடிப்பாடிக் கும்மாளம் போடுகிறார்கள் என்பது புரிந்தது.

மணிமொழியன் சிந்தனை வசப்பட்டான். சில சந்தேகங்கள் அவன் முன்னே விஸ்வரூபம் எடுத்தன.

‘நான் ஊரைவிட்டு வெளியேறிய கொஞ்ச நேரத்தில் வானம் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதே, இது எப்படி?

தற்செயலா அல்லது என் மீது சுமத்தப்பட்ட பழியை நியாயப்படுத்த அம்மன் நிகழ்த்தும் அதிசயமா? இது அவளின் செயல்தான் என்றால், மனித மிருகங்களின் இந்த மூட நம்பிக்கைக்கு, காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு  அவள் அங்கீகாரம் தருவதாகத்தானே அர்த்தம்?

நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்த மணிமொழியன், அன்று எதிர்கொண்ட பிரச்சினையாலும் மனக் குழப்பத்தாலும் உண்டான அயர்ச்சி காரணமாகத்  தரையில் நீட்டிப் படுத்தான். அவன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து நடந்து முடிந்த முக்கிய நிகழ்ச்சிகளை அசை போடலாயிற்று அவன் மனம்.

பள்ளி ஆசிரியனான மணிமொழியன், புதுப்பாளையத்திற்கு மாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே, படிப்பறிவில் மட்டுமல்லாமல் பகுத்தறிவிலும் புதுப்பாளையம் பழையபாளையமாகவே இருப்பதைக் கண்டு வருந்தினான்.

படிப்பகம், வாசகர்வட்டம், நற்பணி மன்றம் என்றெல்லாம் படிப்படியாகச் சில அமைப்புகளை ஏற்படுத்தி, உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை எழுப்பி உட்கார வைத்தான். கருத்தரங்குகள்,கவியரங்குகள், பட்டிமன்றங்கள், மேடை நாடகங்கள் என்று நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

இளைஞர்கள் சிலரிடம் ஓரளவு மாற்றம் தெரிந்தது. அவர்கள் வரதட்சனையை மறுத்தார்கள்; சாதி வேறுபாட்டை அலட்சியம் செய்தார்கள். விதவையருக்கு வாழ்வு தர முன்வந்தார்கள்.

ஆயினும் என்ன? எஞ்சியிருந்தவர்கள் மாறவே இல்லை. பழைமையில் ஊறிப்போனவர்கள் அவனை வெறுத்தார்கள். அவனை ஊரைவிட்டு வெளியேற்றும் நாள் வருமா என்று காத்துக் கிடந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போல அந்த ஆண்டு மழை பொய்த்தது.

மழைக்கஞ்சி காய்ச்சினார்கள். மழை பெய்யவில்லை.

சாமியாடியைக் கும்பிட்டு, அம்மனை வரவழைத்து முறையிட்டார்கள். சாமியாடி சொன்னதை அம்மனின் அருள்வாக்காகக் கொண்டு மணிமொழியனை வெளியேற்றினார்கள்.

சிறிதும் மட்டுப்படாமல், கட்டுப்பாடின்றிப் பெய்து கொண்டிருந்தது மழை.

நேரம் பின்னிரவைக் கடந்து கொண்டிருந்தது.

ஒரு பெரிய ராட்சத மதகை உடைத்துவிட்டால், ‘குபீர்’ என்று வெள்ளம் வெளியேறும் போது வெளிப்படுவது போன்ற ஓசை கேட்டுத் திடுக்கிட்டான் மணிமொழியன்.

எழுந்து வெளியே பாய்ந்தான்.

புது வெள்ளம் ததும்பி வழியும் அந்தப் பிரமாண்ட ஏரியின் அகன்ற கரை மீது கவனமாக நடந்தான்.

நடுக்கரையில் உடைப்பெடுத்துக் கொண்டிருந்தது! ஏரியில் சிறைபட்டுக் குமுறிக் கொண்டிருந்த புது வெள்ளம், புதுப் பாதை போட்டு மூர்க்கத்தனமாய் வெளியேறத் தொடங்கியிருந்தது.

உடைப்பு பெரிதாகி, இந்த ஊழி வெள்ளம் காட்டாறாக உருக்கொண்டு பாயும் போது எதிர்ப்படும் ஊர்கள் சிதைந்து சிதறி உருத்தெறியாமல் போகும் என்பது அவனுக்குத் திட்டவட்டமாகப் புரிந்தது.

முதல் பலியாய் முன்னால் நிற்பது புதுப்பாளையம்.

’ஊரா அது? காட்டுமிராண்டிகளின் சரணாலயம். தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய அத்தனை முட்டாள்களும் மூச்சுத் திணறிச் சாகட்டும்’ -இப்படியொரு வக்கிர சிந்தனைக்கு ஆளாகவில்லை அவன்.

ஏரிக்கரையிலிருந்து புதுப்பாளையம் நோக்கிப் புயலாகப் பாய்ந்தான்.

“ஏரி உடைப்பெடுத்திடிச்சே.........வெள்ளம் வருது..........வெள்ளம் வருதே.........ஏரி உடைப்பெடுத்திடிச்சே..........”

உரத்த குரலில் கூவியபடி ஓடினான் அவன்.

ஊரை நெருங்க நெருங்க அவன் குரல் உச்ச கதியில் ஒலிக்கலாயிற்று.

***********************************************************************************************





வெள்ளி, 13 ஜூலை, 2012

அவள் அவன் மனிதர் கடவுள்.....[சிறுகதை]

’ராணி’ யில் வெளியானது.  மின்னல் வேக நடை. நெஞ்சைச் சுடும் கதை. தவறாமல் படியுங்கள்!

        அவள் அவன் மனிதர் கடவுள்...[சிறுகதை]

வன் அழுதுகொண்டிருந்தான்; விடிய விடிய அழுதுகொண்டிருந்தான்!

இரவு பதிரொரு மணி சுமாருக்கு, அவளும் அவனும் அந்த ஆற்றுப் பாலத்தில் போய்க்கொண்டிருந்த போது அவன் அடித்து வீழ்த்தப்பட்டு, அவள் நான்கைந்து ரவுடிகளால் ஆற்றுக்குள் கடத்தப்பட்டாளே அப்போதிருந்து அவன் அழுது கொண்டிருந்தான்.

“ஐயா, என் மல்லியைக் காலிப்பசங்க கடத்திட்டுப் போறாங்க.  உதவிக்கு வாங்கய்யா. தப்புத் தண்டா நடக்கிறதுக்குள்ளே அவளைக் காப்பாத்திக் குடுங்க சாமி.....மகராசரே.....”

ஆபத்துக்கு எப்படியும் நாலு பேர் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் கூப்பாடு போட்டு, குலுங்கிக் குலுங்கி அழுதான் அவன்.....வேலுச்சாமி. வாகனங்களில் செல்வோரைக் கும்பிட்டு வழி மறித்தான். பாதசாரிகளின் பாதம் தொட்டுக் கெஞ்சினான்.

“உதவுகிறேன்” என்று ஒருவர்கூட முன்வரவில்லை.

பாலத்துக்கு அப்பால், பாதையோரக் கடைகள் அவன் கண்ணில் பட்டன. மூச்சுப் பிடித்து ஓடினான். முதலில் தேனீர்க்கடை சின்னத்தம்பி. அப்புறம், பெட்டிக்கடை பெருமாள். பிறகு, மிதிவண்டிக்கடை சாமிவேலு. இவர்கள் மட்டுமல்லாது, அங்கிருந்த அத்தனை பேர் காலிலும் விழுந்தான். மல்லியை மீட்டுத் தரும்படி அழுதான்; தொழுதான்; ஒரு பிச்சைக்காரன் போல் மன்றாடினான்.

கும்பல் கூடியது.....வேடிக்கை பார்க்க.

“பொண்ணுக்கு என்ன வயசு?”

“பதினேழு பதினெட்டு இருக்குமுங்க”.

“எந்த ஊரு?”

“கூத்தம்பூண்டி”.

“அவள் உனக்கு என்ன ஆவணும்?”

“தங்கச்சி”.

“உடன்பிறந்த தங்கச்சியா.....இல்லே.....?”

“அது வந்து.....”

“என்னப்பா வந்து போயி.....”

“சொந்தத் தங்கச்சி இல்லேங்கிறே”.

“ஆமாங்க”.

“அப்படிச் சொல்லு. கல்யாணம் ஆயிடிச்சா?”

“எனக்குங்களா?”

“ரெண்டு பேருக்கும்தான்”.

“இல்லீங்க”.

“”அவளைக் கூட்டிட்டு எங்கே வந்தே?”

“சினிமா பார்க்க வந்தோம்”.

“என்ன படம்?”

“படம்.....அது வந்து.....”.

“என்னப்பா, எது கேட்டாலும் வந்து போயின்னு மென்னு முழுங்குறே. எங்கேயோ உதைக்குதே”.

ஆளாளுக்கு அவனை மடக்கிக் கொண்டிருக்க, இளகிய மனசுக்காரர் ஒருவர் அவனை நெருங்கினார்.

“தம்பி, அந்த இடத்துல அடிக்கடி ரவுடிப்பசங்க பொண்ணுகளைக் கடத்துறானுக. அவனுக உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தரோட அடியாளுங்க. உனக்கு உதவ இங்கே யாரும் முன்வரமாட்டாங்க. நேரே போலீசுக்குப் போ” என்றார்.

காவல் நிலையத்தைக் கண்டுபிடித்து, புகார் மனு எழுதிக் கொடுத்து, அவர்கள் ஆயத்தமாகிப் புறப்பட்டு வந்து மல்லியை மீட்டால் அவளிடம் என்ன மிச்சமிருக்கும்? அதற்குள் மந்தி கை மாலையாகச் சிதைந்து போவாளே.

அவன் அழுதான். நாலு பேர் துணையாக வந்தால் எண்ணி நாலு நிமிடத்தில் அவளை மீட்டுவிடலாம் என்று புலம்பினான். எவரும் வருவதாக இல்லை.

அவன் அழுதான். ‘ஐயோ தங்கச்சி” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்; தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுதான்.

வெளியூர்க்காரனான வேலுச்சாமி, அங்குள்ள உள்ளூர்க்காரர்களிடம் உதவி கேட்டுச் சோர்ந்து போனான்.

மனிதர்கள் உதவ முன்வராத நிலையில் கடவுளின் நினைப்பு வந்தது.

“கடவுளே.....”என்று கூவியவாறு மீண்டும் பாலத்தை நெருங்கி, பக்கப்பாதையில் சரிந்து, நீர் வற்றிக் கிடந்த அந்த ஆற்றுக்குள் இறங்கி மணலில் கால் பதித்து ஓடினான்.

மணல் மேடுகளில் தடுக்கி விழுந்து உருண்டான். காலிகள் அடித்ததால் மண்டையிலிருந்து வடிந்து உறைந்து போயிருந்த குருதித் தாரைகளில் மணல் துகள்கள் ஒட்டிக் கொண்டு நறநறத்தன.

வெட்டி எடுக்கலாம் போன்ற மையிருட்டில் அவன் இலக்கின்றி ஓடினான்.

“தெய்வமே.....என் தங்கச்சியைக் காப்பாத்து.....” என்று அவன் எழுப்பிய கூக்குரல், பரந்த ஆற்றுப் பரப்பில் தடையேதுமின்றிக் காற்றில் கலந்து பரவி அடங்கிக் கொண்டிருந்தது.

அவன், தான் சார்ந்த மதத்தை மறந்து, தனக்குத் தெரிந்த அத்தனை கடவுள்களையும் பெயர் சொல்லி அழைத்துத் தன் உடன்பிறப்பைக் காப்பாற்றும்படி ஓடிக்கொண்டே பிரார்த்தித்தான்.

“மல்லி.....மல்லி.....” என்று என்று கூவிக் கொண்டே அவளைத் தேடினான்.

தோல்வி அவன் நெஞ்சில் அறைந்தது.

ஆற்றங்கரைப் புதர் மறைவிலோ மணல் மேடுகளின் சரிவிலோ வல்லூறுகளின் பிடியில் அந்தப் பெண் புறா படும் மரண வேதனையைக் கற்பனை செய்து செய்து அவனின் நாடி நரம்புகள் ஒடுங்கிப் போயின.

அவன் நிலைகுலைந்து போனான். அதர்மம் கொக்கரிக்கும் அந்தகாரத்தில், ஓடியோடிப் பாலத்தடியில் தேடினான். தூண்களில் மோதிச் சோர்ந்தான்.

வெறி பிடித்தாற்போல எங்கெல்லாமோ ஓடினான். குத்துக்கல் ஒன்றில் கால் இடறிச் சரிந்து விழுந்தான். எழுந்து மீண்டும் ஓடப் பார்த்தான். முடியவில்லை.

நேரம் அடித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருந்தது. 

அவன் பெருமளவில் தன் சக்தியை இழந்திருந்தான். தவழக்கூட முடியவில்லை; அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது.

உரத்த குரலில் கடவுளை உதவிக்கு அழைக்க முடியவில்லை.

“கடவுளே.....கடவுளே.....” என்று அடங்கிய குரலில் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.

 ஆவேசம் தணியாத நிலையில், ஒரு புழுப்போல ஊர்ந்து கொண்டிருந்தான்.

யங்கித் தயங்கி இருள் விடை பெற்றுக் கொண்டிருந்தது.

எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தன.

வறண்ட ஆற்றின் ஓரிடத்தில், பரந்து விரிந்த மணல் மெத்தையில் மல்லி பிணமாகக் கிடந்தாள்.

அவள் உடலெங்கும் நகக் கீரல்கள்; பற்பதிவுகள்; உறைந்த ரத்தத் துளிகள். மாசு படுத்தப்பட்டுக் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட நிலையில் அந்த அழகு தேவதை அலங்கோலமாகக் கிடந்தாள்.

அவளுக்கு அழகு சேர்த்த ஆடைகள் வெறும் கந்தல் துணிகளாகி, கொஞ்சமாய் அவள் மானம் காத்தன.

வேலுச்சாமி?

சற்றுத் தள்ளி, மணலை முத்தமிட்டுக் குப்புறக் கிடந்தான்.

வானில் காகங்களும் கழுகுகளும் வட்டமிட்டு வேடிக்கை பார்த்தன.

மனிதர்களுக்குக் கேட்கவா வேண்டும்? மந்தை மந்தையாய் வந்து குழுமி ஆசை தீர வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கடவுள்?

*****************************************************************************************************************************************************