வியாழன், 27 செப்டம்பர், 2012

படித்த கதைகள் 17. ”ஆஹா..” 4! ”ஐயோ..” 12! ”தேவலாம்..” 1!

தமிழ் வார இதழ்க் கதைகளின் சாரத்தைப் பிழிந்து தரும் தளம் இது. தவறாமல் படிக்கிறீர்களா?

கதைகள்... குங்குமம், கல்கி, தேவி, ராணி, பாக்யா, வாரக் கதிர், வார மலர், குடும்பமலர் இதழ்களில் வெளியானவை.

தலைப்பைப் படிச்சிட்டு, ”முதலில் தரமான நாலு கதையையும் சொல்லிடு அறுவை.”ன்னு கோரிக்கை வெச்சுடாதீங்க.

அந்த நாலையும் கேட்டுட்டு ’எஸ்கேப்’ ஆயிடுவீங்க. உங்களை நல்லாவே நான் புரிஞ்சி வெச்சிருக்கேன்!

‘சுபமி’ன்னு ஒரு எழுத்தாளர். [கதை: ‘ஷாக்’. இதழ்: குங்குமம் [01=10=2012]

சந்துருவையும் அவனுடைய புதுப் பெண்டாட்டியையும் கிராமம் பார்க்க அனுப்புறார் கதாசிரியர்.

சந்துரு, “கிராமத்தில் இருக்கிற தாத்தாவும் பாட்டியும் பழைமையில் ஊறினவங்க. என் பேரைச் சொல்லிக் கூப்பிடாதே”ன்னு புறப்படும் போதே பெண்டாட்டியை எச்சரிக்கை பண்றான்.

அவளும் அவன் சொன்னபடியே கிராமம் போனதும் மரியாதையா கூப்பிடுறா.

இப்போ முக்காக் கதை முடிஞ்சிதுங்க.

முழுக் கதையும் கேட்டா,  ”கடவுளே, இப்படியெல்லாம் கதை எழுதி நம்மைப் பித்துக்குளி ஆக்குறாங்களே”ன்னு தலை தலையா அடிச்சுக்குவீங்க. நான் உங்க பக்கத்தில் இருந்தா, “இந்தக் கதையைத்தான் முதலில் சொல்லணுமா?”ன்னு என்னையும் போட்டுத் தாக்கிடுவீங்க!

கதை முடிவில், பாட்டி தாத்தாகிட்ட சொல்லுது....................

“இவள் என்ன நம் சந்துருவை ‘என்னங்க’ங்கிறா.....நாகரிகமா பேசத் தெரியல” 

இங்கிலீசு படிச்ச பாட்டியாம். அதான் அப்படிச் சொன்னாங்கன்னு நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார் படைப்பாளர் சுபமி.

‘ஷாக்’ இப்போது சந்துருவைத் தாக்கியது’ன்னு கடைசியா ஒரு வரியும் சேர்த்திருக்கார்.

’ஷாக்’ சந்துருவை மட்டும் தாக்கல; நம் எல்லோரையும்தான்!

சுபமி வாழ்க!

                                     *                                   *                                 *

‘தேர்வு’ ன்னு ஒரு கதை. அதைப் பிரசுரம் பண்ணிப் பெருமை தேடிகிட்டதும் குங்குமம் தான். அதை எழுதின புதுவை சந்திரஹரி, வாசகரின் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடுறதில், ”சுபமிக்கு நான் எந்தவிதத்திலும் குறைஞ்சவனில்லை” என்கிறார்.

கல்யாணம் ஆகாத மனோகர், ’தளதள’ வனஜாவையும் ‘சுமார்’ சுமதியையும் பெண் பார்த்துட்டு வர்றான். யாரைக் கட்டிக்க விரும்புவான்னு உங்களுக்கே தெரியும்.

அம்மாக்காரி ரெண்டு குடும்பத்தைப் பத்தியும் விசாரிச்சுட்டுச் சொல்றா.............

”வனஜாவோட அம்மா அடங்காப்பிடாரியாம். வனஜாவும் அப்படித்தான் இருப்பா. அதனால, நீ சுமதியைக் கட்டிக்கோ”.

‘தாயைப் போல பிள்ளை’ங்கிறது இன்னிக்கிச் செல்லுபடியாகாத பழமொழிங்கிறது கதாசிரியருக்குத் தெரியல.

பாவம் சந்திரஹரி!

                                        *                               *                           *

அடுத்த குங்குமக் கதை, உமா கல்யாணி எழுதினது. தலைப்பு: அக்கரைப் பச்சை.

இந்தக் கதைக்கு ‘ரத்தினச் சுருக்கம்’ மட்டும் தர்றேன்.

ஒரு குடும்பத் தலைவியோட கணவன், புதுசா காய்கறிக்கடை வைக்கிறான். அக்கம் பக்கத்துப் பொண்ணுக எல்லாம் இந்தத் தலைவியை நினைச்சி, ”இவ இனி நோகாம வீட்டோட இருப்பா. புருசன் காய்கறி கொண்டுவந்து கொடுத்துடுவான்”ன்னு பொறாமைப் பட்டாங்களாம்.

குடும்பத் தலை என்ன நினைக்கிறா தெரியுமா?

“மத்த பொம்மணாட்டிங்க ஜாலியா கடைக்குப் போயி, புத்தம் புதுசா வாங்குவாங்க. என் புருசன் முத்துனதைக் கொண்டு வருவான்”

”அடடா!....அடடா! எத்தனை உன்னதமான உளவியல் தத்துவத்தை இந்தக் கதை வெளிச்சம் போட்டுக் காட்டுது!”ன்னு நான் சொன்னா, “உன் ஊரைச் சொல்லுடா அறுவை. உதைக்க வர்றோம்”னு சொல்லுவீங்கதானே?

                               *                                    *                                    *  

அப்புறம், அடுத்து ஒரு குப்...........

கொஞ்சம் இருங்க. ‘குப்’னு மல்லிகை வாசம் வருது!

எதிர்த்த வீட்டு மாமி! அவங்க ஒரு ‘மதனகாமி!! நெட்டில் அவங்க பார்க்காத நீலப் படமே இல்லை!!!

“என்னடா அம்பி, அஞ்சாறு பதிவு போட்டுட்டே. கதை கதையா எழுதித் தள்ளுறே. ஒரு காதல் கதைகூட இல்லையேடா”ன்னு கேட்டுட்டு, அம்மாவைப் பார்க்க சமையல் கட்டுக்குள் நுழைஞ்சிட்டாங்க.

இநத மாமிக்குக் கூச்ச நாச்சமே கிடையாதுங்க. ஒரு விடலைப் பையன்கிட்டே கேட்கிற கேள்வியா இது?.

அவங்க பத்த வெச்சதில், என் மனத்திரையில் ஒரு பழைய காதல் கதை ஓட ஆரம்பிச்சுட்டுதுங்க.

அது அவர்களுக்கு முதலிரவு.

அன்புக் கணவன், ஆசை மனைவியைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறான். அவ நெருங்க விடல. எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் ஆசை நிறைவேறல.

“என்னைப் பிடிக்கலையா?”ன்னு  பாவமா கேட்குறான்.

அவ சிரிச்சிட்டே சொல்றா: “உங்க ஃபிரண்ட்ஸெல்லாம் பார்க்குறாங்க. எனக்கு வெட்கமா இருக்கு”.

“யாரும் நம்மைப் பார்க்கலையே”ன்னு சொல்லிட்டு, சாவித் துவாரத்தைத் துண்டுப் பேப்பர்ல அடைச்சுட்டு வர்றான் அவன்.

அப்புறமும் அவ வெட்கப்படுறா.

என்னை உனக்குப் பிடிக்கல. நான் போறேன்”ன்னு அவன் கதவைத் திறக்கப் போறான்.

”அதோ பாருங்க”ன்னு சுவர்ல தொங்குற ஒரு புகைப் படத்தைக் காட்டுறா அவ.

அவன் தன் நண்பர்களோட எடுத்துட்ட ‘குரூப் ஃபோட்டோ அது.

”அடச்சே”ன்னு படத்தை அவன் திருப்பி வைக்கிறதுக்குள்ள ஓடிப் போயி அவனைக் கட்டிப் பிடிச்சி முத்த மழை பொழியுறா அவ.

‘ஜிவுஜிவு’ன்னு உடம்பு பூரா இன்ப உணர்ச்சி பரவுதுங்களா? [இது குமுதத்தில் படிச்சது. ஆசிரியர் பேரு மறந்து போச்சு]

படிக்கிற நம்மை முட்டாள் ஆக்கினாலும் இதைப்படிக்கும் போது ஒருவித சுகம் கிடைப்பது உண்மைதானுங்களே?

என்னவோ தெரியல, இப்பவெல்லாம் இந்தமாதிரிக் கதைகள்  வார இதழ்களில் வர்றதேயில்லை.

கதை நடையும் ‘சப்’னு இருக்கு. கதாசிரியர்களுக்குச் சுவாரசியமா கதை சொல்லணும்கிற எண்ணமே அத்துப் போச்சுங்க.

அப்புறம்...............

அது வந்து ....குப்பைக் கதைகளைப் பத்திச் சொல்லிட்டிருந்தேன் இல்லியா?. அதைக் கடைசியா வெச்சுக்கலாம். இனி, கொஞ்சம் தரமான கதைகள் பத்திப் பேசுவோம்.

                            *                                   *                                *

கனகராஜன் எழுதின ‘பலி’. கல்கி [30-09-2012] சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வானது.  

அஞ்சு பொடிப்பசங்க [ஒருத்தனுக்குப் பதினஞ்சி வயசு] சேர்ந்துட்டு, கைக்காசைச் [ஒருத்தன் தன் முதல் சம்பளத்தைத் தர்றான்] செலவு பண்ணி, இவங்க தலைவன்  ’மஞ்சுநாத்’ ங்கிற சினிமா நடிகனின் பிறந்த நாளுக்குப், அட்டகாசமா ஒரு ’பிளக்ஸ்’ தயார் பண்ணி ஒரு டிரான்ஸ்பார்மருக்குப் பக்கத்தில், அதை, கம்பு நட்டு மாட்டுறாங்க.

அதைச் செயும்போது, பலமா காத்து வீச, இரும்புக் கம்பு டிரன்ஸ்பார்மரில் பட, ஒரு பையன் ஷாக் அடிச்சிச் செத்துப் போறான்.

சினிமா பித்துப் பிடிச்சி அலையுற பசங்களுக்கும், அரசியல்வாதிகளைத் துதிபாடித் திரியற ஏமாந்த சோணகிரிகளுக்கும் பாடம் கற்பிக்கிற கதை இது.

ஒரு தடவை கல்கியில் படிச்சாத்தான் எவ்வளவு நல்லா கதாசிரியர் கதை சொல்லியிருக்கார்னு புரியும்.

கல்கியைக் காசு கொடுத்து வாங்கப் பிரியம் இல்லேன்னா ஓசியில் படியுங்க.

                                  *                                       *                              *

வாரக்கதிரில் [செப்-23]வெளிவந்திருக்கிற பிரபா படைத்த கனவு மெய்ப்படும் கதையும் ரொம்பக் கனமானது.

ஊருக்குப் பொதுவான ஏரி குளங்களை ஆக்கிரமிக்கிற மக்கள், மனம் திருந்தி அதையெல்லாம் ஊருக்கே ஒப்படைக்க, எல்லாருமா சேர்ந்து, ஏரி குளங்களைச் சீரமைச்சி, மழைக் காலத்தில் நீரைச் சேமிக்க வழி காணுவதை யதார்த்தமா சித்திரிச்சிருக்கார் படைப்பாளர். நீங்க தவறாம படிக்கணும்; வாரக் கதிருக்கு ஒரு பாராட்டுக் கடிதமும் எழுதிப் போடணும்.

                                   *                                  *                                    *

வாரமலரில் [செப்-23] பிரசுரமான மணிமேகலை எழுதினதும் உருப்படியான கதைதாங்க.

தள்ளுவண்டிக்காரனிடம் பேரம் பேசுற ஒரு பெண்மணி, அவன் ஒரு கஷ்டத்துக்கு உள்ளான போது தயங்காம உதவி செய்யுறதை மிகைப் படுத்தாம கச்சிதமா படம் பிடிச்சிருக்கார் மணிமேகலை.

                                  *                                       *                                         *

எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கிறவர் கதிர் மாமா.

அன்னிக்கி, பிரபு அவரைச் சந்திக்கப் போனபோது, அவர் முகத்தில் இயல்பான சிரிப்பு இல்ல. ஆனாலும் சிரிச்சுட்டுத்தான் பேசுறார்.

“உடம்பு சரியில்லே”ங்குறார்.

உண்மையில் அவருக்கு மனசுதான் சரியில்ல.

அதுக்குக் காரணம்......................

ரெண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் பெண்டாட்டி, ஒருத்தனைக் கூட்டிட்டு ஓடிட்டதுதான்.

இப்படி வேதனையின் உச்சத்திலும் ஒருத்தர் சிரிச்சிப் பேசுறார்னா, அவர் லட்சத்தில் ஒருத்தரு.

அத்தகைய ஒருத்தரை நமக்கு அறிமுகப் படுத்திய அற்புத எழுத்தாளர் யார் தெரியுங்களா?

 பிரபு. கதை: எங்க அம்மா செத்துப் போச்சு. இதழ்: பாக்யா [செப் 28...]

தலைப்பு கச்சிதமா பொருந்தியிருக்குங்க.

                                      *                                        *                                   *

இந்த நான்கைத் தவிர, ’நல்ல கதை’ப் பட்டியலில் வேறு எதையும் சேர்க்க முடியலேங்கிறதை நினைச்சா மனசு கிடந்து தவியா தவிக்குதுங்க.

புதுப் புருசனோட  வாக்குவாதம் பண்ணும் போது, விட்டுக் கொடுக்க மனசில்லாம சண்டை போட்டுகிட்டுத் தாய் வீட்டுக்கு வந்துடறா ஒரு பொண்ணு.

தாத்தாவும் பாட்டியும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து அன்னியோன்னியமா பழகி, சந்தோசமா இருக்கிறதைப் பார்த்து மனம் திருந்துறா.

இது மாதிரி கதையெல்லாம் எத்தனையோ வந்திருக்கு. ஆனாலும் கதை சொன்ன முறை நல்லாயிருக்கு.

 ‘புது வாழ்வு’ ங்கிற இக்கதை தினத்தந்தி இணைப்பான குடும்ப மலரில் [23-09-2012] வந்தது

பழைய ‘கரு’வுக்குப் புதிய நிகழ்ச்சிகளை இணைச்சிப் புது வடிவம் கொடுத்திருக்கிறார் கதாசிரியர் ஜி.விஜயலட்சுமி.

புதிய மொந்தையில் பழைய கள்ளு. கதை ’தேவலாம்’ ரகம்.

                            *                                         *                              

தரமான கதைகள் 4. சுமார் ரகம் 1. மொத்தம் 5.

17 இல் 5 போனா எத்தினீங்க?

மிச்சமுள்ள அத்தனையும் குப்பைதான்!

”மறுபடியும் குப்பையைக் கிளறாதே”ன்னு என்னை மிரட்டாதீங்க.

உங்களுக்காகத்தான் இந்தக் கதைகளையெல்லாம் கண் விழிச்சிப் படிச்சேன்.

நான் பெற்ற துன்பம் நீங்கள் பெற வேண்டாமா?

இனி, கதைச் சுருக்கம் சொல்லாம, கதையின் ‘உள்ளடக்கம்’ மட்டும் தர்றேன். பிகு பண்ணாம கேட்டுக்கிடுங்க!

குப்பை 4

அவனும் அவளும் ஓடிப்போகத் திட்டம் போடுறாங்க.

”உன் நகைகளைப் பணம் பண்ணிக்கலாம். கொண்டுவா”ன்னு அவன் சொல்ல, அவள் கவரிங் நகைகளைக் கொடுக்க, உண்மை தெரிஞ்சி, அவன் அவளைக் கை கழுவுறான். ”உன்னை ‘டெஸ்ட்’ பண்ணத்தான் இப்படிச் செய்தேன்” ன்னு சொல்லிச் சிரிக்கிறாள் அவள்!

இது பாக்யா [செப் 28-]கதை. படைப்பாளர்: ஜி.சுந்தரராசன்.

இப்படியெல்லாம் நடக்குதான்னு நான் சிரிக்கிறேன். நீங்களும் சிரிங்க.

ஹா........................ஹா.............................ஹா......................................

 *                                      *                                     *

குப்பை 5

ஒரு கம்பெனியில், சமமான தகுதியுள்ள ரெண்டு பேர்ல ஒருத்தரை மேனேஜரா தேர்ந்தெடுக்கணும்.

அதில் வேலை செய்யும் அலுவலர்களையே, அவரவருக்குப் பிடித்தவர் பேரை எழுதித் தரச் சொல்லி, மேனேஜரைத் தேர்ந்தெடுத்தாங்களாம்.

இந்தக் கதையை பாக்யாவில் எழுதின பி.சந்திரா,  நம் காதில் பூ மட்டும் சுத்தலீங்க; தலையில் மிளகாயே அரைச்சுடறார்!

சந்திராவுக்கு நம் நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்!

                                    *                                   *                                         *

குப்பை 6

’மண[ன] வாசம்’. மன்னன்காடு எஸ்.முத்துக்கண்ணு ங்கிறவர் , ராணியில் எழுதினது.

நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை, ஒரு பொண்ணு கட்டிக்க மாட்டேன்னு சொல்லுது.

காரணம் என்ன தெரியுங்களா?

‘நமக்குக் கல்யாணம் ஆனதும் தனிக் குடித்தனம் போலாம்”னு அந்தப் பையன் பொண்ணுகிட்ட சொல்லிட்டானாம்.

பொண்ணுங்க இப்படிச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஒரு பையன் சொன்னான்னு கதாசிரியர் சொல்றது புதுமையிலும் புதுமை போங்க!

                                *                                *                                          *

ஐயோடா! இதுக்கு மேல என்னால குப்பைகளைக் கிளற முடியலீங்க.

 இராஜேஷ்ஜோதி, கோவில்பட்டி எஸ்.தங்கராஜ் ஆகியோர்  பாக்யாவில் கொட்டிய குப்பைகளையும், தம்பி. பன்னீர்செல்வம், மீனாசுந்தர் ஆகியோர் தேவி [26-09-2012] இதழில் கொட்டியதையும், கல்கி [30-09-2012] யில், ஆனந்தகுமார் விரும்பிச் சமர்ப்பித்த குப்பையையும் அருள்கூர்ந்து நீங்களே கிளறிப் பார்த்துடுங்க.

தங்கள் வருகைக்கும் கட்டிக் காத்த பொறுமைக்கும் கோடி நன்றி!!!


*****************************************************************************************************************    

நாளை [28-09-2012] வெளிவரும் பதிவு..........  

‘குமுதமே! திருந்து.....திருத்து.....!’

****************************************************************************************************************


       














6 கருத்துகள்:

  1. நகைச்சவை கலந்த எழுத்துநடை அருமை...தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. //நகைச்சுவை கலந்த எழுத்து நடை அருமை//

    தொடர்ந்து என் பதிவுகளைப் பாராட்டி, என்னை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டும் தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. வாக்களித்ததற்கும் நன்றி மைதீன்.

    மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. புத்தகமே வாங்க வேண்டாம் போலிருக்கே...!

    உங்களின் கருத்துக்களுக்காக தொடர்வேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. தங்களின் மனம் திறந்த பாராட்டை நான் என்றும் மறவேன் தனபாலன்.

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு