வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குமுதமே! திருந்து.....திருத்து!!

குமுதத்தை அதிகபட்சம் தாக்கி எழுதியிருக்கிறேன். அதே அளவுக்குக் கண்டனக் கணைகளையும் எதிர்பார்க்கிறேன்!

இந்த வாரக் குமுதத்தின் [03-10-2012] நான்கு ஒ.ப.கதைகள் இங்கு ’அறுவை’ செய்யப்படுகின்றன.

விற்பனையில் நம்பர் 1தமிழ் வார இதழ் ஆசிரியருக்கு, ’நம்பர் 1 கதை இலக்கிய விமர்சகன்’ அறுவை மருத்துவன் வரையும் மனம் திறந்த மடல்.

குமுதம் ஆசிரியரே,

”விமர்சகன்’னு சொல்லிக்கோ. வேண்டாங்கல. ‘நம்பர் 1’ போட்டுக்கிறியே, அதுக்கு என்ன ஆதாரம்?”னு  கேட்குறீங்களா?

நானும் அதையேதாங்க கேட்குறேன்.

நீங்க ’நம்பர் 1’ போட்டுக்கிறீங்களே, அதுக்குப் புள்ளிவிவரத்தோட [பிரதிகள் விற்பனை] ஆதாரம் தந்தீங்களா?

நீங்க போட்டியாளர்கள் மூனு பேருமே [குமுதம், விகடன், குங்குமம்] ’நான்தான்  ஃபஸ்ட்...ஃபஸ்ட்...’டுன்னு பீத்திக்கிறீங்களே, உண்மையில் யாருங்க ஃபஸ்ட்?

இப்படி ஆளாலுக்கு நம்பர் 1 போட்டுக்கலாம். வளர்ற பையன் நான் போட்டுக்கக் கூடாதுங்களா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க எடிட்டர்.

‘குமுதமே திருந்து’ன்னு தலைப்பு வெச்சிருக்கேன். ‘நாம என்ன தப்புப் பண்ணினோம்?’னு நீங்க யோசிப்பது புரியுது. அதைப் பத்திச் சொல்லுறதுக்கு முந்தி உங்ககிட்டே சில கேள்விகளை முன் வைக்கிறேன். இந்தக் கத்துக் குட்டியை மதிச்சி, என் கேள்விகளுக்குப் பதில் தேடுங்க.

இதழ் தவறாம இந்த ஒ.ப.க. [ஒரு பக்கக் கச்சடா கதைகள்?] கிறுக்கல்களை வெளியிடுறீங்களே, அது எதுக்குங்க?

வாசகன் மனசில் உள்ள அழுக்குகளை நீக்கி, நல்ல எண்ணங்களை வளர்க்கவா?

குடும்ப உறுப்பினர்களிடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளைப் போக்கி, சுமுக உறவை மேம்படுத்தவா?

சமுதாயப் பிரச்சினைகளைப் படம் பிடிச்சிக் காட்டி, அதுக்கெல்லாம் ஒரு தீர்வு கண்டறியவா?

வெறும் பொழுது போக்குக்காகவா?

இப்படி இன்னும் எத்தனையோ காரணங்களை  அடுக்கலாம்.

இதுகள்ல எந்த ஒரு காரணத்துக்காக கதைகள் வெளியிடுறீங்கன்னு தெரிஞ்சுக்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேங்க.

இந்த வாரக் குமுதத்தில் [03-10-2012] நாலு கதைகள் வெளியிட்டிருக்கீங்க.

ஐரேனிபுரம் பால்ராசா அவுங்க ‘மாற்றம்’ னு அரியதொரு படைப்பைத் தந்திருக்காங்க.

’பனை ஓலையில் பெட்டி செய்யுற தொழில் எல்லாம் இன்னிக்கி இல்லாம போயிடிச்சி. அதைச் செஞ்சவங்க எல்லாம் வேறே தொழில் தேடிட்டாங்க.
அதுமாதிரி, உயிருக்கு ஆபத்தான பட்டாசுத் தொழிலை நிறுத்திட்டு, அதைச் செய்யுறவங்க வேறே தொழில் செய்யலாம்’கிறதுதான், இந்தக் கதையோட ‘உள்ளடக்கம்’.

குமுதம் ஆசிரியரே,

இதைப் படிச்ச மறுகணமே, பட்டாசுத் தொழில் மட்டுமல்ல, வாகனம் ஓட்டுறது; கட்டடம் கட்டுறது; கடலில் முழுகி மீன் பிடிக்கிறதுன்னு எல்லாத் தொழிலிலும் ஆபத்து இருக்கு. உயிர்ப்பலி நேராம தொழில் செய்யுறதுக்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுட்டு,ஆபத்தில்லாத தொழிலைத் தேடிக்கணும்னு சொல்றது அடிமுட்டாள்தனம்னு எங்களுக்கெல்லாம் தோணுதே.

கதை எழுதின பால்ராசய்யாவுக்கும் உங்களுக்கும் தோணலையே, அது ஏங்க?

அடிமுட்டாள்தனம்னு நான் சொன்னது பொதுவாத்தாங்க. நீங்களும் ஐரேனிபுரம் அய்யாவும் கோவிச்சுக்கிடாதீங்க. பிளீஸ்.....

மேலே சொன்ன படைப்புக்கான காரணங்களில் எது இந்தக் கதைக்குப் பொருந்தி வருது?

எதுவும் இல்லீங்களே!

இதை ஒரு நல்ல பொழுது போக்குக் கதைன்னுகூடச் சொல்ல முடியலையே.

நல்ல பொழுது போக்குக் கதைன்னா எதுன்னு கேட்குறீங்களா?

உங்களுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் உங்க குமுதத்தில் இருந்தே எடுத்துக்காட்டுத் தர்றேன். [’பல்லி விழுந்த பலன்’ ஆசிரியர்: ஹேமா. குமுதம் ப் 13-03-75]


வெளியூர்ப் பயணம் காரணமா, பெண்டாட்டியைப் பல நாள் பிரிஞ்சிருந்த இளைஞன் வீடு திரும்புறான்.

ஒட்டு மொத்த குடும்பமும் கலந்துரையாடிட்டிருக்கு.

அப்போ, ஒரு பல்லி, வாலிபனோட இடது தோள்பட்டையில் விழுந்துது.

கெட்ட பலன் ஏதும் இருக்குமோன்னு, பஞ்சாங்கம் எடுத்து,’பல்லி விழும் பலன்’ பார்க்குறாங்க. வாலிபனோட பெண்டாட்டிக்குக் காட்டாம எல்லாரும் அவளைக் கிண்டல் பண்ணிச் சிரிக்கிறாங்க.

அன்னிக்கி ராத்திரி, புருசனோட சந்தோசமா இருக்கும் போது, அவன் சொல்றான்: ‘இடது தோள் மேல பல்லி விழுந்தா அதுக்கான பலன் ‘ஸ்திரீ சம்போகம்’. அதாவது, பெண்டாட்டியோட உடலுறவு”. அப்பிடீன்னு சொல்லிட்டு அவன் அவளைக் கட்டித் தழுவுறானாம்.

இதைப் படிச்சதும் கிழடுகிண்டுகள் மனசில்கூட இனம் புரியாத ஒரு சந்தோசம் பரவுதில்லியா?

இம்மாதிரி ஒரு சந்தோசத்தைத் தர்றதுதான் உண்மையான பொழுது போக்குக் கதைங்க.

எடிட்டர் அவர்களே, இது உங்க...சாரி, நம்ம குமுதத்தில் ரொம்ப வருசங்களுக்கு முந்தி ’ஹேமா’ன்னு ஒருத்தர் எழுதினதுதானுங்க. காலரைத் தூக்கி விட்டுக்குங்க!

                            *                                            *                                            *

ஒரு முக்கிய அறிவிப்பு:     

குமுதத்தில்‘அவுட் ஸோர்ஸிங்னு கதை எழுதியிருக்கிற எஸ். ராமனுக்கும், குமுதம் ஆசிரியருக்கும் இதைத் [அவுட் ஸோர்ஸிங்] தமிழ்ப்படுத்தத் தெரியலையாம்.

பாவங்க இவங்க. உடனே, இதுக்கான தமிழாக்கத்தை அனுப்பி வைங்க. நீங்க நல்லா இருப்பீங்க.

தலைப்பைத்தான் தமிழில் போடலே. கதையாவது புரியுற மாதிரி இருக்கான்னா, அதுவும் இல்லீங்க.

ஒரு ஐ.டி. கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட் [இதையெல்லாம் தமிழ் படுத்தினா தமிழ் வளர்ந்துடுமேன்னு கதாசிரியர் ராமன் ரொம்ப எச்சரிக்கையா இருக்காருங்க. எடிட்டருக்கு அட்டைப்படக் கவர்ச்சி நடிகையைத் தேர்ந்தெடுக்கவே நேரமில்ல; இதுக்கெல்லாம் அவரால் நேரம் ஒதுக்க முடியாதுங்க. தயவு செஞ்சி கோபப்படாதீங்க].

ஐ. டி.தொழிலகத்தின் துணைத் தலைவர் ராகுல், எல்லா வேலைகளையும் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைச்சுட்டு, [இதைத்தான் ’அவுட் ஸோர்ஸிங்’னு ராமன் சொல்றாரு] நோகாம நோம்பி கொண்டாடுறவரு.

அப்பா அம்மாவைக்கூட முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டாராம். இதுவும் ஒரு வகையில் ‘அவுட் சோர்ஸிங்தான்’னு தன் பெண்டாட்டிகிட்டே பீத்திக்கிறாரு.

இந்த அவுட் சோர்ஸிங் என்கிற கருமாந்தரம் உங்களுக்குப் புரிஞ்சுதா? மரமண்டை எனக்கு ஒரு எளவும் புரியலீங்க.

அவரோட வூட்டுக்காரி, “ஏன்...நாம் குழந்தை பெற்றுக் கொள்வதற்குக்கூட, ‘அவுட் ஸோர்ஸிங் செய்யலாமே?”ன்னு கேட்குறாளாம்.

குமுதத்தில் இந்த மாதிரி கதைகளைப் படிக்காம தப்பிக்க ஏதாவது ‘அவுட் ஸோர்ஸிங்’ இருந்து சொன்னீங்கன்னா, வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன்.

                                  *                                             *                                    *

அடுத்து நம்மை வரவேற்கிற ஒ.ப.க. தூத்துக்குடி வி. சகிதாமுருகன் படைச்ச ‘பாரம்’

இதைப் படிச்சதும் ஏற்கனவே இருந்த தலைபாரம் அதிகமாயிடிச்சுங்க.

ஏற்கனவே படிச்ச கதையை மறுபடியும் மறுபடியும் வெவ்வேற வடிவத்தில் படிச்சா தலைவலி வரத்தாங்க செய்யும்.

குமுதம் எடிட்டர் கிட்டே சொன்னா, அடுத்த இதழோட ஒரு தலைவலித் தைலம் இலவச இணைப்பா அனுப்பிடுவாருங்க. மற்றபடி, மறந்தும் கதைகளைத் திருத்தி வெளியிட மாட்டார்!

மறக்காம ஒரு e MAIL  தட்டிவிடுங்க.

”அப்படியென்ன அறுப்புக் கதை?”ன்னு கேட்குறீங்களா?

சொல்றேன்.

மகனுக்குக் கல்யாணம் ஆகி, மருமக வலது காலை எடுத்து வெச்சி வீட்டுக்குள்ள நுழைஞ்சாளோ இல்லியோ, அவகிட்ட சம்பளக் கவரைக் கொடுக்கச் சொல்லித் தன் மகனுக்கு உத்தரவு போடுறா ஒரு அம்மாக்காரி.

அவ மகள் கேட்குறா:”ஏம்மா இப்படிச் சொன்னே?”

”வர்ற வருமானத்தில் குடும்பச் செலவைச் சரிக்கட்ட முடியாம நான் படாத பாடு படுறேன். இனி அவள் படட்டும்”

அம்மாக்காரி இப்படிச் சொன்னதும், “நாம போற வீட்டில் சம்பளக் கவரைத் தொடவே கூடாது”ன்னு மகள் சொல்லுறா.

ஒரு குடும்பம் உருப்படறதுக்கு எத்தகைய ஓர் உன்னதமான வழியை சகிதாமுருகன் காட்டியிருக்கார் பார்த்தீங்களா?

நெஞ்சு சிலிர்க்குதுதானே!?

இவருக்கும் இவர் கதையைப் பிரசுரிச்ச குமுதம் ஆசிரியருக்கும் நன்றி சொல்லலேன்னா கெட்ட சாபத்துக்கு ஆளாவீங்க. ஜாக்கிறதை!

                                      *                                      *                                      *

இன்னும் மிச்சமிருக்கிறது, கோவை நா.கி பிரசாத் எழுதின ‘வாய்மை’ கதை.

ஒரு பேச்சுப் போட்டியில் பேச, நெட்டில் கருத்துகள் திரட்டித் தரும்படி, ஒரு பாப்பா, தன் அப்பாவைக் கேட்குது.

அதைக் காது கொடுத்துக் கேட்ட அங்கே வாடகைக்குக் குடியிருக்கும் பெரியவர், “போட்டியில் கலந்துக்கப் போறியா பாப்பா?” ன்னு கேட்குறார்.

அது இல்லேங்குது.

“நீ பொய் சொல்லுறே. என் பொண்ணு சுவேதா அந்தக் குறிப்பைக் கேட்கும்னு பொறாமைப் படுறியா?”ன்னு சாடுறார்.

“எனக்கு நாக்கில் புண்ணு.. உங்க சுவேதாவுக்குக் கொடுக்கத்தான் என் அப்பாகிட்டே குறிப்பு வாங்கினேன்”ன்னு பாப்பா சொல்லுதாம்.

கதைக்கு இப்படி எதிர்பாராத நெஞ்சைத் தொடுற முடிவைக் கொடுத்து எழுத்தாளர் நம்மை ஏமாத்துறார்.

கொஞ்சம் யோச்சீங்கண்னா இதுல இருக்கிற ஓட்டைகள் புலப்படும்.

ஒரு பொண்ணு தனக்குத் தயார் பண்ணுற குறிப்பை இன்னொரு பொண்ணுக்கு எப்படிக் கொடுக்கும்?

அதுக்குப் பொறாமை காரணம்னு சுவேதா அப்பா திட்டுறது அநாகரிகம் இல்லையா?

இப்படியொரு சொத்தைக் கதையைக் குமுதம் ஆசிரியர் எப்படி அங்கீகரிச்சார்?

அடப் போங்கய்யா, இந்தக் கதையுலகத்தில் என்ன நடக்குதுன்னே புரியல.

                                  *                                     *                                      *

இதுவரைக்கும் ஓட்டை உடைசல் கதைகளைக் கேட்டு ரொம்பவே மனசு உடைஞ்சி போயிருப்பீங்க.

படிச்சதும் மனசைக் கனக்கச் செய்யுற கனமான ஒரு கதையைச் சொல்லி முடிச்சுடறேங்க.

இதுவும் குமுதத்தில் வந்ததுதாங்க. ஆனா, இது ஒரு அமுதக் கதைங்க.

கதைப் பேரு: ‘ஒரு பானை காலியாகிறது’. எழுதினவர்: எஸ்.பாலகிருஷ்ணன். [குமுதம் 11.10.84]

காலையில் இருந்து அந்தக் குடிசையில் அடுப்பு எரியல.

சாயங்காலமா, அந்தக் கூலிக்காரன் கொண்டு வந்த கொஞ்சம் அரிசியைச் சட்டியில் போட்டு அடுப்பை எரிய விடுறா அவன் பெண்டாட்டி.

சோறு தயாரானதும், பசியால் துடிச்சிட்டிருந்த புள்ளைகளை உட்கார வெச்சு, சோறூட்டப் போறா அந்தத் தாயி.

அந்த நேரம் பார்த்து. ஒரு அரசியல் கட்சித் தலைவர் அங்கே வர்றார்.

அவருக்கு ஒரு ஏழை வீட்டில் சாப்பிடணுமாம். அதைப் படம் எடுத்துப் பத்திரிகைகளில் போடணுமாம்.

குடிசையில் நுழைகிறார்.

பானையைக் காலியாக்குகிறார்கள் அவரும் உடன் வந்தவர்களும்!

அவர்கள் போகிறார்கள்.

கூலித் தொழிலாளி சட்டியைப் பார்க்கிறான்.

‘ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளுடன் பல்லிளித்தது மண்பாத்திரம்” -இப்படி முடியுதுங்க கதை.

இது கதை! இது படைப்பு!!

கதை முடிவு எப்படி ‘சக்’னு நெஞ்சில் ஒட்டிடிச்சி பார்த்தீங்களா?

இம்மாதிரிக் கதைகள் இப்போதெல்லாம் குமுதத்தில் வர்றதில்லேங்குற எரிச்சலில்தான்.................

‘குமுதமே! திருந்து.....திருத்து!!’ன்னு பதிவுக்குத் தலைப்புக் கொடுத்தேன்.

மற்றபடி, குமுதத்தின் மீது எனக்கு எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்ல.

நம்புங்கள் குமுதம் ஆசிரியரே.

********************************************************************************************************************


























11 கருத்துகள்:

  1. நல்ல அலசல்... நன்றி...

    குமுதத்தின் தரம் எப்போதே குறைந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  2. #இப்படி ஆளாலுக்கு நம்பர் 1 போட்டுக்கலாம். வளர்ற பையன் நான் போட்டுக்கப் கூடாதுங்களா?#
    ஹா ஹா ஹா....கண்டிப்பா போடலாம் ...யார் கேட்பது?

    பதிலளிநீக்கு
  3. பரந்த மனதுடன் பாராட்டியிருக்கிறீர்கள்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி மைதீன்.

    மனமுவந்த நன்றி.

    வாக்களித்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாக்களித்த நண்பர் தனபாலனுக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. குமுதம் படிக்கறதை நிறுத்தி கன காலம் ஆச்சுங்க..! பதினஞ்சு மூணுல கிடைச்சாக் கூட யோசிச்சுதான் படிக்கறேன்!

    பதிலளிநீக்கு
  7. //குமுதம் படிக்கிறதை நிறுத்தி.....//

    தங்கள் வருகைக்கும் மனம் திறந்து சொன்ன கருத்துக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. ச்சீய் கதையை மட்டும் விமர்சிக்காமல் இருக்கிங்களே அது ஏனுங்க!
    எங்களைப்போலவே உங்களுக்கும் அந்த ஒரு பக்ககதை பிடிச்சிருக்கு போல இல்லைன்னா அதை படிக்கமுடியாத அளவுக்கு உங்ககிட்டே முகம் பார்க்குற கண்ணாடி இல்லை போல
    அது சரி இருந்திருந்தாத்தான் நீங்களே உங்கமுகத்தை கண்ணாடியிலே பார்த்து திர்ந்தீர்ப்பீங்க்ளாச்சே அடுத்த்வனை திருந்து , திருத்துன்னு சொல்லறதுக்கு முன்னாடியே போய் உங்க முகத்தை முகம்பார்க்கும் கண்ணாடியிலே பார்த்துக்குங்க ஹா ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் சுவையாகச் கொடுத்த சாட்டையடிக்கும் நன்றி சுந்தர்.

    வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கு.நீங்க சொன்னது போல,அதில் என் முகம் பார்க்க நான் விரும்புவதே இல்லை. அத்தனை அழகா இருப்பேனாக்கும்!!!

    அறுவை மருத்துவன் படம்கூட என் முகத்தை வெச்சி வரைஞ்சதுதான்!!!

    ’ச்சீய்...’ கதைகளை ஏனோ படிக்கவே தோணல.தொடர்ந்து விமர்சனம் எழுதினா கண்டிப்பா அதைப் பத்தியும் எழுதுறேன்.

    மாறுபட்ட பின்னூட்டம் உங்களுடையது. உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்குங்க.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு