திங்கள், 17 செப்டம்பர், 2012

கடுப்பேற்றும் ’கல்கி’ கதைகளும் பாராட்டுக்குரிய 'பாக்யா'வும்!

இந்த இரண்டாவது பதிவும்  சற்றே நீண்டுவிட்டது! அடுத்து வருபவை உங்களைப் பயமுறுத்தா. துணிந்து படியுங்கள்.


கடுப்பேற்றும் ‘கல்கி’ கதைகளும் பாராட்டுக்குரிய `பாக்யா’வும்!

கதை எழுதுவது ஒரு கலை.

ஒரே ‘தம்’மில் வாசகர் கதையைப் படித்து முடிக்க வேண்டுமென்றால், கதையில் புதிய புதிய ‘உத்தி’ [techniques]களும் கலையம்சம் சார்ந்த சரளமான ’நடை’ [style]யும் கையாளப்பட்டிருக்க வேண்டும்.

அழகான அந்தப் பெண்ணை அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்’ என்று எழுதினால், அது கட்டுரை நடை.

அதையே கொஞ்சம் மெருகூட்டி, ‘அந்த அழகு தேவதையை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்’ என்றோ, ‘பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான்’ என்றோ எழுதினால் அது கவர்ச்சியான ’கதை நடை’ ஆகிறது.

‘எனக்குச் சதைப் பற்றில்லாத ஒட்டி உலர்ந்த உடம்பு’ என்று எழுதும்போது, அது உடம்பு பற்றிய வெறும் விவரணம் மட்டுமே.

அதையே, ‘நான் வீதிக்கு வந்தால் வானத்தில் கழுகுகள் வட்டமிடத் தொடங்கிவிடும்’ என்று எழுதினால், வாசகரை இன்புறுத்தும் வல்லமை பெற்றதாக அத்தொடர் மாறிவிடுகிறது.

நடை மட்டுமல்லாமல்.....................

‘அப்பாவித் தனமான உன் அழகு முகம். உன் விழிகளில்தான் எத்தனை குளிர்ச்சி! மருட்சி!! நீண்ட கூந்தல். மணக்கும் சந்தன மேனி. காதோரப் பூனை முடி. கழுத்தோரச் செம்பட்டை கேசம்.........!’

இது போன்ற குட்டிக் குட்டி வருணைகளும் ஒரு சிறுகதையைச் சிறந்த படைப்பாக்கும்.

தொய்வில்லாமல் ஒரு கதையைக் கொண்டு செல்ல இவை மட்டும் போதா. புதிய புதிய ‘உத்தி’களைக் கையாளும் திறனும் ஒரு கதாசிரியனுக்குத் தேவை.

நீங்கள் பலவீனமான மனசுக்காரரா? இந்தக் கதையைப் படிக்காதீர்கள்!’

‘கவிதாவின் கதை எப்படி முடியுமோ தெரியாது. சுபமாகவே தொடங்குவோம்’

இவ்வாறெல்லாம் , வாசகரைப் படிக்கத் தூண்டும் வகையில், கதையைத் தொடங்குவது நம் எழுத்தாளர்களுக்குக் கைவந்த கலை.

கதையை முடிக்கும் போதும் இத்தகைய உத்திகளைக் கையாள்வது அவர்களின் வழக்கம்தான்.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும்...............................

இளம் மனைவியுடன் தனிமையில் நடந்து செல்கிறான் ஓர் இளைஞன்.

எதிர்ப்பட்ட சில ரவுடிகள் அவனை அடித்து வீழ்த்துகிறார்கள்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த வாலிபன், அவர்கள் தன் மனைவியைக் கற்பழிக்கும் முயற்சியில் முனைப்புடன் இருப்பதைக் காண்கிறான். எழுந்து நிற்க முடியாத,  கயவர்களுடன் போராட முடியாத நிலையில் தன்னுடையவள் மானபங்கப் படுத்தப்படாமல் தடுப்பது எப்படி என்று துடிப்புடன் யோசிக்கிறான்.

அருகில் கிடந்த, கைக்கு அடக்கமான ஒரு கல்லை எடுத்துக் குறி பார்த்துத் தன்  முழு பலத்தையும் பயன்படுத்தி வீசுகிறான்.

அவன் குறி தப்பவில்லை.

அவன் எதிர்பார்த்தது போலவே, அது அவன் மனைவியின் நெற்றிப் பொட்டைத் தாக்க, அவள் சுருண்டு விழுந்து செத்துப் போகிறாள்.


வாலிபன், வாசகரைப் பார்த்து இப்படிக் கேட்பதாகக் கதை முடிகிறது...............

“என்னவள் மானபங்கப்படுத்தப் படுவதைத் தடுக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

அடடா! எத்தனை அருமையான உத்தியைக் கதாசிரியர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறதுதானே?!

அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. [பல வருடங்களுக்கு முன்பு ‘குமுதம்’ இதழில் வெளியான இக்கதையின் ஆசிரியர் பெயர் மறந்துவிட்டது]

இவ்வாறெல்லாம் கதையின் வடிவத்தில் கருத்துச் செலுத்துகிற கதாசிரியன், தான் கதை படைப்பதன் நோக்கம் என்ன என்பதிலும் தெளிந்த அறிவுடையவனாக இருத்தல் அவசியம்.

வாசகரைச் சிரிக்க வைப்பதா? சிந்திக்கச் செய்வதா? இன்புறுத்துவதா? துன்புறுத்துவதா? அனுதாபப்பட வைப்பதா? ஆர்ப்பரித்துப் பொங்கி எழச் செய்வதா? இவை எதுவுமே இல்லை என்றால், வெறும் பொழுது போக்கிற்காகவா?

எதற்காக எழுதுகிறோம் என்பதை எழுத்தாளான் நன்கு சிந்தித்துத் திட்டமிடுதல் இன்றியமையாத் தேவை.

திட்டமிடல் இல்லையெனின், அவன் உருவாக்கும் படைப்பு ஒரு ’வெற்று’ப் படைப்பாக [எதற்கும் பயனற்றதாக] அமைந்துவிடும்.

இன்றைய வார இதழ்களில் இத்தகைய ‘வெற்று’ப் படைப்புகளைத்தான் பெரும் எண்ணிக்கையில் காண முடிகிறது.

இவ்வாறான சிந்தனைகளுடன், இவ்வாரக் ’கல்கி’ [23-09-2012] யிலும் ‘பாக்யா’ [செப் 21-27] இதழிலும் வெளியான சிறுகதைகளை ஆராய்வோம்.

மொத்தம் மூனு சிறுகதைகள். ‘முடிவே முதலாக.....வாசகர் கதைப் போட்டி-5ல் பிரசுரத்துக்குத் தேர்வான கதைன்னு ரெண்டு கதைகளைப் போட்டிருக்காங்க. படிச்சேன்.....படிச்சேன்.... பத்து தடவைக்கு மேல் படிச்சேன். ஒன்னுமே புரியல. அப்போ சுத்த ஆரம்பிச்சது என் தலை. இன்னும் சுத்திட்டே இருக்கு.

அதனால, ‘சினேகிதியே.....’ங்கிற  ஒரு சிறுகதையைப் பத்தி மட்டும் இப்போ சொல்லப் போறேன்..................... 

’சித்ரா’ன்னு ஒரு குடும்பத் தலைவி. அவங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரிஞ்ச ஒரு பொண்ணு. [என்னய்யா வாகனம்னு கேட்டு என்னை மூடு அவுட் ஆக்கிடாதீங்க. அதைப் பத்தி கதாசிரியர் ,ஹேமலதா’ ஒன்னுமே சொல்லல]

ஒரு நாள் திடீர்னு, பள்ளித் தோழி பத்மா நினைவுக்கு வர்றா. அப்போதைய அனுபவங்கள் சித்ரா மனசில் குறும்படமா ஓடுது. அதன் சுருக்கத்தைச் சொல்லித்தான் கதாசிரியர் கதையைத் தொடங்குறார்.

உடனே பத்மாவைப் பார்க்கணுங்கிற ஆசை சித்ரா மனசில் விஸ்வரூபம் எடுக்குது. முப்பது வருடம் போல ஏன் அந்த ஆசை தலை தூக்கலேன்னு கேள்வி கேட்டு மடக்க நினைக்காதீங்க . பாவம் கதாசிரியை ஹேமலதா.

கூகுளில் தேடினாங்க. பத்மா சுப்ரமணியம்தான் கிடைச்சாஙகளாம். நம்ம பத்மா கிடைக்கல.

மகளின் உதவியோட ஃபேஸ்புக்கில் வலை வீசினதில் கொஞ்சம் பள்ளிப் பருவத் தோழிகள் சிக்கினாங்க. அவங்கள்ல ‘ரம்யா’வும் ஒருத்தர். ஆனா, அந்த ரம்யா தனக்கு ரெருங்கிய தோழி இல்லேன்னு நம்ம சித்ராவே சொல்றாங்க.

சென்னையிலேயே இருக்கிற ரம்யாவை வீடு தேடிப் போய் சந்திக்கிறாங்க சித்ரா.

மாணவிப் பருவத்தில் ரம்யா நகைச்சுவையா பேசுவாங்களாம். அந்தச் சின்ன வயசில் ஒரு தடவை அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப, ரெண்டு பேரும் கமல் பத்தியும் கார்த்திக் பத்தியும் கதைச்சாங்களாம்.

ஆனா, அந்த ரம்யா இன்னிக்கித் தன் மகன் கிருஷ்ணா பத்தியே பேசிப் பேசி அறுத்துத் தள்ள, நம்ம சித்ராவுக்குக் கொட்டாவியே வந்துடிச்சாம்!

அறுபட்டது போதுமடா சாமின்னு மகளைக் கூட்டிகிட்டு வீடு திரும்பிடறாங்க சித்ரா.

ரம்யாவைச் சந்தித்த பிறகு, சித்ராவைப் பத்தி, ”எதிலோ ஏமாந்தது போல் தோன்றியபடி இருந்தது இவளுக்கு” என்கிறார் கதாசிரியர்.

இதுதாங்க கதை.

எனக்குக் கதை நல்லாவே புரிஞ்சுது. கடைசியா கதாசிரியர் சொல்றது மட்டும் சுத்தமா புரியல.

ரம்யா இந்த அம்மாவுக்கு நெருங்கிய தோழி அல்ல. அப்படியிருக்க, எதை எதிர்பார்த்து சித்ரா அவங்களைச் சந்திக்கப் போனாங்களாம்?

ரம்யாவின் நகைச் சுவையையா? ஸ்வர்ணலதா போல அவங்க பாட்டுப் பாடுவதை எதிர்பார்த்தா?

அது நிஜம்னா, வெளிப்படையா, “ஒரு பாட்டுப் பாடு. கொஞ்சம் ஜோக்கெல்லாம் சொல்லு”ன்னு கேட்க வேண்டியதுதானே?

அதுக்கு எது தடையா இருந்தது?

விளக்கம் தரத் தவறிவிட்டார் ஹேமலதா. 

கதாசிரியை அவர்களே,

இப்படி ஒரு கோரிக்கை வைத்து, அதை ரம்யா நிறைவேற்றியிருந்தால் இந்தக் கதைக்கே அவசியமில்லாமல் போயிருக்கும் என்று பயந்துவிட்டீர்கள். சரிதானே?

போகட்டும்.

‘ஆண்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக அதிக சலனமற்றுச் செல்ல, பெண்களுடையது திருமணத்துக்குப் பின் காட்டாறு போலப் பாதை திரும்புவதாக அவளுக்குப் பட்டது’ன்னு ஒரு கட்டத்தில் குறிப்பிடுறீங்களே அது மட்டும் என் உள்ளத்தைத் தொட்டது.

மற்றபடி, குறிப்பிட்டுச் சொல்லும்படியா, கதைபடிப்பவரைக் கட்டி இழுத்துச் செல்லும் நடை, உத்தி, பாத்திரப் படைப்புன்னு எதுவும் சிறப்பா அமையல..

கதை முடிவில்,”வாம்மா, பத்மா ஆண்ட்டியைத் தேடலாம்” என்று மகள் சொல்ல.................

‘பத்மா கிடைத்தாலும் பதினொரு வயதில் தொலைத்த பத்மா கிடைக்க மாட்டாள்’ என்று சித்ராவைச் சொல்ல வெச்சிருக்கீங்க.

ஒரு பதினொரு வயசுக்காரர் முப்பது வருசங்களுக்கு அப்புறம் மாறிப் போவது இயற்கைதானே? சிறு வயசுக் குணாதிசயங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அவ்வளவே. இது நீங்க சொல்லித்தான் தெரியணுமா?

அடுத்து வெளிவரவிருக்கும் உங்கள் சிறுகதை முழுமையான பாராட்டுக்குரியதாக அமைய என் மனப்பூர்வ வாழ்த்துகள்.


                       *                                   *                                         *


ஹேமலதாவை வாழ்த்திய கையோடு,  ‘பாக்யா’ இதழில் வெளியான சி.கதைகள் பற்றிய என் சீரிய [???] திறனாய்வையும் உங்கள் முன் சமர்ப்பித்து விடுகிறேன். இனி அடுத்து வரும் இடுகைகள் சுருக்கமாக இருக்கும். நம்புங்கள்.

அந்தரத்தில் சாகசம் புரிந்துவிட்டுப் பிச்சை எடுக்கும் சிறுமியையும், ஷோபாவில் ஒய்யாரமாகப் படுத்து, பாப்கார்ன் சாப்பிட்டு டி,வி.பார்க்கும் தன் ஏழு வயது மகளையும் ஒப்பிட்டு வருந்தும் ஒரு நல்ல மனதுக்காரரின் மன ஒட்டத்தைக் காட்சிப் படுத்தும் உருக்கமான ஒரு சிறுகதை ‘நிஜமாத்தான் சொல்றீங்களா?’. எழுதியவர் இராஜேஷ்ஜோதி.

ஒரு குழந்தைகளுக்கான பள்ளியில்.................

“என் குழந்தைக்கு டென்னிஸ் கோச் தருவீங்களா?” என்று கேட்கும் நவ நாகரிகத் தாய்!

”பொறந்ததிலிருந்து உங்க குழந்தையின் கையைப் பார்த்திருக்கீங்களா?டென்னிஸ் விளையாடுற வயசா இது?” என்று சூடு கொடுக்கும் நிர்வாகம். இப்படியொரு உரையாடலை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் ‘டாப்’ கிளாஸ் கதை ‘பள்ளித் துவக்கம்’.  படைத்தவர் ‘எல்கே’

பலூனை ஊதிப் பெரிதாக்கி, ”இந்தா இதை வச்சிக்கோ. என் மூச்சிக் காத்து எப்பவும் உன்னிடமே இருக்கட்டும்” என்று சொல்லும் கவுசல்யா.

தான் கொஞ்சம் ஊதி, கவுசல்யாவையும் ஊதச் சொல்லி,”ரெண்டு பேர் மூச்சுக் காத்தும் இதில் இருக்கு. உன்னிடமே இருக்கட்டும்” என்று அவளிடம் ஒரு பலூனை நீட்டும் காவியா.

இது ஒரு கடற்கரைக் காட்சி!

படித்தவுடன் நெஞ்சு சிலிர்க்கிறதுதானே!? இது ஒரு சூப்பர் சிறுகதை! கதைத் தலைப்பு ‘பலூன்’. வடித்துக் கொடுத்தவர் ‘குட்டி’.

மனைவி பிறந்த வீடு போன நேரத்தில் வேலைக்காரியை வீட்டுக்காரன் அனுபவிக்க நினைப்பது போல், கதையைத் தொடங்கி, முடிவில் அவன் மகா யோக்கியன் என்பதாகக் காட்சிப் படுத்தி, வாசகரை முட்டாள் ஆக்கும் இரண்டு கதைகளோடு மேலும் சிலவும் ’சுமார் ரக’க் கதைகள்தான் என்றாலும்...........

மூன்று சிறந்த கதைகளைத் தந்ததற்காகப் ’பாக்யா’வை மனம் திறந்து பாராட்டலாம்.

கல்கி. பாக்யா என்னும் இரண்டு வார இதழ்களின் கதைகளை முழுமையாகப் படித்து ‘மதிப்பீடு செய்து இப்பதிவை வழங்கியிருக்கிறேன்.

பொறுமையாகப் படித்து முடித்ததற்கு நன்றி.

சொல்ல நினைத்ததைச் சுவையாகச் சொன்னேனா, இல்லை, ’அறுவை மருத்துவன்’ ஆகிய நான் ‘அறுத்து’த் தள்ளினேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

அடுத்து வரும் பதிவுகள் சுருக்கமானவையாகத்தான் இருக்கும் என மீண்டும் உறுதி கூறுகிறேன்.

************************************************************************************************






















2 கருத்துகள்: