வியாழன், 20 செப்டம்பர், 2012

குமுதத்துக்குக் ‘குட்டு’! வாரமலருக்கு ‘ஷொட்டு’! ராணிக்குத் ‘தட்டு’! விகடனுக்கு... ‘ஐயோ பாவம்!’!

சத்துக் கதையோ சொத்தைக் கதையோ, எத்தனை கதை படிச்சாலும் ‘தாகம்’ தணியலீங்க!

குமுதத்துக்குக் ‘குட்டு’! வாரமலருக்கு ‘ஷொட்டு’! ராணிக்குத் ’தட்டு’! விகடனுக்கு... ‘ஐயோ பாவம்!’!

‘வெண்பாவுக்குப் புகழேந்தி. விருத்தப் பாவுக்குக் கம்பன்’னு சொல்ற மாதிரி, ‘ஒரு பக்கக் கதைக்குக் குமுதம்’னு சொன்ன காலம் ஒன்னு இருந்ததுங்க.

இப்போ எல்லாம் ....................

‘இருக்கிற ‘கொஞ்சம்’ அறிவே போதும். குமுதம் ஒரு பக்கக் கதை படிச்சி முட்டாள் ஆக வேண்டாம்”னு எல்லாரும் சொல்றாங்க!

ஒரு கூலித் தொழிலாளி. நாள் முழுக்க உழைச்சிச் சம்பாதிச்சதையெல்லாம் குடிச்சே தீர்த்துட்டுக் கொஞ்சம் சில்லரை மட்டும் பெண்டாட்டியிடம் கொடுப்பான். அதை வெச்சி அவ என்ன பண்ணுவா பாவம்? கொஞ்சம் கஞ்சிதானே காய்ச்ச முடியும்.

நாக்குச் செத்துப் போன அந்தக் குடிகாரன், ”என்னடி பண்றே, வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியாதா?”ன்னு அவளைக் கை நீட்டி அடிச்சுடறான்.

அதுக்கு அவள் எப்படி பதிலடி கொடுக்குறா தெரியுங்களா? கையால அல்ல; வாயாலதான்.

“உனக்கு ருசியா சமைச்சுப் போடணும்னா ஒரு கள்ளப் புருசனத் தேடிகிட்டாத்தான் முடியும்”

அதுக்கப்புறம் அவன் வாயே திறக்கல; கையும் நீளுல.

இது ஒரு கதைங்க [ஆர்.சி.சம்பத் எழுதினது]. அதுவும் குமுதத்தில் வந்ததுன்னு சொன்னா நம்புவீங்களா?

நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதி, நிகழ்த்த முடியாத சாதனையை ஒரு ‘ஒரு பக்கக் கதை’யால சாதிக்க முடியும்னு தெரிஞ்சிட்டீங்களா?

இந்த மாதிரி கதைகளெல்லாம் அந்தக் காலக் குமுதத்தில் அடிக்கடி வருமுங்க. [நான் அந்தக் கால ஆசாமின்னு முடிவு கட்டிடாதீங்க. நேத்துப் பொறந்த பையன்.  இதெல்லாம் என் தாத்தா சொல்லிக் கேட்டதுங்க].

இப்ப வர்ற கதையை, முதல் தடவை படிக்கும்போது “நல்லாத்தான் எழுதியிருக்கார்”னு சொல்லுவீங்க. அதையே மறுபடியும் படிச்சா, “அப்படியென்ன புதுசா சொல்லிட்டார்?” என்பீங்க. இன்னுமொரு தடவை படிச்சிக் கொஞ்சம் யோசனை பண்ணினீங்கன்னா, “சீ...இதெல்லாம் ஒரு கதையா?”ன்னு கடுப்படிப்பீங்க.

நான் சொன்னது  நெசமா இல்லியாங்கிறது இந்த வாரக் குமுதத்தில் வெளியான ரெண்டு கதையையும் கேட்டீங்கன்னா தெரிஞ்சி போயிடும்.

முதல் கதை: சாந்தியின் சாந்தி. எஸ்.முகமது யூசுப் எழுதினது.

ஒருத்தர் தன் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டிருக்கார்.

தரகர் ரெண்டு ஜாதகம் கொண்டு வர்றார்.

ஒரு ஜாதகர் மளிகைக் கடை நடத்தி மாசம் ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர். இன்னொருத்தருக்கு தனியார் கம்பெனியில் கிளார்க் வேலை. மாசம் பத்தாயிரம் சம்பளம்.

அப்பா, தன் மகளோட விருப்பத்தைக் கேட்கிறார். அவ சொல்றா: “மளிகைக் கடைக்காரர் ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வருவாரு. சினிமா, பார்க், பீச்சுன்னு எங்கயும் போக முடியாது. என் சந்தோசம் போயிடும்”.

இந்தக் கதையைக் கேட்டவுடனே நீங்க என்ன நினைச்சீங்க? ’அந்தக் குட்டி எடுத்த முடிவு ரொம்பச் சரி’ன்னுதானே?

நீங்க கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா............

”இந்தப் பத்தாயிரம் சம்பளம் என்னத்துக்கு ஆனது? வீட்டு வாடகைக்கே பத்தாதே. அப்புறம் எங்கே கல்யாணம் கட்டிகிட்டு ஜாலி பண்றது?”ன்னு கேட்பீங்களா இல்லியா?

மளிகைக் கடை, ஜவுளிக்கடை, ஓட்டல் கடைன்னு தொழில் பண்றவங்க எல்லாம் , புதுப் பொண்டாட்டியைக் காயப் போடுற காரணத்தால கல்யாணமே கட்டிக்க வேண்டான்னு சொல்றாரா கதாசிரியர் யூசுப்?

இவங்க எல்லாம் ஒண்டிக் கட்டையாத்தான் இருப்பாங்களா? அப்பா, அம்மா, மாமனார், மாமியார்ன்னு விட்டில் இருக்கிற கிழடு கிண்டுகளைக் கொஞ்ச நேரம் கடையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, புதுப் பெண்டாட்டியைத் தேடிப் போய்க் கொஞ்சுவாங்களா, மாட்டாங்களா?

அப்படியே யாரும் இல்லேன்னாலும், கடையில் வேலை செய்யுற ஆட்களை நம்பித்தானாகணும். எதையும் திருடுவாங்கன்னு பார்த்தா முடியுமா? கட்டிகிட்டு வந்தவளைச் சந்தோசமா வெச்சிக்கணும்னா, இந்த மாதிரி கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்னு அவங்களுக்கெல்லாம் தெரியாதா?

என்னவோ போங்க. இந்த ஒ.ப.கதை எழுத்தாளர்களுக்கு நம்ம காதில் பூ சுத்துறதே வழக்கமா போச்சி. பத்திரிகை ஆசிரியர்களும் அவங்களுக்கு உடந்தையா இருக்காங்க. இவங்க மாறவே மாட்டாங்களா?

அடுத்த கதையைக் கேட்டீங்கன்னா இன்னும் சூடாயிடுவீங்க!

கதை: வாழை மரம். கதாசிரியர்:கே. கணேச மூர்த்தி.

ஒரு மகன் தன் அப்பாகிட்ட, “உங்களுக்கு எழுபது வயசாச்சி. ஒன்னுமே சேமிக்கலையே?” அப்படீன்னு கேட்கிறான்.

“ஒரு வழை மரம், இலை, பூ, காய், கனி பட்டை எல்லார்த்தையும் தானமா தருது. அது மாதிரி நானும் என்னையே தந்திருக்கேன்’ன்னு சொல்றார்.

இதோட கதை முடிஞ்சிடிச்சி தாங்க?

ரெண்டு துக்ளியூண்டு பத்தியில் முடிஞ்சி போன இந்தத் ‘துணுக்குக் கதையை [கதைதானா?] ஒரு பக்கக்கதையா இழுத்துடறார் கதாசிரியர்!

இந்தத் தத்துவத்தைப் புரிய வைக்கத்தான் பெரியவங்க கல்யாணப் பந்தலில் வாழை மரம் கட்டுற பழக்கத்தை ஏற்படுத்தினாங்க. மரம் கன்று ஈனுவது மாதிரி உனக்கு நான் உயிர் கொடுத்தேன். நீதான் புத்தியா பொழைச்சிக்கணும் அப்படி இப்படின்னு  இழுக்கிறாருங்க கதையை!

‘பளிச்’னு ஒரு மின்னல் அடிச்ச மாதிரியும் கதை சொல்லல.

கதைத் தலைப்பாவது ரசிக்கும்படியா இருக்கா?

இல்லீங்களே.

வாழைமரம்! ஒன்னாங்கிளாஸ் பாடப் புத்தகத்தில் இருக்கிற ஒரு சின்னக் கட்டுரையோன்னு பார்த்ததும் நினைச்சங்க.

‘ஒரு பக்கக் கதை’ன்னு குறிப்பிடாம உரையாடலும் சேர்க்காம விட்டா இது ஒரு கட்டுரைதாங்க. ஒரு தடவை படிச்சிப் பாருங்க.

                      *                                          *                                       *

‘ஓஹோ’ன்னு வளர்ந்திட்டிருந்த ஒரு பக்கக் கதை இலக்கியம் இப்படிச் சிதைஞ்சி சீரழிஞ்சிட்டு வருதேன்னு நான் அடிக்கடி கவலைப்படுறது உண்டுங்க. இந்தக் கதைகளைப் படிச்சதும் என் கண்களில் ரெண்டு சொட்டுக் கண்ணீரே வந்துடிச்சி!

இந்த நேரத்தில், ’ஆர்.லதா’ [புள்ளமங்கலம்]ன்னு ஒரு பொண்ணு, ஆறுதலா என் முதுகில் தட்டிக் கொடுத்து, ’கூடு கலைத்தவன்’னு நான் ஒரு கதை எழுதியிருக்கேன். படிங்க அறுவை. உங்க புண்பட்ட மனசுக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கும்’ன்னு சொல்லி,  தினமலர் ’வார மலரை’க் [16-09-2012]கொடுத்திச்சி.

விவாகரத்து வாங்கித் தருவதில் புகழ் பெற்ற ஒரு வக்கீலுக்கு வயசு அறுபது ஆகுது.

புள்ளைகளும் பேரப் புள்ளைகளும் சேர்ந்து அவரோட மணி விழாவுக்கு ஏற்பாடு பண்றாங்க. ஆனா, அவரு அறுபதாம் கல்யாணமே வேண்டாங்குறார்.
”ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகளைப் பிரிச்சவன் நான். அப்படிப்பட்ட நான், என் பெண்டாட்டியோட பிரியமா வாழ்ந்து அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாருக்கும் வயித்தெரிச்சலை உண்டுபண்ணுமே”ன்னு காரணமும் சொல்றார்.

’தொழில் தர்மம்’னு சொல்லிகிட்டு, திருடர்களுக்கும் கொள்ளைக்காரங்களுக்கும் கொலைகாரர்களுக்கும் வாதாடுற வக்கீல்களுக்குச் சூடு கொடுத்த மாதிரி இல்லை?

கதையை, எதார்த்தமா சுவையா சொல்லியிருக்கார் லதா.

”இப்படி இன்னும் நிறையக் கதைகள் எழுதுங்க”ன்னு லதாவை வாழ்த்தி, நன்றியும் சொன்னேங்க.

                            *                                       *                                      *

“ராணி’ பத்திரிகை, புதுமுக எழுத்தாளர்களுக்குப் புகலிடம் தருது. அதை எப்பவும் படி. நீயும் ஒரு கதாசிரியர் ஆகலாம்”னு என் தாத்தா அடிக்கடி சொல்வார்.

இந்த வார ராணி [23-09-2012] படிச்சேன்.

ரோசியும் பூனைக் குட்டியும்’னு ஒரே ஒரு கதைதான். ‘கலாவிசு’ எழுதினது.

தலைப்பைப் பார்த்தா, குழந்தைகளுக்கானதுன்னு தோணும். பெரியவங்களுக்கும் பாடம் கற்பிக்கிற கதை இது.

ராமுவுக்கு ஒரு அணில் குட்டி தோழன். ‘ரோசி’ன்னு அதுக்குப் பேர் வெச்சிருக்கான்.

ஜன்னல் கிட்ட சோறு வச்சா அது தின்னுட்டுப் போகும்.

ஒரு நாள், அது சோத்துப் பருக்கை சாப்பிடும் போது, வீட்டில் வளர்ற பூனை பக்கத்தில் வர, அது பயந்து ஓடிடுது.

ராமு பூனையைக் கண்டபடி திட்டிடறான்.

அன்னிக்கிருந்து, பூனை சோறு சாப்பிட மாட்டேங்குது. அதுக்குத் தட்டில் வெச்ச சோறு அப்படியே இருக்குது.

அப்புறம், பூனை பட்டினி கிடக்குறதைப் பார்த்துட்டு, அணில் வந்து பூனைக்கு வெச்ச சோத்தைச் சாப்பிட்டிச்சாம். பூனையும் சாப்பிட்டிச்சாம்.

ரெண்டும் சேர்ந்து சாப்பிடறதைப் பார்த்து ராமு சந்தோசப்படுறான்.

 நாய் பூனைக் குட்டிக்குப் பால் தர்றது.  பூனையும் எலியும் ஒன்னா விளையாடுறது மாதிரியான செய்திகளைப் படிச்சுட்டுக் கதாசிரியர் இதை எழுதியிருப்பாரோன்னு நினைக்கிறேன்.

நடைமுறை சாத்தியம் இல்லேன்னாலும், கதை மனசை உருக்குகிற மாதிரி இருக்குதானே?

பாராட்டலாம்தானே?

                                 *                                     *                                    *

கடைசியா ’விகடன்’ இதழின் [19-09-2012] நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்புக் கதை.

கதைப் பெயர்: லூஸு ஓனர்’   படைத்தவர்:ம.காமுத்துரை.

[ எச்சரிக்கை! நான் ஒரு லூஸு. இந்த லூஸுக்கு நீங்க ஓனரு. அதனால, உங்களுக்கு ‘லூஸு ஓனர்’னு பேரு” அப்படீன்னு கதையில் வர்ற ஈஸ்வரன் பாத்திரக் கடைக்காரரைப் பார்த்துச் சொல்றான். அதனாலதான் இந்தக் கதைக்கு ‘லூஸு ஓனர்’னு பேரு. மத்தபடி, கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு குழம்பி ‘லூஸு’ ஆயிடாதீங்க!]

ஈஸ்வரன் ஒரு சமையல் ஒப்பந்தக்காரர் [cotracter]. கதாசிரியர் காமுத்துரை, தன்னையே ‘சமையல் பாத்திரக் கடைக்காரரா’ உருவகம் பண்ணிகிட்டு அவரே  சொல்ற மாதிரி கதை தொடங்குது.

‘தூரத்தில் ஈஸ்வரன் வர்றதைக் கண்டதும்சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமா கணக்கு நோட்டுக்குள் ஒளித்து வைத்தேன்’னு கதையைத் தொடங்குறார்.

அது ஆடி மாசம் ஆனதால, ஈஸ்வரனுக்குத் தொழில் வாய்ப்பு இல்ல. இவருக்கும் வியாபாரம் டல்லடிக்குது.

இந்தச் சூழ்நிலையில், இவர்கிட்ட கடன் கேட்க வரும் சமையைல்காரங்க, ”நாங்க இல்லாம உங்க வியாபாரம்  நடக்காது. நீங்க இல்லாம எங்களுக்குப் பிழைக்க வழியில்ல”ங்கிற மாதிரி ரொம்பச் சாமர்த்தியமா பேசிக் கடன் கேட்பாங்களாம். இவரும் அவங்களுக்கு ஈடு கொடுத்துச் சமாளிப்பாராம். இதைப் பத்தி எல்லாம் சொல்றார்.

 ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற பாத்திரக் கடைக்காரருக்கும் சமையல் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையிலான உறவையும், அதனால் விளையும் சாதக பாதகங்களையும் காட்சிப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்தக் கதையைப் பின்ன நினைத்திருக்கிறார் காமுத்துரை.

ஆனா, அந்த நோக்கம் இந்தப் படைப்பின் மூலம் நிறைவேறவில்லை என்றே சொல்லத் தோணுது.

அதற்குப் பதிலாக எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு சமையல்காரர்களை இழிவு படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.

”யேண்ணே....ஒரு பத்து ரூபாய்க்காக அப்போ பிடிச்சிக் கேட்டுட்டிருக்கேன்....”  வேல்கண்ணன் என்கிற சமையல்காரர் கடைக்காரரிடம் கேட்கிறார்.

”எனக்கு இப்போ குடிக்க ஒரு 70 ரூபாயாவது தருவீங்களா?” என்று அவரிடம் கெஞ்சுகிறார் சரவணன் என்கிற சமையல்காரர்.

“எனக்கு அவசரமா வேணும்னே....”

“பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கிக் குடுங்கண்ணே....”

சமையல்காரர்கள் மாறிமாறி இவரிடம் கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிக் கதை முழுக்க, சமையல்காரர்களைப் பழிப்பதிலும் மட்டம் தட்டுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் காமுத்துரை!

நூறு ரூபா கடன் கேட்டு வந்த ஈஸ்வரனும், “பக்கத்துக் கடையிலாச்சும் வாங்கிக் கொடுங்க” என்று மன்றாடுறான்.

இவர் சித்திரித்துக் காட்டுவது போல சமையல் ஒப்பத்தக்காரர்கள் வறுமையில் வாடுகிறார்களா என்ன?

எழுத்தாள நண்பரே,

சட்டை மடிப்புக் கலையாமல், விலையுயர்ந்த வாகனங்களில் இவர்களில் கணிசமானவர்கள் வலம் வருவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?

நீங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போல இவர்களில் பலரும் மாமூல் குடிகாரர்களா?

பிச்சைக்காரர்கள் போல, கடை முதலாளிகளிடம் கடன் கேட்டு அலைபவர்களா?

தயவு செய்து இனியேனும்,  கதாபாத்திரங்களைப் படைத்து உலவவிடுவதற்கு முன்னால், அவர்களைப் பற்றித் தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

செய்வீர்களா?

‘நான் ஒரு நட்சத்திர எழுத்தாளன். என் படைப்பைக் கேட்டு வாங்கிப் போட பத்திரிகைகள் இருக்கின்றன என்ற மிதப்பில் எதை வேண்டுமானாலும் எழுதக் கூடாது.

மறந்துவிட மாட்டீர்களே?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


4 கருத்துகள்:

  1. Nice review about stories published in Kumudam, Ananandavikatan etc. Interesting to read.

    பதிலளிநீக்கு
  2. நன்றி முருகானந்தம்.

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. ஆபரேஷனை கண்டினியூ பண்ணுங்க மறுத்தவர்!
    சிறுகதைகளை அடிச்சு துவம்சம் பண்ணுங்க!

    பதிலளிநீக்கு
  4. //ஆபரேஷனை கண்டினியூ பண்ணுங்க//

    நெஞ்சார்ந்த நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு