திங்கள், 1 அக்டோபர், 2012

’விகடன்’ இதழில் [03-10-2012] ஒரு ‘வெங்காயக் கதை’!

ஒரு நட்சத்திர எழுத்தாளரின் சிறுகதை பற்றிய ஒரு ’கத்துக்குட்டி’யின் விமர்சனம்.

ஒரு நட்சத்திர எழுத்தாளர் படைத்த ’வெத்து'க் கதை!

‘நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு’ன்னு ஆனந்த விகடன் சிறுகதைகள் வெளியிடுவது யாவரும் அறிந்ததே.

‘பிரபல எழுத்தாளர்’னா நமக்குத் தெரியும்.

ஒருத்தர் எதைக் கிறுக்கினாலும் அதை வெளியிடப் பத்திரிகை இருந்தா, அவர் பிரபல எழுத்தாளர்!

எழுத்தாளர் சுஜாதாவின் ’சலவைக்குப் போட்ட துணிக் கணக்கை’ச் ‘சாவி’ வார இதழ் வெளியிட்டுதே, அது மாதிரி.

பிரபல எழுத்தாளர்னா, அவர் படிக்கிறது எழுதுறது மட்டுமில்ல, அவர் பயன்படுத்துற ’டூத் பேஸ்ட்’, ‘வெளிக்கு’ப் போற ’டாய்லெட்’; திங்குறது; தூங்குறது; ‘குசுவு’ போடுறது பத்தியெல்லாம்கூட, துணுக்குச் செய்தி வெளியிட்டு வாசகரைக் ’குஷி’ப்படுத்துவாங்க!

பிரபல எழுத்தாளர் சரி, அது யாருங்க ‘நட்சத்திர எழுத்தாளர்’?

ஆகாயத்தில் நட்சத்திரம் மின்னுற மாதிரி, கதை இலக்கிய வானில் நிரந்தர இடம் பிடிச்சவர் நட்சத்திர எழுத்தாளர். [மத்தவங்க எல்லாம் கம்பி மத்தாப்பு’ எழுத்தாளர்! படிச்ச சூட்டோட, கதையை மட்டுமல்ல எழுத்தாளரையும் மறந்துடுவோம்!]

பிரபலத்துக்கும் நட்சத்திரத்துக்கும் என்னங்க வித்தியாசம்?

பாலுணர்வைத் தூண்டும் படுக்கையறைக் கதை. செக்ஸ் கலந்த...கலக்காத சிரிப்புக் கதை; மர்மக் கதை; மசால் வடை....மன்னிக்கவும், மசாலாக் கதை; மாயாஜாலக் கதைன்னு நல்லது கெட்டது பார்க்காம எதைப் பத்தியும் எழுதிப் பணமும் புகழும் பண்றவர் பிரபல எழுத்தாளர்.

நட்சத்திர எழுத்தாளர் அப்படி இல்லீங்க.

கெட்டவங்களை நல்லவங்களா ஆக்குவதற்கும், சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்கும் இந்த உலகத்தைப் புரட்டிப் போடுவதற்குமான புரட்சிக் கதைகளைப் படைத்து வழங்குபவர் அவர்!

அவருடைய உன்னதக் கதைகளை ஒரு தடவை படிச்சாப் புரியாது. படிச்சிட்டே இருக்கணும். இதுக்குன்னு கணக்கெல்லாம் கிடையாதுங்க.

எத்தனை தடவை படிச்சாலும் புரியலேன்னா, கதையைக் குறை சொல்லக் கூடாது. நமக்குப் புரிஞ்சிக்கிற அளவுக்குப் புத்தி இல்லேன்னு அர்த்தம்.

ஒருத்தர் நட்சத்திர எழுத்தாளர்ங்கிறதுக்கு முக்கிய அடையாளம் அவர் கதை ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கணும்.

இப்போ அதில் எழுதறவங்க எல்லாம் ‘சிங்கிள் ஸ்டார்’ எழுத்தாளர்கள். ’திரீ ஸ்டார்’,  ’ஃபைவ் ஸ்டார்’ எழுத்தாளர்கள் எல்லாம் இனி எழுதுவாங்க. விலையைப் பார்க்காம விகடன் வாங்கிப் படிச்சிட்டே இருங்க.

இந்த வார விகடன் கதைக்கு வருவோம்.

’மனைவியோட அப்பாங்கிற தலைப்பில் க.சீ.சிவக்குமார் எழுதியிருக்கார்.

‘மாமனார்’னு தலைப்புக் கொடுக்காம, இப்படித் தலைப்பு வெச்சி, இந்தக் கதையின் குடும்பத் தலைவருக்கும் அவர் மாமனாருக்கும் உறவு சரியில்லேங்கிறதை எத்தனை நுட்பமா புரிய வெச்சிட்டார் பார்த்தீங்களா?

தலைப்பு புரிஞ்ச அளவுக்குக் கதை புரியலீங்க.

’பக்கத்தில் எங்கோ கரும்புச் சோவைகளில் தீயைப் பற்ற வைத்தது போல எங்கும் புகை மூட்டமாக இருந்தது’ன்னு சூழ்நிலை வர்ணனையோட கதை ஆரம்பமாகுது.

‘சுடரும் சேதாரமுமில்லாத பனி மூட்டம்தான்’ என்பது அடுத்த வரி. ஏதாவது புரியுதுங்களா?

இப்படிப் புரியாத வர்ணனைகளும் விளக்கங்களும் கதை முழுக்க வருதுங்க.

‘நாம மகிழ்ச்சியா இருக்க எதையாவது வெட்டணும்னா உடனே வெட்டிடணும்’-இப்படிப் பொன்மொழிகள் வரும்.

உறவு ஒரு வெங்காயம். பிரிவும் ஒரு வெங்காயம். சருகிதழ்கள் உள்முகம் குவிந்த ஒரு மலர் வெங்காயம்’- இப்படித் தத்துவங்கள் உதிரும்.

இதெல்லாம் புரிஞ்சிக்க உங்களுக்கு அதீத அறிவாற்றல் வேணும்.

எதுவும் புரியலேன்னா விளக்கிச் சொல்லத் தெரியாத இந்த ’அறுவை’யைத் திட்டுங்க; கதாசிரியரைக் கேள்வி கேட்டுக் குடையாதீங்க.

‘சுவரில் துப்பாக்கி தொங்குதுன்னு கதையில் எழுதினா, கதை முடியறதுக்குள்ள அந்தத் துப்பாக்கி ஒரு முறையாவது வெடிக்கணும்’னு ஒரு அயல் நாட்டு எழுத்தாளர் [எட்கார் ஆலன்போ?] சொன்னதா சொல்வாங்க.

கதைக்குத் தேவையில்லாத எந்தவொரு விளக்கமோ சம்பவமோ அதில் இடம்பெறக் கூடாதுன்னு இதுக்கு அர்த்தம்.

இந்தக் கதையில் அந்த மாதிரிச் சம்பவங்கள்தான் அதிகம் இருக்கு.

சிவக்குமார், தன்னையே இந்தக் கதையின் குடும்பத் தலைவரா உருவகம் பண்ணிட்டுக் கதை சொல்றார்.

குடும்பத் தலைவர் ஓர் ஓவியர். மாதச் சம்பளத்துக்கு வேலை பார்க்குறவர். தன்னைவிட அதிகம் சம்பாதிக்கிற மனசுக்கேத்த பெண்ணை மணக்கிறார்.

ரெண்டு பேரும் வேற வேற பெரிய நகரங்களில் வேலை பார்க்குறாங்க. மனைவியின் முன்னேற்றம் கருதித் தன் வேலையை விட்டுடறார். ஒரே நகரத்தில் வசிக்கிறாங்க.

ஒரு பொண்ணுக்குப் பெற்றோர் ஆகிறாங்க.

மனைவியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிட்டு, மகளுக்காக மாமனார் வீட்டில் தங்கி, தன் தொழிலையும் பார்த்துட்டு, விவசாயம் பண்ணுற மாமனாருக்குச் சிறு சிறு உதவியும் பண்றார்.

மகளைவிட மருமகனுக்கு வருமானம் குறைவானதால, மாமனார் இவரை அவமானப்படுத்துறாராம்.

வெளிநாடு போன பெண்டாட்டி, பணம் சம்பாதிச்சுட்டு ஊர் திரும்பிடுறா. அந்தப் பணத்தில் அவளுக்காக மாமனார் வீடு கட்டுறார். தோட்டத்தில், மனைவி மகளோட நம் குடும்பத் தலைவர் பேசிட்டிருந்தப்ப.........

“சத்து கெட்ட.....”ன்னு ஆரம்பிச்சி, இவரைக் கொச்சையா திட்டினாராம் மாமனார். ரெண்டு பேரும் கைகலக்குறாங்க. மனைவி சமாதானம் பண்ணுறா. இதுக்கப்புறம் அவரைச் சந்திக்க இவர் விரும்புறதில்ல.

வேலை நடந்துட்டிருந்த வீட்டைப் பார்க்க, இவர் மனைவி மட்டும் போவாங்க.[ஒரு நாள் அந்த வீட்டைப் பார்க்கப் போற அவங்களை இவர் வழியனுப்பிட்டு எங்கோ போற மாதிரி கதை ஆரம்பமாகுது]

இந்த நிலையில், திடீர்னு மாமனார் செத்துட்டதா தகவல் வருது. அவர் செத்ததுக்கான காரணமும் தெரியல.

பெரிய ‘சைஸ்’ விகடனில் அஞ்சாறு பக்கம் நீளுற கதையின் சுருக்கம் இதுதாங்க.

மாமனார் செத்துப் போனதற்கான காரணம் புரியலேன்னு ஆசிரியர் சொல்றார்.

இவர் விவரிக்கிற பல சம்பவங்கள் எதுக்குன்னே எனக்கும் புரியலீங்க.

கதையின் ஆரம்பத்தில், மனைவியோட பேருந்துப் பயணம் பண்ணி, ஒரு சிறு நகரத்தில் இறங்கினதா சொல்றார்.

இது வரைக்கும் எங்கே குடித்தனம் நடத்தினார்? இப்போ எங்கிருந்து புறப்பட்டார்? என்ற கேள்விக்கெல்லாம் விடை இல்ல.

மனைவியை ஆட்டோவில் ஏத்தி விட்டுட்டு, வாழைத் தோப்பு, செவ்வாழைத் தோட்டம்னு எதைஎதையோ கடந்து, பார்க்கிற காட்சிகளையெல்லாம் வர்ணிச்சிட்டு [கதைக்குச் சம்பந்தமே இல்லாம] பயணம் பண்ணிட்டே இருக்கார். பயணம் முடிஞ்சி எங்க போய்ச் சேர்ந்தார்னு தெரியல!

பிரபலம் ஆகாத ஓர் ஓவியன் சுயமா தொழில் செஞ்சி பிழைக்கிறது ஆகாத காரியம். பார்த்த வேலையை விட்டுட்டார்னு கதாசிரியர் சொல்றதைச் சீரணிக்க முடியல.

இவர் செஞ்ச வேலையைப் பத்தியோ, மனைவியின் கல்வித் தகுதி, தொழில் பத்தியோ மூச்சி விடல. மனைவி வெளிநாடு போனப்ப, மகளைப் பார்த்துக்க, இவரைப் பெத்தவங்களோ உடன்பிறப்புகளோ இல்லையா? மாமனார் அவமதிக்கிறார்னா, மகளை விடுதியில் சேர்த்துட்டு இவர் தனியே வசிக்கலாமே? என்பது மாதிரியான சந்தேகங்களுக்கும் விளக்கம் இல்லை.

அப்புறம் எப்படீங்க வாசகன் கதையோட ஒன்றுவான்?

அன்பான, அனுசரிச்சிப் போகக் கூடிய நல்ல மனைவி இருக்கும் போது, மாமனாரால் பட்ட அவமானத்தை அடிப்படையா வெச்சி, ஒரு சோகக் கதையை சிவக்குமார் எழுதியிருப்பது வரவேற்கத் தக்க செயலல்ல. இது ஒரு வெற்றிப் படைப்பும் அல்ல.

வெங்காயத்தைத் தோலுரிக்கிற மாதிரி, கதைக்கு வேண்டாத சம்பவங்களையும், நிகழ்ச்சி வருணனைகளையும் நீக்கிட்டுப் பார்த்தா கதையில் ஒன்னுமே இல்லேன்னுதான் சொல்லுவேன். ’கதைக் கரு’ன்னு ஒன்னு இல்லேங்குறது மறுக்க முடியாத உண்மை.

அதனாலதான் இதுக்கு, ‘வெங்காயக் கதை’ன்னு பெயர் சூட்டினேன்.

கதாசிரியர் மனம் புண்பட்டிருந்தா பரந்த மனத்தோட என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




























12 கருத்துகள்:

  1. ஆனந்த விகடனை என்று தமிழன் புறக்கணிக்கிறானோ, அப்போதுதான் தமிழகம் முன்னேறும்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி வாலிபள்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. #ஒருத்தர் எதைக் கிறுக்கினாலும் அதை வெளியிடப் பத்திரிகை இருந்தா, அவர் பிரபல எழுத்தாளர்!#

    ஆஹா....அற்புதமான விளக்கம்....

    பதிலளிநீக்கு
  4. உண்மையிலயே கதையை நல்லா அறுவை சிகிச்சை செய்து இருக்குறீர்கள்....தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. //கலக்கல் விமர்சனம்//

    நன்றி குட்டன்.

    மனப்பூர்வ நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து என் பதிவுகளுக்குப் பாராட்டு வழங்கும் NKS ஹாஜா மைதீனுக்கு என் தொடரும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. //உண்மையிலேயே கதையை.....//

    என் இதயம் கனிந்த நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. நீங்க ஒருத்தர்தான் இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி முரளிதரன்.

    மத்தவங்க படிக்கிறாங்களோ இல்லையோ,
    நம்மவர்களின் ரசிப்புத் தன்மை ரொம்பவும் விசித்திரமானதா இருக்கு.

    குமுதம் பத்தி எழுதும் போது பார்வையாளர் எண்ணிக்கை எகிறுது!

    ‘குமுதமே திருந்து... திருத்து!’ பதிவைப் பார்வையிட்டவங்க ரெண்டாயிரத்துக்கும் மேலே!

    ’குமுதத்துக்குக் குட்டு’ பதிவுக்கும் ஆயிரத்துக்கும் அதிகம்.

    இன்றைய ‘விகடனில் வெங்காயக் கதைக்கு இதுவரை 350 தான்.

    பதிவு எழுதுவதை விட, பார்வையாளர்களைப் புரிஞ்சிக்கிறது ரொம்பவும் கடினம் முரளிதரன்!

    பதிலளிநீக்கு
  10. தங்கள் பாராட்டு என்னை மிகவும் மகிழ்வித்தது.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு