ஞாயிறு, 18 நவம்பர், 2012

ரிலீஸ் படம், படு செக்ஸியா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்தப் பதிவு, சினிமா [செக்ஸ்] பைத்தியங்களுக்கு மட்டும்!!!

ஏறத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” என்று கேட்டேன்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் பிய்த்துக்கொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாவகமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யான்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

”இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

****************************************************************************************************************************************

மிக முக்கிய குறிப்பு:

கடந்த இரு பதிவுகளுக்கும் ‘ஹிட்ஸ்’ குறைந்து போனதால், இந்த ’அதிரடி ஆபாசப் பதிவு’!! பெருந்தன்மையுடன் மன்னித்திடுக!

****************************************************************************************************************************************





வெள்ளி, 16 நவம்பர், 2012

ஒரு கதாசிரியனின் கதை

இது, ’சிரிப்புக் கதை’ அல்ல; ஓர் எழுத்தாளனின் ’கண்ணீர்க் கதை’!

“சே, என்ன மனிதர்கள் இவர்கள்! எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டா, ஸ்ரீதேவி ரசிகர் மன்றத்தில் விசாரிக்கச் சொல்கிறார்களே! எழுத்தாளனை மதிக்காத இந்தச் சமுதாயம் உருப்படுமா?”

மனித குலத்தைச் சபித்தவாறு, ‘அய்யாசாமி நகரில்’ தெருத்தெருவாக அலைந்துகொண்டிருந்த அந்த மனிதருக்கு வயது எழுபதுக்குக் குறையாது.

பெரியவருக்கு ஒடிசலான உடம்பு. வேட்டி ஜிப்பாவில் மேலே தலை மட்டும் தெரிந்தது. அடி மண்டையில் கொஞ்சம் முடி அடிக்கோடிட்டிருந்தது. தோளில் தொங்கும் ஜோல்னா பையின் சுமையால் முதுகுத் தண்டு கொஞ்சம் வளைந்து காணப்பட்டது.

வீடு வீடாய்ப் படிகளை எண்ணினார். அழைப்பு மணியில்தான் எத்தனை வகை என்பதை அனுபவத்தில் கண்டு ஆச்சரியப்ப்ட்டார். கதவு திறந்து, ”என்ன?” என்று கேட்டவர்களிடமெல்லாம், “எழுத்தாளர் சீதேவிதாசனைத் தெரியுமா?” என்று கேட்டார்.

“சுவர் சுவரா விளம்பரம் எழுதுற ஒருத்தர் தெருக்கோடியில் இருக்கார். கேட்டுப் பாருங்க” என்றார் ஒரு வீட்டுக்காரர்.

“பருவ சுகம், பாமா நீ வாம்மா, இளமை ராகம்ங்கிற மாதிரி, ‘ஒரு மாதிரி’ புத்தகங்கள் எழுதிக் குவிச்சாரே, அவரா?” என்று பல்லிளித்தார் இன்னொருவர்.

“அம்மா...தாயி...சீதேவி...” என்று அவர் மிச்சமிருந்த வார்த்தைகளைக் கக்குவதற்குள்ளாகவே, “இன்னும் சமையல் ஆகல. போய்ட்டு அப்புறமா வாப்பா” என்றாள் ஒரு குடும்பத் தலைவி.

விரக்தியின் விளிம்பைத் தொட்டுவிட்ட பெரியவர், அய்யாசாமி நகர் வாசிகள் சிலரிடம், “சீதேவிதாசன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். அவரைத் தெரியலீன்னு சொல்றீங்க. ஆச்சரியமா இருக்கு” என்றார்.

“இந்த மாதிரி கேள்வி கேட்டுத் திரியற உம்மைப் பார்த்தாத்தான் ஆச்சரியமா இருக்கு. நீர் என்ன சீதேவிதாசனின் தம்பி மூதேவிதாசனா?” என்று அவர்கள் திருப்பிக் கேட்ட போது, பெரியவர் மனம் உடைந்து போனார்.

எழுத்தாளரின் பெயர் சொன்னவுடனே, அய்யாசாமி நகரமே திரண்டு வந்து தமக்கு வழி காட்டும் என்று எதிர்பார்த்தார். நடக்கவில்லை.

“என்ன ஐயா, சீதேவிதாசனைத் தெரியுமான்னு கேட்டீங்களே, அவரைத் தெரியாதவங்க இருக்கீங்களான்னு கேட்டிருக்கணும்.”

“இயல்பான கதை; மனதைச் சுண்டியிழுக்கிற வர்ணனை: ஆளைக் கட்டிப் போடுற அட்டகாசமான நடை. சீதேவிதாசன் ஒரு பிறவி எழுத்தாளருங்க.”

“எங்க நகருக்கு அவர் குடி வந்தது நாங்க செஞ்ச புண்ணியம்.”

இப்படியெல்லாம், இன்னும் எப்படியெல்லாமோ நகர மக்கள், எழுத்தாளருக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார் அவர்.

அவர்களோ, எழுத்தாளருக்கு ஒரு எருக்கமாலைகூடப் போடவில்லை.

பெரியவர் துவண்டுவிடவில்லை. “அய்யாசாமி நகர், துப்புக்கெட்டான் தெரு, கழுத்தறுத்தான் சந்து, கதவு எண் 18. இதுதானே எழுச்சி எழுத்தாளர் சீதேவிதாசன் வீடு?” என்று வீடு வீடாகச் சந்தேகம் கேட்டார். கடைசிவரை அவர் சந்தேகம் தீர்க்கப்படவில்லை என்றாலும், ஒரு வீடுகூட அவர் மிச்சம் வைக்கவில்லை.

ஒரு வழியாக, மனதைத் தேற்றிக்கொண்டு, சீதேவிதாசனின் வீடு நோக்கி நடந்தார், பெரியவர்.

அவர் அங்கு செல்வது இது முதல் தடவையல்ல. கடந்த ஏழெட்டு மாதங்களில், எத்தனை தடவை அங்கு சென்றிருக்கிறார் என்பதை எண்ணிச் சொல்வது அவசியமில்லை.

“என்ன செய்ய, இந்த ஏழை எழுத்தாளனை எவனுமே கண்டுக்க மாட்டேங்குறான். வீடு தேடி வருகிற நண்பர்கள் வேறு, ‘என்னய்யா பெரிய எழுத்தாளன் நீ? நீ இங்கே குடி வந்து ஏழெட்டு மாசம் ஆச்சு. உன்னைப் பத்தி இந்த நகர்ல ஒருத்தருக்குமே தெரியல.’ என்று குத்திக் காட்டுகிறார்கள். அதனாலதான், இப்படியொரு ஓரங்க நாடகம் போட வேண்டியதாப் போச்சு” என்று தம் மனசாட்சியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே நடந்தார் எழுத்தாளர் சீதேவிதாசன்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ








வியாழன், 15 நவம்பர், 2012

’கரு’ ஒன்று...’கதை’ இரண்டு!!

ஒன்று ‘குமுதம்’ கதை! மற்றொன்று ‘ராணி’யில் வெளியானது! சிறந்தது எது?

கதை 1

தலைப்பு:நீ தொட்டால்...’ [குமுதம் 08.09.10]

படைத்தவர்: பரமசிவம்

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறே. கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ் முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?” என்றாள் கல்யாணி.

”ஏண்டி பொய் சொல்றே.”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலே’ன்னு கோவிச்சுட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்குறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் இடையில் கை போட்டான் கண்ணுச்சாமி.

“குடிச்சுட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா ’எப்பத் தொட்டேன்’னு சந்தேகமா பார்ப்பே” என்றாள் அவள்.

“இதோ பாருடி, நான் தாலி கட்டின புருசன். படுன்னா படுக்கணும்” என்று அவள் தோளைத் தொட்டான் அவன்.

அவனைத் தள்ளிவிட்ட அவள், “நான் சொன்னா சொன்னதுதான். இனியும் குடிச்சிட்டு வந்து என்னைத் தொடக் கூடாது. மீறித் தொட்டா என் உடம்பில் உசுரு இருக்காது” என்றாள் கண்டிப்பான குரலில்.

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் கண்ணுச்சாமி.

கதை 2

தலைப்பு: ‘தொட்டுப்பார்...’

படைத்தவர்: ‘பசி’

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

”போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




ஞாயிறு, 11 நவம்பர், 2012

விகடன், குமுதம், குங்குமம் இதழ்களின் கவனத்திற்கு.....

இது, புதுமையான ஓர் ‘ஊடல் உறவு’க் கதை!

தரமான ஒரு பக்கக் கதை கிடைக்காமல் அல்லாடும், ’நம்பர் 1’ வார இதழ்களான குமுதம், விகடன், குங்குமம்  இதழ்களின் ஆசிரியர்களுக்கு எமது அன்பான அழைப்பு.

முற்றிலும் மாறுபட்டதும், தரமானதும், புதுமையானதுமான ஒரு ஒ.ப.க. இது.

ஊடலில் தொடங்கிக் கூடலில் முடியும் இந்தப் புத்தம் புதிய கதையை உங்கள் இதழ்களில் எம் அனுமதியின்றியே பிரசுரித்துக் கொள்ளலாம்.

சன்மானம் எதுவும் தேவையில்லை!

கதைத் தலைப்பு:           என்னைத் தொடாதே!

தன்னைத் தொட வந்த வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையைத் தீண்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.

“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” என்றான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.”

வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

மருண்டான் அவன்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரிய எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கி வீசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி கோழைங்க, ’அந்த சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் ஏதோ ஒருவித சுகம்.

நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு எழுதி வெச்சேன். நீ அதைப் படிக்கல.

இதை அழிச்சிருக்கணும். நான் ஒரு அடிமடையன். அதைச் செய்யல.

என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே.”

சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா புரண்டு படுத்தாள், அவனுடன் இணைந்தாள்; இழைந்தாள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ











வெள்ளி, 9 நவம்பர், 2012

குமுதம்[14.11.12] தீபாவளிக் கதைகளும் ஒரு ’குஷ்பு’ கதையும்!

’இந்திரா சவுந்தர்ராஜன்’ முதலான ’முன்னணி’ப் படைப்பாளர்களின் ‘பல்சுவை’க் கதைகள்!

”பேய் பிசாசுகளை நான் நம்புவதில்லை” என்றார் அவர்.

அவருக்கு அருகே நின்றுகொண்டிருந்தவர், ”நீர் நம்பவில்லையா? நான் நம்புகிறேன்” என்று சொல்லிக்கொண்டே மாயமாய் மறைந்து போனார்!

இது வழக்கிலுள்ள ஒரு திகில் கதை.

தென்னை மரத்தின் உச்சியில் ஒரு திருடனைக் கண்டுவிட்ட அதன் சொந்தக்காரர், “எதுக்கய்யா மேலே ஏறினே?” என்று அதட்ட, “புல்லுப் பறிக்க ஏறினேன்” என்று அவன் சொல்ல, “தென்ன மரத்தில் ஏது புல்லு?” என்று இவர் மடக்க, “ஏறினப்புறம்தான் தெரிந்தது இதில் புல்லு இல்லேன்னு” என்று சமாளித்து, இறங்கி ஓடினான் அந்தத் தேங்காய்த் திருடன்!

இந்தத் ‘திரில்’ கதையும் நம்மில் பலரும் கேள்விப்பட்டதுதான்.

அடுத்த வீட்டுக் கோவிந்துவை அழைத்துக் கமர்கட் கொடுத்த குஷ்பு, “குளிக்கும் மறைப்புத் தட்டி முழுக்க ஓட்டைகள் இருக்கிறதால, நான் குளிச்சி முடிக்கிறவரை யாரும் வராம பார்த்துக்கோ” என்று கூறி, அரைமணி நேரம் போல அழுக்குப் போகத் தேய்த்து, ஜாலியாகக் குளித்துத் முடித்து, ஒட்டைகள் வழியாக நான்கைந்து வாலிபர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதறிந்து திடுக்கிட்டு, கோவிந்துவைத் தேட, வாலிபர்கள் கொடுத்த ‘அன்பளிப்பில்’ மில்லியடித்து ‘மஜா’வாக இருக்கும் அவனை நையப் புடைத்தாள்!

குஜாலான இந்த ஒரே வாக்கியக் குஷ்பு கதையை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.

இது, பழைய ’குங்குமம்’[07.08.83] இதழில் வெளியானது. [கதாசிரியர் பெயரைக் குறித்து வைக்கவில்லை. மன்னித்திடுக].

மேற்கண்ட கதைகள் எல்லாம் ‘பொழுது போக்கை’ மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டவை.

’நகைச் சுவை’ சார்ந்த கதைகளும், மர்மக்[crime] கதைகளும் இவ்வகை இலக்கிய வகையுள் அடங்கும்.

தேவன், துமிலன் போன்றோருக்குப் பிறகு பாக்கியம் ராமசாமி மட்டுமே நகைச்சுவைக் கதைகள் எழுதுகிறார்.

மர்மக் கதைகளைப் பலரும் எழுதுகிறார்கள்.

இவ்வகைக் கதைகளின் சம்பவங்கள் கற்பனையானவை எனினும், அவை உண்மையானவை என வாசகன் நம்பும் வகையில் இருப்பது அவசியம். அவ்வாறு எழுதப்படும் கதைகளே தரத்தில் உயர்ந்து நிலைத்த வாழ்வைப் பெறும்.

இன்று, முன்னணி மர்மக் கதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் இந்திரா சவுந்தர்ராஜன்.

14.11.12 தேதியிட்ட குமுதம் இரட்டைத் தீபாவளி மலரில், ‘தந்திரமாய் ஒரு கொலை’ என்னும் இவரின் சிறுகதை வெளியாகியிருக்கிறது.

பொழுதுபோக்குக் கதை என்றாலும் வாசகரின் அறிவை மழுங்கடிக்கக் கூடாது; நினைத்து நினைத்து மகிழ வைப்பதாக இல்லையெனினும், கணநேர இன்புறுத்தலுக்கேனும் அது பயன்படுவதாக இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் இவரின் கதையை அணுகுவோம்.

இந்தக் கதையின் அதி முக்கிய கதை மாந்தர்களான [அதாங்க கதாபாத்திரங்கள்] சண்முக ராஜு, ரைஸ்மில் ஆறுமுகம், கேசவரங்கன் ஆகியோரால்,  ”அய்யா” [மரியாதை காரணமா அவருக்குப் பேர் வைக்கலஎன்று அழைக்கப்படுபவர் தஞ்சை மாவட்டத்தின் ‘பெரிய புள்ளி’. வரவிருக்கிற தேர்தல்ல ‘எம்.பி’ ஆகக் கனவு காண்பவர்.

கேசவரங்கனுக்கும் இதே கனவு இருந்துச்சி. இருபது அடியாட்களைச் சேர்த்துட்டு அவரைப் போட்டுத் தள்ளிட்டான். [அவர் உடம்புல 64 குத்துங்களாம்! படிக்கப் படிக்க என் உடம்பு வெடவெடன்னு நடுங்கிச்சி. இன்னமும் நடுக்கம் போகலீங்க!!!]

அய்யா மண்டையைப் போட்டதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனார் ரைஸ்மில் ஆறுமுகம். காரணம், ஒரு ரசீதுகூட இல்லாம, அய்யாகிட்ட இருபது லட்சத்தைக் கொடுத்திருந்தார் அவர்!

அய்யாவோட மகன்கிட்ட பணத்தைக் கேட்டாரு. அவன், “எனக்கு எதுவுமே தெரியாது. அய்யா, நகை நட்டு, பணம் எல்லார்த்தையும் ரகசிய இடத்தில் வெச்சுட்டார்”னு சொல்லிட்டான்.

பாவம் நம்ம ரைஸ்மில் ஆறுமுகம்!

’எம்.பி’ ஆக ஆசைப்பட்டுட்டிருக்கிற சண்முகராஜுவிடம், “அய்யாவோட ஆவிகிட்டப் பேசிப் பணம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கணும். ஆவியோட பேசுற ஒருத்தரை உனக்குத் தெரியுமாமே, கூட்டிட்டுப் போ”ங்கிறார்.

இவரைப் பயன்படுத்தி, எம்.பி பதவிக்குப் போட்டியா இருக்கிற கேசவரங்கனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் போடுறான் சண்முகராஜு.

பம்புசெட் ரூமுக்குள்ள தன் சொந்தப் பணம் 20 லட்சத்தை ஒளிச்சி வெச்சுட்டு...

ஆவியோட பேசுற ஒருத்தனைக் கைக்குள்ள போட்டு, அவனை அய்யா ஆவியோட பேச வெச்சி [எல்லாம் ’செட்டப்’தாங்க] , “எம்.பி. பதவிக்குப் போட்டி போட இருந்த என்னைக் கேசவ ரங்கன்தான் கொலை பண்ணிட்டான்”ன்னு சொல்ல வைக்கிறான்.

அய்யா ஆவி, பணம் இருக்கிற இடத்தை ரைஸ்மில் ஆறுமுகத்துக்குச் சொன்னதோட, கேசவரங்கனைக் காலி பண்ணிடச் சொல்லி, ஆறுமுகத்துக்கு உத்தரவு போடுது.

20 லட்சம் திரும்பக் கிடைச்ச சந்தோசத்தில், ஆறுமுகம் கேசவரங்கனைக் காலி பண்ணிடறான்.

சண்முக ராஜு ஆனந்தத்தில் மிதக்கிறான்.

இதோட கதையை முடிச்சுட்டா, தீயவனான சண்முகராஜு தண்டிக்கப்படலையேன்னு நீங்களும் நானும் வருத்தப்படுவோம் இல்லீங்களா?

அதனால..............

சண்முகராஜு, ஜாலியா காரில் போகும்போது, பின் சீட்டில் பதுங்கியிருக்கிற கேசவரங்கன் ஆவி, ஒரு புகை மூட்டம் போல இருந்து, “என்கிட்டேவா உன் தந்திரம்?”ன்னு கேட்டுச்சாம். [ஹா...ஹா...ஹான்னு சிரிச்சுதுன்னு வெச்சுங்குங்க].

சண்முகராஜுக்கு உதறல் எடுக்க, அவன் ஓட்டிட்டுப் போன கார், மேம்பாலத்தை உடைச்சுட்டுக் கீழே கீழே விழ ஆரம்பிச்சுதுங்களாம்!

இப்படியொரு மர்மக் கதையை இதுக்கு முந்தி நீங்க படிச்சதில்லைதானே?

உங்க வீட்டில் உள்ள அத்தனை பேரையும் இதைப் படிக்கச் சொல்லுங்க. உங்க ஃபிரண்ட்ஸ்கிட்டேயும் சொல்லுங்க.

நீங்க அனுபவிச்ச இன்பத்தை அவங்களும் அனுபவிக்கட்டும்.

ஆனா, ஒன்னு.............

”அய்யா ஒரு பெரிய புள்ளியாச்சே, அவர் போயி 20 லட்சத்தை பம்ப்செட்ல ஒளிச்சி வைப்பாரா?”ன்னு அவங்க கேள்வி கேட்டா, ‘திருதிரு’ன்னு முழிக்காதீங்க. “வரிவரியா பத்து தடவை படி. புரியும்”னு சொல்லிச் சமாளிச்சுடுங்க. “ஆமா, எவ்வளவு பெரிய எழுத்தாளர். இப்படி மடத்தனமா எழுதியிருக்காரே?”ன்னு உளறிக் கொட்டிடாதீங்க.

“அய்யா கிட்ட கொடுத்த 20 லட்சமும் கிடைச்ச பிறகு. அவர் சொல்றார்னு ரைஸ்மில் ஆறுமுகம் ஒரு கொலைக் குற்றவாளியா ஆவாராங்கிற சந்தேகம் சண்முகராஜுக்கு ஏன் வரலை?”ன்னும் அவங்க கேள்விக்கணை தொடுக்கலாம். 

“ரைஸ்மில் ஆறுமுகம் மூலமா, தன்னைத் தீர்த்துக் கட்டினது சண்முகராஜுதான்னு கேசவரங்கன் ஆவிக்கு எப்படித் தெரிஞ்சுது?”

இப்படியெல்லாம் மேலே மேலே கேள்விகள் கேட்டு அவங்க உங்களைத் திணறடிப்பாங்க. எப்படிச் சமாளிக்கறதுன்னு நல்லா யோசிச்சி வெச்சுக்கோங்க.

என்ன................இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கு. எங்கே ஓடுறீங்க?

                                *                                    *                                        *

அடுத்து வருவது, புஷ்பா தங்கதுரையின் ‘அஞ்ஞானம்’ என்னும் கதை.

ஆல்பர்ட் ஸ்டீபன் என்னும் விஞ்ஞானி ஒரு கருவி கண்டிபிடித்தார்.

‘ஏ’என்பவனின் காதுகளுக்குச் சற்று மேற்புறமாக, இரு பக்கங்களிலும் இரு ‘ரிஸீவிங் ஆண்டெனாக்களை’ப் பொருத்திவிட வேண்டியது. பாக்கெட் சைஸ் கருவியை, ஆறு வோல்ட் பாட்டரி போட்டு, பாண்ட் பைக்குள் அவனைப் போட்டுக் கொள்ள வைப்பது.

அதே மாதிரி, ‘பி' என்பவன் காதுகளுக்கு மேல் ஒரு ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்களைப் பொருத்திவிட வேண்டியது.

இப்போது விசையைத் தட்டிவிட்டால் போதும். ‘பி’ என்ன உணர்ச்சிகளை அடைகிறானோ, அதை அப்படியே இம்மி பிசகாமல் ‘ஏ’ என்பவனும் அனுபவிப்பான்.

’ நாஸா’ விஞ்ஞானிகள், நான்கு பேரை ‘செவ்வாய்’க்கு அனுப்புகிறார்கள்.

அவர்களின் காதுகளில் ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்கள் பொருத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்று, துரிதகதியில் உற்பத்தி செய்த, ‘ரிஸீவிங் ஆண்டெனா’க்களை அமெரிக்க மக்கள் பொருத்திக் கொள்கிறார்கள்.

செவ்வாயில், வீரர்கள் பெற்ற உணர்ச்சிகளை இந்த மக்களும் உணர்வார்கள்.

செவ்வாய் மனிதர்கள் வீரர்களைத் தாக்குகிறார்கள்.

அவர்கள் அலற, அமெரிக்க மக்களும் அலறுகிறார்கள்.

இதுதான், புஷ்பா தங்கதுரை எழுதிய பெரிய கதையின் சிறிய சுருக்கம்.

கருவியைப் பற்றிச் சொல்லும் போதே, ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா பொருத்திக் கொண்டவரின் நல்லது கெட்டது என அனைத்து உணர்ச்சிகளையும், ரிஸீவிங் ஆண்டெனா பொருத்திக் கொள்பவர் அனுபவிப்பார் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

அப்புறம் என்ன நாஸா, பூஸா, செவ்வாய், ஆராய்ச்சி எல்லாம்?

இப்படிப்பட்ட கருவிகளக் கண்டுபிடிப்பது சாத்தியமா? அது எப்போது? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இப்போதே இப்படியொரு கற்பனைக் கதை படைத்து, அமெரிக்க விஞ்ஞானிகளையும் நாஸாவையும் சாடுகிறார் புஷ்பா தங்கதுரை! ”விஞ்ஞானத்தைக் கொல்லுங்கள்” என்று மக்கள் கோஷங்கள் எழுப்புவதாகக் கதையை முடிக்கிறார்.

இக்கதை மூலம் அதே கோஷத்தை இவரும் எழுப்புகிறாரா?

அறிவியல் துறையில் வளர்ச்சி பெறாத[???] இந்தியா திருப்தியோடு வாழ்வதாகப் பின் குறிப்பில் குறிப்பிடுகிறார். இது எத்தனை சதவீதம் உண்மை?

”ஐயா எழுத்தாளரே, நீண்ட பெரிய கட்டுரையில் விரிவாகச் சொல்லவேண்டியதை ஒரு சிறுகதைக்குள் அடக்க முயன்றிருக்கிறீகள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

                             *                                           *                                            *

இதையடுத்து, வெ.இறையன்பு படைத்த, ‘துறந்தான்! மறந்தான்’ சிறுகதை.

தரமான ஒரு படைப்பைத் தர வேண்டும் என்றுதான் இறையன்பு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவர் எண்ணம் ஈடேறவில்லை.

ஒரு மன்னன், 20 ஆண்டுகள் உழைத்துத் தன் நாட்டை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறான்.

மக்கள் அவனைத் தெய்வமாக மதிக்கிறார்கள்.

இரண்டாண்டுகள் மழை பொய்த்துப் போகிறது.

துயரத்தில் மூழ்குகிறான் மன்னன்.

ஒரு மடாலயத் தலைவரைத் தேடிப் போகிறான்.

”யாரோ செய்த பாவம்தான் மழை பொய்த்ததற்குக் காரணம். அதற்கான பிராயச்சித்தமே நாட்டைக் காப்பாற்றும்” என்கிறார் அவர்.

“பிராயச்சித்தமாக என் உயிரைத் தியாகம் செய்வேன்” என்று சொல்லிப் பாடலிபுத்திரம் திரும்புகிறான் மன்னன்.

மழை பெய்தது. நாடு செழித்தது.

மன்னன், ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு, ’ஷ்ரவணகுண்ட்’ என்னும் இடத்தை அடைகிறான்.

தியானத்தில் அமர்ந்து, உண்ணா நோன்பிருந்து உயிர்விடத் துணிகிறான். [மன்னன் பெயர் சந்திரகுப்த மவுரியன் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்]

இது இந்தச் சிறுகதையின் சுருக்கம்.

கதையின் தொடக்கத்திலிருந்தே பல சந்தேகங்கள் எழுகின்றன.

மழை பெய்து நாடு வளம் பெறுவதும், அது பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடுவதும் இயற்கை என்பது யாவரும் அறிந்தது. அதனை மன்னனும் அறிந்திருக்க வேண்டும்.

அவ்வாறிருக்கையில், வறட்சியை நினைத்து அவன் துவண்டு போவதும், ஒரு மடாலயத் துறவியைத் தேடிப் போவதும் ஏன்?

யாரோ பாவம் செய்ததாகத் துறவி சொல்கிறார். அவர் யார்?

யாரோ செய்த பாவத்துக்கு, மிக நல்லவனான மன்னன் எப்படிப் பொறுப்பாவான்?

இது பற்றி, எழுத்தாளர் ஏன் சிந்திக்கவில்லை?

மன்னன் நோன்பிருந்து உயிர் துறப்பதாக முடிவெடுத்ததும் மழை பெய்ததே, அது எப்படிச் சாத்தியமாயிற்று?

வெ. இறையன்புவின் அடுத்த கதை முழுமை பெற்ற ஒன்றாக அமைய நமது வாழ்த்துகள்.

                                 *                                             *                                  *

ஆறு சிறுகதைகளைப் படித்து மனம் சலித்த நமக்கு ஆறுதல் தருவதாக அமைவது, ’மேலாண்மை பொன்னுச்சாமி’யின் ‘காவல் வேட்டை’

ஏழைப் பாட்டாளி மக்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் எதார்த்தமான கதைகளாக வடித்துத் தருகிற பொன்னுச்சாமி, இந்தக் கதையில், ஒரு ஏழை விவசாயி ஆன முத்துசாமி, அறுவடைக்குக் காத்திருக்கும் தன் நிலத்துக் கடலைப் பயிரைக் கொள்ளை போகாமல் காப்பதற்குப் படும் பாட்டை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்.

இருளைக் கண்டால் அஞ்சி நடுங்கும் முத்துசாமி நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிடுகிறார். அந்த அளவுக்குப் பாத்திரப் படைப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

இரண்டு நபர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவர் கடலைக் காட்டைக் காவல் காக்கச் செல்லும் நிகழ்வை, நகைச்சுவை உணர்வுடன் அவர் விவரித்திருக்கும் பாங்கு வெகுவாகப் பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், குமுதம் தீபாவளி மலருக்குக் கதை வழங்கிய எழுவரில் ,மேலாண்மை பொன்னுச்சாமி மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

































வியாழன், 8 நவம்பர், 2012

குமுதம் தீபாவளி மலர்[14.11.2012] சிறுகதைகளும், குமுறும் ஒரு வாசகனும்! - பகுதி1

7 பிரபல கதாசிரியர்களின் சிறுகதைகளுக்கான ‘காரசார’ விமர்சனம்!

எஸ்.ராமகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், கவுதம சித்தார்த்தன், வெ.இறையன்பு, புஷ்பா தங்கதுரை, இந்திரா சவுந்திரராஜன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகிய  பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளைச் சிறப்பிதழாக்கித் தமிழ் வாசகர்களுக்குத் ’தீபாவளி’ப் பரிசு வழங்கியிருக்கிறது  குமுதம்[14.11.2012].

இந்தப் பரிசால், குமுதத்தின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி. பிரபலக் கதாசிரியர்கள் மேலும் பிரபலம் ஆவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

இவை பற்றியது அல்ல நம் சிந்தனை.

மாறுபாடுகளும் போராட்டங்களும் நிரந்தரம் ஆகிப்போன மனித வாழ்வில், தொல்லைகளும் துயரங்களும் பெருகிக் கொண்டே போகிற அவலம் நீடிக்கிறது.

இந்த அவலத்தைப் போக்க, இவர்களின் படைப்புகள் உதவுமா?

சாதி மதப் பிணக்குகள், மூட நம்பிக்கைகள் போன்ற பல்வேறு நோய்களால் நலிவுற்றிருக்கும் சமுதாயத்தை இவர்களின் எழுத்துகள் சீர்திருத்துமா?

மனித நேயத்தை வளர்க்குமா?

கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளைப் படிக்கும் போது, இத்தகைய கேள்விகள் நம் மனதில் எழுவது இயல்பாகிப் போன ஒன்று.

பயனுள்ள இத்தகைய வினாக்களுடன் மேற்கண்ட ஏழு பிரபலங்களின் சிறுகதைகளையும் படித்த போது முகிழ்த்த எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

கதைத் தலைப்பு: மழையாடல்.

கதாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

இரவு நேரம்.

மழை கொட்டோகொட்டுன்னு கொட்டுது.

’பத்மவிகாரை’யில், தம்மசூத்திரம் படிக்கிற, சங்கவை முதலான ஏழு புத்த பிக்குணிப் [இளம்] பெண்கள், தங்களுடைய மழைக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் கதை. [உயிர் வாழும் இக்காலப் பெண்களை உரையாட விட்டுக் கதை சொல்லியிருக்கலாமே என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இவர் தயாரித்த பட்டியலின்படி, நூறு சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இது பற்றிச் சிந்தித்திருக்க மாட்டாரா என்ன?]

பெண்கள் நிகழ்த்தும் உரையாடல் மூலம், மழை சார்ந்த தத்துவக் கருத்துகளையும் வாரி இறைத்திருக்கிறார் கதாசிரியர்.

’அபரா’ என்ற பெண்ணிடம், “மழையைப் பற்றி நீ  என்ன நினைக்கிறாய்?” என்று சங்கவி கேட்க, [இந்தக் காலத்து நவநாகரிகக் குமரிகளுக்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்கத் தெரியுமா என்ன?!] அவள் சொல்கிறாள்.....

“உலகிலேயே மிகப் பெரிய தியானம் மழை...”

‘மழை’...புரியுது.

தியானமும் புரியுது. உலகிலேயே மிகப் பெரிய தியானம்.....ஏதோ புரிகிற மாதிரி இருக்கு. சரி.....

அதென்னங்க ‘தியானம் மழை?

மழை என்பது தியானமா? தியானமே மழையா?

அதாவது, மழை என்பது மிகப் பெரிய தியானத்துக்குச் சமம்னு திரு. ராமகிருஷ்ணன் சொல்றாருங்களா?

எனக்குப் புரியல. உங்களுக்குப் புரிஞ்சா விளக்கமா ஒரு பின்னூட்டம் போடுங்களேன்.

அபரா தொடர்ந்து சொல்லுது: “வானிலிருந்து பெய்யும் போது மழை ஓசை எழுப்புவதில்லை. ஏந்திக் கொள்ளும் மண்தான் ஓசை எழுப்புகிறது. அப்படித்தானே மனமும்?

இங்கே மனம் என்பது மழையா, மண்ணா? மனம் எப்போதெல்லாம் ஓசை எழுப்பும்?

ஒரு மண்ணும் புரியலையே ஐயா!

இம்மாதிரி, கேட்டற்கரிய தத்துவங்களுக்கெல்லாம் விளக்கம் தர ஆரம்பிச்சா, ஆறு பக்கத்தில் முடிந்த இக்கதை அறுபது பக்கங்களுக்கு நீளும்னு படைப்பாளர் பயந்துட்டாரோ?

’ஹரிகா’ என்கிற துறவிப் பொண்ணு சொல்லுது: “மழையை நான் வெறுக்கிறேன். “அது புதையுண்ட ஆசைகளைக் கிளரச் செய்கிறது...”

சிறுசிறு குழைந்தைகளிலிருந்து குடுகுடு கிழங்கள் வரை அத்தனை பேர் ஆசையையும் கிளறிவிடுமா?

.”மழை ஒரு தண்டனை. மழை ஒரு ரகசிய உரையாடல். மழை ஒரு பிதற்றல்.”

இப்படி ஏதேதொ சொல்லுதுங்க அந்தப் பொண்ணு.

இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்குத்தாங்க புரியும். நான் ஒரு மரமண்டைங்க.

’பிரஜா’ங்கிற பொண்ணு, ”இருட்டு நம் அந்தரங்க முடிச்சை அவிழ்க்குது”ன்னு சொல்லுது.  மழையைப் பற்றி அல்ல; இருட்டைப் பற்றிய தத்துவம் இது. ஆனாலும் புரியுது.

அப்புறம், ஒரு பொண்ணு, மழைக் காலத்தில் தன் அப்பா செத்துப் போனதைச் சொல்லுது. அதுக்கப்புறம் அம்மா உபவாசம் இருந்து மறைந்து போனதெல்லாம் சொல்லி வருத்தப்படுது.

இப்படி, மத்த பருவங்களில் நடப்பதற்குச் சாத்தியமான சம்பவங்களையும் மழைக் காலத்தில்  நடக்குற மாதிரி ’நிகழ்ச்சித் திணிப்பு’ம் செய்திருக்கிறார் எழுத்தாளர்.

மழைக்கு ஒதுங்கின ஒரு பிச்சைக்காரன், ”மழை பின்னாடியே வருது. நான் அதைத் துரத்துறேன்”ன்னு தத்துவம் பேசுறதை இன்னொரு பெண் மூலமா சொல்லி நம்மை விழி பிதுங்க வைக்கிறார் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன்!

கதையில்........

மழைக்குள் சக்கரம் மாட்டிக் கொள்ள, மாடு இழுக்க முடியாமல் கீழே விழ, மாட்டுக்காரன் அதை ஓங்கி ஓங்கி அடிக்க, மாடு அவலக் குரல் எழுப்புகிற ஒரு காட்சி மட்டுமே நம் நெஞ்சைப் பிசைவதாக இருக்கிறது.

மற்றபடி, கதை முழுக்க, எவருக்கும் புரியாத தத்துவ மழைதான்!

எஸ்.ராமகிருஷ்ணன் விரும்பினால், இந்தத் தத்துவங்களை விளக்கி ஒரு தனிக் கட்டுரை எழுதலாம்.

செய்வாரா?


                      *                                                  *                                          *


அடுத்து வருபவர், ‘முன்னணி’ எழுத்தாளர் ‘சுப்ரபாரதி மணியன்’.

சுய புத்தியோடு இருக்கிற ஒருவருக்குப் புத்தி பேதலிக்கணும்னா, இவருடைய, ‘தங்கமே தங்கம்’ சிறுகதையைப் படிக்கலாம்.

அரை லூஸாக இருப்பவர் படித்தால் முழு லூஸாவர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!

அந்த அளவுக்கு அரை வேக்காட்டுக் கதை இது.

அன்றாடம், தங்கத்தின் விலை அறிவதில் ஆர்வம் காட்டும் சந்தானலட்சுமியின் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது கதை.

இவளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கிறாள் சந்தியா. இருவருக்குமிடையே உரையாடல்.

இருவருக்கும் என்ன உறவு என்பது கதையின் முடிவு வரை சொல்லப்படவில்லை.

கதையின் இறுதிப் பகுதியில் வருகிற செண்பகலட்சுமிக்கும் இதே சந்தியா வெற்றிலை மடித்துத் தருகிறாள். இங்கேயும் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

கதையின் ஆரம்பப் பகுதியில், சந்தானலட்சுமி, பேருந்தில் போகும் போது, காதுத் தோடு கழன்று விழ ஒரு பெரியவர் எடுத்துத் தருகிறார்.

சந்தானலட்சுமி தொடர்பான இந்த நிகழ்வுகளுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை!

இதனை அடுத்துத் தொடங்கும் காட்சியில்.....

செண்பகலட்சுமியை அறிமுகப் படுத்துகிறார்.

‘இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில், அவளுடைய சம்பாத்தியம் முழுதும் போய்விட்டது’ என்று குறிப்பிடுகிறார்.

ஒரு அக்கா, ’கலா’ என்பது தெரிகிறது. இன்னொரு அக்கா யார் என்பது கதை முடிந்த பிறகும் புரியாத புதிராகவே உள்ளது.

அக்காக்களைக் கரையேற்றுவதற்காகப் பொட்டு நகைகூட அவள் போட்டுக் கொள்ளவில்லை என்று படிப்பவர் காதுகளில் பூச்சுற்றுகிறார் ஆசிரியர்.

குளியலறையில் கிடந்த மோதிரத்தைத் தன் விரலில் போட்டுக் கொள்கிறாள் செண்பகவல்லி. சித்தப்பா மகள் வந்து கேட்க, அவளிடம் கொடுத்துவிடுகிறாள்.

’செண்பகலட்சுமிக்குப் பிடித்திருந்தது அந்த மோதிரம்’ என்று முடிகிறது கதை.

”இரண்டு தமக்கைகளுக்கு மணம் செய்து வைத்தவளுக்கு இத்தனை காலமும் ஒரு மோதிரம் போட்டுக் கொள்ளக்கூட வக்கில்லையா? மனம் இல்லையா?” என்னும் நம் கேள்விகளுக்குக் கதையில் எங்கேயும் விடையில்லை.

கதையில் கருவே இல்லை. நிகழ்ச்சியமைப்பிலும் தெளிவான திட்டமிடல் இல்லை. பாத்திரப் படைப்பிலும் குழறுபடி.

‘பரவாயில்லை’ என்று சொல்லத்தக்க குறைந்தபட்ச இலக்கியத் தகுதிகூட இல்லாத இந்தக் கதையைக் குமுதம் பிரசுரம் செய்தது எப்படி ?

குமுதம்தான் பதில் சொல்ல வேண்டும்.


                               *                                             *                                  


அடுத்து, கவுதம சித்தார்த்தனின்,  ’எப்படிச் சொல்வது முதல் காதலை’ என்னும் 
சி.கதை.

இது சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கதையின் முதல் அத்தியாயம்!

இவரிடம், வலியப் போய், தீபாவளி மலருக்குக் கதை கேட்டதால், நிராகரிப்பது நாகரிகம் அல்ல என்று கருதிக் கதையை வெளியிட்டுவிட்டது குமுதம்!

ஆண்டுதோறும்,  சித்திரை மாதத்தில், ’வேட்டைக்காரன்கோயில்’ என்னும் ஊர்வாசிகள் பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு வேட்டையாடச் செல்வது வழக்கம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை. [இது எங்கும் உள்ள வழக்கம்தான்]

ஒரு காட்டுப் பன்றியின் நெற்றியில் திலகம் வைத்து ஓடவிட்டு, வானத்தில் அம்பெய்து வேட்டையைத் தொடங்கி வைக்கிறார் கோயில் பூசாரி.

பன்றியை விரட்டிச் செல்கிறது ஆடவர் கூட்டம்.

சிலம்பனும் தனியனாகப் பன்றியைத் தொடர்கிறான்.

கதை நாயகனான சிலம்பனுக்குப் போட்டியாகத் தலைப்பாகை கட்டிய ஓர் இளைஞன்!

பன்றியை வீழ்த்தியதில் இருவருக்கும் பங்கு.

வீழ்த்தப்பட்ட பன்றிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வாக்குவாதம் செய்கையில் தலைப்பாகை வாலிபன் ஒரு பெண் என்பது தெரிகிறது.

இருவருமே, மற்றவருக்கு விட்டுக் கொடுக்க முன் வந்த நிலையில், வேட்டை நேரம் முடிந்ததற்கான சங்கநாதம் ஒலிக்கிறது.

அப்புறம்..........மீதிக் கதை..........?

[வெள்ளித் திரையில் காண்க!]

ஒரு சினிமா கதையின் முதல் சீன்,  நம்பர் 1 வார இதழின் தீபாவளிச் சிறப்பிதழில் ’சிறுகதை’யாக இடம் பெற்றது எவ்வகையில் என்று கேட்க நினைக்கிறீர்களா?

இதோ விடை...........

கதை எழுதியவர், உயர்ரகச் சிறுகதைப் படைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கவுதம சித்தார்த்தன்!

                            *                                       *                                            *

குறிப்பு:  எஞ்சிய நான்கு சிறுகதைகள் பற்றிய விமர்சனம், நாளை[09.11.2012] வெளிவரும்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

































செவ்வாய், 6 நவம்பர், 2012

காதலா, காமமா?

'குமுதம்' வழங்கும் 'மிக உயர்தர’ ஒ.ப.கதை!

‘புகுமுன்’ உரை:

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா  உறக்கம்’   

இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான்.

இவை முற்றிலும் செயற்கையானவை.

இந்தத் தேவையற்ற ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.
................

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தடங்கல் ஏதுமின்றி, உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது.


மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு
, இது சாத்தியம் இல்லாமல் போனது. 


பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களுமே, தனிமனிதனின் இயல்பான உடலுறவு சுகத்திற்குப் பெரும் தடைக் கற்களாக அமைந்துவிட்டன. 

தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே ஆண்டுக் கணக்கில் செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இதிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலை தொடர்ந்த போது, ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து உருகுவதிலும் முழுத் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரிக் கற்பனை சுகங்களுக்குக் கவிதை, கதை, ஓவியம், சிற்பம் என்று பல்வேறு கலை வடிவங்கள் தரப்பட்டன.  

இம்மாதிரியான கற்பனை சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’ என்று பெயர் சூட்டினார்கள்.

முற்றிலும் பொய்யான, கற்பனையான இந்தக் காதல், வாலிப உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது; படுத்துகிறது;


காதல் தோல்வியால், பலர் தம் அரிய உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனி, கதையைப் படியுங்கள்.

கதை: காதல் போயின்...

இதழ்: குமுதம்[17.08.2000]

கதாசிரியர்: ப.பரமசிவம்

திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.

அவள் போகும்போது, ”உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.

செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.

’விஷம் தின்று சாகலாமா? ‘

‘எது விஷம்?’

’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’

ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.

’தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.

அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.

அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.

மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.

“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.”- ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.

ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.

“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, ’அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.

ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.

*************************************************************************************************************************************************

















வெள்ளி, 2 நவம்பர், 2012

குமுதம், தரத்திலும் ’நம்பர்1’ ?!?!

குமுதத்தில் என்[’பசி’பரமசிவம்] கதைகள்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் எழுதிய இரண்டு ஒரு பக்கக் கதைகள் ‘குமுதம்’ இதழில் வெளியாகியுள்ளன.

குமுதம்: 24.10.2012.

கதை: பட்டாசு [ப.பரமசிவம்]

புள்ளைகளுக்குப் பட்டாசு வாங்கணும்.ரூபா குடு” என்றான் முருகேசன். அவனை முறைத்த மரகதம், ”குடுக்கிற பணத்தைக் குடிச்சே தீர்த்துடுவே. உன் வேலையைப் பாரு” என்றாள்.

வெளியே தட்டாம்பூச்சி பிடித்துக் கொண்டிருந்த மகன் ராசுவிடம், “அம்மாகிட்டே பணம் வாங்கி வா. பட்டாசு வாங்கப் போகலாம்” என்றான்.

“பட்டாசு வேண்டாம்” என்றான் ராசு.

“ஏண்டா?”

போன வருசம் தீபாவளி அன்னிக்கு நீ குடிச்சிட்டு வந்து அம்மா மண்டையை உடைச்சுட்டே. அது ஆஸ்பத்திரியில் இருந்துச்சு. நாம தீபாவளி கொண்டாடல. போன வருசம் வாங்கின பழைய பட்டாசு அப்படியே இருக்கு” என்றான் ராசு.

அதிர்ச்சியடைந்த முருகேசன், நீண்ட நேர யோசனையில் ஆழ்ந்தான்.முதன் முறையாக, ‘இனி குடிப்பதில்லை’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டான்.

                     *                                         *                                                  *

குமுதம்: 12.09.2012

கதை: அப்பா [நாமக்கல் பரமசிவம்]

”அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார்” என்றான் பரணி.

“எந்தச் சீனுடா?” சும்மா கேட்டு வைத்தான் மாதவன்.

“என் கிளாஸ்மேட்பா. புதுக் கார்ல கோயிலுக்குப் போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.”

“வாங்கலாம்”

“நாளைக்கே வாங்கணும்.”

மகனை இழுத்து அணைத்துச் சொன்னான் மாதவன். “கார் வாங்க நிறையப் பணம் வேணும். இன்னும் அஞ்சு வருசத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னைக் காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்துப் புள்ளையா விளையாடிட்டு வா.”

“நம்ம ரெண்டு பேருமே அத்தக் கூலி. அஞ்சு வருசத்தில் கார் வாங்கிடுவேன்னு 
குழந்தைகிட்டே எதுக்குப் பொய் சொன்னீங்க?” மாதவனின் மனைவி கேட்டாள்.

“இப்போ அவனுக்கு அஞ்சு வயசு. அஞ்சு வருசம் போனா நம்ம பொருளாதார நிலைமை அவனுக்குப் புரிய ஆரம்பிச்சுடும். அந்தப் பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களைத் திணிக்க வேண்டாம்.”

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு: 

இப்பதிவுக்கு நான் எதிர்பார்க்கும் பின்னூட்டமும், அதற்கான என் பதிலும்.....

“உன்னோட ரெண்டு கதை வெளியிட்டதால, குமுதம் ‘தரத்திலும் நம்பர் 1’ன்னா ஒசந்திடிச்சா?”

“அது வந்துங்க.....ஹி...ஹி...ஹி...”

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

முக்கிய குறிப்பு:

நாளைய [06-11-2012] பதிவின் தலைப்பு.............. 


 ‘காதலா, காமமா?’

படிக்கத் தவறாதீர்!