அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 6 நவம்பர், 2012

காதலா, காமமா?

'குமுதம்' வழங்கும் 'மிக உயர்தர’ ஒ.ப.கதை!

‘புகுமுன்’ உரை:

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா  உறக்கம்’   

இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான்.

இவை முற்றிலும் செயற்கையானவை.

இந்தத் தேவையற்ற ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.
................

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தடங்கல் ஏதுமின்றி, உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது.


மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு
, இது சாத்தியம் இல்லாமல் போனது. 


பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களுமே, தனிமனிதனின் இயல்பான உடலுறவு சுகத்திற்குப் பெரும் தடைக் கற்களாக அமைந்துவிட்டன. 

தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே ஆண்டுக் கணக்கில் செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இதிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலை தொடர்ந்த போது, ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து உருகுவதிலும் முழுத் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரிக் கற்பனை சுகங்களுக்குக் கவிதை, கதை, ஓவியம், சிற்பம் என்று பல்வேறு கலை வடிவங்கள் தரப்பட்டன.  

இம்மாதிரியான கற்பனை சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’ என்று பெயர் சூட்டினார்கள்.

முற்றிலும் பொய்யான, கற்பனையான இந்தக் காதல், வாலிப உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது; படுத்துகிறது;


காதல் தோல்வியால், பலர் தம் அரிய உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனி, கதையைப் படியுங்கள்.

கதை: காதல் போயின்...

இதழ்: குமுதம்[17.08.2000]

கதாசிரியர்: ப.பரமசிவம்

திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.

அவள் போகும்போது, ”உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.

செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.

’விஷம் தின்று சாகலாமா? ‘

‘எது விஷம்?’

’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’

ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.

’தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.

அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.

அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.

மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.

“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.”- ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.

ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.

“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, ’அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.

ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.

*************************************************************************************************************************************************

















2 கருத்துகள்:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு