திங்கள், 31 டிசம்பர், 2012

’குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனுக்கும் ’குங்குமம்’ ஆசிரியருக்கும் ஒரு போட்டி!!!

கீழ் வரும் ‘தப்புத் தப்பாய் ஒரு காதல்’ என்னும் ஒ.ப.கதையின் ‘முடிவு’ என்ன???

குமுதம், குங்குமம் ஆகிய இரண்டு முன்னணி வார இதழ்களும் போட்டி போட்டிக்கொண்டு ஒ. ப. கதைகளை வெளியிடுகின்றன. இதன் ஆசிரியர்களுக்கான ‘சிறப்புப் போட்டி’ இது.

வெற்றி பெறுபவர்களுக்கு, ‘சிறந்த இதழாசிரியர்’ என்னும் விருது வழங்கப்படும்!

தோற்றால்..........

பாதகமில்லை. இத்தளத்தில் வெளியாகும் ஒ.ப.கதைகளைத் தொடர்ந்து படித்துத் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இதோ கதை..........

தலைப்பு:                    தப்புத் தப்பாய் ஒரு காதல் !

ந்தக் கல்லூரி வளாகத்தின் வடகிழக்குத் திசையில், சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த புங்கமரத்தடியில் குப்புசாமி காத்திருந்தான்.

நேற்று அவன் ரதிரேகாவுக்குத் தந்த காதல் கடிதத்திற்கு இன்றே பதிலை எதிர்பார்த்தான்.

தன்னோடு படிக்கும் அத்தனை குமரிகளுக்கும் அவரவர் அழகுக்கேற்ப மதிப்பெண்கள் போட்டு, நீண்ட பட்டியல் தயாரித்து, தீர யோசித்து இந்த ரதிரேகாவைத் தேர்வு செய்தான் குப்புசாமி.

அவளை நினைத்து நினைத்து உருகுவதாக ஒரு காதல் கடிதம் தீட்டினான்.

ஆய்வுக்கூடத்தில், எல்லோரும் கருமமே கண்ணாய் இருந்தபோது, ஓசைப்படாமல், அவள் கையில் கடிதத்தைத் திணித்து, “நாளை பகலுணவு இடைவேளையில் உனக்காகப் புங்க மரத்தடியில் காத்திருப்பேன்” என்று அவன் கிசுகிசுத்தபோது, அவள் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா! அப்போதே முக்கால் கிணறு தாண்டிவிட்டதாக நினைத்தான் குப்புசாமி.

குப்பு தப்பு வழியில் போகிற பையனல்ல. தானுண்டு தன் படிப்புண்டு என்றுதான் இருந்தான். வயசுக் கோளாறு கரணமாகக் கன்னியரைப் பற்றிய நினைப்புக்கு மனதில் இடம் தந்துவிட்டான்.

அந்த ஆண்டுதான் கல்லூரியில் காலடி வைத்த வேலுச்சாமி,  “இருபத்தொரு வயசில் இருபத்தேழு பெண்களைக் காதலிச்சிட்டேன்” என்று தம்பட்டம் அடித்தது, குப்புசாமிக்குள் அடங்கிக் கிடந்த காதல் பேயை உசுப்பி விட்டுவிட்டது.

தன் வகுப்புத் தோழி மோகனாவுக்கு மட்டும் முப்பத்தேழு ‘மோக மடல்கள்’ தீட்டிவிட்டதாக முரளிமோகன் பீற்றித் திரிந்தது, இவனுக்குள் காதல் பித்தம் பெருக்கெடுக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.

கையில் விரித்துப் பிடித்த கடிதமும், கழுத்தில் உயர்த்திவிட்ட காலருமாக, “சரிதா என் காதலை ஏத்துகிட்டா. என்னை மனசாரக் காதலிக்கிறா” என்று சொல்லிச் சொல்லி, செல்வராசு கர்வப்பட்டது, ‘நானும் காதலிக்கப்பட மாட்டேனா” என்ற ஏக்கத்தை இவனுக்குள் வளரச் செய்துவிட்டது.

குப்புசாமி தீவிரமாக யோசித்தான். தானும் காதலித்துப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். ரதிரேகாவுக்குக் காதல் கடிதம் தந்தான். புங்க மரத்தடியில் காத்திருந்தான்.

அதோ.....

தோழியர் குழாமிலிருந்து விடுபட்டு, புங்கமரத்தைக் குறிவைத்து விரைந்து வந்துகொண்டிருப்பது...........

ரதிரேகாவேதான்.

அவள் கரத்தில் படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கடிதம்.....?

இவனுக்கு அவள் தீட்டிய தீஞ்சுவை மடலோ?

குப்புசாமியை நெருங்கிவிட்டிருந்தாள் ரதிரேகா.

குப்புசாமியின் நெஞ்சில் படபடப்பு. “ரதி...வந்து...” என்று ஏதோ சொல்ல முயன்றான்.

வார்த்தைகள் வெளிவரும் முன்னரே, ரதிரேகா தன்னிடமிருந்த கடிதத்தைக் [நம் குப்பு எழுதியதுதான்!] கசக்கிச் சுருட்டி, “இந்த குரங்கு மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?” என்று இவன் முகத்தில் வீசியடித்துவிட்டு, வந்த வேகத்தில் திரும்பிப் போனாள்.

குப்பு லேசான அதிர்ச்சிக்கு ஆளானான். சுதாரித்துக் கொண்டு வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள்; இதழ்களில் புன்னகை!

தொடரும்......................

குறிப்பு: கதையின் முடிவு என்ன?

சிந்திப்பதற்குச் சிறிது அவகாசம்.

முடிவு கீழே......................................












முடிவு:

“அடேய் குப்பு, அழகுக்கு மதிப்பெண் போட்டு நீ தயாரித்த மதிப்பெண் பட்டியலில், இந்த ரதிரேகா கடைசி ஆள். இவளே உன்னை நிராகரிச்சிட்டான்னா, வேறு எவளும் உன்னைச் சீந்தப் போவதில்லை. இனி, காதல் கத்தரிக்காய்னு மனசைத் தவிக்க விடாம நிம்மதியா படி. பெரிய உத்தியோகத்துக்குப் போ. கவுரவமா வாழ்ந்து காட்டு. அப்புறம், இந்த ரதியென்ன, தேவலோகத்து ரதியே வந்து, ‘என்னை ஏத்துக்கோ’ன்னு கியூவில் நிற்பா” என்று தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, புங்கமரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கலானான் குப்புசாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






9 கருத்துகள்:

  1. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தமிழ்நாடு LIST OF HOLIDAYS

    பதிலளிநீக்கு
  2. முடிவு எதிர்பாராதது.நல்ல முடிவும் கூட

    பதிலளிநீக்கு
  3. மனப்பூர்வ நன்றி முரளி.

    எதிர்பாராத பல பணிகள்.

    உங்கள் தளத்திற்குப் பின்னர் வருகை தருவேன்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு

  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  5. முடிவில் நல்ல Twist.
    அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. //Avargal Unmaikal//

    மனம் நிறைந்த நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. Alien A அவர்களுக்கு.....

    என் நெஞ்சு நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு