சனி, 12 ஜனவரி, 2013

விகடனில் [16.1.13] ஒரு ‘கருச்சிதைவு’க் கதை!!!

’பிரபஞ்சன்’ அவர்களே, இப்படியொரு கதை இனி வேண்டாம்!

ந்த வார விகடனின் [16.01.13] சிறுகதைப் பக்கங்களை நிரப்பும் வாய்ப்பைப் பெற்றவர் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள்.

கதைத் தலைப்பு:         நாளைக்கும் வரும் கிளிகள்

தலைப்பைப் படித்தவுடன், இது கிளிகள் பற்றிய கதை என்று நினைத்தால், நீங்கள் நட்சத்திர எழுத்தாளர்களின் கதைகளைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு அருகதை அற்றவர் என்று பொருள்!!!

”மாமா” என்று பலராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு மருத்துவரை நிருபர் பேட்டி காண்பது பற்றிய கதை இது. கிளிகளும் வந்து போகின்றன. அவ்வளவுதான்.

கதைச் சுருக்கம் பார்ப்போம். நடுநடுவே எழும் சந்தேகங்களுக்கும் விடை தேடுவோம்.

நிருபர், ’மாமா’ எனப்படும் அந்தப் பிரமுகரைப் பேட்டி காணப் போகிறார்.

அவரைத் தெரியாதவர்களே இல்லையாம். சிறு குழந்தைகள்கூட அறிவார்களாம். நிருபர் விசாரிக்காமலே, ஒரு இளநீர்க் கடைக்காரி, “மாமாவைத்தானே பார்க்க வந்தீங்க?”ன்னு கேட்டு, முகவரியும் சொன்னாளாம்!

அந்தப் பிரமுகரின் பெயர்......?

அவரே சொல்கிறார், கவனியுங்கள்.....

“நான் சந்துரு. சந்திரசேகரன். ஜனங்க மாமான்னு கூப்பிடறாங்க. ஏன்னு தெரியல. தாயின் சகோதரருக்கு மாமான்னுதானே பேர். சரின்னு நான் ஏத்துகிட்டேன்.”

குழந்தைகள், தங்களுக்குப் பிடிச்ச பெரியவங்களை “மாமா”ன்னு கூப்பிடுறது நமக்குத் தெரியும் [’நேரு மாமா’ மாதிரி]. மத்த வயசுக்காரங்க கூப்பிடுவாங்களா? யோசனை பண்ணிப் பண்ணி எனக்கு மண்டை காயுது. உங்களுக்கு எப்படியோ?

கதையைத் தொடர்வோம்............

“நான் எம்.டி. படிச்ச டாக்டர். இருபது வருஷ அனுபவம் எனக்கு உண்டு. கேன்சர், ஹெச்.ஐ.வி. போன்ற எந்தவொரு நோயாக இருந்தாலும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதில்லை. நோயாளிகள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுபவர்கள். அன்புக்கு அன்பாகச் சொல்லப்படும் ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறார்கள். நான் அவர்களுக்கு ஆத்ம மருத்துவம் செய்கிறேன்.......... உள்நோக்கிப் பார்த்துக் கொள்ளச் சொல்லிக் கொடுக்கிறேன்...” என்று நிருபரிடம் சொல்கிறார் சந்துரு மாமா.

இங்கே நமக்கு மீண்டும் ஒரு சந்தேகம்...........

‘ஆத்ம மருத்துவம்’னு ஒரு புதிய மருத்துவ முறையைக்[?] கையாள்றதா மாமா சொல்றார். கதை முடியும் வரை அதைப்பற்றி அவர் விளக்கம் தரவே இல்லை. நிருபரும் கேட்கவில்லை. இவர் அவரைக் கேட்க விடவும் இல்லை. ஏன்?

பேட்டி காண வந்த நிருபர்.....

 “நீங்கள் ஒரு பிரமுகராக அறியப்பட்டது எப்படி?"

"இப்படியொரு மருத்துவ முறையைக் கையாண்டு எவ்வளவு பேரைக் குணப்படுத்தியிருக்கிறீர்கள்?"

"எவரையும் குணப்படுத்தியது இல்லையென்றால் இந்த மருத்துவத்தை நீங்கள் தொடர்வது ஏன்?"

"நோய் குணமாகாது என்று தெரிந்தும் நோயாளிகள் உங்களைத் தேடி வருவது எப்படிச் சாத்தியமாகிறது?"

"வெறும் ஆறுதல் மொழிக்காக என்றால், அது நம்பும்படியாக இல்லையே?"

இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்டிருக்க வேண்டாமா? கேட்கவில்லையே!

நிருபருக்குக் கேள்விகள் கேட்க வாய்ப்பே  தராத மாமா, அவர் கேட்க நினைப்பதாகத் தானே கேள்வி எழுப்பி, கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டு போகிறார். 

[தொடக்க நிலையிலேயே, ‘நிகழ்ச்சி அமைப்பில்’ கோட்டை விட்டுவிட்டீர்களே பிரபஞ்சன்!]


மாமாவும் நிருபரும் உணவருந்துகிறார்கள். மூன்றாவதாக ஒரு இலை போடப்பட்டு, அதில் உணவும் பரிமாறப்படுகிறது. அனால், அதை உண்ண எவரும் வரவில்லை.

மாமா சொல்கிறார்: “என் மனைவி அதைச் சாப்பிடுகிறார்”

“பிரபஞ்சன் அவர்களே, ஆத்ம மருத்துவம் செய்துதானே மாமா பிரமுகர் ஆனார்? .அவரைப் பேட்டி எடுக்கத்தானே நிருபரை அழைத்து வந்தீர்கள்? 

ஆத்ம மருத்துவம் செய்து பிரபலம் அடைந்த மருத்துவர், அந்த மருத்துவ முறையில் சாதித்துப் பிரபலம் ஆனது எப்படி என்பதை வாசகருக்கு விளக்கிச் சொல்லத்தானே இந்தக் கதையை எழுதினீர்கள்? கதையின் ‘கரு’வும் அதுதானே?

ஆனால், உங்கள் நோக்கம் இக்கதையின் மூலம் ஓரளவுகூட நிறைவேறவில்லையே! கதை தடம்புரண்டுவிட்டதே! தன் மருத்துவ முறையை விளக்க வேண்டிய மாமா, இறந்துபோன மனைவி பற்றிப் பேசுகிறாரே, நீங்கள் விரும்பித்தான் அவரை இங்கே பேசவிட்டீர்களா?

உங்கள்...மன்னிக்கவும், நம் மருத்துவர் மாமா நிருபரிடம் தொடர்ந்து சொல்கிறார்:

“மதியம் ஒரு மணிக்கு நீங்கள் இங்கே இருந்தால், இரண்டு பச்சைக் கிளிகள் இங்கே வந்து நான் வைக்கும் பழங்களைச் சாப்பிட்டுப் போவதைப் பார்க்கலாம். சமையல்காரி வைத்தால் சாப்பிடாது.”

அப்புறம் தன் அக்கா மகள் பற்றியும் ஒரு ‘சுருக்’ கதை சொல்கிறார்!

மாமா வாயிலாகச் சொல்கிற இந்த உட்கதைகளையெல்லாம் நீங்கள் மனதார நம்பியும் விரும்பியும்தான் முதன்மைக் கதையில் சேர்த்தீர்களா படைப்பாளரே?

இதற்கு உங்கள் பதில் தேவையில்லை. இதெல்லாம் உங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள். ஆனால், நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டிய கேள்வி ஒன்று உண்டு. அது?

நீங்கள் சொல்ல வந்த முதன்மைக் கதைக்கும் மேற்கண்ட சம்பவங்களுக்கும் சம்பந்தமே இல்லை; இது ஒரு முழுமை பெற்ற படைப்பும் அல்ல.

இந்த உண்மையை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்தானே?

தமிழ்ப் புனைகதை உலகுக்கு மிகச் சிறந்த பல படைப்புகளைத் தந்து, புகழீட்டி வாழும் பிரபல எழுத்தாளர் நீங்கள். எடுத்துக்கொண்ட கதைப் பொருள் என்னவென்றே புரியாத நிலையில், குறைப் பிரசவமாய் இந்தக் கதையைப் படைத்துவிட்டீர்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறோம்.


இனியும் இப்படிப்பட்ட ஒரு கதையைப் படைத்திட வேண்டாம் என்பதே தங்கள் முன் நாம் வைக்கும் கோரிக்கை.

மன்னியுங்கள்.

*****************************************************************************************************************************


















7 கருத்துகள்:

  1. எந்தப் பிரபலமாக இருந்தாலும் தயங்காமல் படைப்பில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறுவது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி முரளி.

    மனதில் பட்டதை நடுநிலையுணர்வுடன் சொல்வதாக நம்புகிறேன்.அதனால் தயக்கமின்றி எழுத முடிகிறது.

    பதிலளிநீக்கு
  3. nan paditha pala kathaigalil kurunovelkalil ivaru muranpadukalai kandulaen.....athuvum periya eluthalargalil novelkalilum.... ivai kavana sithaivugalil vanthathai irukum endru thondrugirathu...????

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி Kamikaze Kalieswaran.

    முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதை ஒத்துக் கொள்கிற பெருந்தன்மை பல பெரிய எழுத்தாளர்களிடம் இல்லை.

    நம்மைப் போன்ற விமர்சகர்களை அலட்சியப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள் எதை எழுதினாலும் முன்னணி இதழ்கள் ஏற்றுப் பிரசுரிப்பதால், பிழைகளையும் முரண்பாடுகளையும் அகற்றுவதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதே உண்மை.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. யாராக இருந்தாலும் புகழ்ச்சி மட்டுமே வேண்டும் என்று நினைக்காமல், குறைகளை பெரிய மனதுடன் ஏற்கவேண்டும்.

    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள் Ranjani Narayanan.

    பதிலளிநீக்கு
  7. "குமாரசாமியின் பகல்பொழுது' எழுதிய பிரபஞ்சனா இதை இழுதினார்?

    பதிலளிநீக்கு