புதன், 27 பிப்ரவரி, 2013

’விவாகரத்து’ செய்வோருக்கான ‘சிறப்பு’ச் சிறுகதை!

”இதுபோன்ற [’பிரிவுபச்சாரம்’] கதையை நான் படித்ததே இல்லை” என்கிறார் கும்பகோணம் ஜெயலட்சுமி கோபாலன்! [அக் 10, 2004 தினமலர்-வாரமலர்]

திருமணமான ஓர் ஆண்டுக்குள்ளாகவே, 30% தம்பதியர் ‘மணவிலக்கு’ச் செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம் [பத்திரிகைச் செய்தி]. பிரிவைச் சந்திப்பதற்குள்ளாக, வழக்கு விசாரணை, அவச்சொல், பொருள் இழப்பு போன்ற காரணங்களால் அளப்பரிய மன உளைச்சலுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள். இந்த அவலம்தான் இக்கதை உருவாவதற்கான முதற்காரணம்!

இனி, கதைக்குக்குள் நுழையலாம்.....

தலைப்பு:                                 பிரிவுபச்சாரம்

“சரண்யா, அசோக் வீட்டு ஃபங்சனுக்குப் போகணுமே. நேரமாச்சு. கிளம்பு.”

“நீங்க மட்டும் போனா போதாதா?”

”சேச்சே...அசோக், சுனிதா ரெண்டு பேரும் வீடு தேடி வந்து கூப்பிட்டாங்கள்ல? நாம ரெண்டு பேரும் போகணும்.”

“சரிங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில், சரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும் ஒரு விழா மண்டபத்தில் நுழைந்தார்கள்.

அசோக், சுனிதா ஜோடிக்கு ஓர் ஆண்டு முன்பு திருமணம் நடந்த அதே மண்டபம். அதே கிழமை. அதே முதல் தேதி. நேரம் மட்டும் மாறியிருந்தது. கல்யாணம் நடந்தது காலை நேர சுபமுகூர்த்தம். இந்த விழா நடப்பது மாலை நேரத்தில்.

கெட்டி மேளம்; மங்களப் பொருட்கள்; இன்னிசைக் கச்சேரி; வீடியோ; ஃபோட்டோ; மேடை அலங்காரம்.....என்று அப்போது மண்டபம் களை கட்டியிருந்தது. இன்று அவையெல்லாம் மிஸ்ஸிங்.

மேடையில் ஒரு மேஜை மட்டும். அதன் மீது ஒரு மைக்.

மண்டப முகப்பில், அசோக்கும் சுனிதாவும் சிரித்த முகங்களுடன் எல்லாரையும் வரவேற்று விருந்துண்ண அனுப்பி வைத்தார்கள்.

விருந்துக்குப் பிறகு விழா ஆரம்பமானது.

மேடையில் அசோக்கும் சுனிதாவும் மட்டும்.

அசோக்கின் தந்தை, மேடையேறி வரவேற்புரை ஆற்றிவிட்டு இறங்கினார்.

அசோக் எழுந்தான்.

“விடைபெறு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இதே மண்டபத்தில் ஓராண்டுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. நீங்கள் எல்லோரும் வந்திருந்து நாங்கள் இன்ப வாழ்வு வாழ வாழ்த்தினீர்கள். அதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எடுத்துக்காட்டான தம்பதியராய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் வைத்தீர்கள். அதை நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துகிறேன்; நாங்கள் வருந்துகிறோம்.

எதிர்பாராத விதமாக, எங்களிடையே சிக்கல்கள் முளைத்துவிட்டன. எவ்வளவோ முயன்றும் அவற்றைச் சரி செய்ய இயலவில்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட போதும் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தூற்றிக் கொள்ளவில்லை. ஆரோக்கியமான முறையில் கலந்து பேசி, பிரிவது என்று முடிவெடுத்தோம்.  நல்ல எண்ணங்களுடன் பிரிகிறோம்.

சேரும்போது அழைத்தோம். பிரியும்போதும் அழைப்பதுதானே நாகரிகம். அழைத்தோம் வருகை புரிந்தீர்கள். அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி.”

பேசி முடித்தான் அசோக்.

சுனிதா எழுந்தாள்.

“அசோக் மிகவும் நல்லவர். வாழ்க்கைப் பாதையில் இவருடன் இணைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். இவர் உயரிய பண்பாளர். ஆடவர்களுக்கு முன்னுதாரணம்.

அனைவருக்கும் நன்றி.”

இருவர் கண்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன. வலிந்து செய்த புன்னகையுடன் கையசைத்தார்கள்.

மண்டப முகப்பிற்கு வந்து நின்று, கரம் கூப்பி அனைவரையும் வழியனுப்பி வைத்தார்கள்!

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும்



திங்கள், 18 பிப்ரவரி, 2013

கடவுளும் கடத்தப்பட்ட ஒரு சிறுமியும்! [ஒரு பக்கக் ’குட்டி’க் கதை]

இது, கடவுளின் கருணைக்கு ஏங்கும் ஒரு [அப்]பாவியின் கதை!!

சாலையில் நடந்துகொண்டிருந்த செல்வராசு, சொகுசுக் கார் ஒன்று, ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதைக் கண்டான்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை, ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்த்தான்; அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அவனின் பெற்றோரை வரவழைத்தான்.

மருத்துவரைச் சந்தித்துத் திரும்பிய சிறுவனின் தந்தை, செல்வராசுவிடம், “பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க புள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று செல்வராசுவின் கரங்களைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“என் பத்து வயசுப் பொண்ணு காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. சின்னஞ்சிறு குட்டிகளைக் கடத்துறதும், கற்பழிச்சிச் சிதைச்சிக் கொலை பண்ணுறதும் அடிக்கடி நடக்குதே. என் செல்லம் என்ன ஆனாளோ”ன்னு தினம் தினம் வேதனைப்பட்டுப் பட்டினி கிடந்து செத்துப் போனா என் பெண்டாட்டி. நானும் நடைப் பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். நீங்க புண்ணியம் செஞ்சவங்க. கேட்காமலே கடவுள் உங்களுக்கு உதவியிருக்கார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், கடவுள்கிட்டச் சொல்லி என் மகளைக் கண்டுபிடிச்சித் தரச் சொல்லுங்கய்யா.” கண்களில் கண்ணீர் பெருக, நா தழுதழுக்கச் சொன்னான் செல்வராசு.

செய்வதறியாது விழித்தார் சிறுவனின் தந்தை.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மனிதர்கள் மனம் இளகிச் செய்யும் நல்ல செயல்களைக்கூட, கடவுளின் கருணையோடு தொடர்புபடுத்துவது நம்மில் பெரும்பாலோரின் வழக்கமாக உள்ளது. இதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கதை. 

கடவுளின் ‘இருப்பு’ பற்றிய விவாதத்தைத் தூண்டுவது நம் நோக்கமல்ல; விருப்பமும் அல்ல.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






வியாழன், 7 பிப்ரவரி, 2013

சிறுகதைக்குச் ’சவக்குழி’ தோண்டும் விகடனின் ‘நட்சத்திர’ எழுத்தாளர்கள்!!!

நட்சத்திர எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் “மின்மினி”க் குழறுபடிக் கதை!!!

விகடனில், அண்மைக் காலங்களில் சிறுகதை எழுதிய ‘நட்சத்திர எழுத்தாளர்’ எனப்படுபவர்களில் மிகப் பெரும்பாலோருக்கு, ’கதை படிக்கும் வாசகர்களில் பலரும் சிறுகதை பற்றி நன்கு அறிந்தவர்கள்; தரமான படைப்புகளை எதிர்பார்ப்பவர்கள்’ என்னும் குறைந்தபட்ச அறிவுகூட இருப்பதாகத் தெரியவில்லை!

கரு இல்லாமலே கதை எழுதுகிறார்கள்! ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்களை மையப்படுத்தி, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் எதையெல்லாமோ வர்ணித்து...விவரித்து, வாசகரை மயங்க வைக்கிறார்கள். [இது பற்றியெல்லாம் என் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்]

மனம் போன போக்கில் தமக்குத் தெரிந்ததையெல்லாம் எழுதிப் பக்கத்தை நிரப்பிவிட்டு, குழு சேர்த்து, கருத்தரங்குகள் நடத்தித் தம்மை மிகச் சிறந்ததொரு படைப்பிலக்கியவாதி எனப் பறைசாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெறுகிறார்கள்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார், இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ, சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக நினைத்து இவர் எழுதும் கதைகளில் கணிசமானவை தரமற்றவை என்றே சொல்லத் தோன்றுகிறது

இந்த வார ஆனந்த விகடனில் [06.02.13] வெளியாகியுள்ள ‘பதினோராவது பொருத்தம்’ என்னும் சிறுகதையும் இதை உறுதிப்படுத்துகிறது.

கதைக்குச் செல்வோம்.

கதைத் தலைப்பு:     பதினோராவது பொருத்தம்

’வர்ஷா’ ன்னு, எம்.ஏ.சோஷியாலஜி படித்த ஒரு 23 வதுப் பெண்ணை நிருபர்கள் பேட்டி காண்பதாகக் கதை ஆரம்பமாகிறது.

எடுத்த எடுப்பில், வர்ஷாவை, 23 வயதான சித்தன்ன வாசல் ஓவியம் என்கிறார் எழுத்தாளர்.

[ஏனுங்க எழுத்தாளரே, இப்படியொரு அட்டகாசமான அழகுப்பெண் கதைத் தலைவியா இருந்தாத்தான் வாசகன் மேலே படிப்பான்னு நம்புறீங்களா?!]

ஆறு மாத காலமா ’மயிலிறகு’ என்னும் அமைப்பை நடத்திச் சமுக சேவை செய்ததுக்காக, அந்தப் பொண்ணுக்கு, ‘மகிள ரத்னா’ங்கிற பெயரில் விருது வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில்தான் நிருபர்கள் பேட்டி காண்பதாகவும் கதையைத் தொடங்கியிருக்கிறார் ராஜேஷ்குமார்.

வெறும் ஆறு மாசத்தில் இது எப்படிச் சாத்தியமானது என்பது ஆசிரியருக்கு மட்டுமே விடை தெரிந்த புதிர்!


வாழ்க்கையில் வெறுப்படைந்து, தற்கொலையோட விளிம்புக்குப் போன எத்தனையோ பேருக்கு கவுன்சலிங் கொடுத்து வசந்த காலத்தைக் காட்டியதாக வர்ஷா சொல்றா நிருபர்களிடம்.

ஆறே ஆறு மாசத்தில், ‘எத்தனையோ பேரைக் கண்டுபிடிச்சி, மனமாற்றம் செய்வது நடை முறை சாத்தியமே இல்லையே? என்ன நம்பிக்கையில் இப்படியெல்லாம் எழுதுகிறார் கதாசிரியர்? தமிழ் வாசகனுக்குச் சிந்திக்கும் அறிவே கிடையாதுன்னு நம்புகிறாரா?


மன நிலை பாதிக்கப்பட்டவங்களுக்குக் கவுன்சலிங் கொடுக்க எம்.ஏ. சமூகவியல் படிப்பு போதாது; இதுக்கெல்லாம் உளவியல் படிப்பு படிச்சிருக்கணும். இதெல்லாம் அவருக்கு எப்படித் தெரியாம போச்சு?

சித்தன்ன வாசல் ஓவியம் என்பதால, இதெல்லாம் முடியும்னு நம்பிவிட்டாரோ!?

அப்புறம்.....

‘ஆறாடி உயரம். அமெரிக்கச் சிவப்பு. சீராக ட்ரிம் செய்த தாடி...மீசை. தலை கொள்ளாத சுருள் முடி. உதட்டில் புன்னகை’.....இப்படியான தோற்றம் கொண்ட பேரழகனான ஓர் இளைஞனும் கதையில் நுழைக்கப்படுகிறான்.[அழகில்லேன்னா நம்ம பிரபலங்களின்  கதைகளில் ஒரு பாத்திரமா இடம் பெறவே முடியாதோ?]

அவனோட அப்பா. அழகழகான பொண்ணுகளையெல்லாம் அவனுக்குக் காட்டுறார்.  “எனக்கு இன்னும் அழகான பொண்ணு வேணும்”னு அவன் அடம் பிடிக்கிறான்.

நம்ம வர்ஷா கிட்டே அவனைக் கவுன்சலிங் பண்ணிச் சம்மதிக்க வைக்கும்படி வேண்டுகிறார் அவனோட அப்பா. அவர் இவள் அப்பாவுக்குக் குடும்ப நண்பர். ’விகாஷ்’கிற அந்தப் பயனும் இவளுக்குச் சின்ன வயசிலிருந்து பழக்கம்தான்.

அவனுக்கு இவள் கவுன்சிலிங் தர்றாளாம்!

எப்படி?

“நீ உன் கல்யாண விஷயத்தில் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறே?”

“நீ பத்து அழகான பெண்களைப் பார்த்தே. ஆறு பேர் ரொம்ப அழகு. யாரையும் கட்டிக்க மாட்டேனுட்டே. உன் அப்பா மனசு எவ்வளவு கஷ்டப்படும் தெரியுமா?”

“விகாஷ், உன் மெண்டாலிட்டி ஏன் இப்படி இருக்குன்னு தெரியல.”

“ஜோதிட ரீதியா பத்துப் பொருத்தமும் இருக்கு.”

“பேசாம அமெரிக்காவிலேயே ஒருத்தியைக் கட்டிக்கோ.”

இப்படியாகக் கேள்விகள் கேட்டுக் கேட்டு விகாஷுக்கு வர்ஷா கவுன்சலிங் தந்தாளாம்!

இதுக்குப் பேர்தான் கவுன்சலிங்கா?

ராஜேஷ்குமார் இனியேனும் சிந்திப்பாரா?

இப்படியெல்லாம் பித்துக்குளித்தனமா கண்டதை எழுதி, வாசகரின் வெறுப்பைச் சம்பாதிக்கலாமா அவர்?

அழகான பொண்ணுகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிய விகாஷ், தன் சித்தி மகனோட கல்லீரல் அறுவைக்குத் தன் கல்லீரலிலிருந்து தானம் செய்த ’பூஜா’ங்கிற பெண்ணை மணக்க முடிவு செய்கிறான்.

“இரண்டாண்டுக்கு முன்பு, அமெரிக்காவில் என் நண்பனுக்குச் சிறுகுடல் தானம் பண்ணினேன் நான். அதனால, உறுப்பு தானம் பண்ணின பூஜாவுக்கும் எனக்கும் பதினோராவது பொருத்தம் இருக்கு” அப்படீன்னு அதுக்கான காரணமும் சொல்கிறான்.

அவன் முடிவு சரியே. நல்ல கொள்கை முடிவுதான்.

நமக்கு எழுகிற சந்தேகம்...........

இப்படியொரு உயர்ந்த கொள்கை தனக்கு இருப்பதைத் தன் தந்தையிடமோ, பிறரிடமோ சொல்ல விடாமல் எது தடுத்தது?

”இன்னும் அழகான பொண்ணு வேணும் ...வேணும்”னு அவன் ஏன் பொய் சொல்லித் திரியணும்?

இப்படியெல்லாம் ‘ட்விஸ்ட்’ இருந்தாத்தான் கதையில் விறுவிறுப்பு இருக்கும்னா, இப்படி நீட்டி முழக்கி ஒரு கதை சொல்வது தேவையே இல்லையே.

அப்பா தேர்வு செய்யுற பொண்ணுகளையெல்லாம் விகாஷ் வேண்டாம்னு ஒதுக்குறான். சலித்துப் போன அவர், “உன் மனசில் என்னதான் நினைச்சிட்டிருக்கே?”ன்னு கேட்கிறார்.

”ஊனமுற்ற பெண்ணுக்கோ, ஏழைப் பெண்ணுக்கோ வாழ்வு கொடுப்பது மாதிரி, உறுப்பு தானம் செய்த பெண்ணைத்தான் மணப்பேன்”னு அவன் சொல்கிற மாதிரி கதையை முடிச்சிருந்தா அருமையான ஒரு ஒரு பக்கக் கதை உருவாகியிருக்குமே?

ஒரு பெரிய நட்சத்திர எழுத்தாளர் ஒரு பக்கக் கதையெல்லாம் எழுதக்கூடாதோ?

கூடாது. அதலாலதான், தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டிருக்கிறார் கதாசிரியர்.

’ஒரு பிரபல எழுத்தாளர் என்றால், நம் வாசகர்கள் இப்படியெல்லாம் தோண்டித் துருவிக் குறைகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட மாட்டார்கள். இதழ் விற்பனை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை’ என்ற நம்பிக்கை நம் பத்திரிகையாளர்களுக்கு எப்போதும் உண்டு.

இம்மாதிரிக் கதைகளை அவர்கள் தொடர்ந்து வெளியிட இது ஒரு முக்கிய காரணம்.

இன்னும் காரணங்கள் இருக்கின்றன. அவற்றைச் சொல்வதால் பயன் என்ன?

பத்திரிகை ஆசிரியர்களோ, நட்சத்திர எழுத்தாளர்களோ செவி மடுக்கவா போகிறார்கள்?!

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000