புதன், 27 பிப்ரவரி, 2013

’விவாகரத்து’ செய்வோருக்கான ‘சிறப்பு’ச் சிறுகதை!

”இதுபோன்ற [’பிரிவுபச்சாரம்’] கதையை நான் படித்ததே இல்லை” என்கிறார் கும்பகோணம் ஜெயலட்சுமி கோபாலன்! [அக் 10, 2004 தினமலர்-வாரமலர்]

திருமணமான ஓர் ஆண்டுக்குள்ளாகவே, 30% தம்பதியர் ‘மணவிலக்கு’ச் செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம் [பத்திரிகைச் செய்தி]. பிரிவைச் சந்திப்பதற்குள்ளாக, வழக்கு விசாரணை, அவச்சொல், பொருள் இழப்பு போன்ற காரணங்களால் அளப்பரிய மன உளைச்சலுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள். இந்த அவலம்தான் இக்கதை உருவாவதற்கான முதற்காரணம்!

இனி, கதைக்குக்குள் நுழையலாம்.....

தலைப்பு:                                 பிரிவுபச்சாரம்

“சரண்யா, அசோக் வீட்டு ஃபங்சனுக்குப் போகணுமே. நேரமாச்சு. கிளம்பு.”

“நீங்க மட்டும் போனா போதாதா?”

”சேச்சே...அசோக், சுனிதா ரெண்டு பேரும் வீடு தேடி வந்து கூப்பிட்டாங்கள்ல? நாம ரெண்டு பேரும் போகணும்.”

“சரிங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில், சரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும் ஒரு விழா மண்டபத்தில் நுழைந்தார்கள்.

அசோக், சுனிதா ஜோடிக்கு ஓர் ஆண்டு முன்பு திருமணம் நடந்த அதே மண்டபம். அதே கிழமை. அதே முதல் தேதி. நேரம் மட்டும் மாறியிருந்தது. கல்யாணம் நடந்தது காலை நேர சுபமுகூர்த்தம். இந்த விழா நடப்பது மாலை நேரத்தில்.

கெட்டி மேளம்; மங்களப் பொருட்கள்; இன்னிசைக் கச்சேரி; வீடியோ; ஃபோட்டோ; மேடை அலங்காரம்.....என்று அப்போது மண்டபம் களை கட்டியிருந்தது. இன்று அவையெல்லாம் மிஸ்ஸிங்.

மேடையில் ஒரு மேஜை மட்டும். அதன் மீது ஒரு மைக்.

மண்டப முகப்பில், அசோக்கும் சுனிதாவும் சிரித்த முகங்களுடன் எல்லாரையும் வரவேற்று விருந்துண்ண அனுப்பி வைத்தார்கள்.

விருந்துக்குப் பிறகு விழா ஆரம்பமானது.

மேடையில் அசோக்கும் சுனிதாவும் மட்டும்.

அசோக்கின் தந்தை, மேடையேறி வரவேற்புரை ஆற்றிவிட்டு இறங்கினார்.

அசோக் எழுந்தான்.

“விடைபெறு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இதே மண்டபத்தில் ஓராண்டுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. நீங்கள் எல்லோரும் வந்திருந்து நாங்கள் இன்ப வாழ்வு வாழ வாழ்த்தினீர்கள். அதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எடுத்துக்காட்டான தம்பதியராய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் வைத்தீர்கள். அதை நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துகிறேன்; நாங்கள் வருந்துகிறோம்.

எதிர்பாராத விதமாக, எங்களிடையே சிக்கல்கள் முளைத்துவிட்டன. எவ்வளவோ முயன்றும் அவற்றைச் சரி செய்ய இயலவில்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட போதும் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தூற்றிக் கொள்ளவில்லை. ஆரோக்கியமான முறையில் கலந்து பேசி, பிரிவது என்று முடிவெடுத்தோம்.  நல்ல எண்ணங்களுடன் பிரிகிறோம்.

சேரும்போது அழைத்தோம். பிரியும்போதும் அழைப்பதுதானே நாகரிகம். அழைத்தோம் வருகை புரிந்தீர்கள். அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி.”

பேசி முடித்தான் அசோக்.

சுனிதா எழுந்தாள்.

“அசோக் மிகவும் நல்லவர். வாழ்க்கைப் பாதையில் இவருடன் இணைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். இவர் உயரிய பண்பாளர். ஆடவர்களுக்கு முன்னுதாரணம்.

அனைவருக்கும் நன்றி.”

இருவர் கண்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன. வலிந்து செய்த புன்னகையுடன் கையசைத்தார்கள்.

மண்டப முகப்பிற்கு வந்து நின்று, கரம் கூப்பி அனைவரையும் வழியனுப்பி வைத்தார்கள்!

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும்



12 கருத்துகள்:

  1. பிரிவுபச்சாரம்

    பிரிவு அபச்சாரம் ..!

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும்... இருவரும் பேசிக்கொள்ளவில்லை (மனம் விட்டு) என்பது மட்டும் தெளிவாக புரிகிறது... இதெல்லாம் ஒரு வாழ்வா...?

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்க என்ன இருக்கிறது?

    தாங்கள் புரிந்துகொண்டதற்கு ஏற்பக் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

    மிக்க நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு
  4. ராஜராஜேஸ்வரிக்கு நன்றி.

    மனம் ஒத்து வாழ முடியாத போது, கடித்துக்கொண்டும் அடித்துக்கொண்டும் பிறருக்கு வேடிக்கைப் பொருளாக மாறாமல், நாகரிகமாக, பிறருக்கு முன்னுதாரணமாகப் பிரிவது நல்லது என்கிறேன்.

    இது அபச்சாரமென்றால், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

    தங்களின் வருகைக்கு மீண்டும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. தனபாலன்,

    ‘ஆரோக்கியமாகக் கலந்து பேசிப் பிரிவது என்று முடிவெடுத்தோம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைத் தாங்கள் கவனிக்கவில்லை.

    அதனால்தான், ‘இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவில்லை என்பது புரிகிறது’ என்று சொல்கிறீர்கள்!

    சரி செய்யவே முடியாத பிரச்சினைகள் [தம்பதியரிடையே] உருவாகும் போது மனம் விட்டுப் பேசினால் மட்டும் பிரிவைத் தவிர்த்துவிட முடியுமா?

    பதிலளிநீக்கு
  6. நண்பர் தனபாலன்,

    சண்டை போட்டுப் பிரிந்து வாழ்வோரின் எண்ணிக்கை தோராயமாகவேனும் தங்களுக்குத் தெரியும்.

    ’அவர்கள் வாழ்வெல்லாம் ஒரு வாழ்வா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொண்டது உண்டா?

    விவாகரத்தே இல்லாத வாழ்வை உங்கள் கனவிலேனும் காண்பது சாத்தியமா?

    வித்தியாசமாக ஒரு கருத்தைச் சொன்னால் அது பற்றிச் சிந்திக்கவே மறுக்கிறீர்களே, அது ஏன்?

    ‘நன்று’ ‘அருமை’ என்று வெறுமனே பாராட்டுத் தெரிவிக்காமல், மாறுபட்ட கருத்தை முன் வைத்ததற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான தம்பதிகள்தான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தொடரும் தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி .சுரேஷ்

    பதிலளிநீக்கு
  9. சார் முதலில் வாழ்த்துகள் சொல்லிக்கிறேன் 1000 ஒரு பக்க கதை எழுத
    னான் இனையத்திற்கு புதியவன் ஆனால் கதை படிப்பதில் பழையவன்தான். இனையத்தில் தேடும்போது உஙகள் தளம் கிடைத்தது நிறைய இடுகைகளை படித்துப் பார்த்தேன் மிகவும் அருமை அதிலும் சிறுகதை விமர்சனம் ரொம்ப பிடித்தது பதினோறாவது பொருத்தம் பற்றி சரியான கெள்வி அருமையான விமர்சனம் ரொம்ப பிடித்தது.
    இந்த பின்னூட்டத்திற்கு ஒரு சுயனலமும் இருக்கிறது. அது என்னன்ன நானும் முதல் முறைய ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன் அதற்கு நிச்சயம் உங்களின் விமர்சனம் அறிவுரை எனக்கு தேவை தயவு செய்து எனக்காக ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்
    விஸ்வரூபம் (சிறுகதை)"www.tamilviduthy.blogspot.com"

    பதிலளிநீக்கு
  10. நன்றி சத்யபிரபு.

    தங்களின் பாராட்டுக்கு மனமுவந்த நன்றி.

    அவசியம் தங்கள் சிறுகதையைப் படித்துக் கருத்துரைப்பேன். சற்று அவகாசம் தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. //எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட போதும் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தூற்றிக் கொள்ளவில்லை.//

    நாகரீகமான தம்பதிகள்.

    பதிலளிநீக்கு