செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சார், உங்களுக்குப் `பட்டாபி’யைத் தெரியுமா?

``யார் அந்தப் பட்டாபி?” என்கிறீர்களா? என்ன சார் நீங்க, `சகல வசதிகளும்’ கொண்ட `விடுதி’களிலும், ‘சதை வணிக’ மையங்களிலும் எத்தனை பட்டாபிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்! அவர்களில் ஒருத்தன்தாங்க இந்தப் பட்டாபி!!

கதைத் தலைப்பு:                      வயசுப் பையன்
                                                                      ‘பசி’

ள்ளப் பார்வையுடன் கமுக்கமாய் நடந்துகொண்டிருந்த தொப்பை ஆசாமி, ‘படிகிற’ பார்ட்டிதான் என்று பட்டது பட்டாபிக்கு. தேனீர்க்கடை இருக்கையைக் காலி செய்துவிட்டு அவரைக் குறிவைத்து நடந்தான்.

ஒரே நிமிடம்தான்...அந்த ஆளை நெருங்கி, சமமாய் நடந்து, கிசுகிசுப்பாய்க் கேட்டான்: “சார், வர்றீங்களா?”

‘நீ நினைக்கிற மாதிரியான ஆளில்லை நான்’ என்பது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்தார் அவர்.

“எல்லாமே டீசண்டான பொண்ணுங்க சார். காலேஜ் குட்டிகளும் இருக்கு. ஆணுறைக்கு அவசியமே இல்ல. அத்தனை சுத்தம்...” நாக்கில் தேன் தடவிக்கொண்டு சொன்னான் பட்டாபி.

அவர், இவன் பக்கம் திரும்பாமலே கேட்டார்: “ரேட் எப்படிப்பா?”

“மினிமம் ஐநூறு. ஒரு ராத்திரிக்கு ஒரு லட்சம் போற சரக்கெல்லாம் இருக்கு. வி.ஐ.பி.க்கள் வந்து போற இடம் சார் அது.”

“அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா. ஐநூறுக்குள்ள கிடைக்குமா சொல்லு.”

“அதோ தெரியுதே, சினிமா தியேட்டரை ஒட்டி ஒரு லாட்ஜ். அதுல சிங்கிள் ரூம் போடுங்க. உங்க ரேஞ்சுக்கு லாட்ஜ்காரன் குட்டிகளை நிறுத்துவான். ஆனா, எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம்” என்று சொல்லிவிட்டுப் ‘பார்ட்டி’யிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான் பட்டாபி.

அவர், தீவிர யோசனையில் இருந்தார்.

“என்ன சார் யோசனை?”

“நீ சொன்ன இடத்துக்கு மட்டும் போலீஸ் வராதா?”

“நாந்தான் சொன்னேனே, வி.ஐ.பி.க்கள் வர்ற இடம்னு. அங்கே போலீஸ் வராது. அப்படியே வந்தாலும், பேருக்கு நாலஞ்சி தொழில்காரிகளைத் தள்ளிட்டுப் போவாங்க அடுத்த நாளே ஜாமீனில் விட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களைக் கண்டுக்க மாட்டாங்க. தைரியமா என்கூட வாங்க சார்.”

“அது வந்துப்பா.....”

அது தேறாத பார்ட்டி என்பது பட்டாபிக்குப் புரிந்தது. எரிச்சலுடன் சொன்னான்: “உனக்கு இங்கே எதுவும் சரிப்பட்டு வராது. நேரே மங்கம்மா குப்பம் போயிடு. ஊர்வசி தியேட்டருக்குப் பொறத்தாண்ட. போலீஸ் அங்கே தலைகாட்டுறதே இல்ல. அதிகபட்சமே நூறு ரூபாதான்.” சொல்லிவிட்டு, “சாவு கிராக்கி” என்று முணுமுணுத்தவாறு நடந்தான்.

அதற்கப்புறமும் கண்கொத்திப் பாம்பாய் நோட்டம் விட்டு, சளைக்காமல் வலை வீசியதில், லாரி அதிபர் ஒருவர் மாட்டினார். ஆனந்தவல்லியின் வீட்டுக்கு அவரை அழைத்துப் போனான்.

பலான தொழில் நடத்துபவள் ஆனந்தவல்லி. பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் என்று, வெளியூர் ஆட்கள் வந்து போகிற மையங்களில் ஆனந்தவல்லிக்குப் புரோக்கர்கள் உண்டு. அவர்களில் பட்டாபியும் ஒருவன்.

அவனுக்கு ஆறு வயதாகும்போது, அம்மாக்காரி செத்துப் போனாள். அப்பன்காரன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான்; ஏழு வயதில் அவனை ஒரு திரையரங்கில் சேர்த்துவிட்டான்.

முதலில், முறுக்கு, சோடா விற்றான் பட்டாபி. வயது கூடியபோது, நுழைவுச் சீட்டு கிழித்தான். பதினைந்து வயது தொடக்கத்திலேயே, குப்பை கூட்டும் லட்சுமியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுவிட, முதலாளி அவன் சீட்டைக் கிழித்துவிட்டார்.

ஒரு சினேகிதன் உதவியால் ஆனந்தவல்லியிடம் வந்து சேர்ந்தான் பட்டாபி.

``பட்டாபி.”

ஆனந்தவல்லி அழைத்தாள்.

லாரி அதிபரை உள்ளே அனுப்பிவிட்டுக் காத்திருந்த பட்டாபி, அவளை நெருங்கினான்.

“இன்னிக்கி ஒரே ஒரு பார்ட்டிதான் மாட்டிச்சா?” என்று கேட்டுக்கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் ஆனந்தவல்லி.

பட்டாபிக்கு பயங்கரப் ‘பசி’.

இரவு நேர சிற்றுண்டிக் கடைக்குப் போனான்; புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்டான்; சட்டைப் பையைத் துழாவினான். ஆனந்தவல்லி கொடுத்த நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. அது, பழக்கப்பட்ட கடை என்பதால், கடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அவனையறியாமல் அவன் கால்கள் மங்கம்மா குப்பம் நோக்கி நடை பயின்றன.

பட்டாபிக்கு இப்போது வயது, பதினாறு முடிந்து பதினேழு தொடக்கம்!

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

                                              ‘ராணி’ இதழுக்கு நன்றி.

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக