புதன், 17 ஏப்ரல், 2013

இது கடவுளைச் சாடும் கதையல்ல; எதார்த்த வாழ்க்கையைப் புரிய வைக்கும் படைப்பு!

தோல்விகளைச் சந்திக்கும்போதெல்லாம், கடவுளைத் துணைக்கு அழைக்கிறோம். நாம் நம்புகிற கடவுளும், தன் படைப்புத் ‘தொழிலில்’ தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்!

கதைத் தலைப்பு:                     சாமியும் கந்தசாமியும்

ந்தசாமி, கோயிலுக்குப் போறியாப்பா?” அம்மா கேட்டார்.

”எனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு தெரியுமில்ல. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” அம்மாவிடம் பொய்க் கோபம் காட்டினான் கந்தசாமி.

“அதில்லப்பா. நீயும் அப்பாவும் நடத்துற ஓட்டலில், வர்ற கொஞ்சம் லாபமும் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாப் போயிடுது. அஞ்சாறு வருசமா அசல் அப்படியே இருக்கு. குடும்பச் செலவுக்குப் பணமில்ல. நம்பிக்கையிழந்த உன் அப்பா, தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். தொழில் இன்னும் லாபகரமா நடக்கணும்னு, பிடிவாதத்தைக் கைவிட்டு, சாமி கோயிலுக்குப் போயி, சாமி சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு வாப்பா.”

அம்மாவின் குரலில் என்றுமில்லாத கண்டிப்புத் தெரிந்தது.

மவுனமாகக் கிளம்பிப் போனான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியது, “விழுந்து கும்பிட்டயா? மனப்பூர்வமா வேண்டிகிட்டியா?” என்றார் அம்மா.

“நான் கோயிலுக்குப் போகல; கடன் கொடுத்தவங்களைத் தேடிப் போயி, அவங்க காலில் விழுந்து கும்பிட்டு நிலைமையைச் சொன்னேன். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலைக் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சிக் கொடுன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா, சாமி படத்தின் முன்னால் நின்று கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக