அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 9 மே, 2013

'குடி'மகன்கள் தினம்!.....விரைவில்!!

குடிச்சிட்டுப் ‘போனா’, பெண்ணைத் ‘திருப்தி’ படுத்தலாம் என்கிறார்கள்! கொலை செய்யப் போகிறவன் குடித்துவிட்டுத்தான் போகிறான். 70% இளைஞர்கள், ’தண்ணி’யடித்துவிட்டுத்தான், ‘காதலர் தினம்’, ’புத்தாண்டு தினம்’ போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்! இந்நாட்டு மக்களில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் [48%-52%] நல்ல ‘குடிமகன்’களாக இருக்கிறார்கள். எனவே.....

‘குடிமகன்கள் தினம்’ கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!


அந்த நாளை வரவேற்கும்  முகத்தான் ஒரு ஒ.ப.கதை.....



கதை:                       கேட்டானே ஒரு கேள்வி!   

”உங்க கம்பெனி வாட்ச்மேன் சேது வந்திருந்தார். உங்களைப் பார்த்தே ஆகணும்னு ரெண்டு மணி நேரம் காத்திருந்தார். மறுபடியும் வர்றதாச் சொல்லிட்டுப் போனார்.”

கம்பெனி வேலையாக இரண்டு நாள் வெளியூர்ப் பயணம் போய்விட்டுத் திரும்பிய கணேசனிடம் அவன் மனைவி சவீதா சொன்னாள்.

“என்ன விஷயம்னு கேட்டியா?”

“கேட்கல.” சொல்லிக்கொண்டே சமையல் கட்டில் புகுந்தாள் சவீதா.

எதற்கு வந்தான் சேது?”

’டியூட்டி நேரத்திலும் போதையில் மிதப்பவன். டிஸ்மிஸ் செய்வதாகப் பல தடவை மேனேஜர் எச்சரித்திருந்தார். செய்துவிட்டாரோ?’ என்று சந்தேகப்பட்டான் கணேசன். தான் மேலாளருக்கு நெருக்கமானவன் என்பதால் சிபாரிசுக்காக வந்திருப்பான் என்றும் நினைத்தான்.

வாழ வேண்டிய வயதில் குடித்துக் கெட்டவன் சேது. குறையக் குறையக் குடித்துவிட்டு நடைபாதையில் விழுந்து கிடப்பான். நான்கைந்து தடவை ஆட்டோ பிடித்து அவனை வீடு சேர்த்திருக்கிறான் கணேசன்.

சேது மீண்டும் வந்தான். நடையில் தள்ளாட்டம்.

“வாப்பா சேது. ஏற்கனவே வந்துட்டுப் போனியாமே. என்ன விஷயம்?” என்றான் கணேசன்.

“ஒரு முக்கியமான விஷயம்.....”

“சொல்லுப்பா.”

“குடிச்சிட்டுத் தெருவில் கிடக்கிற என்னை அடிக்கடி நீதான் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்குறே. ......” நா குழற, தெளிவற்ற வார்த்தைகளை உதிர்த்தான் சேது.

தொடர்ந்தான்: “இதோ பாரு சார், நான் குடிச்சிட்டு நடைபாதையில் கிடப்பேன்; நடுத் தெருவிலும் கிடப்பேன். உனக்கு எதுக்கு இந்த வேலை?”

சேதுவின் கேள்வி, கணேசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”ஒரு உதவிதானேப்பா” என்றான்.

“எனக்கு உதவி செய்யுறேன் பேர்வழின்னு இனியும் என் வீடு தேடி வர்ற வேலையை உட்டுடு. ஆளு அம்சமா இருக்கே. கையில் தாராளமா காசு புரளுது. வெகு சுளுவா நீ என் பெண்டாட்டியைக் கணக்குப் பண்ணிடுவே. என்ன...சொன்னது புரிஞ்சுதா?” என்றான் சேது.

சொல்லிவிட்டுத் தள்ளாடியபடியே புறப்பட்டுப் போனான்.

புன்னகை படர்ந்த முகத்துடன் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.

“அவன் உங்களை அவமானப் படுத்திட்டுப் போறான். கோபப்படாம சிரிச்சிட்டே இருக்கீங்களே?” சவீதா கேட்டாள்.

“சிரிக்காம என்ன செய்யுறது, அவன் பெண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப் போயி வருஷம் ஒன்னு ஆவுது” என்றான் கணேசன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் நான் எழுதியது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக