செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

டுபாக்கூர் ‘வாஸ்து’வும் டூப்ளிகேட் கடவுள்களும்!

#`வாஸ்து`வுக்கு 'சவக்குழி’ தோண்டும் நீண்ட பதிவு இது. பொறுமையுடன் படியுங்கள்.#

நவக்கிரகங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு ’ஜோதிடம்’ கட்டமைக்கப்பட்டது போல, எட்டுத் திசைகளையும் ஆதாரக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாஸ்து என்பது அனைத்து வாஸ்து தோஸ்துகளும் அறிந்ததே.

வாஸ்து பற்றி விஸ்தாரமாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ’திசை’யைப் பற்றி அத்துபடியாய் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

திசை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கும் [உயர்திணை அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்] இன்னொரு பொருளுக்கும் இடையிலான நேர்க்கோணத்தைத் [கோடு] திசை என்கிறார்கள். [மன நிறைவு தரும் விளக்கம் ஆங்கில விக்கிபீடியாவில்கூட இல்லை]

'The line along which anything lies, faces, moves etc.....' என்கிறது  www.definitions.net.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகியவற்றை, அல்லது பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவான பொருள்களைப் புலன்களால் அறிவது போல, திசையும் அறியத்தக்க ஒன்றா?

இல்லை என்பதே அறிவியல் தரும் பதில்.

ஆயினும், பொருள்கள் நிலைகொண்டிருக்கும் இடத்தை அல்லது அவற்றின் இயக்கத்தின் போக்கை அறிய நாம் கிழக்கு முதலான திசைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உருண்டை வடிவத்தில் சுழன்றுகொண்டிருக்கிற இந்தப் பூமியில் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

தோன்றி மறைகிற சூரியனை முன்னிலைப்படுத்தி, அது உதயமாகிற நேர்க் கோணத்தைக் கிழக்கு என்றார்கள்.

எனவே, சூரியன் தோன்றுகிற பக்கம் கிழக்கு ஆயிற்று.

கிழக்கில் சூரியன் தோன்றுகிறான் என்பது தவறு. காரணம், உண்மையில் கிழக்கு என்று எதுவும் இல்லை என்பதே. [பாபு என்பவர், ‘செம்புலப் பெயல் நீராவோம்’ என்னும் தலைப்பில், முக நூலில் திசை பற்றி எழுதியிருக்கிறார்]

கிழக்கு என்பதற்கு எதிர்த் திசை மேற்கானது. இடப்பக்கம் வடக்கு. வலப்பக்கம் தெற்கு.....இப்படித் திசைகள் உருவாக்கப்பட்டன.

இரவுப் பொழுதில், வட திசையில் தெரியும் துருவ நட்சத்திரம், வட திசைக்கான அடையாளமாகவும் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில், மரக்கலப் பயணங்களில், இந்நட்சத்திரமே திசை அறிய உதவியிருக்கிறது. இன்று புதிய சாதனங்கள் வந்துவிட்டன.

அதே போல, விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காந்த சக்தியும் வடதிசைக்கான அடையாளமாக அறியப்பட்டது.

காந்த சக்தி என்பது, புவியீர்ப்பு சக்தி போல பூமியில் இயற்கையாக உள்ள ஒரு ஈர்ப்புச் சக்தி. அதுவும் ஓர் அடையாளம்தான். வடதிசையில் ஈர்ப்புச் சக்தி இருக்கிறது. அவ்வளவே. ஈர்ப்புச் சக்தி இருப்பதால் அது வடதிசை ஆகிவிடாது.

ஆக, மேற்கண்ட தகவல்களின் மூலம், இந்தப் பூமி உருண்டையில், ஐம்புலன்களால் அறியத்தக்க வகையில் திசை என்பதே இல்லை; அது இயற்கையானதும் அல்ல; அது, மனித குலம் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்ட குறியீடு[?] என்பதை நம்மால் அறிய முடிகிறது.

திசை இல்லை என்பதை, அகன்று பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் மனதைச் செலுத்தினால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வான வெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரியன் முதலான கோள்களையும், கோடானுகோடி நட்சத்திரங்களையும் ஒன்று மிச்சமில்லாமல் துடைத்தெறியுங்கள் [கற்பனையாகத்தான்].

இப்போது வெற்று வானம் மட்டுமே உங்கள் கண்முன் விரிகிறது, “கிழக்கே பார்” என்று அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கிறது. பார்க்கிறீர்கள்.

கிழக்கு தெரிகிறதா? இல்லைதானே?

காரணம், ’வெளி’க்குத் திசை இல்லை என்பதுதான்.

மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் கோள்களையும் வெளியில் இடம் கொள்ள வையுங்கள். இப்போது மட்டும் திசை தெரிகிறதா என்ன? இல்லைதானே? துருவ நட்சத்திரத்தை வைத்து ஓரளவு அறியலாம் என்கிறார்கள்.

பூமியில் இடம் கொண்டிருப்பதால், மேல், கீழ் என்பனவற்றை உணர்கிறோம். உருண்டை உருண்டையாக விண்வெளியில் அலைந்து திரியும் கோள்களுக்கோ பிறவற்றிற்கோ மேல், கீழ் பக்கவாட்டு என்பதெல்லாம் இல்லை.

இப்போது, பதிவின் தலைப்புக்கு வருவோம்.

சுழன்று கொண்டிருக்கும் உருண்டை வடிவான இந்தப் பூமிக்கோ, பிரபஞ்ச வெளிக்கோ திசைகளே இல்லாத நிலையில், இந்த வாஸ்துகாரர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் கட்டுவதற்கென்று, கட்டுப்பாடுகளை உருவாக்கியது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இதை, இந்திய நாட்டின் அரிய பொக்கிஷம் என்கிறார்கள்.

5000 ஆண்டு பழைமையான விஞ்ஞானம் என்கிறார்கள்.

விஞ்ஞானம் என்று சொன்ன அதே வாயால், “தத்துவம் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது” என்கிறார்கள் [ustrology. dinakaran.com/vastu.asp]

விஞ்ஞானிகள் கண்டறிந்து சொன்ன cosmic force, காந்தசக்தி பற்றியெல்லாம் கதைகதையாகச் சொல்கிறார்கள்.

நமக்கு, உடல் நலமும் மகிழ்ச்சியும் மன உணர்வுகளாலோ, உடற்பயிற்சியாலோ கிடைக்காதாம். அவற்றை நமக்கு வாரி வழங்குவது வாஸ்துதானாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ பொய்யுரைகள்; புளுகுகள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பழங்காலக் கட்டடக் கலைஞர்கள், மண்ணின் தன்மை, மரங்கள், கற்கள் போன்றவற்றின் உறுதிப்பாடு, கட்டடத்தின் பரப்பளவு, உயரம், வெளிச்சம், காற்று போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கலையம்சமும் நீண்ட ஆயுளும் பொருந்திய அழகிய கட்டடங்களைச் சமைப்பதற்குக் கட்டடக் கலை இயலை உருவாக்கினார்கள். வாஸ்து பண்டிதர்கள் மூட நம்பிக்கைகளைப் அதில் புகுத்திவிட்டார்கள்.

இந்த வாஸ்துகாரர்கள், பொது மக்களிடம் அள்ளிவிடும் பொய்கள் அளவிறந்தவை.

இந்த வாஸ்துவுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறாராம்.

தேவர் அசுரர் போரில், அசுரர்கள் புரிந்த அலம்பல்களை முழுமுதல் கடவுளான சிவனிடம் தேவர்கள் சொல்ல, அவர் கடுங்கோபம் கொள்கிறார். அவர் உடம்பிலிருந்து வேர்வை [நல்ல வேளை, அது வேர்வைதான். வேறெதுவுமில்லை] சுரக்கிறது. [முழுமுதல் கடவுளுக்கும்கூட வேர்க்குமா என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப வேண்டாம்]. அந்த வேர்வைதான் வாஸ்துவாக வடிவம் கொண்டு, அசுரர்களை அழித்ததாம்!

சிவபெருமானின் உத்தரவுப்படி, அசுரர்களின் சடலங்களை அழித்துவிட்டு, இந்த மண்ணுலகிலேயே உறங்க ஆரம்பித்தார் வாஸ்து பகவான். முழுமுதல் கடவுளின் கட்டளைப்படி, ஓர் ஆண்டில் எட்டு நாட்கள் மட்டும் விழித்திருந்து, சிவபெருமானைத் துதி பாடுகிறாராம். [அதென்ன கணக்கு எட்டு? புரிந்தால் சொல்லுங்கள். உங்களுக்குக் கணக்கில்லாமல் திருப்பதி லட்டு வாங்கித் தருகிறேன்!]

ஈசனுக்குச் சொந்தமான வடகிழக்குத் திசையில் தலை வைத்து, தென்மேற்கில் இரு பாதங்கள் நீட்டி சயனம் செய்கிற இவரை [வாஸ்து புருஷன் என்று சொல்கிறார்கள்] மக்கள் வழிபட்டால் நற்பயன் விளைவது நிச்சயம் என்கிறார்கள் வாஸ்து மேதைகள்!

வீட்டின் தலைவாசல் அருகே பூஜை அறை கூடாது.

காரணம் என்ன தெரியுங்களா?

சாமிக்கு அதிர்ச்சி ஏற்படுமாம்! இழவுக்குப் போய் வர்றவங்களும் வீட்டுக்குத் தூரமான பெண்களும் நுழைவதால் சாமிக்கும் தீட்டுப் படுமாம்!

’படுக்கை அறையில் தையல் மிஷின் இருந்தால் புருஷன் பெண்ஜாதிக்கிடையே அடிக்கடி சண்டை வரும்.’

ஒன்னுக்கு ரெண்டு பீரோவா வெச்சா, தினசரி சண்டை வருமில்லையா?

வெகு சுளுவா பெண்டாட்டையை கழட்டி விட்டுட்டுப் புதுப் பெண்டாட்டி கட்டிக்கலாம்.

’நீங்கள் பணம் வைக்கிற பெட்டி அல்லது லாக்கர் தென்திசை அறையில் இருத்தல் குற்றம்.’ ஏன்னா, அந்த திசையில் யமதர்மன் இருக்கிறார்.

யமன் உயிரைத்தான் பறிப்பான்னு நினைச்சிட்டிருந்தோம். பணத்தையும் பறிச்சிடுவான்னு தெரியுது!

அதே போல, குபேரனுக்குச் சொந்தமான வடதிசையிலும் செல்வத்தை வைக்கக் கூடாதாம்.

சாமி இருக்கிற பூஜை அறையில் வைத்தாலும் சேமிப்பு அதோ கதிதான்!

படுக்கையறை, சமையலறை, கக்கூஸ்னு எது எதை எங்கெங்கே வைக்கணும்னு வாஸ்து விஞ்ஞானிகள் அத்துபடியா சொல்லியிருக்காங்க. அதன்படிதான் நீங்க நடந்துக்கணும். மீறினா அதுக்கான தண்டனையை அனுபவிக்க நேரும்.

நீங்க பாட்டுக்கு, கக்கூஸை ஈசான முலையில் அமைச்சிடக் கூடாது. அது ஈசனுக்குரிய மூலை இல்லையா? கக்கூஸ் நாத்தம் அவர் மூக்கைத் துளைக்குமே.

வடக்கு-குபேரன், தெற்கு-யமன் வடகிழக்கு-ஈசன்.....இப்படி எட்டு திக்குகளையும் எட்டு கடவுள்கள் காக்கிறார்கள்!

கடவுள் ஒருவனே. அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்று என்று சொல்லப்படும் நிலையில் திசைக்கொரு குட்டிக் கடவுளை நியமனம் செய்தது யார்?

அந்த முழு முதல் கடவுளேவா?

எட்டு பேரில் ஒரு பெண் கடவுள்கூட இல்லையே? கடவுளர் சமூகத்திலும் பெண் இனத்துக்கு அநீதியா?


’மாணவர்கள் தெற்கு கிழக்காகப் படுக்க வேண்டும். மாணவியர், கிழக்கு மேற்காக. தம்பதியர் தெற்கு மேற்காக.....’

சின்ன வீட்டோடு படுக்கும் போது......?

’பிரபஞ்ச சக்தியை வீட்டுக்குள் வரவழைக்கிறது வாஸ்து.’

அந்தச் சக்திதான் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடக்கிறதே, நீங்க என்ன வரவழைச்சிக் கிழிக்கிறீங்க?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கதைவிட்டு மக்களில் பெரும்பாலோரை வசியம் செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாஸ்து விற்பன்னர்கள்.

 சிற்பம் மற்றும் கட்டடக்கலை வல்லுநரான கணபதி ஸ்தபதி பற்றி அறியாதார் வெகு சிலரே. நம் பெருமதிப்புக்குரியவர். 2011 ஆம் ஆண்டு காலமானார். அவரிடம், “இன்று பயன்பாட்டிலுள்ள வாஸ்துவும் தாங்கள் அறிந்த வாஸ்துவும் ஒன்றா?” என்று கேட்கப்பட்ட போது, [எழுத்தாளர் திலகவதியின் பேட்டி. ‘இவர்கள் இப்படித்தான் சாதித்தார்கள்’ என்னும் நூலில். அம்ருதம் பதிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு வெளியீடு] “நான் அறிந்த வாஸ்து வேறானது” என்கிறார்.

அவர் குறிப்பிடும் வாஸ்து ஓரளவுக்கேனும் அறிவுபூர்வமாக இருக்கும் என்று நம்பலாம்.

அது எவ்வாறிருப்பினும், இன்று நாம் ஏற்க வேண்டிய தலையாய கடமை, அறியாமை மிகுந்த நம் மக்களை இந்தப் பொய்யர்களிடமிருந்து விடுவிப்பதுதான்.

’வாஸ்து சம்பந்தமான புளுகுகளை வெளியிட வேண்டாம்’ என்று மனோ டேனியல் என்பவர் ‘இந்து’ஆங்கில நாளிதழுக்கு ஒரு கடிதமே எழுதினாராம்! [www.keetru.com]

'அரசியல் சாசனப்படி, விஞ்ஞானம் அல்லாத இந்த வாஸ்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது நக்கீரன் வார இதழ்ச் செய்தி.

இப்படிச் சிலர் தம்மால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நம்மால் முடிந்தது என்ன?

பதிவுகள் எழுதுவதும் பாராட்டிப் பின்னூட்டங்கள் இடுவதும் மட்டும்தானா?