வெள்ளி, 8 நவம்பர், 2013

‘ஆகாயக் குறிப்பேடு’ அல்லது ‘பிரபஞ்ச அறிவு’?

நமக்கு ஆகாயம் தெரியும்; குறிப்பேடும் தெரியும். அதென்ன ‘ஆகாயக் குறிப்பேடு?! 


விஞ்ஞானிகள் புதிது புதிதாக எதையெல்லாமோ கண்டுபிடிக்கிறார்கள். அந்த ‘உண்மைகளை’ [கண்டுபிடிப்புகளை]யெல்லாம் அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்?

இந்த நூற்றாண்டின் மகத்தான கேள்வி இது.

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினம். இதற்கான விளக்கம் என் போன்ற சராசரி மனித அறிவு படைத்தவர்களுக்குப் புரியுமா என்ன?

முயற்சி செய்வோம்.

விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுகிற ‘உண்மைகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியின் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிர சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த உண்மைகளைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது” என்கிறார் ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி.

இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்..........

அமெரிக்காவில் எட்கார் கேசி என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த...மருத்துவர் அறியாத சிகிச்சை முறையையும் கூறினாராம்.

அதற்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பதாண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது, “ஆகாயக் குறிப்பேடுகளிலிருந்து...பிரபஞ்ச வெளியில் தேங்கிக் கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து ” என்றாராம்!

‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

எட்கார் பேசியின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வை என்னால் முழுமையாய் நம்ப முடியவில்லை என்றாலும், தகவல் புதிதாகவும் படிக்கச் சுவையாக இருந்ததால் இங்கே பதிவு செய்தேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற நூலிலிருந்து திருடி...அல்ல, திரட்டியது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx