ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சுஜாதாவின் ‘உயிரின் ரகசியம்’ நூலிலிருந்து..........

நான் ‘கிறுக்கிய’ ஒரு சிறுகதையைத்தான் இன்று பதிவிட இருந்தேன். தற்செயலாக ‘உயிரின் ரகசியம்’ நூலை இரண்டாம் முறையாகப் படிக்க நேர்ந்ததில் இந்த முடிவு தடம் புரண்டது!

சுஜாதா கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான் [அவரே சொல்லியிருக்கிறார்]. ஆனால், கடவுள் பற்றியோ, படைப்பின் ரகசியங்கள் பற்றியோ ஆராய்கிற போது அணுவளவும் ‘நடுநிலை’ பிறழ்ந்தவர் அல்ல.

படிப்பறிவு உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய மிகச் சிறந்த தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று என்பது என் கருத்து.

இந்த நூல் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன [முதல் பதிப்பு: டிசம்பர் 2007; உயிர்மை பதிப்பகம், சென்னை-600 018]. உங்களில் பலரும் இதைப் படித்திருக்கக்கூடும். இன்னும் பலர் படிக்காமலும் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை காரணமாக, நூலில் இடம்பெற்றுள்ள மிகச் சிறந்த கருத்து முத்துகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன்.


‘உயிர்’ பற்றிய ரகசியங்கள்..........

*நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி எப்படி இருந்தது? என்று கேட்டால்,  “நான் போய்ப் பார்த்ததில்லை” என்பீர்கள். நானும் போனதில்லை. ஆனால், விஞ்ஞானிகள் இன்றைய சாட்சியங்களையும் அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சாத்தியக்கூறுகளாகச் சொல்லியிருக்கிறார்கள். முதன் முதலாக உயிர் எப்படித் தோன்றியது என்றும் சொல்லியிருக்கிறார்கள். எந்தக் கடவுளும் ‘இன்றிலிருந்து உயிர் ஆரம்பம்’ என்று அறிவிக்கவில்லை. உயிர் தோன்றியது........................ அவ்வளவுதான்.*

* அணுவுக்கு உயிர் கிடையாது. உங்கள் உடம்பில் இருக்கும் அணுக்களைப் பிரித்தால் அதில் எதிலும் ‘உயிர்’ கிடையாது. குறிப்பிட்ட அணுக்கள் ஒரு ‘செல்’ என்னும் குடிலுக்குள் ஒன்று சேரும்போது ‘உயிர்’ என்னும் நடனம் நிகழ்கிறது.*

*மற்றொரு உயிரை, அது ஒரு தங்க மீனோ, கரப்பான் பூச்சியோ, பாக்டீரியாவோ, ஐஸ்வர்யா ராயோ படைக்கத் தேவையான அணுக்கள் நான்கு. கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரிஜன். இவற்றுடன் மிகச் சிறிய அளவில் மற்ற தனிமங்கள். உயிரில் வேறு தந்திரங்கள் ஏதுமில்லை. எல்லாப் பொருள்களையும் போலக் கூட்டணுக்களின் கூட்டு முயற்சிதான் உயிர்.*

*இன்னும் பின்னோக்கிப் போனால் - ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் ஒரு மீன். இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அனைவரும் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிர்களே. ..........அந்த நுண்ணுயிர் எங்கே வாழ்ந்தது; எப்படி உண்டாயிற்று என்பதுதான் கேள்வி.*

*மனமற்ற, சுய சிந்தனையற்ற அணுக்களுக்கு எப்படி அப்படியொரு சிக்கலான உயிர் என்னும் கூட்டணுவை உண்டாக்கத் தெரிந்தது..........மேற்பார்வையாளர் இல்லாமல்? விஞ்ஞானத்தால் இந்த நிகழ்வின் அதிசயத்தை , காரணத்தை விளக்கவே முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். அறிவியலால் இந்த முதல் ‘செல்’ எப்படிக் கட்டமைக்கப்பட்டது என்பதை விவரிக்கவே முடியாது என்கிறார்கள். முடியும் என்கிறார்கள் சிலர். அது எப்போது சாத்தியமாகும்?*

*ப்ரிஸ்டல் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன.  பூமிக்கு ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில்கூட பாக்டீரியாக்கள் பிழைத்துத் தழைத்திருக்கின்றன 110 டிகிரி வரை.. பாக்டீரியாக்கள் உஷ்ணம் தாங்கக் கூடியவை என்றால் அவை 4 கிலோ மீட்டர் ஆழத்தில்கூட பிழைத்திருக்க முடியும்..........பூமியின் அடி ஆழத்தில் வாழ விரும்பும் பாக்டீரியாக்கள்தான் நம் முதல் முன்னோர்கள் ஆவார்கள்.*

*1969 ஜூலை 20, உலக சரித்திரத்தில் முக்கியமான தினம். சந்திரனில் மனிதன் கால் வைத்த தினம். சந்திரனுக்குச் சென்று வந்தவர்கள் மீது ஏதாவது பாக்டீரியா இருக்குமோ என்று கவலைப்பட்டு , சில தினங்கள் அவர்களைத் தனியே வைத்திருந்தார்கள். சந்திரனில் எந்தக் கிருமியும் இல்லை என்பது தெரிந்ததும் அவர்களுடன் கை குலுக்கினார்கள்.*

*பூமியில் உயிர் வந்தது மிக மிக தற்செயலானது. ஏதோ ஒரு கணத்தில் தன்னைத்தானே இரட்டித்துக்கொள்ளும் மூலக்கூறு உண்டாகி, அதன்பின் பரிணாம விதிகள் பொறுப்பேற்றன.*

*அறிவியலுக்கு, ‘காரணம்’, ‘விதி’ போன்ற வார்த்தைகள் எல்லாம் உதவாதவை: தடை செய்யப்பட்டவை. மதம், நம்பிக்கை இவை சார்ந்த வார்த்தைகள் அறிவியலில் இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள்தான் பெரும்பான்மையோர்.*

*செவ்வாய் கிரகத்தில் தன்னிச்சையாக அங்கே பிறந்த ஒரு பாக்டீரியாவை நிரூபித்தாலே போதும். பிரபஞ்சம் பற்றிய நம் கருத்துகள் திருத்தப்பட்டுவிடும்.*

*பிரபஞ்சத்தில் நாம் யார்? நம் பங்கு என்ன? எதற்காகத் தோன்றியிருக்கிறோம்? எதற்காக நமக்குச் சிந்திக்கும் அறிவு ஏற்பட்டது? பிரபஞ்சத்தின் பிரமாண்ட அமைப்பில் நாம் ஓர் அங்கமா? பிரபஞ்ச கானத்தின் ஒரு ராகமா?*

*உயிர் வடிவம் சிக்கலானது; தற்செயலானதே.*

*நாமெல்லோரும் விதியின் புதல்வர்கள் அல்ல. தற்செயலாகத் தோன்றிய தறுதலைகள்! கடவுளின் செயலோ, அவதார புருஷர்களோ அல்ல. உயிரின் மிகப் பரவலான மாறுதல்களால் ஏற்பட்ட அபார தற்செயலின் விளைவுகள். நாம் தோன்றியது எந்தவொரு விதியின் நிர்ணயத்தாலும் அல்ல*

                            *                                      *                              *

நான் என் விருப்புக்கிணங்கத் தொகுத்த இவற்றைக் காட்டிலும் சிறந்த கருத்துகள் நூலில் இடம்பெற்றிருக்கக் கூடும். முழு நூலையும் படிப்பதன் மூலம் அவற்றை நீங்கள் அறிவது சாத்தியமாகும்.

இத்தொகுப்பின் நோக்கம், ‘உயிரின் ரகசியம்’ முழுவதையும் நீங்கள் படித்தறிய வேண்டும் என்பதே.

வருகைக்கு நன்றி.

*************************************************************************************