சனி, 24 மே, 2014

இந்தக் கதையைப் படித்துக் கண்கலங்க வேண்டாம். சும்மா படிங்க!

முன்னணி வார இதழில், பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது இந்த ஒரு பக்கக் கதை. பிரசுரமான இதழ், வெளியான தேதி போன்ற விவரங்கள் தொலைந்துபோயின. தற்செயலாய்க் கண்ணில் பட்ட கையெழுத்து பிரதியின் மறு வடிவம் இது.


கதை:                              அப்பாவுக்காக ஒரு தப்பு

பீரோவில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது போல் பாவனை செய்துகொண்டே, +2 மாணவன் குணசீலனை நோட்டம் விட்டார் நூலக உதவியாளர் ஆறுமுகம்.

அலைபாயும் திருட்டுப் பார்வையுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு பிளேடை எடுத்து, படித்துக்கொண்டிருந்த பத்திரிகையின் ஒரு தாளில் கால் பக்க அளவுக்குத் துண்டித்தான் குணசீலன். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை மடித்துச் சட்டையின் உள் பாக்கெட்டில் செருகினான்; எழுந்து நடந்தான். ஆறுமுகம் பின்தொடர்ந்தார்.

குணசீலன் முதல்தர மாணவன். தினமும் தவறாமல் செய்தித்தாள் படிப்பான். ஆசிரியர்களிடம் நல்ல பெயர். இவனா இப்படிச் செய்தான்? ஆறுமுகத்தால் நம்ப முடியவில்லை.

நூலக அறையிலிருந்து வெளியேறவிருந்த குணசீலனைத் தடுத்து நிறுத்தி, நூலகரிடம் அழைத்துப் போனார் ஆறுமுகம். “அந்த வினா விடைத் திருடன் இவன்தான் சார்” என்றார்.

“சார்...இல்லை சார்...அது வந்து சார்...” நினைத்ததைச் சொல்ல இயலாமல் நாக்குழறினான் குணசீலன்.

“உனக்கு ரொம்ப நல்ல பையன்னு பேராச்சே. நீயா இப்படி நடந்துகிட்டே? எல்லாருக்கும் பயன்படுற வினா - விடைப் பகுதியை வெட்டி எடுக்கலாமா? தலைமை ஆசிரியரிடம் சொல்லி உன்னை.....”

“சார், நான் வினா விடையைத் திருடல சார். அது வந்து.....”

“கையும் களவுமா பிடிபட்டும் இப்படிப் பொய் சொல்றியேடா.”

“நான் பொய் சொல்லல சார். என் அப்பா கள்ளச் சாராயம் காய்ச்சி போலீசில் பிடிபட்டுட்டார். இந்தப் பத்திரிகையில், அவர் ஃபோட்டோவோட செய்தி வந்திருக்கு. இதைப் பார்த்தா எல்லாரும் என்னைக் கேவலமா பார்ப்பாங்களேன்னுதான் இந்தத் தப்பைப் பண்ணிட்டேன்.” அழுதுகொண்டே பத்திரிகையில் துண்டித்த பகுதியின் மறு பக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான் குணசீலன்.

ஃபோட்டோவில், சாராயப் பானையைத் தலையில் சுமந்துகொண்டிருந்தார் குணசீலனின் அப்பா. அவரைச் சுற்றிப் போலீஸ்காரர்கள். படத்துக்குக் கீழே விரிவான செய்தி.

“சே! ஒரு உத்தமமான புத்திசாலிப் பையனுக்கு இப்படி ஒரு அப்பனா?”

நூலகரின் கண்கள் லேசாகக் கலங்குவது தெரிந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&







வெள்ளி, 23 மே, 2014

‘விஞ்ஞானியும் மெய்ஞானியும்’ - ஒரு நடுநிலை ஒப்பீட்டாய்வு! [புதுப்பிக்கப்பட்ட பதிவு]

இந்தப் பதிவு ரொம்பப் பழசு. இதை எழுதியபோது நான் பதிவுலகுக்குப் புதுசு! என் அரைகுறை ‘அறிவியல்&தத்துவ’ ஞானம் இதில் வெளிப்படக்கூடும். எள்ளி நகையாட வேண்டாம்! விரும்பினால் மேலே படியுங்கள்.

ஆய்வு [???]....................... 

விஞ்ஞானி.....மெய்ஞானி.....

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருக்கக்கூடும்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதை யானறியேன்.

இந்த  ஆய்வால் பயன் ஏதுமுண்டா? வெட்டி வேலையா?

முடிவு எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்போமே!.

விஞ்ஞானி:
அணு முதல் அண்டம் வரையிலான எந்த ஒன்றின் தோற்றம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.

மெய்ஞ்ஞானி:
‘ஆழ்ந்த சிந்தனையின் மூலமே பிரபஞ்சப் புதிர்களை விடுவித்துவிட முடியும் என்று நம்புபவர்.

விஞ்ஞானி: 
தான் அனுமானித்தது, ஆய்வின் மூலம், ‘உண்மை’ என உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே ஆதாரங்களுடன் அதை உலகுக்கு அறிவிப்பவர்.

மெய்ஞ்ஞானி: 
தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர். [படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி:
பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்தறியாதவர். “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுபவர்.

விஞ்ஞானி: 
மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.

மெய்ஞ்ஞானி
ஒன்றும் புரியாத நிலை வரும்போது,  “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிக் கடவுளைச் சரணடைபவர்.

விஞ்ஞானி:
இவர்களில் சிலர், ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பவர்கள்; சேர்த்து வைத்த பொருளை இழப்பவர்கள்; ஆய்வுக்குத் தம் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிபவர்கள்.

மெய்ஞ்ஞானி
இவர்களில் சிலர், மனப்பூர்வமாக உண்மைகளைக் கண்டறியவும், கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பவும் தம் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது பாடுபடுபவர்கள்.

இந்த ஒப்பீடு - நோக்கம் எதுவாக இருப்பினும் - எவருடைய மனதையும் நோகடிக்க அல்ல.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கதையாம்! குமுதம் கதையாம்!! இறையன்புவின் சிறுகதையாம்!!! {குட்[டு]டி விமர்சனம்}

வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும் சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம வாசகரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வியாழன், 22 மே, 2014

இந்த வாரக் குமுதம் சிறுகதையும் ஒரு குட்[டு]டி விமர்சனமும்!

பிரபல எழுத்தாளர் வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம் பேரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@













புதன், 21 மே, 2014

ஒரு ‘முதிர்கன்னி’யின் முன் அனுபவங்கள்! [கண்ணீர்க் கதை]

ஜாதகம், வரதட்சணை என்று அலையும் மனப்பக்குவம் இல்லாத பெற்றோர்களையும், மண்ணுலக ‘தேவதை’களுக்காகத் தவமிருக்கும் மணமாகாத இளவட்டங்களையும் குறி வைத்து எழுதப்பட்ட கதை இது. அனைவரும் படிக்கலாம்!


கதை..........

ழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் ‘பெண் பார்க்கும்’ சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பி’ குடித்து,  மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

பத்மாவதி ஒரு முதிர்கன்னி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விஷயத்தில்  சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!

முகத்தில் ‘ரெடிமேட்’ புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் பத்மாவதி.

“மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.

“அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமா” என்றான் கேசவன்.

அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.

செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஒரு இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.

“உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”

“கொஞ்சம் பொறுங்க.....” குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார்.  எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா  ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” வறண்ட புன்னகையுடன் ஒரு சிறிய ‘டைரி’யைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள் பத்மாவதி.

*************************************************************************************

செவ்வாய், 20 மே, 2014

தமிழன் வாழ்க! தமிழ் ஒழிக!!

ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கே கதையாக்கியிருக்கிறேன். இதனால் எல்லாம் நம் தமிழ்ச் சமுதாயத்தில் என்ன மாறுதல் நிகழ்ந்துவிடப் போகிறது? ‘ஏதுமில்லை’ என்பது தெரிந்திருந்தும் இதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறேன். காரணம், எழுதியதை அழிக்க மனம் இல்லை என்பதுதான்!


கதை:                                       க்ருஷிஹா

“அப்பா, உங்க பேத்திக்கு நல்ல பேர் சொல்லுங்க.” அயலூரில் வேலை பார்க்கும் சிவக்குமார் கோவையிலுள்ள தன் தந்தைக்குத் தொ.பே. செய்தான்.

“வான்மதின்னு வெச்சுடலாம். அழகான தமிழ்ப் பேரு” என்றார் மயில்சாமி.

“இது வேண்டாம். யாரும் வைக்காத பேரா இருக்கணும்.”

“எனக்குத் தெரிய யாரும் இந்தப் பேரை வைக்கல.”

“வெச்சிருக்காங்க. வேற பேர் சொல்லுங்க.”

“யோசிக்கணும்.....”

சிறிது நேரம் யோசித்த பின்னர் மகனுடன் தொடர்பு கொண்டார் மயில்சாமி. “கவிமுகில் புதுமையான பேரு. குழந்தையைக் கவின்னோ முகில்னோ கூப்பிட்டுக்கலாம்” என்றார் குரலில் குதூகலம் பொங்க.

“அப்பா, சொல்ல மறந்துட்டேன். நியூமராலஜிபடி கூட்டினா மூனு வரணும்” வெறுமனே சொல்லி வைத்தான் சிவக்குமார்.

ஆங்கில எழுத்து மதிப்பின்படி கூட்டினால் மூன்று வருகிற தமிழ்ப் பெயர்களை அப்போதே பட்டியலிட்டு, ‘நாவுக்கரசி’ என்னும் பெயரைத் தேர்வு செய்தார் மயில்சாமி; மகனிடமும் சொன்னார்.

அப்பா பரிந்துரைத்த பெயர்களை மனைவி நிதர்ஸனாவிடம்  ஒப்பித்தான் சிவக்குமார்.

“வான்மதி...கவிமுகில்...நாவுக்கரசி...கர்மம்...கர்மம்... இதெல்லாம்தான் புதுமையான பேர்களா? அவர்கிட்ட எதுக்குக் கேட்டீங்க?” சுடச்சுட வார்த்தைகளைச் சிதறவிட்டாள் நிதர்ஸனா.

“அது வந்து... குடும்பத் தலைவராச்சேன்னு ஒரு ஃபார்மாலிட்டுக் கேட்டுத் தொலைச்சிட்டேன்.”

“சரி விடுங்க. க்,ச்,ட் இல் ஆரம்பிக்கிற பேர்தான் வைக்கணும்னு குடும்ப ஜோதிடர் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டார். அதனால, ‘க்ருஷிஹா’ங்கிற பேரை செலக்ட் பண்ணிட்டோம்னு அவர்கிட்ட இப்பவே சொல்லிடுங்க” என்றாள் நிதர்ஸனா.

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz






திங்கள், 19 மே, 2014

"காதல் கொடூரன்!".....அந்தக்காலக் குமுதத்தின் அதிரடி 'Crime' கதை!!

சஸ்பென்ஸ் கதைப் பிரியர்களுக்காக ‘வெறியர்’களுக்காகப் பழைய குமுதத்தில்[28.02.1991] சுட்டது இந்த ஒரு பக்கக் கதை! அரிய படைப்பு!! படிக்கத் தவறாதீர்!!!


கதை.............

ற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்.....அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்க வைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்!

இன்று கீதா!

முதல் சந்திப்பிலேயே அவனிடம் மனதைப் பறிகொடுத்தவள்; இரண்டாம் சந்திப்பில், "I love you" சொன்னவள்; அவன் அரவணைப்புக்காக மூன்றாம் சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.

கீதாவை முதல் முறை சந்தித்த போதே தன் அப்பாவிடம், “கீதா ரொம்ப அழகுப்பா” என்றான் சுந்தர்.

“ஐயய்யோ...ஆபத்துடா...உலகம் தாங்காதுடா மகனே. அழகான பெண்கள் அத்தனை பேரும் துரோகிங்க; ஆபத்தானவங்க. கூசாம அவங்களைக் கொல்லணும்டா சுந்தர்” என்றார் அப்பா. அழகழகான பெண்களின் துரோகத்தால் விரக்தியின் விளிம்பைத் தொட்டவர் அவர்!

“கீதா உட்காருன்னா உட்காருரா. எழுன்னா எழுந்திரிக்கிறா. படுன்னா படுத்துருவா. இன்னிக்கி அவளைத் தீர்த்துடுறேன்” என்று தன் அப்பாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பளபளக்கும் கூரிய கத்தியுடன் கிளம்பினான் சுந்தர்.

லியட்ஸ் பீச் இருட்டியிருந்தது.

சுந்தருக்காகக் காத்திருந்த கீதா, பலி ஆடு போல, அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள். ஒரு படகின் மறைவில் இருவரும் அருகருகாக அமர்ந்தார்கள்.

கீதாவின் கவர்ச்சி அங்கங்களைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே அவளின் வழவழப்பான சங்குக் கழுத்தைத் தன் இடக்கரத்தால் வளைத்தான் சுந்தர்.

‘க்ளுக்’.....அவளிடமிருந்து வெளிப்பட்ட மென் சிரிப்பு அவனை உற்சாகப்படுத்தியது. பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுக்க முனைந்தபோது...........

அவன் நெஞ்சில் ‘சுரீர்’ வலி. சுந்தர் அலறினான்...”ஆ...ஆ...ஆ...”

இப்போது, கீதாவின் கையில் ரத்தம் சொட்டும் கூரிய கத்தி இருந்தது.

கத்தியை மறைத்துக்கொண்டு வீடு திரும்பினாள் கீதா.

தன் அம்மாவின் புகைப்படத்தின் முன்னால் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள்....“அம்மா, உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டு வர்றேன். சுந்தர் ஐந்தாவது ஆள். ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள். இனியும் என் கொலை தொடரும்.”

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

இது ‘பத்மா ரவிசங்கர்’ படைப்பு.

சுவை கூட்டுவதற்காக, கதையில் சில மாற்றங்கள் செய்தமைக்குக் கதாசிரியரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo








ஞாயிறு, 18 மே, 2014

“அவன்”..... இது, ஒரு பக்க ‘முத்திரை’க்கதை! நட்சத்திரக் கதையும்கூட!!

குமுதம் ‘ஒரு பக்கக் முத்திரைக்கதை’ப் போட்டியில் ரூ1000/= பரிசு பெறுதற்குரிய படைப்பு இது. 28 ஆண்டுகளுக்கு முன்பே ‘சாவி’ வார இதழில் [28.07.1985] பிரசுரம் ஆகிவிட்டதால் அது சாத்தியம் இல்லாமல் போனது! [இதைப் படைத்த ‘அறிவுஜீவி’க் கதாசிரியன் நான் அல்லங்க!]


கதை:                                    அவன்.....

கதாசிரியன்:                     கே.ஜி.எஃப்.பழனிச்சாமி [எங்கிருந்தாலும் வாழ்க!]

‘சாய்ந்துவிடுமோ?’ என்று பார்ப்பவர்கள் அச்சப்படும் வகையில் ஏராள பயணிகளைச் சுமந்துகொண்டு, முக்கி முனகி நகர்ந்துகொண்டிருந்த அந்த நகரப்பேருந்தில் ‘அவன்’.

பார்ப்பதற்கு ஜோராக இருந்தான். கொக்கி போட்டு இழுக்கிற அழகு.

பாம்பாய் நெளிந்து, முண்டியடித்து முன்னே போக முயன்றுகொண்டிருந்தான்.

‘அவன்’ பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர் பரம்பரைப் பணக்காரர் போலும்! அவருடைய வெளுப்பான உடைகள் பார்ப்பவர் கண்களுக்கு ஒளியை நல்கின. கையில் கனமான பணப்பை[?] வைத்திருந்தார்.கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மார்புப் பகுதியில் ஊசலாடியது.

‘அவன்’ தன் ஒரு கையை முன்னோக்கிச் செலுத்தினான். பணக்காரரின் கழுத்தை நோக்கி அது பயணித்தது. யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

இப்போது அவனுடைய கை அந்தப் பணக்காரர் அணிந்திருந்த சட்டையின் ‘காலர்’ அருகே இருந்தது.

“டிக்கெட்.....டிக்கெட்.....”

மூச்சி வாங்கச் சிரமப்பட்டு, “வழி விடுங்கய்யா” என்று சலித்துக்கொண்டு டிக்கெட் கொடுத்தவாறு கண்டக்டர் அவனைக் கடந்தபோது.....

அவனுக்குப் பின்னால் நின்றவர்கள் ‘அவன்’ மீது சரிய.....

அவனும் அந்தப் பணக்காரர் மீது சரிந்து, அவரின் தங்கச் சங்கிலியை லாவகமாகக் கை வைத்து உருவ.....

அது அவன் கையோடு வந்துவிட்டது.

யாரும் கவனிக்கவில்லை. பணக்காரரும் கழுத்துப் பக்கம் ஏதோ ஊர்கிறதே என்று தடவி விட்டுக்கொண்டார்; தலை முடியைச் சீர் செய்துகொண்டார்.

‘அவன்’ அந்தச் சங்கிலியைத் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, மெல்லத் தன் கண்களால் பயணிகளை நோட்டம் விட.....

அந்த ஏழைத் தொழிலாளி ‘அவன்’ கண்ணில் பட்டான்.

வயதான அந்தத் தொழிலாளியின் உடுப்பில் ஆங்காங்கே எண்ணைக் கறைகள் தெரிந்தன; பொத்தல்கள் நிறைந்திருந்தன.

‘அவன்’ மேலும் முன்னேறி, அந்தத் தொழிலாளியின் முதுகை ஒட்டியவாறு நின்றுகொண்டான்.

தன் சட்டைப் பையிலிருந்து பத்து நூறு ரூபாய்த் தாள்களை வெளியே எடுத்தான்; பேருந்தின் குலுக்கலுக்குக் காத்திருந்து, தொழிலாளியின் சட்டைப் பையில் தாள்களைச் சொருகினான்.

பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, ‘அவன்’ கீழே குதித்து, நடந்து, மறைந்து போனான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@










புதன், 14 மே, 2014

இந்த ஒ.ப.கதை புரிந்தால் நீங்கள் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!!

பணி முடிந்து வீடு திரும்பியதும், கைலிக்கு மாறி, கைகால் அலம்பி தொ.க.முன் அமர்ந்தான் மனோகரன்.

“பைனான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவணைத் தேதி முடிஞ்சி ரெண்டு வாரம் ஆச்சாம். இன்னிக்கிக் கண்டிப்பா பணம் கட்டணும்னு சொன்னாங்க” என்றாள் அவன் மனைவி பூர்ணிமா.

“இன்னிக்கே கட்டலேன்னா தலையை வாங்கிடுவானோ? வட்டிக்கு வட்டி போடுவான். வேறென்ன? நாலு நாள் போகட்டும். உன் வேலையைப் பாரு”என்று கடுப்படித்தான் மனோகரன்.

சமையலறைக்குள் நுழைந்து, தேனீர்க் கோப்பைகளுடன் திரும்பிய பூர்ணிமா, “தமண்ணா மளிகையிலிருந்து பையன் வந்திருந்தான். ’ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்கு. இன்றே பணத்துடன் வரவும்’னு செட்டியார் சீட்டு அனுப்பியிருந்தார்” என்றாள்.

“இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க?” தேனீரை உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.

“டைலர் ரவி வந்தான்......”

குறுக்கிட்டான் மனோகரன். “அவனும் இன்னிக்கே பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?”

“ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்.”

“தைக்கத் துணி கொடுத்தா, ஒரு வாரத்தில் தர்றேன்னு சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சிக் கொடுப்பான். கூலியை மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். மறுபடியும் வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு.”

“அப்புறம்....வந்து....”

“சொல்லு.”

“நெளிநெளியா தலைமுடியோட கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு ஒரு லேடி வந்தா. முப்பது வயசு மதிக்கலாம். பேரு குமுதாவாம். மேட்டுத்தெருவுல குடியிருக்காளாம். 'உன் புருஷன் ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. நேர்ப்படும் போதெல்லாம் இதா தர்றேன்...அதா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிச்சிட்டே இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லார்த்தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வை’னு சொல்லிட்டுப் போனா. ஆளப் பார்த்தா ‘எதுக்கும்’ துணிஞ்சவள்னு தெரியுது.”

மனோகரனின் முகம் முழுக்கக் ‘குப்’பென்று  பீதி பரவியது.

சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

“அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?” வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

“அவகிட்ட கடன் வாங்கல; சொன்னேன்” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினான் மனோகரன், குமுதாவிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்க!

புதன், 7 மே, 2014

‘சிடு மூஞ்சி’களையும் சிரிக்க வைக்கும் சிறுகதை!!! [எச்சரிக்கை: மீள்பதிவு!]

இக்கதையைப் படித்ததும் வாய்விட்டுச் சிரிப்பீர்கள்! அது சாத்தியப்படாவிட்டால், என்மீதான கோபத்தைத் தணிக்க ‘மைனஸ் ஓட்டு’ குத்துங்கள்!!


கதைத் தலைப்பு:       வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்

“ஒரு வாரத்தில் முடிவு அனுப்புவோம்” என்று ‘நேர்முகம்’ போன இடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆறு நாள் ஏமாற்றத்துடன் கழிந்தது செந்தில் முருகனுக்கு. ஏழாவது நாளான அன்று தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அவன் கையில் ‘புத்தாண்டு ராசி பலன்கள்-2010’ இருந்தது. தன் ராசிக்குரிய பலன்களில் பார்வையைச் செலுத்தினான்.

‘இந்த ராசி அன்பர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. குரு பகவான் மட்டுமல்லாது ஜீவன ராசிக்காரரான சனி பகவானின் அருட்பார்வையும் இருப்பதால், வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்’ என்ற நல்ல செய்தியும் அதில் இடம் பெற்றிருந்தது.

திருப்தியுடன் தலையசைத்தான் செந்தில் முருகன். இது அவன் எதிர்பார்த்த பலன்தான். வேலைக்கு விண்ணப்பம் போடும்போதே, ‘சோதிட மாமணி’ தட்சிணாமூர்த்தியிடம் அவன் தன் ஜாதகத்தைக் கொடுத்த போது, அவரும் இதையேதான் சொன்னார்.

தட்சிணாமூர்த்தி சாதாரண ஆளல்ல; ஜோதிட சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்! பெரிய பெரிய ’வி.வி.வி.ஐ.பி’ களுக்கெல்லாம் குடும்ப ஜோதிடர். அவர் சொல்வது நடந்தே தீரும் என்பார்கள். பாண்டவர் காலத்துச் ‘சகாதேவனின் பரம்பரை வாரிசு’ என்றுகூடச் சொல்வார்கள்.

நம்பிக்கையுடன் தபால்காரரின் வருகைக்குக் காத்திருந்தான் செந்தில் முருகன்.

செந்தில் முருகனுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை. வேலைக்கு விண்ணப்பம் போடும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவான். அவர் சொல்லுகிற நேரத்தில்தான் விண்ணப்பம் அனுப்புவான். கடந்து போன ஆண்டுகளில், எத்தனையோ ஜோதிடக்கலை விற்பன்னர்களைச் சந்திக்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. எல்லோருமே அவனுக்கு வேலை கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் வைத்த காலக்கெடுதான் வித்தியாசப்பட்டது.

‘சோதிடச் சக்ரவர்த்தி’ மாமண்டூர் பெரியசாமி, “ஏழாம் இடத்தில் சனி குடிகொண்டிருக்கிறார். ரெண்டு ஆண்டு போகணும். வேலை கிடைச்சுடும்”என்றார். செந்தில் முருகன் பட்டம் பெற்று வேலை தேடத் தொடங்கிய போது நடந்தது இது.

“ஏழாம் இடத்தில் சனி இருந்தாலும் குரு பகவானின் பார்வையும் இருக்கு. எண்ணிப் பத்து மாசத்தில் வேலை வீடு தேடி வரும்”. இப்படிச் சொன்னவர் ‘சோதிட சிரோமணி’ சிவசுப்ரமண்யன். 

“ராகு கேது சாதகமற்ற நிலையில் இருந்ததால் ரொம்பப் பாதகமான நிலை நீடிச்சுது. இப்போ கெடுபலன் முடிஞ்சி விடிவு காலம் வந்துடுத்து. சனியால் வந்த பிரச்சினையும் நிவர்த்தி ஆயிடும். அதிகபட்சம் ஆறு மாசம். சனி பகவானுக்கு பத்து நாள் எண்ணை தீபம் ஏத்து. அரசாங்க வேலையே கிடைச்சுடும்” என்று கணித்துச் சொன்னவர் ‘சோதிடக்கலை ஏந்தல்’ சுந்தரபுரி சுந்தரசாமி அவர்கள்.

இப்படி.....இன்னும் பல சோதிட திலகங்கள் செந்தில் முருகனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, வேலை கிடைக்கும் என்றே சொன்னார்கள். கிடைக்காவிட்டால் “இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்” என்று சவால் விட்டுச் சபதம் எடுத்துக் கொண்டவர்களும் உண்டு!

யார் எதைச் சொல்லியும் நேற்றுவரை, சல்யூட் அடித்துவிட்டு, உட்கார்ந்து தூங்கும் ‘நைட் வாட்ச்மேன்’ வேலை கூடக் கிடைக்கவில்லை!

செந்தில் முருகனுக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவன் சந்தித்த ஜோதிடர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போனது. அன்று வரை அவன் ஜோதிடர்களுக்குக் கொடுத்த காணிக்கையை வைத்து ஒரு மளிகைக் கடையே நடத்தலாம்!

ஆனாலும், அவன் அப்படியெல்லாம் கணக்குப் பார்க்கிற ஆளல்ல. அவன் ஜோதிடத்தை ஒரு ‘தெய்வீகக் கலை’ என்று நம்புகிறவன். ஜோதிடர்கள் கணித்துச் சொல்வது பிசகிப் போனாலும், “என் துரதிர்ஷ்டம், எந்த வேலையும் எனக்குக் கொடுத்து வைக்கல” என்று சொல்வானே தவிர, ஜோதிடர்களையோ ஜோதிடக் கலையையோ ஒரு நாளும் அவன் பழித்துப் பேசியதில்லை.

தபால்காரரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான் செந்தில் முருகன். அவனைச் சுற்றி, ‘புத்தாண்டுப் பலன்’, ‘சனி பெயர்ச்சிப் பலன்’, ‘குரு பெயர்ச்சிப் பலன்’, என்று விதம் விதமான ராசி பலன் புத்தகங்களும், ‘ஜோதிடக் கலை’, ‘ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்’, ‘நீங்களும் ஜோதிடர் ஆகலாம்’ என்று வகை வகையான ஜோதிடப் புத்தகங்களும் குவிந்தும் இறைந்தும் கிடந்தன.

“சார் போஸ்ட்”.

“தபால்காரர் எறிந்துவிட்டுப் போன கடித உறையைக் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் எடுத்துப் பிரித்தான் செந்தில் முருகன்.

வழக்கமான முடிவுதான்! அவன் தேர்ந்தெடுக்கப் படாததை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கப்புறம், வேலைக்கு விண்ணப்பம் போடுவதையும் ஜோதிடம் பார்ப்பதையும் அடியோடு நிறுத்திவிட்டான் செந்தில் முருகன்.

நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் காலை வேளை.

புறநகர்ப் பகுதியில், பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு காலி மனையில் போடப்பட்ட ஒரு கீற்றுக் கொட்டகையில் செந்தில் முருகன் அமர்ந்திருந்தான்.

அவனுக்கென்று ஒரு மேசையும் நாற்காலியும். மேசைக்கு எதிரே ஐந்தாறு மடக்கு நாற்காலிகள். பக்கவாட்டிலிருந்த சிறிய மர அடுக்கில் புத்தகங்கள். உயரே சாமி படங்கள்.

ஓர் ஒளைஞர் உள்ளே நுழைந்து மடக்கு நாற்காலியில் அமர்ந்தார். “பட்டம் வாங்கி ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சி. வயசும் எறிட்டே போகுது. வேலை கிடைச்சபாடில்ல. பார்த்துச் சொல்லுங்க” என்று தன் ஜாதகத்தைச் செந்தில் முருகனிடம் நீட்டினார்.

அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, பேப்பரில் கட்டங்கள் வரைந்து, அவற்றில் கிரகங்களின் இருப்பைக் குறித்து முடித்து ஆராயத் தலைப்பட்டான் செந்தில் முருகன்.

ஆமாம், அவன் இப்போது ஒரு முழு நேர ஜோதிடர்; எதிர்கால வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்!

“தம்பி, இந்தப் புத்தாண்டு உங்க வாழ்க்கையில் புதிய திருப்பத்தைக் கொடுக்கும். பத்தில் சனி இருந்தாலும் குரு பார்வை இருக்கு. கவலை வேண்டாம். எண்ணி ஆறு மாசத்தில் வேலை உங்க வீடு தேடி வரும். சனிக் கிழமை தவறாம..........”

செந்தில் முருகன் சொல்லிக்கொண்டு போக, திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.

****************************************************************************************************************

சனி, 3 மே, 2014

ஒரு ‘தினக்கூலி’ கடவுள் ஆன கதை!!!

இது ஏற்கனவே 90 பேர் மட்டுமே படித்த கதை. 900000 பேராவது படித்துப் பாராட்ட வேண்டும் என்னும் ‘பெரும்பேராசை’யில் மீள்பதிவாக [தலைப்பு மாற்றப்பட்டுள்ளது] வெளியிடுகிறேன். [உண்மையான காரணம், சரக்கு தீர்ந்துடிச்சிங்க!]

                  
ண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

காலை நேரத்தில், வழக்கம்போல வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவரை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான் ஒரு வாகன ஓட்டி.

ரத்த காயங்களுடன் தார்ச்சாலையில் சரிந்து விழுந்தார் பெரியவர்.

யாரும் உதவாத நிலையில், ஆட்டோ பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான். சோதித்த மருத்துவர்கள், “மயக்கமா இருக்கார். பயப்பட ஒன்னுமில்ல” என்றார்கள்; மிகவும் தாமதமாகவே சிகிச்சையளித்தார்கள்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. மோட்டார் சைக்கிளில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“நீ கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தினே. நீ நல்லா இருக்கணும்ப்பா”. குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

“பெரியவரே, நான் கடவுள் மாதிரியெல்லாம் வரல. சாதாரண மனுசனாத்தான் வந்தேன். நான் பஸ் ஸ்டாண்டில் மூட்டை சுமக்கிறவன். உனக்கு உதவி பண்ணினதில் இன்னிக்கி வேலை கெட்டுது. கைவசம் இருந்த அம்பது ரூபாயை ஆட்டோவுக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ‘கைப்பிடி அரிசியில்ல; மறக்காம வாங்கி வான்னு சொல்லி அனுப்பிச்சேன். யாருக்கோ உதவி பண்ணினேன்னு இப்படி வெறுங்கையோட வந்து நிக்கிறியே, உனக்கு ஏன்தான் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சோ’ன்னு என் பெண்டாட்டி கத்துவா. எப்படிச் சமாளிக்கப் போறனோ? அந்தக் கடவுள்தான் வழிகாட்டணும்” என்று சொல்லி வெறுமையாய்ச் சிரித்தான் கண்ணுச்சாமி.

“எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். எப்பவாவது அஞ்சோ பத்தோ தருவான்.” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

அதில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்ட கண்ணுச்சாமி, “காயின் ஃபோனில் உன் வீட்டுக்குத் தகவல் தந்துட்டுப் போறேன். ஃபோன் நம்பர் சொல்லு” என்றான்.

#####################################################################################