புதன், 25 ஜூன், 2014

கடவுளுக்கு நன்றியுணர்ச்சி உண்டா? [பத்துக் கேள்விகளும் பதில்களும்]

கேள்வி1: உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
பதில்: கீழ்க்காணும் வாசகத்தைப் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுப்பேன். வேறு கொண்டாட்டம் ஏதுமில்லை.
வாசகம்: ‘கடவுளே, நீர் இருப்பது உண்மையானால்..........இனவிருத்தி செய்யவும், இன்பதுன்பங்களை அனுபவிக்கவும் என்னைப் படைத்தீர். என்னைப் பொருத்தவரை நூறாண்டுகள் வாழ்ந்து உம்முடைய நோக்கத்தை நிறைவு செய்திருக்கிறேன். நீர் எனக்கு நன்றியுடையவர் ஆகிறீர். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறீர் என்பதை நான் அறியச் சொல்வீரா? உணர்த்தவாவது செய்வீரா?’

கேள்வி 2: என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
பதில்: 150 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிவகைகளை!

கேள்வி 3: கடைசியாகச் சிரித்தது எப்போது?
பதில்: நான்கு நாட்கள் முன்பு, பேருந்து நிலையத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரன் கை நீட்டியபோது, சட்டைப்பையில் சில்லரை இருக்க, “சில்லரை இல்லப்பா” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் என் அடிமனதிலிருந்து சிரிப்பொலி எழுகிறது. சிரிப்பது நானல்ல; என் மனசாட்சி!

கேள்வி 4: 24 மணி நேரம் ‘பவர்கட்’ ஆனால் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?
பதில்: பவர்கட்டா? நீங்கள் இந்த மண்ணுலகைச் சொல்கிறீர்கள். நான் உணவு உண்ட நேரமும் உறங்கிய நேரமும் போக, எந்நேரமும் வான வெளியில் சஞ்சரிப்பவன். அங்க ஏதுங்க பவர்கட்? கோடானுகோடி நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?!

கேள்வி 5: உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வேறு எதனையும்விட வலிமை வாய்ந்தது காம உணர்ச்சி. அதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் நிறையவே சாதிக்கலாம்.

கேள்வி 6: உலகத்தில் உள்ள பிரச்சினையில், உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பதில்: பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருப்பவை ‘வயிற்றுப்பசி’யும் ‘சதைப்பசி’யும்தான். இவற்றைத் தீர்ப்பதே என் விருப்பம்.


கேள்வி 7: நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பதில்: என்னிடமேதான். என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர் இருக்க முடியும்?


கேள்வி 8: உங்களைப் பற்றித் தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

பதில்: நான் மிக மிகச் சாதாரணன். என்னைப் பற்றித் தவறான தகவலைப் பரப்புவதால், பரப்புவருக்கு எந்தவிதப் பலனும் விளையாது. இதைப் பற்றிய கவலை எனக்கு எப்போதும் இருந்ததில்லை.


கேள்வி 9: உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பதில்: ஆரத்தழுவி முதுகில் தட்டிக்கொடுப்பேன். ஆறுதல் வார்த்தைகளைவிடவும் இது அதிகப் பலன் தரும்.


கேள்வி 10: உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்: எதுவும் செய்யலாம். உற்ற நண்பனிடம்கூடக் கேட்கக் கூடாத கேள்வி இது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘பத்துக் கேள்வி’களுக்குப் பதில் எழுதத் தூண்டிய நண்பர் ‘கில்லர்ஜி’ அவர்களுக்கும், ‘கேள்வி-பதிலை’த் தொடங்கி வைத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கும் என் நன்றி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++