அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 9 டிசம்பர், 2014

அம்மம்மா.....! ‘அம்மா’வா அன்று இப்படிப் பேசினார்?!

'குமுதம்’ இதழில், 1982 முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் நான் எழுதிய 18 ஒ.ப.கதைகள் வெளியாயின. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் அனுப்பிய படைப்புகளில் ஒன்றுகூட வெளியாகவில்லை[குமுதத்தின் தரம் உயர்ந்து என் படைப்புகளின் தரம் தாழ்ந்துவிட்டது!]

அந்த இதழில் வெளியான என் முதல் கதையைப் பதிவாக வெளியிட்டு ஆறுதல் பெற நினைத்தேன். கதை வெளியான குமுதம் இதழைப் புரட்டியபோது, ஒரு செய்தி கண்ணில் பட்டது. கதையை விடச் செய்தி பல மடங்கு சுவையானது என்பதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்[‘மூடர் உலகம்' என்னும் என் வலைப்பதிவு Remove செய்யப்பட்ட சோகத்திலிருந்து இன்னும் விடுபடாத நிலையில்!!!].


செய்தியின் தலைப்பு:
ஜெயலலிதா அரசியலில் குதிக்கப் போகிறாரா?

சென்னையில் கைத்தறிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் இருபத்தெட்டாவது நாள் விழாவில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம்:

“தமிழக அரசியலில் காலாவதியாகிவிட்ட சில அரசியல்வாதிகள் சில பத்திரிகைகளை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகைகளில் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாரதி விழாவுக்குச் சென்று கலந்துகொண்டேன். உடனே ஒரு பத்திரிகையில், ஜெயலலிதா மந்திரியாகப் போகிறார் என்று செய்தி வெளியிட்டார்கள்.

திரைப்படக் கல்லூரி முதல்வர் நீலகண்டன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவரைப் பார்த்துவர மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உடனே அந்தப் பத்திரிகையில் மறுநாள் ஒரு செய்தி வெளி வருகிறது. நீலகண்டனுக்குப் பதில் திரைப்படக் கல்லூரி முதல்வராக ஜெயலலிதாவை நியமிக்கப் போகிறார்கள் என்று. அப்படி எதுவுமே நடக்கவில்லை.

இப்போது நான் கைத்தறிக் கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். இதைக் காரணமாக வைத்து நாளைக்கே ஒரு செய்தி போட்டாலும் போடுவார்கள்.  அனகாபுத்தூர் ராமலிங்கத்துக்குப் பதிலாகக் கோ-ஆப்டெக்ஸ் ஆலோசனைக் குழுத் தலைவராக ஜெயலலிதா நியமிக்கப்படப் போகிறார் என்று. இப்போதே அனகாபுத்தூர் ராமலிங்கத்திற்கு ஒரு உறுதியைத் தருகிறேன். எனக்கு அந்தப் பதவி மீது ஆசை கிடையாது.

ஒரு பத்திரிகையில் இன்னொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி முதல்வர் பதவி வேண்டாம். கொடுத்தால் மந்திரி பதவி கொடுங்கள். இது மாதிரிப் பதவியெல்லாம் வேண்டாம் என்று நான் கூறிவிட்டேனாம்.

உறுதியாகக் கூறுகிறேன். எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை கிடையாது.......”  -‘மக்கள் குரல்’
                                                                                                                   

மேற்கண்டவாறு, ‘மக்கள் குரல்’ பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குமுதம் வார இதழ்[20.05 1982, பக்கம் 1] செய்தி வெளியிட்டிருந்தது.

‘அம்மா’ இப்படிப் பேசியிருப்பார்களா? நம்ப முடிகிறதா?

பொய்ச் செய்தி வெளியிட்டது குமுதமா, மக்கள் குரலா?

=============================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக