சனி, 10 ஜனவரி, 2015

எஸ். ராமகிருஷ்ணன் என்னும் நட்சத்திர எழுத்தாளரும், ‘நட்டு’ கழன்ற வாசகனும்!!!

கதை, கவிதை, கட்டுரையெல்லாம் எழுதுகிறவர் எழுத்தாளர் ஆவார். வாசகர் பலராலும் அறியப்பட்டிருந்தால் அவர் பிரபல எழுத்தாளர். அது யாருங்க நட்சத்திர எழுத்தாளர்? “உன்னை மாதிரி முட்டாள்களால்தான் எங்க மாதிரி ஆட்கள் பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்க முடிஞ்சது”ன்னு வாசகனைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறவரா?!

14.01.15 விகடனில் ‘கொஞ்சம் அதிகம் இனிப்பு’ என்னும் சிறுகதையை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

‘கன்னையா’ரியல் எஸ்டேட் தொழிலில் ஏழு வருட அனுபவம் உள்ளவன்; ரெக்கார்டுகளை மாற்றி, போலி டாக்குமெண்ட்ஸ் தயார் செய்யவும் தயங்காதவன்; “நம்ம தொழிலில் யாராயிருந்தாலும் பாவம் பார்க்கக் கூடாது” என்ற ‘தொழில் தர்மம்’ தெரிந்தவன்.

இப்படிப்பட்ட ஒரு பணம் பொறுக்கி எப்படித் திருந்தினான், அல்லது ராமகிருஷ்ணன் அவனை எப்படித் திருத்தினார் என்பதுதான் விகடனின் ஆறு பக்கக் கதை. என்னைப் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளர்[???]களுக்கு விகடனில் அரைப் பக்கம் போதும்.

அருள்செல்வம், பிறவியிலேயே பார்வை இல்லாதவன்; காலேஜ் வாத்தியார். அவன் மனைவி சியாமளாவுக்கும் பார்வை கிடையாது. வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பவர்.

வீட்டுமனை வாங்கும் ஆசையில் கன்னையாவை இவர்கள் அணுகுகிறார்கள்.

‘இப்படிப்பட்ட ஏமாளி நம்மிடம் வந்து சிக்கினானே’ என நினைத்தான் கன்னையா. தான் தயாரித்த டூப்ளிகேட் டாக்குமெண்ட்களைத் தன் உதவியாளன் மூலம் அருள்செல்வனிடம் சேர்த்தான்.

‘இதை யார் சரி பார்த்தாலும் இந்த நிலத்தின் மீது[இது ஷெட்டி என்பவருக்குச் சொந்தமானது. கன்னையாவுக்கு மூன்று லட்சம் கமிஷன் தருவதாகப் பேச்சு] கேஸ் உள்ள விஷயம் யாருக்கும் தெரியாது’ என்று நம்புகிறான்.

கதை சொல்வதில், இந்த ஒரு ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கி விழுகிறார் ராமகிருஷ்ணன்.

இம்மாதிரி தயாரிக்கப்பட்ட போலிகளைக் கண்டுபிடிக்க முடியாதென்று எந்த நம்பிக்கையில் புரோக்கரைச் சொல்ல வைத்தார் ராமகிருஷ்ணன்? எத்தனையோ போலி ரெக்கார்டுகள் நிலப் பதிவு அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவே!

கதையின் ஆரம்பப் பகுதியில் இடம்பெறும் வாசகங்களைப் பாருங்கள.....

‘இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய்க் காட்டிவிட்டான் கன்னையா. கோர்ட் கேஸ் காரணமாக வில்லங்கம் இருக்கிறது என்று யாருமே வாங்க முன்வரவில்லை’.

எழுத்தாளருக்கு, கதையின் தொடக்கப் பக்கத்தில் சொன்னது இடையே மறந்துபோனது எப்படி என்று தெரியவில்லை.

இந்தக் கதையில், நம்மைப் பேராச்சரியத்தில் மூழ்கடிப்பது எது என்றால், “எங்களுக்குக் கண் தெரியாது. ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைக்கிறாங்க.” என்று சொல்கிற பார்வையற்ற, மெத்தப் படித்த கல்லூரி ஆசிரியரும் அவர் மனைவியும், ஒரு உதவியாளர்கூட வைத்துக்கொள்ளாமல், கன்னையாவுடன் சென்று வீட்டுமனையைப் பார்வையிடுவதும், அவனை முழுமையாக நம்பி, பதிவு அலுவலகத்தில் ‘வில்லங்கம்’ சான்றிதழுக்குக்கூட விண்ணப்பிக்காததும்தான். “டாக்குமெண்ட் செக் பண்ணிட்டேன். ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்கிறான் அருள்செல்வம்.

யாருடைய உதவியுடன் எப்படிச் செக் பண்ணினான் என்ற விவரம் கதையில் இடம்பெறவே இல்லை!

அது மட்டுமல்ல, “ஏன்னு தெரியல. உங்க மேல நம்பிக்கை வந்திருச்சி. யார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கல” என்று வேறு தம்பதியர் சொல்கிறார்கள்.

என்னதான் இனிக்க இனிக்கப் பேசினாலும் முன்பின் அறிமுகமில்லாத ஒரு புரோக்கர் மீது இவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது எப்படி என்று நமக்குப் புரியவே இல்லை. ராமசிருஷ்ணருக்குத்தான் வெளிச்சம்.

இதற்கு மேல் கதையில் சொல்ல ஒன்றுமில்லை. விகடனின் பெரிய சைஸில் ஆறு பக்கம் தேத்துவதற்காகத் தேவையற்ற உரையாடல்களையும் சம்பவங்களையும் சேர்த்திருக்கிறார் கதாசிரியர்.

இனி, கன்னையா மனம் திருந்திய அந்த சஸ்பென்ஸை உடைத்துவிடலாம்.

பேரம் பேசி முடித்து, விலை படிந்து, உரிய பணத்துடன் பத்திரப்பதிவுக்கு அருள்செல்வன் தயாராயிருந்த நிலையில், கன்னையாவை இவர்களின் வீட்டுக்கு உணவருந்த அழைக்கிறார்கள் அருள்செல்வன் தம்பதியர்.

தான் தயாரித்த கேசரியைக் கன்னையனுக்குக் கொடுத்த சியாமளா, “இனிப்பு அதிகமா?” என்கிறாள். “ஆமா” என்கிறான் கன்னையன்.

“நான்தான் வேணும்னே நாலு கரண்டி சர்க்கரை கூடப் போட்டேன். அப்போதான் நீங்க எங்களை மறக்க மாட்டீங்க” என்கிறாள். 

“நமக்கு யாராவது பிடிச்சவங்களா இருந்தா சர்க்கரையைக் கூடப் போட்டுக் கொடுக்கணும்” என்று இறந்து போன தன் அம்மா சொன்னது கன்னையாவுக்கு நினைவு வர நெகிழ்ந்து போகிறான்; மனம் திருந்தி, தனித்துப் போய், செல்போனில் பேசிவிட்டு வந்து, “செட்டி அதிக விலைக்கு வேற பார்ட்டிக்குக் கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டார். உங்களுக்கு வேறே இடம் பார்த்துத் தர்றேன்” என்கிறான்.

கதைக்குச் சம்பந்தமே இல்லாமல், காசுக்குத் தொழில் செய்கிற, இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத ஒரு புரோக்கரிடம், “நீங்க எங்களை மறக்காமல் இருக்க சர்க்கரை கூடப் போட்டேன்” என்று சியாமளா சொல்வது எத்தனை செயற்கையானது என்பதைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இந்தப் பிழையும் கதையில் உள்ள மற்ற பிழைகளும், இவர் போன்ற பிரபலங்கள் மீது நம்பிக்கை வைத்து, இவர்களின் படைப்புகளைப் படிக்கும் வாசகனை முட்டாள் ஆக்குகின்றனவே என்பதுதான் நம் வருத்தம்.

=============================================================================================















  

12 கருத்துகள்:

  1. எஸ்.ராமகிருஷ்ணனின் எந்த சிறுகதையையும் நான் படித்ததில்லை. ஒரு தேர்ந்த எழுத்தாளனின் கதையாக தெரியவில்லை. தொடக்கநிலை எழுத்தாளனின் கதையைப் போல் உள்ளது.இது போன்ற கதைகளை எழுதும்போது அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்து எழுதுவது நல்லது.ரயில்வே நிலையங்களில் பார்வையற்றவர்கள் கூட்டமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் பேச்சை வைத்துப் பார்க்கும்போது விவரம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது அப்படி இருக்கும்போது நன்கு படித்தவர்களாக இருக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படித்த வகையில், இவரின் எந்தவொரு கதையும் என் மனதைக் கவரவில்லை. இவருடைய ஒரு கதைக்கு ஏற்கனவே விமர்சனம் எழுதியிருக்கிறேன்.

      பார்வையற்றவர்கள், விவரம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையே.

      நல்ல படைப்புகளைத் தராத போதும் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எப்படியோ பிரபலம் அடைந்துவிட்டார்கள். ஆச்சரியமாக இருக்கிறது.

      நன்றி முரளி.

      நீக்கு
    2. வணக்கம் நண்பரே,,,
      நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு உயரத்தை தொடும் வரைதான் மூங்கில் ஏணியில் ஏறுவார்கள் பிறகு தாணியங்கியாகவே லிப்ட் அவர்களை மேலே கொண்டு போய்விடும் இது பல வாசகர்களையும் கொன்று விடும் இதுதான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது...
      எது எப்படியோ,,, தலைப்பு எனக்கு பிடித்து இருக்கிறது
      தமிழ் மணம் 3

      நீக்கு
    3. ”ஒரு உயரத்தைத் தொடும்வரைதான் ஏணி......”

      பொருத்தமான உதாரணம். நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. பிரபலங்கள் எழுதினால் படிக்காமலேயே வெளியிட்டுவிடுவார்களோ என்னமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சுரேஷ். நிறுத்தக் குறிகளைக்கூடத் திருத்தம் செய்ய மாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நன்றி சுரேஷ்.

      நீக்கு
  3. அவருக்கு இனித்திருக்கிறது...

    தவறு அவரிடம் இல்லை... தொடரும் வாசகர்கள்... என்னமோ போங்க...

    பதிலளிநீக்கு
  4. அடடா.... இப்படியெல்லாம் ஆறு பக்க சிறுகதைகள் வருகிறதா....?
    நான் படித்தே பல வருடங்கள் ஆகிறது பரமசிவம் ஐயா.
    எனக்குக் கிடைப்பதில்லை....(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல கதைகள் அரைப்பக்கம், ஒரு பக்கத்தில் முடிக்கப்பட வேண்டியவை. வலிந்து ஆறேழு பக்கங்களுக்கு இழுக்கிறார்கள்.

      பெரிய எழுத்தாளர்னா கதையும் பெருசா இருக்கணும் போல!

      நன்றி அருணா.

      நீக்கு
  5. எனக்கும் ஆவி, குமுதம் போன்ற வாராந்தரிகள் கிடைப்பதில்லை:-)

    அவை எட்டாத தூரத்தில் நிம்மதியாக இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவற்றையெல்லாம் படிக்காததால் நிச்சயம் உங்களுக்கு இழப்பேதும் இல்லை.

      நன்றி துளசி கோபால்.

      நீக்கு