செவ்வாய், 13 ஜனவரி, 2015

வைரமுத்து கதைக்கு விமர்சனமா? ஊஹூம்.....ஆளை விடுங்க!

குமுதத்தில் வெளியான, வைரமுத்துவின் [http://kadavulinkadavul.blogspot.com/2015/01/blog-post_7.html] ஓட்டை உடைசலான முதல் கதை நம்மைக் கடுமையாக விமர்சிக்க வைத்தது. 19.01.2015 குமுதம் இதழில் வெளியாகியிருக்கும், ‘எல்லா மழையும் நின்றே தீரும்’ என்னும் கதை, “இதுவல்லவோ சிறுகதை!” என்று முழக்கமிடத் தூண்டுகிறது! “வைரமுத்து ஒரு பிறவி எழுத்தாளன்!!” என்று மலைக்க வைக்கிறது!!

ஒரு ஒருதலைக் காதலையும், அது விளைவித்த மனக் காயத்தையும், எதிர்பாராத ஒரு காலக்கட்டத்தில் அது ஆற்றப்படும் விந்தையையும் கதையாக்கி மனம் கலங்க வைக்கும் வார்த்தை விளையாட்டு இவனுக்குக் கைவந்த கலை!

“அவள் அப்படியொன்றும் சிற்பமுமில்லை; பார்க்க முடியாத அற்பமுமில்லை. பளீர்ச் சிரிப்பு; பன்னீர் வார்த்தைகள்; ஆள் விழுங்கும் கண்கள்; சுரிதார் போட்ட சூரிய காந்தி. என்னை மோசமான கவிஞன் ஆக்கியவள் அவள்தான்” என்கிறான் அமிர்தமீனாவை ஒருதலையாய்க் காதலிக்கும் ராஜேந்திரன்.....இல்லை, வைரமுத்து என்கிற எழுத்தாளன்.
ஓர் அழகிய பெண்ணின் அங்க லாவண்யங்களையும் கவர்ச்சிப் பிரதேசங்களையும்  அணுஅணுவாய் ரசித்துச் சுகிக்கும் குணம் ஆண்மகனாய்ப் பிறந்த அத்தனை பேருக்குமே உண்டுதான். ஆனால், அந்த சுகானுபவத் தைச் சுருதி சுத்தமான  வார்த்தைகளால் வடித்தெடுப் பது எத்தனை பேருக்குச் சாத்தியப்படும்? அது இந்த வைரமுத்துவுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது!

“அவளைப் பார்ப்பதற்கென்றே நான் பிறந்தேன்.”

“நன் புத்தகம் தருவேன்; அவள் புன்னகை தருவாள். நூலகத்தில் நுழையும்போதோ விடைபெறும்போதோ  நூலகரான என்னிடம், அவள் ‘வணக்கம்’ சொல்லத் தவற மாட்டாள். என் வார நாட்களில் சனி, ஞாயிறு சலிப்பாயிற்று. திங்கள் சுவையாயிற்று.”

“அவள் எலும்புக்கூட்டைக் காட்டினாலும் அடையாளம் சொல்வேன்.”

இப்படியான கவிஞனின் விவரிப்புகள், ராஜேந்திரன் அமிர்தமீனாள் மீது கொண்ட காதலின் வீரியத்தை அற்புதமாய்க் காட்சிப்படுத்துகின்றன.

இவன் அவள் மீது கொண்டிருந்தது ஒருதலைக் காதல் என்பதை அடுத்து வரும் மிகச் சில வரிகளில் வைரமுத்து புரிய வைக்கும் பாங்கு சிலாகிக்க வைக்கிறது.

‘நூலைத்[டி.எஸ்.எலியட்டின் ‘தி வேஸ்ட் லேண்ட்’] திருப்பிக் கொடுத்து அவள் ‘மிக்க நன்றி’ சொல்லிப் புறப்பட்டபோது என் உடலை மீறி மனமும் மனதை மீறி உடலும் செயல்பட்டன.

சட்டென்று திரும்பி அவள் உள்ளங்கை பற்றி அழுத்தினேன்; இடுக்குகளில் விரல் கோத்தேன்.

மிரண்டு திரும்பி விலகினாள்.

என் பிடி இன்னும் இறுகியது.

“விடுங்கள்..”

“ம்...ஹூம்.”

“எடு.”

“மாட்டேன்...”

“எடுடா...”

அழுத்திய என் கையை உதறி எறிந்துவிட்டுத் தும்பறுத்த இளம் கன்றாய்த் திசை தெரியாமல் ஓடி மறைந்தாள் அமிர்தமீனாள்.

இப்படிக் கதை நிகழ்வுகளை நம் மனத்திரையில் ஓடவிட்டுவிட்டு, கதாசிரியன் வைரமுத்து காணாமல் போய்விடுகிறான்.

அமிர்தமீனாவின் உறவினனான, முன் மண்டை வழுக்கை இளைஞனும் இன்னும் சிலரும், ராஜேந்திரனை அடித்து உதைத்து, சைக்கிள் கேரியரில் கட்டி ஊர்வலம் நடத்துகிறார்கள்; அவன் வீட்டில் எறிந்துவிட்டுப் போகிறார்கள்.

வேதனையின் உச்சத்தில், மாறுதல் பெற்று வேறு ஊருக்கு இடம்பெயர்கிறான் ராஜேந்திரன்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, மழை பொழியும் ஓர் அதிகாலைப் பொழுதில், கோவையில், ஒரு மருந்துக் கடையின் தகடு வேய்ந்த தாழ்வாரத்தின் கீழ்  ராஜேந்திரனையும் அமிர்தமீனாவையும் மீண்டும் சந்திக்க வைக்கிறான் கதாசிரியன். இருவருமே விடியற்காலை நடைப்பயிற்சியின் போது மழைக்கு ஒதுங்கியவர்கள்.

மீனாவை அடையாளம் கண்டுகொண்ட ராஜேந்திரனின் மனப்போராட்டத்தைக் கதாசிரியன் எப்படியெல்லாம் காட்சிப்படுத்துகிறான் பாருங்கள்.

‘நான் எதிர்பார்க்கவே இல்லை, என் சந்தோசத்தைக் கெடுக்க அவள் வருவாளென்று; மழையை ரசித்துக்கொண்டிருந்த என்னருகே இரண்டடி தூரத்தில் இடியாய் வந்து விழுவாள் என்று.....

.....என் வாழ்வைத் தொலைத்தவளும் தொலைந்து போனவளும் இவளேதான். என் வாழ்வின் வளர்சிதை மாற்றம் இவள். பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிகாலையில், ஆளற்ற நெடுந்தொலைவில் அவளும் நானும் மட்டும் அருகருகே. என் பழைய காதலின் தூரம் இதோ இந்த இரண்டடி; என் அவமானத்தின் தூரமும் அதுவேதான்........

.....இவளைப் பார்க்கத்தானே பிறந்தேன் என்று ஏங்கிய காலம் ஒன்று உண்டு, இறக்கும் வரையில் இவளைப் பார்க்கவே கூடாது என்று வெறுத்துப்போனதும் ஒரு காலம். இவளை இப்போது பார்ப்பதா? தவிர்ப்பதா? பேசுவதா? மௌனம் காப்பதா? காற்று திரட்டிக்கொண்டு வந்து அவள் முகத்திலடித்த மழைத்தாரையின் மிச்சம் என் முகத்தில் தெறித்தது.

கதை படைப்பது பலரும் அறிந்த ஒரு கலைதான். கதை மாந்தர்களைத் தத்ரூபமாய்க் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதும் கலைதான். அந்தக் கலைக்கடலின் கரை தொட்டவர்கள் மிகச் சிலரே. அந்தச் சிலரில் ஒருவனாக அல்ல, அவர்களுக்கெல்லாம் முதல்வனாகத் தலை நிமிர்ந்து நிற்கிறான் இந்த வைரமுத்து!

கதையின் உச்சக்கட்டத்தை இப்போது நெருங்குகிறோம்.

........சற்று நேரத்தில், குடையோடு ஓர் ஆள் வந்தார். அவள்[அமிர்தமீனாள்] சட்டென்று குடைக்குள் புகுந்தாள்.

அவர்கள் பார்வையில் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றேன் [ராஜேந்திரன் என்னும் கதைமாந்தனே கதை சொல்வதான உத்தி கையாளப்பட்டிருக்கிறது].

‘அப்பா! அவள் அறியவில்லை என்னை. அது போதும். ஆழமாய் இழுத்து நீளமாய் ஒரு மூச்சு விட்டேன்.

எது நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சினேனோ அது நிகழவில்லை. ஒருவேளை என்னை அவள் அடையாளம் கண்டிருந்தால் யார் தொடங்குவது? எதில் முடிப்பது? அந்த அவமானத்தை எந்த அமிலத்தில் கரைப்பது? நல்ல வேளை! தப்பித்தேன்.’

இவ்வாறான எண்ணங்களில் ராஜேந்திரன் மூழ்கியிருக்கும்போது, அமிர்தமீனாவை அழைத்துப்போன அந்த ஆள் திரும்பி வருகிறார். அன்று தன்னைத் தாக்கிய அந்த முன்வழுக்கைக்காரன்தான்[இப்போது முழு வழுக்கை] அவன் என்பது ராஜேந்திரனுக்குப் புரிகிறது.

ராஜேந்திரனிடம், “மீனா உங்களை வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுப் போகச் சொல்லிச்சு. நான் மீனாவோட புருஷன்தான்” என்று சொன்னதோடு, அவன் சம்மதத்தை எதிர்பாராமல் அழைத்துப்போகிறான். எதிரே காத்திருந்த மீனா அவர்களுடன் இணைந்துகொள்கிறாள்.

“....குடையை அவளுக்கே கொடுத்துவிட்டு நனைந்துகொண்டே நடந்தோம் நாங்கள் இருவரும். சாயங்காலம் வரை விடாது என்று நினைத்த மழை மெல்ல உள்வாங்கியது.”

என்றிவ்வாறு கதையை முடித்திருக்கிறான் கதாசிரியன். இந்த முடிவின் மூலம்...........

‘காலம் வழங்கிய மன முதிர்ச்சி காரணமாக, அன்று ராஜேந்திரனுக்கு வழங்கிய தண்டனை கொடூரமானது என்பதை உணர்ந்து, அதற்குப் பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள் அமிர்தமீனா தம்பதியர்’ என்று வாசகனுக்கு உணர்த்தவும் செய்கிறான்.

‘என்றும் தீராதது என்று நாம் நினைக்கும் எந்தவொரு வேதனைக்கும் ஒரு நாள் தீர்வு வரும்’ என்பதை, ‘எல்லா மழையும் நின்றே தீரும்’ என்னும் கதைத் தலைப்பின் மூலம் வாசகனை உணரவும் வைக்கிறான் படைப்பாளன்.

வைரமுத்து ஒரு சிறுகதை எழுத்தாளன் மட்டுமல்ல, அவன் தேர்ந்த ஒரு ‘சிறுகதைச் சிற்பி’யும் ஆவான்!

****************************************************************************************************************************************************

என் விமர்சனங்களால் பெரிதாகப் பயன் விளைவதில்லை என்பதால், வைரமுத்துவின் கதைகள் பற்றிய விமர்சனங்கள் இனி இடம்பெறா.

****************************************************************************************************************************************************








13 கருத்துகள்:

  1. இந்த கதையை நான் நேரடியாக படித்திருந்தால் கூட, முழு அர்த்தமும் எனக்கு புரிந்திருக்காது. இந்த பதிவின் மூலம் படித்ததினால் (உங்கள் விளக்கத்துடன்) தான் முழுவதும் புரிந்தது.

    உங்கள் விமர்சனத்தை நிறுத்த தேவையில்லை. தொடருங்கள். நாங்கள் ரசிக்கிறோம்.

    Please check the date, 19.01-2015 (second line).
    Enable right click, if possible.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 19.01.2015 என்று குறிப்பிட்டது சரிதான். தமிழ்நாட்டில் திங்கட்கிழமையே குமுதம் விற்பனைக்கு வந்துவிடுகிறது. 19.01.2015 என்று தேதி குறிப்பிடப்பட்ட இந்த வார இதழ், ஒரு வாரம் முன்பே, அதாவது நேற்று[12.01.2015] திங்கட்கிழமை கடைகளில் கிடைத்தது.

      இம்மாதிரி விமர்சனம் பயனுடையதே என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

      மகிழ்ச்சி. நன்றி ஏலியன்.

      நீக்கு
    2. //Enable right click//

      'copy-paste'ஐத் தடுக்க ஏதோ குறியீடுகளை html இல் சேர்த்த ஞாபகம். எதை, எங்கே என்பது நினைவில் இல்லை. இனியும் முயற்சி செய்வேன். நன்றி ஏலியன் .

      நீக்கு
    3. Alien,

      இப்போது right click செய்துபாருங்கள்.

      நீக்கு
    4. Perfect. Right click is working.
      It is just for quoting purpose only just like below instead of typing again.

      //தமிழ்நாட்டில் திங்கட்கிழமையே குமுதம் விற்பனைக்கு வந்துவிடுகிறது//

      Oh.....Sorry. I didn't know that. You are very fast.
      Thank you.

      நீக்கு
  2. கதையை முழுவதுமே சொல்லி விட்டீர்களே நண்பரே....

    கதை எப்படியோ..... தங்களின் விமர்சனம் அருமைதான்.

    தமிழ் மணம் - 1

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம் பரமசிவம் ஐயா.
    படிக்கப் படிக்க.... சுவாரஸ்யமாக இருந்தது.

    எனக்கும் இப்படியெல்லாம் கருத்துக்களைக் கூட்டி
    கற்பனையில் மெறுகூற்றி சிறுகதைகளைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை தான்.
    ஆனால் இங்கே அதை பொறுமையுடன் படிப்பவர் தான் கொஞ்சமாக இருக்கிறார்கள்.

    நிமிடக்கதைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு சற்று நீண்ட சிறுகதைகளுக்குக் கிடைப்பதில்லை.
    ஆனால்....
    உங்களைப் போன்ற சிறந்த விமர்சகர்த்தார் கிடைத்தால்
    எழுதிக்கொண்டே இருக்க ஆசை வந்துவிடும்.
    நன்றி பரமசிவம் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. உங்களின் பல கதைகளும் கவிதைகளும் தரமானவையே. நீங்கள் குறிப்பிடுவது போல, பொறுமையுடன் படிப்பவர்களின் எண்ணிக்கை இங்கு குறைவு என்பதால், படைப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்துபோகிறது.

    உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது; வளமையான எதிர்காலம் இருக்கிறது. வாசகர் எண்ணிக்கை பற்றிக் கவலைப்படாமல் முனைப்புடன் எழுதுங்கள். உற்சாகம் குன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இயன்றவரை உங்கள் படைப்புகளை வாசித்து என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன்.

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  5. மிகச்சிறப்பான விமர்சனம் மூலம் கதையை படிக்கத்தூண்டிவிட்டீர்கள்! இப்போது நான் குமுதம் தொடர்ந்து வாங்குவது இல்லை! கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு