சனி, 14 பிப்ரவரி, 2015

உலகம் தோன்றியது எப்படி? ஆதி மனிதர் கள் படைத்த ‘அதிரச’க் கதைகள்!!!

'ஆதியில் ‘யூரிநோம்’ என்னும் உலகமாதா குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு, அம்மணமாக எழுந்தாள்; தன் கால்களை ஊன்ற இடமில்லாமல், கடலையும் வானையும் பிரித்தாள். கடலின் மீது, தனியாகத் தாண்டவம் ஆடினாள்; தெற்கு நோக்கி ஆடிக்கொண்டே போனாள். புதிதாகத் தோன்றிய காற்று அவள் பின்னால் இதமாக வீசியது.

அவள் காற்றை இரு கைகளாலும் பிடித்துத் தேய்த்தாள். அப்போது, ‘ஓபியான்’ என்னும் பாம்பு தோன்றியது. அந்தப் பாம்பு அவனாக மாறியது.

அவள் அழகிய கோலம் கொண்டு ஆடினாள். மிகு கவர்ச்சியுடன் அவள் ஆட ஆட, ஓபியானின் உடம்பெங்கும் கட்டற்ற காமம் பெருக்கெடுத்தது. அவள் உடலைச் சுற்றி வளைத்து ஆலிங்கனம் செய்து ஆசைதீரப் புணர்ந்தான்.

உலகமாதா கருவுற்றாள். பின்னர் புறா வடிவெடுத்து, ‘பிரபஞ்ச’ முட்டையிட்டாள்.

அதைச் சுற்றி வளைத்து அடைகாத்தான் ஓபியான். முட்டை வெடித்து, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி முதலானவை தோன்றின.'

இது, பண்டைய கிரேக்க மக்கள் புனைந்த கதையாகும்.
கீழ்க்காண இருப்பதும் அவர்களின் கற்பனையில் உதித்ததுதான். என்ன.....கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும்! பரவாயில்லைதானே?

‘முதலில் வெட்டவெளி உண்டாயிற்று. அதிலிருந்து பூமித்தாய் தோன்றினாள்.

இருளில் இருந்தும் வெட்டவெளியிலிருந்தும் ஒளி தோன்றி இரவும் பகலும் உருவான ஒரு காலக்கட்டத்தில், பூமித்தாய் தன்னை மூடிக்கொள்வதற்காக வானத்தைப் படைத்தாள்.

அப்புறம், அந்த வானம் என்னும் ஆடவனோடு ‘சேர்க்கை’ வைத்துக்கொண்டாள். மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்களுக்குத் தலா ஆயிரம் கைகள் இருந்தன. பெரு வலிமை படைத்த அவர்களால் தனக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சினான் வானமாகிய தகப்பன்.

பூமியாகிய தன் மனைவி மேலும் பிள்ளைகள் பெறாதிருக்க, அவளின் கருப்பையில் உருவாகியிருந்த சிசுக்களை நீண்ட காலம் உள்ளேயே தங்க வைத்தான். அதாவது, பிரசவம் ஆகவிடாமல் தடுத்தான்.

இதனால் வெகுண்ட தாய், தன் புருஷனைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினாள். அதைத் தன் மகன்களிடம் விவரித்தாள். அதன்படி.........

ஆகாயக் கணவன், மீண்டும் தன் பூமி மனைவியைப் புணரத் தலைப்பட்டபோது, அரிவாளுடன் புதரில் மறைந்திருந்த ஒரு மகன், தன் தந்தையின் ஆண்குறியைக் கையால் பற்றி அரிவாளால் அறுத்து எறிந்தான்!

அப்போது பெருகி வழிந்த  உதிரத்திலிருந்து பழி வாங்கும் ஆவிகள் தோன்றின.

அறுத்து வீசப்பட்ட உறுப்பு கடலில் மிதக்க, அதிலிருந்து உருவான நுரையிலிருந்து அழகிய தேவதை ஒருத்தி தோன்றினாள். சைப்ரஸ் என்று அழைக்கப்பட்ட அவளிடமிருந்துதான் காதலுணர்ச்சி, இன்ப உணர்ச்சி போன்றவை தோன்றின.’

டுத்து வருவது, பண்டைய எகிப்தியர்கள் புனைந்தது.

கடலிலிருந்துதான் தலைமைக் கடவுள் பிறந்ததாக இவர்கள் நம்பினார்கள்.

அந்தக் கடவுளே தன்னைப் பற்றிய ‘சுய விவரத்தை’க் கீழ்வருமாறு கூறுகிறார்:

“நான்தான் முதன்முதலில் உருவானவன். எல்லாம் எனக்குப் பின் தோன்றியவைதான். ஒரு சமயம் நான் மிகவும் களைப்பாக இருந்தேன். எனக்கு நிற்கக்கூட இயலவில்லை. இருந்தும், தனியொருவனாகவே படைப்புத் தொழிலைச் செய்தேன்..........

..............என் கண்களிலிருந்து வடிந்த நீரில்தான் மனிதர்கள் தோன்றினார்கள்....” இப்படி இன்னும் எப்படியெல்லாமோ உளறுகிறார் அந்தக் கடவுள். செம அறுவை!

பின் வருவது, பழங்கால ஆப்பிரிக்கர்கள் கதைத்தது.

‘பம்பாதான் அனைத்தையும் படைத்தவன்.

ஆரம்பத்தில் எங்கும் இருளாக இருந்தது. பம்பா[ஆடவன்] தன்னந்தனியாக இருந்தான். அவனுக்குச் சகிக்கவொண்ணாத வலி ஏற்பட்டது[பிரசவ வலியேதான்!]

நீண்ட நெடுங்கால வேதனையைச் சகித்துக்கொண்டு இந்த உலகத்தை அவன் பெற்றெடுத்தான்.

அப்புறம், சந்திரனையும் நட்சத்திரங்களையும் ஈன்றெடுத்தான். அவன் வாந்தி எடுத்தபோது, ஏதேதோ தோன்றி, கடைசியாக மனிதன் தோன்றினான்.’

விஷ்ணுவுக்கு நாராயணன் என்ற பெயரும் உண்டு.

‘நாரா’ என்றால் நீர் என்று பொருள். பாற்கடலில் ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் உறங்குபவன் இவன். இவனுடைய நாபியிலிருந்து தாமரை தோன்றியது. அதிலிருந்து அவதரித்தவன் பிரம்மா. இந்தப் பிரம்மாவுடன் தோன்றியவர்கள் சந்திரனும் லட்சுமியும்.

அனைத்து உலகங்களையும் படைத்தவன் இந்தப் பிரம்மாதான். இது நம்ம ஊர்க் கற்பனை.

உயிர்களில், ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதன் விளைவாகப் புதிய உயிர் தோன்றுவதைக் கண்ட நம்மவர்கள், ஆகாயம் என்னும் ஆண் கடவுளும், பூமி என்னும் பெண் கடவுளும் இணைந்து உடலுறவு சுகம் அனுபவித்ததன் விளைவாகவே உலகம் தோன்றியது என்று நம்பினார்கள்.

இறைவனின் பிறப்பு உறுப்பும் இறைவியின் பிறப்பு உறுப்பும் இணைந்த கோலத்தை வடிவமைத்து[?] வழிபட்டார்கள்.

பின்னர் அதைத் தாங்கள் எழுப்பிய கோயில்களில் இடம்பெறச் செய்தார்கள்; விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பேராசிரியர் நா.வானமாமலை எழுதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட, ‘பழங்கதைகளும் பழமொழிகளும்’[பிப்ரவரி, 1980] என்னும் நூலிலிருந்து திரட்டி, செறிவூட்டப்பட்ட பதிவு.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

8 கருத்துகள்:

  1. பிரமிப்பு ஊட்டக்கூடிய கதைகள் அனைத்தும், அடுத்தடுத்த நூற்றாண்டுகள் போகும் போது இன்றைய சினிமா நடிகைகளும் தெய்வங்களாக சித்தரிக்கப்பட்டு கதைகள் புணையப்படும் நால்லகாலம் நாமெல்லாம் இதைக் கேட்க இருக்கமாட்டோம் நண்பரே
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் சந்ததியர் என்ன பாடு படுவார்களோ?!

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. வித்தியாசமான கதைகள்தான்! கதைகளுக்கு கற்பனை எவ்வளவு அவசியம் என்று உணர்த்துகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபஞ்சத் தோற்றம் குறித்து நிறையவே சிந்தித்திருக்கிறார்கள். அதன் விளைவே இம்மாதிரிக் கதைகள். அவர்களின் மிதமிஞ்சிய ஆர்வம் போற்றுதலுக்குரியது.

      நன்றி சுரேஷ்.

      நீக்கு
  3. நம்மவர்களின் புரூடாக்களுக்கு சற்றும் குறைவில்லை அவங்க புரூடாக்களும் :)
    லிங்க வழிபாட்டுக்கு பின்னால் இவ்வளவு அசிங்கமான வரலாறு ?:)
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. இந்த அசிங்கக் கதையை மறுத்து, சிறந்தவொரு தத்துவம் பொதிந்திருப்பதாகக் காலஞ்சென்ற கி. வா.ஜகன்னாதன் சொல்லியிருக்கிறார்.

    நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. ஆமாம் DD. நம்பவே முடியாத கற்பனைக் கதைகள்!

      நன்றி தனபாலன்.

      நீக்கு