திங்கள், 30 மார்ச், 2015

காதலைப் புனிதம் என்றவன் முட்டாள்! அதை நம்புகிறவன் அடிமுட்டாள்!!

மனிதனுக்கு ஆறறிவு வாய்த்ததால் விளைந்த தீமைகளுள் இந்தக் காதலும் ஒன்று. அசிங்கமான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? கொஞ்சம் யோசித்த பின்னர் வாசியுங்கள்!


ன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள்.

இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாடுகளையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும்  முதலில் புரிந்துகொள்வோம்.

அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல்.

கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல்.

காமம்: கவர்ச்சி காரணமாக ஆண் பெண் உடல் உறுப்புகளில் உருவாகும் கிளர்ச்சி. விளைவு, புணர்ச்சிக்கான தூண்டுதல்; இன விருத்தி செய்தல்.

காதல்: அன்பு, காமம் என்னும் பொருள்களும் இச்சொல்லுக்கு உண்டு.  இன்று, ஆண் பெண் உறவைக் குறிக்க மட்டுமே பயன்படுகிறது.

அன்பு, கருணை என்பனவற்றின் பயன் பிறருக்கு உதவுதல்; காமத்தின் பயன் புணர்ச்சி என்றெல்லாம் விளக்கம் தருவது போல, காதலின் பயன் என்ன என்ற வினாவுக்கு நம்மால் தெளிவான விளக்கம் தர இயலாது.

அதன் பயன்தான் என்ன?

பக்கம் பக்கமாக உணர்ச்சியைக் கொட்டிக் கடிதங்கள் எழுதிக் குதூகலித்த காலம் மலையேறிவிட்டது.

பேசிகளில், இவளது அழகை அவன் வர்ணித்தும், அவனது ஆண்மையை இவள் வியந்தும் பேசிப் பேசிப் பேசி இன்ப உலகில் சஞ்சரிக்கிறார்கள். இது, காதலிப்பதால் விளையும் முதல் பயன்.

அடுத்து, பட்டும் படாமலும் ஒட்டியும் உரசியும் மனம் போன போக்கில் கை பிணைத்துத் திரிவது; மறைவிடம் வாய்த்தால் முத்தங்களைப் பரிமாறிக்கொள்வது.

அப்புறம்?

இருவருக்கும் ‘தில்’ இருந்தால் விடுதிகளில் தங்கி, பஞ்சணையைப் பகிர்ந்துகொண்டு, சொர்க்கபுரியை எட்டிப் பார்த்துவிட்டு வருவது. அதற்கான துணிவு இல்லையெனின், பெற்றெடுத்தவர்களுக்கு மனுப் போட்டுவிட்டு முதலிரவுக்காகக் காத்திருப்பது.

இரு தரப்பிலும் அனுமதி மறுக்கப்பட்டால், ஓடிப்போவது. அதற்கேற்ற சூழ்நிலையும் பொருளாதார வசதியும் இல்லையெனின், விஷம் தின்று செத்துப் போவது.

ஆக, இவர்கள் காதலிப்பதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது?

செக்ஸ்.....அதாவது , ‘காம சுகம்’ அனுபவித்தல்.
“இல்லை...இல்லை. இப்படிச் சொல்வது அபத்தம். காதல் என்பது புனிதமானதொரு உணர்ச்சி. அது, வெறும் கவர்ச்சியில் உதிப்பதல்ல; இரு அன்பு நெஞ்சங்களின் கலப்பில் முகிழ்ப்பது” என்று சொல்வாரும் உளர்.

இந்தப் புனிதமான காதலை ஏட்டளவில் காண முடியுமே தவிர, நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதே நம் வாதம்.

காதல், தோல்வியில் முடிகிற போது காதலர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்களே, காதலிப்பதன் நோக்கம் காமம்தான் என்றால் இது சாத்தியமா என்று கேள்வியையும் சிலர் எழுப்பக்கூடும்.

சாத்தியம்தான். இம்மாதிரி தற்கொலைகளுக்குக் காரணம் காதலர்களைப் அழுத்தமாகப் பற்றியிருக்கும் ஒருவிதமான மன நோய்தான்.

இந்நோய்க்கு வித்திட்டவர்கள், காதல் கவிதைகள் எழுதிப் புகழ் பெற விரும்புகிற, பிழைப்பு நடத்துகிற கவிஞர்களும் கதாசிரியர்களும் சினிமாக்காரர்களும்தான்.

“காதல் போயின் சாதல்” என்று பாரதி பாடியிருக்கிறானே என்றால், வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் சொன்னவையெல்லாமே இன்று நம்மவர்க்கு உடன்பாடானவை அல்ல என்பதே நம் பதில்.

மனிதன் விலங்காக இருந்தவரை, சூழ்நிலை வாய்க்கும் போதெல்லாம் உடலுறவு கொண்டு காம இன்பத்தைத் துய்க்க முடிந்தது. ஆறறிவு வாய்த்து, அது வளர்ச்சி பெற்ற நிலையில், பொருளாதாரம், குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் அது சாத்தியம் இல்லாமல் போனது. நடைமுறையில் துய்க்க முடியாத இன்பத்தைக் காதல் என்னும் பெயரில் கற்பனையில் துய்க்க ஆரம்பித்தான். இவனின் இந்த பலவீனத்தை நம் கவிஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்; காதல் கவிதைகளை எழுதிக் குவித்தார்கள்.

இனி யாரும் காதல் கவிதைகள் படைக்கக் கூடாது என்று ஒரு தடைச் சட்டம் பிறப்பிக்கப் படுமேயானால், இன்றுள்ள கவிஞர்களில் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள்!

உண்மையில், சிறப்பித்துப் பாடப்பட வேண்டியது காமம்தான்.

ஆறாவது அறிவின் வளர்ச்சி காரணமாக, மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளும் தடைகளும் போட்டிகளும், இவற்றால் விளையும் துன்பங்களும் காமத்தின் மீதான வெறுப்புணர்வையும், அது பற்றி நாலு பேர் முன்னிலையில் வெளிப்படையாகப் பேசுவதற்கான தயக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டனவே தவிர, இப்போதும் மக்களால் மதிக்கப்பட வேண்டியது காமம்தான்.

நினைத்த போது நினைத்த இடத்தில் எவருடைய அல்லது எதனுடைய குறுக்கீடும் இல்லாமல் ஆசைப்பட்டபடியெல்லாம் அதைத் துய்க்க நேர்ந்தால் அதுவே மகத்தான இன்பம்! பேரின்பம்!!

”அடேய்! பண்ணாடைப் பயலே...காமாந்தகா...களிமண் மண்டையா, இதெல்லாம் அற்ப சுகமடா; சிற்றின்பமடா. நிறையப் புண்ணியங்கள் சேர்த்து, இறைவனின் திருவடியை அடைந்து பெறுகிற இன்பம்தான்  பேரின்பம். தெரிந்துகொள்” என்று இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் யாரோ ஒருவர் ஓங்கிய குரலில் அலறுவதை ‘அசரீரியாய்’ என்னால் இப்போது கேட்க முடிகிறது!

என்ன செய்ய? நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். கடவுள், பாவம், புண்ணியம் சொர்க்கம், நரகம், பேரின்பம் பத்தியெல்லாம் எனக்கு ஒரு மண்ணும் புரியலீங்க. நீங்கள் எத்தனை திட்டினாலும் நான் திருந்த மாட்டேன்.

அது கிடக்கட்டும். நான் காமம் உயர்வானதுன்னு சொல்லிட்டிருந்தேன் இல்லையா?

’ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு, உரிய முறையில் காம சுகத்தைப் பகிர்ந்துகிட்டா கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும்; இல்லத்தில் ஆனந்தம் தவழும்’னு அறிஞர்கள் சொல்லியிருக்காங்க.

இதையும், மேலே சொன்ன அவ்வளவையும் மனதில் இருத்தி, மணமாகாத இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது..........

“தயவு செய்து காதல் செய்ய வேண்டாம்.”

=============================================================================================
இது, http://kaamakkizaththan.blogspot.com என்னும் என் வலைப்பதிவில்[முடக்கப்பட்டது], ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அடுத்த பதிவு நிச்சயம் புத்தம் புதியதாக இருக்கும்!
=============================================================================================









வியாழன், 26 மார்ச், 2015

காந்தியும் காமமும்!

##காந்தி...‘மகாத்மா’ அல்ல; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சாதனைகள் புரிந்த ‘மிகச் சிறந்த’ ஒரு ‘மனிதர்’ மட்டுமே!##


"இளமையில், மிகையான காம உணர்ச்சி உள்ளவர்கள், அதைக் கட்டுப்படுத்தி ஒரு நெறியில் செலுத்தினால், பிற்காலத்தில் சிறந்த சாதனையாளர்களாப் புகழ் பெறக்கூடும்” என்பார் தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசன் [‘கரித்துண்டு’, நாவல்].

இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக, ‘மஹாத்மா’ என்று அழைக்கப்பட்ட காந்தியைச் சொல்லலாம்.
‘மஹா...ஆத்மா’ என்று சொல்லி அவரைக் கடவுளின் அம்சமாக்கி, தீபம் ஏற்றி வழிபடத் தக்கவர் ஆக்கிவிட்டார்கள் கடவுள் பற்றாளர்கள்.

“அவரைப் போல எல்லாம் நம்மால் வாழ முடியாது” என்ற எண்ணத்தை மக்களின் மனதில் ஆழப் பதித்துவிட்டார்கள்.

காந்தி கடவுள் நம்பிக்கை உள்ளவரே தவிர, ஒருபோதும் தன்னைக் கடவுளின் அம்சமாகக் கருதியதில்லை. மிகச் சாதாரண மனிதப் பிறவியென்றே நினைத்தார்; மற்ற மனிதர்களுக்கு உள்ள பலவீனங்கள் தனக்கும் உள்ளன என்றே சொல்லி வந்தார். தன்னுடைய சுய வரலாறான ‘சத்திய சோதனை’யில் தனக்கிருந்த குறை நிறைகளை அப்பட்டமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக, இளமையில் தன்னைப் பாடாய்ப்படுத்திய மிகையான காம உணர்ச்சி பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அசாதாரண முயற்சிகள் பற்றியும் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்.

மோக உணர்ச்சி தன்னை ஆட்டிப்படைத்த போதெல்லாம் மணல் மூட்டை சுமந்து உடம்பு சோர்வடையும்வரை ஓடுவாராம்!

குளிர்ந்த நீரில் நேரம்போவது தெரியாமல் அமர்ந்திருப்பாராம்.

'காமம் பொல்லாதது. அதை அடக்கி ஆள்வது அவ்வளவு எளிதல்ல’ என்பதை அவர் எப்போதும் உணர்ந்தே இருந்தார்.

அதனால்தான், தெனாப்பிரிக்கா புறப்படும் போது, “மதுவையும் மங்கையரையும் தீண்ட மாட்டேன்” என்று தன் அன்னையிடம் சத்தியம் செய்துவிட்டுப் போனார்.

சத்தியம் செய்யும் அளவுக்குப் பெண்ணாசை அவரை மருள வைத்திருந்தது!

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பும் நேரம் வரை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.

ஆனால், திரும்பும் வழியில், அவர் பயணித்த கப்பல், ஒரு தீவை அடைந்த போது, கப்பல் கேப்டன் ஒரு விடுதிக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு விலை மகளிடம் அனுப்பி வைக்க, அவர் மனம் சஞ்சலப்படுகிறது.

ஆசையைக் கட்டுப்படுத்த இயலாமல் தாயிடம் செய்த சத்தியத்தையும் மீற இயலாமல் அவர் மனம் நிலை தடுமாற, சினம் கொண்ட விலைமகள் அவர் கன்னத்தில் அறைகிறாள்! அறையைப் பெற்றுக்கொண்ட அதிர்ச்சியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கப்பலுக்குத் திரும்புகிறார் காந்தி.

கஸ்தூரிபாயை மணந்த பிறகும்கூட, பொல்லாத இந்தக் காம இச்சையைத் தன் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர அவரால் இயலவில்லை.

தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்திலும்கூட, தன் மனைவியை மருவிச் சுகம் கண்ட ஒரு சதைப் பித்தராகவே அவர் இருந்திருக்கிறார்.

இந்தத் தன் பலவீனம் குறித்துப் பின்னர் வெகுவாக வருத்தப்பட்டிருக்கிறார் அவர். [‘சத்திய சோதனை’படியுங்கள்]

உலகமே வியந்து போற்றும் அளவுக்கு உன்னதமான தலைவராக உருவெடுத்த நிலையில், இது போன்ற தன் பலவீனங்களைச் சுயசரிதம் மூலம் உலகுக்கு அறிவித்த ஒரு ’மாமனிதர்’ காந்தியாகத்தான் இருக்க முடியும்.

அதனால்தான், மிகச் சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான கவியரசு கண்ணதாசன்,  ‘வனவாசம்’ என்னும் தன் சுய வரலாற்றின் முன்னுரையில், ‘எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள காந்தியடிகளின் சத்திய சோதனை படியுங்கள். எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள என் சுயசரிதை படியுங்கள்’ என்பார்.
காந்தியைப் போலவே, தான் செய்த தவறுகளை மறைக்காமல் சொன்னவர் கண்ணதாசன்.

‘மனித நாகரிகம் கருதி, நான் செய்த அசிங்கங்கள் அவ்வளவையும் எழுத இயலவில்லை’ என்கிறார்.

‘இளம் பருவத்தில், அழகும் கவர்ச்சியும் மிக்க பெண்களைப் பார்த்துவிட்டால், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் விரகதாபத்துடன் அவர்கள் பின்னாலேயே அலைந்திருக்கிறேன்’ என்று தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

இத்தனை பெண் பித்துக் கொண்டவராக இருந்தும் எழுத்துத் துறையில் இவர் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைப்பது பேராச்சரியம்!

நாற்பது வயதுக்குள்ளாக, உடலுறவு ஆசையை முற்றிலுமாய்க் கட்டுப்படுத்தி, மனைவி கஸ்தூரிபாயின் சம்மதத்துடன் துறவு மேற்கொண்டு நாட்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார் காந்தி.

துறவு மேற்கொள்வது சாத்தியப்படாது என்பது புரிந்த நிலையில், ஒரு வரம்புக்கு உட்பட்டு, மது மங்கையர் சுகத்தை அனுபவித்துக் கொண்டே எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்தியவர் கண்ணதாசன்.

வரம்பு கடந்த காமம், கால நேரம் கருதாமல் அலைக்கழித்த போதும், மனம் தளராமல் அதனுடன் போராடிக் கட்டுப்படுத்தி, கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிப் புகழ் ஈட்டியவர்கள் இவர்கள்.

காந்தியின் சத்திய சோதனையையும் கண்ணதாசனின் மனவாசத்தையும் படித்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட அனைத்துத் தகவல்களும் தெரிந்தே இருக்கும்.

தெரிந்தவர்களுக்கும் இனிப் படித்துத் தெரிந்துகொள்ள இருப்பவர்களுக்கும் இப்பதிவின் மூலம் நான் முன் வைக்கும் வேண்டுகோள்..........

‘பலவீனங்களுடன் பிறந்து, சாதனைகள் நிகழ்த்திய ஒரு சாதாரண மனிதர் இவர்’ என்று கண்ணதாசனை நம் வருங்காலச் சந்ததியருக்கு அறிமுகப்படுத்துவது போலவே, காந்தியையும், ‘ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து செயற்கரிய செயல்கள் செய்த ஒரு மாமனிதர் இவர்’ என்றே அறிமுகப்படுத்துங்கள்.

மறந்தும் அவரை ‘மஹாத்மா’ என்று போற்றிப் புகழாதீர்கள்.

அவ்வாறு செய்தால், வருங்காலச் சந்ததியினர், அவரைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தீபம் ஏற்றி வழிபட மட்டுமே செய்வார்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:
வரைவில் உள்ள அனைத்துப்  பதிவுகளும்[பழைய வலைப்பதிவுகளில் வெளியானவை] உரிய கால இடைவெளிகளில் பதிவிடப்படும்.




















வதைபட்ட தாய்க்குலமும், வரலாற்றின் கறை படிந்த பக்கங்களும்!

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. இந்திய வரலாற்றின் ‘ரத்தக்கறை படிந்த  பக்கங்களை’ அவர் படித்ததில்லை போலும்!

‘மன்னர்கள் புரிந்த மாபெரும் குற்றங்களும், அவர்களின் மூடத்தனமான வெறிச் செயல்களும், அவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களும் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணைதான் வரலாறு'என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர்.

இந்திய அரசியல் வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட சில நிகழ்வுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.
நாடெங்கும், நீண்ட நெடுஞ்சாலைகள் அமைத்து  நிழல் தரும் மரங்கள் நட்ட அசோகச் சக்ரவர்த்தியை நம் எல்லோருக்கும் தெரியும்.

இவர் கலிங்கப் போருக்குப் பிறகு மனம் திருந்திய மாமனிதர்.

போருக்கு முந்தைய அசோகர்?

இவர், பிந்துசாரரின் 101 புதல்வர்களில் ஒருவர்; சகோதரர்களைக் கொன்று குவித்து ஆட்சியைக் கைப்பற்றியவர்; அதனால், ‘சண்ட அசோகன்’ எனப் பெயர் பெற்றதோடு குற்றம் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியவர்; எதிரிகள் பலரையும் வென்ற மாபெரும் வீரர். ஆனால்............

இந்த அசோகனின் தோற்றம் மட்டும் விகாரமானது!

இவரின் அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிகள் இருந்தார்கள். அவர்களில் யாரோ சிலர் இவரது தோற்றத்தைப் பழித்தார்களாம். அந்தச் சிலரை அடையாளம் காண முடியாததாலோ என்னவோ அங்கிருந்த அத்தனை பெண்களையும் யமனுலகுக்கு அனுப்பினாராம் அசோகச் சக்ரவர்த்தி!

இவரிடம், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்த விழா வெகு வமரிசையாகக் கொண்டாடப்படும். விமரிசையாக என்றால் எப்படி?

பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது!

இவனா[ரா] கலிங்கப் போருக்குப் பிறகு அஹிம்சாவாதியாக மாறினான்[ர்]? நம்ப முடியவில்லைதானே?

எதற்கும்  ‘பாகைநாடன்’ எழுதிய ‘கறை படிந்த காலச் சுவடுகள்’ [மூவேந்தர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2004]  ஆய்வு நூலை உடனே வாங்கிப் படித்துவிடுங்கள்.
                     *                      *                          *                                     
அடுத்து வரும் செய்தி உங்களைக் குலை நடுங்க வைக்கும் என்பது 100% உறுதி!

கி.பி.937 இல் காஷ்மீரை ஆண்டவன் ‘வந்தி’ என்னும் பெயர் கொண்டவன். கொடியருள் கொடியனான இவனிடம் இருந்த கொடூரமான ஒரு பழக்கம்.....

கருவுற்ற பெண்களின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை ரசிப்பது; வேதனையில் தாய் துடிப்பதையும் குழந்தை உயிருக்குப் போராடுவதையும் கண்டு ஆனந்தத்தில் மிதப்பது.               

                      *                      *                        *
அடுத்து, தமிழ் மன்னன் ராசராசன் காலத்தில் [கி.பி.1008] நடந்த ஒரு நிகழ்வு.

ராசராசனுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நடந்தது. சோழன் வென்றான். சாளுக்கியன் தலைநகர் எரியூட்டி அழிக்கப்பட்டது.

அந்தப்புரத்துப் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். [போர் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றி ஈட்டிய மன்னர்கள் அ.பு. பெண்களைக் கடத்துவதும், அழகிகளைத் தம் அந்தப்புரத்தில் சேர்ப்பதும் வழக்கமாக இருந்தது]

அப்புறம் நடந்ததுதான் நம் நெஞ்சைப் பதற வைக்கிறது!

சாளுக்கியத் தளபதியின் மகளைப் பிடித்து வந்து அவளின் மூக்கைத் துண்டிக்கிறான் ராசராச சோழன். [ராமாயணம் படித்திருப்பானோ?]

எதிரியைப் பழிவாங்க வேண்டும் என்னும் உச்சக்கட்ட வெறி, எதிரி இனத்துப் பெண்களை இப்படி வதை செய்தால்தான் அடங்கும்போல் தெரிகிறது.

இவனின் பழி வாங்கும் வெறி இத்துடன் முற்றுப் பெறவில்லை. எதிரி நாட்டுப் பெண்களின் மார்க்கச்சுகளை அவிழ்த்து ஓடவிட்டிருக்கிறான்.  
                   *                       *                         *
இந்த ராசராசனை ரொம்ப நல்ல பிள்ளை ஆக்குகிறார்கள், 15 ஆம் நூற்றாண்டு வாக்கில், பாண்டிய மன்னர்களுடன் போர் புரிந்த ஆந்திர நாயக்க மன்னர்கள்.

தோற்றுப் போன மன்னனின் கண் முன்னால், பொது இடங்களில் வைத்து, பலபேர் முன்னிலையில், அவனின் குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கிக் குண்டர்களை ஏவி கற்பழிக்கச் செய்திருக்கிறார்கள்! [‘நாயக்கர் வரலாறு’ படியுங்கள்]

குடும்பப் பெண்களின் கண் முன்னால், தோற்ற மன்னனின் தோலை உரித்ததெல்லாம் [உயிரோடு] சர்வ சாதாரணமான அன்றைய  நிகழ்ச்சிகள்.
                        *                       *                        *
கி.பி.1341 இல் மதுரையை ஆண்டவன் கியாஸ் உதீன் என்பவன்.

இவனின் சகலையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான ‘இபின் பதூதா’ இவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித உருவில் வந்த பேய்’ என்கிறார்.

‘இவன் , பெண் கைதிகளை அவர்களின்  தலை முடியினால் கழுமரத்துடன் கட்டுவான். அவர்களின் குழந்தைகளை அந்தத் தாய்மார்களின் மார்பின்மீது வைத்துச் சித்திரவதை செய்வான்; வெட்டிக் கொல்லுவான்’ என்கிறார் இபின் பதூதா.

இப்படிப் பெண்ணினம் வதைக்கப்பட்டதற்கான ஏராள ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் உள்ளன.

இன்றளவும், இனக்கலவரம் மதக்கலவரம் என்னும் தீ, இம்மண்ணில் கொழுந்துவிட்டு எரிந்த...எரிகிற போதெல்லாம் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு இணையாகப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சாசுவதமான ஒன்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்...........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்ற கவிமணியின் கூற்று ஏற்கத்தக்கதா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு:
வரைவில் உள்ள அனைத்துப்  பதிவுகளும்[பழைய வலைப்பதிவுகளில் வெளியானவை] உரிய கால இடைவெளிகளில் பதிவிடப்படும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




செவ்வாய், 24 மார்ச், 2015

சில சொட்டு விந்துவில் பல கோடி ஆன்மாக்களா?![பழைய பதிவு]

“உடல் அழிந்த பிறகு மிஞ்சுவது ஆன்மா என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அது வெறும் நம்பிக்கை சார்ந்தது. ஆன்மாவின் ‘இருப்பு’ இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

இது பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அறிவியல் அறிஞர் ஒருவர் அதை நிரூபித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறார் ஒரு பதிவர் [tamil and vedas.wordpress.com]. அவர் சொல்கிறார்..........

###பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை’ என்ற புதிய கொள்கையை Dr. Stuart Hameroff [of University of Arizona] என்பவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்.
மூளை செல்களுக்குள் ‘மைக்ரோட்யூபூல்’ என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது [‘நான்’என்னும் உணர்வு/ ஆன்மா]இந்த மைக்ரோட்யூபூலிலிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது. உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்தப் பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் [ஏதேனும் ஒரு உடம்பில்]வந்து இணைகிறது. எனவே, உடம்பில் ஆன்மா இருப்பது உண்மை. இதை நிரூபிக்க முடியும். மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கின்றன. இந்த நியூரான்கள் அனைத்துத் தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை. இவற்றுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடலைவிட்டு நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாl அதற்கு மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்......இத்தகவல், சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,! ###
விஞ்ஞானி, ‘பிரபஞ்ச பிரக்ஞை” என்கிறாரே, அது என்ன என்று விளக்கியிருக்க வேண்டும்; அப்படி ஒன்று இருப்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டதா என்றும் சொல்லியிருக்க வேண்டும். இவற்றில் எதையுமே அவர் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

செத்தவர்கள் பிழைப்பது சாத்தியமே இல்லாத நிலையில், ‘செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்கள்’ என்று சொல்வது தவறாகும்.

ஒரு விஞ்ஞானி சொல்கிறார் என்பதற்காக அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டுவிடாது.

‘மைக்ரோட்யூபிலில் ஆன்மா இடம் கொண்டிருக்கிறதா என்பதை நிரூபித்துவிட முடியும்’ என்றுதான் இந்த விஞ்ஞானி சொல்கிறார். ‘நிரூபித்துவிட்டதாக’ச்  சொல்லவில்லை.  அவரை மேற்கோள் காட்டி, ஆன்மா நிரூபிக்கப்பட்டதாகப் பதிவர் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மாவின் ‘இருப்பு’ இந்நாள்வரை நிரூபிக்கப்படவில்லை என்பதே நாம் அறியலாகும் உண்மை நிலை.

ஆன்மா என்றால் என்ன?

‘ஆன்மா [ஆத்மா] எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை; ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது  பிறப்பற்றது; என்றுமுள்ளது; நிலையானது; பழமையானது. சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி); நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:); தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ); காற்று உலர்த்துவதும் இல்லை’ என்கிறது கீதை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்).

அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்தச் சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ அது பிரம்மம்[கடவுள்]’ என்கிறது தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகா வாக்கியம். 

கீதையும் உபநிடதமும் முன்வைத்துள்ள கருத்துகளின்படி, ஆன்மா, அழிவில்லாதது; என்றும் இருப்பது. எனவே, அதுவும் கடவுளின் ஓர் அம்சமே என்றாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு நாம் எழுப்பும் முதல் கேள்வி..........

“கடவுளின் அம்சமான இந்த ஆன்மா, எதன்பொருட்டு மானுட தேகங்களில் சென்று புகுகிறது? ஏன் அகந்தையைச் சுமக்கிறது? கணக்கற்ற பிறவிகள் எடுப்பதும் பாவபுண்ணியங்களைச் சுமப்பதும் ஏன்?” என்பதுதான்.

ஆன்மா உண்டு என்று பன்னெடுங்காலமாப் பிரச்சாரம் செய்தவர் எவரும் இவ்வாறெல்லாம் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஆன்மாவின் செயல்பாடு என்ன?

‘ ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது.’

  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆன்மா என்பது உண்மையானால் ‘மூளை’ என்ற ஒன்று அவசியம் அற்றதாகிறது. மூளைதான் அறிவின் உறைவிடம் என்று விஞ்ஞானம் சொல்வது தவறு என்றாகிறது.

மூளையிலுள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகையில் நாம் உறக்கத்திற்கு உள்ளாகிறோம். நெருப்பில் எரிந்து போகாத நீரில் நனையாத ஆன்மா எப்போதும் ‘விழிப்பு’ நிலையில்தான் இருக்க வேண்டும். நாம் உறங்கும்போது என்ன ஆகிறது? அதுவும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதா? கடவுளைப் போல எப்போதும் இருந்துகொண்டிருக்கிற ஒன்று தன்னைப் புதுப்பித்துக்கொள்வது அவசியமற்றது.

நம் உடலில் மயக்க மருந்து செலுத்தப்படும் போது நினைவிழக்கிறோம். அப்போது ஆன்மாவும் செயலற்றுப் போகிறதே, அது எப்படி?!

இது போன்ற சந்தேகங்களுக்கு ஆன்மாவை நம்புவோர் போதிய விளக்கம் தராத நிலையில் அது ஐம்புன்களையும் கட்டுப்படுத்துவதாகச் சொல்வதை அங்கீகரிப்பது இயலாத ஒன்றாகும்.

ஆன்மா உடம்புக்குள் நுழைவது எப்படி?

விஞ்ஞானத்தின் உதவியால், ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் உள்ள பல கோடி உயிரணுக்களில் [ஒரு மி.லிட்டர் விந்துவில் 12 கோடிவரை உயிரணுக்கள் இருக்குமாம்] ஒன்று பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையுடன் இணைந்து வளர்வதன் மூலம் குழந்தை உருவாகிறது என்பது நாம் அறிந்ததே.

குழந்தை பிறந்து, வளர்ச்சி பெற்று வாழ்ந்து மடிகிறது.

அந்த உடம்புக்குள்தான் ஆன்மா புகுந்து உடம்பு அழியும்வரை அதை ஆண்டு, அது அழியும்போது வெளியேறுவதாகச் சொல்கிறார்கள்.

அந்த ஆன்மா, உடம்புக்குள் புகுவது எவ்வாறு?

காது, மூக்கு, வாய், மலத்துவாரம், மர்ம உறுப்பு ஆகிய முக்கிய துவாரங்கள் வழியாகவா, இல்லை, வேர்வைத் துவாரங்கள் மூலமாகவா?

ஒவ்வொரு துவாரத்திலும்  கணக்கற்றவை நுழைய முடியும். ஒன்றுக்குத்தான் அனுமதி என்பது கடவுள் வகுத்த விதியா? ஒன்றுக்கும் மேற்பட்டவை போட்டியிட்டு, வென்ற ஒன்று உட்புகுகிறதா?

உடம்புக்குள் புகுகிற அந்த ஒன்று, துவாரம் இல்லாத சினை முட்டையைத் துளைத்தது எவ்வாறு?

கருப்பையில் இருக்கும் சினை முட்டையை அடைவதற்கான வழி, பெண்ணுறுப்புப் புழைதான்.

எனவே, ஆண், தன் விந்துவைப் பெண்ணுறுப்பில் தெளிக்கும்போதே, அதன் ஒவ்வொரு துளியிலும் கோடானுகோடி ஆன்மாக்கள் கோடிக் கணக்கான உயிரணுக்களுடன் பயணித்தல் வேண்டும். உயிரணுக்களுக்கான ஓட்டப்  போட்டியில் வென்று, சினை முட்டையைத் துளைத்து உட்புகும் ஒற்றை உயிரணுவுடன் ஒட்டிக் கொண்டு வீரியமுள்ள ஓர் ஆன்மா மட்டும் சினை முட்டைக்குள் நுழைதல் வேண்டும்; மூளை உருவாகக் காரணமான செல்களில் அது நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும். 

இவ்வாறுதான் ஓர் ஆன்மா சினை முட்டைக்குள் நுழைகிறதா?

மேலும்...........

ஒவ்வொரு ஆன்மாவுக்கும், தனக்குரிய உடம்பைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் உண்டா?

புகுந்த உடம்பின் மீது வெறுப்பு ஏற்பட்டால், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஆன்மா வெளியேறலாமே! ஏன் அவ்வாறு செய்வதில்லை? கடவுள் கட்டுப்படுத்துகிறாரா? நிபந்தனைகள் விதித்திருக்கிறாரா?

இன்றுவரை இவ்வினாக்களுக்கு விடை ஏதும் இல்லை.

ஆன்மாதான் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துகிறது என்றால், மூளை இல்லாமலே மனித உடம்பு இயங்க வேண்டும்; சிந்திக்கவும் வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்றால் நகைப்புதான் மிஞ்சுகிறது.

'உடலின் இயக்கத்துக்கு மூளைதான் காரணம்; ஆன்மாவின் பணி, இந்த மண்ணில் மனிதன் பெறும் அனுபவங்களையும் செய்யும் பாவ புண்ணியங்களையும் மரணத்துக்குப் பின்னர் சுமந்து செல்வது மட்டுமே' என்றால், அடுத்த பிறவியில், இப்போது பெற்ற அனுபவங்கள் நினைவுக்கு வருதல் வேண்டும். அதுவும் சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.

‘ஆன்மா இருப்பதும், பிறவிதோறும் வேறு வேறு உடல்களில் புகுந்து புகுந்து இருந்து இருந்து வெளியேறுவதும் உண்மையாயின், ஒரு பிறவியில் மருத்துவராக இருந்து அனுபவம் பெற்ற ஓர் ஆன்மா அடுத்த பிறவியில் மருத்துவக் கல்லூரியில் கற்காமலே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று பதிவர் ‘வவ்வால்’ அவர்கள், பதிவர் ‘சார்வாகன்’  அவர்களின் ஒரு பதிவுக்கான பின்னூட்டமாகப் பதிவு செய்த கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.

இப்படி, விளக்கம் தரவேண்டிய ஐயப்பாடுகள் எவ்வளவோ உள்ளன [பதிவின் நீட்சிக்கு அஞ்சி இத்துடன் முடிக்கப்படுகிறது]. இவை பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் யாரோ சிலர் அனுமானம் செய்து சொல்லிவிட்டுப் போனவற்றை நம்புவதும் பிறரை நம்பத் தூண்டுவதும் ஏற்கத்தக்க செயல்களல்ல; அல்லவே அல்ல.

*****************************************************************************************************************************************************

பதிவர் சார்வாகன், ‘ஆன்மா என்றால் என்ன!? பரிணாமப் பார்வை!’ என்னும் பதிவில் [http://aatralarasu.blogspot.com/2013/07/1.html] வெளிப்படுத்தியுள்ள கருத்துகளும், அதற்கான, alien, வருண், பார்த்தி, நந்தவனத்தான், கர்மயோகி, நம்பள்கி, புரட்சிமணி, கோவிகண்ணன் போன்றோரின் பின்னூட்டங்களும் ஆன்மா பற்றி மேலும் அறிவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘குங்குமம்’ இதழில்[30.03.15] ஒரு ‘கத்துக் குட்டி’க் கதாசிரியனின் கதை!

குங்குமம் இதழின் ஆசிரியருக்குப் பிடித்த இந்த ஒரு பக்கக் கதை, குங்குமத்தை[இந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்]   விரும்பி வாசிக்கும் உங்களுக்கும் பிடிக்கும். படித்து மகிழுங்கள்.
கதை:                                                       வேண்டாம்

மாப்பிள்ளை வீட்டாருக்கு எங்கள் பெண் சுதாவை ரொம்பவும் பிடித்திருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு அவசரப்பட்டார்கள். 

எங்களுக்கு சேலம். மாப்பிள்ளை வீட்டாருக்குக் கோபி. பையன் வேலை பார்ப்பது கோவையில். கோபியிலோ கோயம்புத்தூரிலோ எங்களுக்குத் தெரிந்தவர் என்று யாருமே இல்லை. மாப்பிள்ளை பற்றி யாரிடம் விசாரிப்பது?

யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது.

அன்று காலை, “ஏங்க, உங்க காலேஜ் ஃபிரண்ட் தனபால் கோயம்புத்தூர்லதானே வேலை பார்க்கிறார்...ரொம்ப நாள் கழிச்சி ஃபேஸ்புக்ல ரிக்வெஸ்ட் கொடுத்துத் திரும்பவும் பேசினதா சொன்னீங்களே?” என நினைவூட்டினாள் என் மனைவி.

ஆஹா! எப்படி மறந்தேன்! உடனே செல்ஃபோனில் தேடி, தனபால் கொடுத்த  நம்பருக்கு டயல் செய்து பேசினேன். மாப்பிள்ளை வேலை பார்க்கும் அலுவலகத்தைச் சொன்னதும், “அது எங்க ஆபீஸ்தான்” என்ற தனபால், “டைரக்ட் ரெக்ரூட்மெண்ட்ல எனக்கு மேலதிகாரியா வந்துட்டான். கீழே வேலை பார்க்கிறவங்களை நம்புறதில்ல. சரியான சந்தேகப் பேர்வழி. இவனைக் கட்டிக்கப் போறவ பாடு திண்டாட்டம்தான்” என்றான் தனபால்.

மனைவி கேட்டாள்...“வேற வரன் தேடவேண்டியதுதானா?”

“வேண்டாம். இந்த வரனையே நிச்சயம் பண்ணிடலாம். தனபால் ஒழுங்கா வேலை செய்யமாட்டான்; லஞ்சத்துக்கு அலையறவன். அவன் ஒருத்தரைக் கெட்டவர்னு சொன்னா அவர் நல்லவராத்தான் இருப்பார்” என்றேன் திடமான குரலில்.
============================================================================================

குங்குமம் இதழாசிரியருக்கு என் நன்றி.

============================================================================================

வியாழன், 19 மார்ச், 2015

‘சிடு சிடு’ குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ‘சுடு சுடு’ ‘சுருக்’ கதை!

கதைத் தலைப்பும் ‘சூடு’தான். எழுதி முடித்த சூட்டோடு வெளியிடுகிறேன்!


“ஏங்க, உங்களைத்தானே?

“சொல்லு.” வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்த சேதுராமன் பார்வையை உயர்த்தாமலே சொன்னார்.

“நம்ம அகிலா எவனையோ காதலிக்கிற மாதிரி தெரியுதுங்க.” கனத்த கவலை சுமந்து சொன்னாள் கற்பகம்.

“ஏன் அப்படிச் சொல்லுறே?”

“நேரம் போறது தெரியாம செல்ஃபோனில் பேசிட்டிருக்கா.”
“ம்ம்ம்...”

“குழைஞ்சி குழைஞ்சி பேசுறா; ‘அடச்சீ...’ன்னு சொல்லி வெட்கப்பட்டுச் சிரிக்கிறா; நான் பக்கத்தில் இருக்கிறதையே மறந்துடுறா. அவன் என்ன ஜாதியோ தெரியல. நாம சம்மதிக்கலேன்னா ஓடிப்போய்க் கல்யாணம் கட்டிக்குவாளோன்னு சந்தேகமா இருக்குங்க.” படபடத்தாள் கற்பகம்.

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு அழுத்தம் திருத்தமான தொனியில் சொன்னார் சேதுராமன்: “அவ யாரையும் காதலிக்க மாட்டா; அப்படியே காதலிச்சாலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. கவலைப்படாதே.” 

“எதை வெச்சி இப்படிச் சொல்றீங்க?”

“சின்னச் சின்ன பிரச்சினைக்கெல்லாம், ‘உங்களைக் கட்டிகிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்’னு  மூக்கைச் சிந்துறது உன் வழக்கம். அகிலாவுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதிலிருந்து இதைக் கவனிச்சிட்டு வர்றா. அம்மாக்காரி செஞ்ச தப்பை மகள் செய்வாளா என்ன?” சொல்லி முடித்து வலை வாசிப்பைத் தொடர்ந்தார் சேதுராமன்.

கவலை தோய்ந்த  முகத்துடன், தனி அறையில் செல்ஃபோன் பேசிக்கொண்டிருந்த மகளை நோக்கி நடந்தாள் கற்பகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செவ்வாய், 17 மார்ச், 2015

ஐயோ பாவம் கடவுள்! பாடாய்ப்படுத்தும் மதவாதிகள்!!


‘கடவுள் உலகைப் படைத்தது ஏன்? எப்போது? எவ்வாறு?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியை அடியோடு கைவிட்டுவிட்ட மதவாதிகள், ‘எத்தனை நாட்களில் படைத்தார்?’ என்ற ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விலாவாரியாகப் பதிலும் சொல்லுகிறார்கள்; மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் வசைமாரி பொழிகிறார்கள்; மறுப்பவர்களின் தலைகளுக்கு ‘விலை’ வைக்கிறார்கள்.

கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]
கடவுளைப் போலவே மனிதர்களாகிய நாமும், ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கலாமாம். கடவுளின் வழியில் மனிதன்! இது எப்படியிருக்கு?

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் நாட்களும் நேரங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனே இல்லாத நிலையில், ஆறு நாள் என்று கணக்கிட்டது எப்படி? முதலில் கதை கட்டியவர் கொஞ்சமேனும் சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆறு நாட்கள்! அது என்னய்யா கணக்கு?

விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றல் வாய்ந்த கடவுளால், ஆறே ஆறு மைக்ரோ...மைக்ரோ...மைக்ரோ நொடிகளில் [இப்படி நாம் வரையறுப்பதும் தவறுதான்] தாம் நினைப்பதையெல்லாம் படைத்துவிட முடியுமே. அப்புறம் எதற்கு ஆறு நாள் ஏழு நாள் எல்லாம்?

ஆறு நாள் குழறுபடியைப் புரிந்துகொண்ட மதப் பற்றாளர்கள்,  “ஆறு என்பது அடுத்தடுத்த கட்டங்களே தவிர, ஆறு நாட்கள் அல்ல; ஆறு கட்டங்களில் லட்சோப லட்சம் ஆண்டுகள் உழைத்து[...millions of years when God created the world...] அவர் தம் செயலைச் செய்து முடித்தார்” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

உலகங்களை[பிரபஞ்சத்தை]க் கடவுள் படைத்தார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு இந்த வழவழா கொழகொழா வியாக்கியானம் என்பது நமக்குப் புரியவே புரியாத புதிராக இருக்கிறது!
பாவம் கடவுள்! அப்படி ஒருவர் இருந்தால், இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, திக்குத் தெரியாத வெட்ட வெளியில் பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருப்பார் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.


இந்த ஆறு நாள் கணக்கு குரானிலும் இடம் பெற்றிருக்கிறது

அந்த ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது அது. ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் 
தேவைப்பட்டன என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches 
that God created "the heavens and the earth" in six days.]

உயிர்களே படைக்கப்படாத நிலையில், சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுள் படைத்ததன் பொருள் என்ன?

தான் படைக்கவிருக்கும் உயிர்களில் புண்ணியம் செய்பவை சொர்க்கத்திற்கும் பாவம் செய்பவை நரகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?

ஆக, பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபடும் வகையில் உயிர்களைப் படைப்பதென்று கடவுள் முடிவெடுத்த்திருக்கிறார்; படைத்திருக்கிறார்.

கடவுளின் இந்தச் செயல், கடும் கண்டனத்திற்கு உரியதல்லவா?

இந்து மதவாதிகளைப் பொருத்தவரை ஆறு, ஏழு என்று கடவுளுக்குக் ‘காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்துவிட்டார்கள்.

முட்டை வடிவிலான உலக உருண்டையிருந்தே["Egg-shaped cosmos"]
அனைத்து உலகங்களும்[பிரபஞ்சம்] விரிவடைந்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றிப்  பிரமானந்த புராணம்[Brahmanda Purana] விரிவாகப் பேசுகிறதாம். [Wikipedia]

கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளியாவதைப் பார்த்த அனுபவம் இவர்களை இப்படிக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையால் புதிய உயிர் தோன்றுவது போல, பூமிப் பெண்ணும் ஆகாய ஆணும் புணர்ச்சி செய்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்று நம்பினார்களே, அது போல.

அந்த நம்பிக்கையின் விளைவாகச் ‘சிவலிங்கம்’ உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அது கடவுளாக வழிபடப்படுகிறது.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும்  அறிவு பெற்றிருந்த காலத்தில், உலகத் தோற்றம், கடவுள், படைப்பு பற்றியெல்லாம் மனிதன் மேற்கண்டவாறு மனம் போன போக்கில் அனுமானம் செய்ததில் தவறேதும் இல்லை. இந்த அறிவியல் யுகத்திலும் அவர்கள் சொல்லிவிட்டுப் போன கதைகளைத் திரும்ப மேடை ஏறி முழங்குவதும் ஏடுகளில் எழுதுவதும் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்ட மதவாதிகள் ஆராய வேண்டும்.

=============================================================================================

ஐயோ பாவம் கடவுள்! பாடாய்ப்படுத்தும் மதவாதிகள்!!


‘கடவுள் உலகைப் படைத்தது ஏன்? எப்போது? எவ்வாறு?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியை அடியோடு கைவிட்டுவிட்ட மதவாதிகள், ‘எத்தனை நாட்களில் படைத்தார்?’ என்ற ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விலாவாரியாகப் பதிலும் சொல்லுகிறார்கள்; மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் வசைமாரி பொழிகிறார்கள்; மறுப்பவர்களின் தலைகளுக்கு ‘விலை’ வைக்கிறார்கள்.

கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]
கடவுளைப் போலவே மனிதர்களாகிய நாமும், ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கலாமாம். கடவுளின் வழியில் மனிதன்! இது எப்படியிருக்கு?

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் நாட்களும் நேரங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனே இல்லாத நிலையில், ஆறு நாள் என்று கணக்கிட்டது எப்படி? முதலில் கதை கட்டியவர் கொஞ்சமேனும் சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆறு நாட்கள்! அது என்னய்யா கணக்கு?

விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றல் வாய்ந்த கடவுளால், ஆறே ஆறு மைக்ரோ...மைக்ரோ...மைக்ரோ நொடிகளில் [இப்படி நாம் வரையறுப்பதும் தவறுதான்] தாம் நினைப்பதையெல்லாம் படைத்துவிட முடியுமே. அப்புறம் எதற்கு ஆறு நாள் ஏழு நாள் எல்லாம்?

ஆறு நாள் குழறுபடியைப் புரிந்துகொண்ட மதப் பற்றாளர்கள்,  “ஆறு என்பது அடுத்தடுத்த கட்டங்களே தவிர, ஆறு நாட்கள் அல்ல; ஆறு கட்டங்களில் லட்சோப லட்சம் ஆண்டுகள் உழைத்து[...millions of years when God created the world...] அவர் தம் செயலைச் செய்து முடித்தார்” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

உலகங்களை[பிரபஞ்சத்தை]க் கடவுள் படைத்தார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு இந்த வழவழா கொழகொழா வியாக்கியானம் என்பது நமக்குப் புரியவே புரியாத புதிராக இருக்கிறது!
பாவம் கடவுள்! அப்படி ஒருவர் இருந்தால், இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, திக்குத் தெரியாத வெட்ட வெளியில் பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருப்பார் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.


இந்த ஆறு நாள் கணக்கு குரானிலும் இடம் பெற்றிருக்கிறது

அந்த ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது அது. ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் 
தேவைப்பட்டன என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches 
that God created "the heavens and the earth" in six days.]

உயிர்களே படைக்கப்படாத நிலையில், சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுள் படைத்ததன் பொருள் என்ன?

தான் படைக்கவிருக்கும் உயிர்களில் புண்ணியம் செய்பவை சொர்க்கத்திற்கும் பாவம் செய்பவை நரகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?

ஆக, பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபடும் வகையில் உயிர்களைப் படைப்பதென்று கடவுள் முடிவெடுத்த்திருக்கிறார்; படைத்திருக்கிறார்.

கடவுளின் இந்தச் செயல், கடும் கண்டனத்திற்கு உரியதல்லவா?

இந்து மதவாதிகளைப் பொருத்தவரை ஆறு, ஏழு என்று கடவுளுக்குக் ‘காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்துவிட்டார்கள்.

முட்டை வடிவிலான உலக உருண்டையிருந்தே["Egg-shaped cosmos"]
அனைத்து உலகங்களும்[பிரபஞ்சம்] விரிவடைந்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றிப்  பிரமானந்த புராணம்[Brahmanda Purana] விரிவாகப் பேசுகிறதாம். [Wikipedia]

கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளியாவதைப் பார்த்த அனுபவம் இவர்களை இப்படிக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையால் புதிய உயிர் தோன்றுவது போல, பூமிப் பெண்ணும் ஆகாய ஆணும் புணர்ச்சி செய்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்று நம்பினார்களே, அது போல.

அந்த நம்பிக்கையின் விளைவாகச் ‘சிவலிங்கம்’ உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அது கடவுளாக வழிபடப்படுகிறது.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும்  அறிவு பெற்றிருந்த காலத்தில், உலகத் தோற்றம், கடவுள், படைப்பு பற்றியெல்லாம் மனிதன் மேற்கண்டவாறு மனம் போன போக்கில் அனுமானம் செய்ததில் தவறேதும் இல்லை. இந்த அறிவியல் யுகத்திலும் அவர்கள் சொல்லிவிட்டுப் போன கதைகளைத் திரும்ப மேடை ஏறி முழங்குவதும் ஏடுகளில் எழுதுவதும் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்ட மதவாதிகள் ஆராய வேண்டும்.

=============================================================================================

சனி, 14 மார்ச், 2015

குமுதம் இதழில் ஜோதிடச் சக்ரவர்த்தி ஏ.எம் ராஜகோபாலனின் ‘புளுகு’ப் புராணம்!!!

ஜோதிடத்தின் பெயரால் புதிய புதிய மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பிரபல ஜோதிடர்களில் தலையாயவர் ஏ.எம்.ராஜகோபாலன். ‘பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும்’ என்னும் தலைப்பில் ‘குமுதம்’[16.03.2015] இதழில் இவர் புளுகத் தொடங்கியிருக்கிறார். 

‘அண்டப் புளுகு’, ‘ஆகாசப் புளுகு’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றிற்கு உதாரணம் தேடி வேறு எங்கும் அலைய வேண்டாம். இவர் எழுதும் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்தாலே போதுமானது.

‘மிகவும் சூட்சுமமான பல ரகசியங்கள், மந்திரப் பிரயோக முறைகள், விஞ்ஞானபூர்வமான சக்திகள் ஆகியவற்றைத் தங்கள் கடினமான தவத்தினால் கண்டறிந்த நம் வேத கால மகரிஷிகள்....’ என்று தொடங்குகிறது இவரின் இந்த வாரக் குமுதம் கட்டுரை.

கட்டுரையின் தொடக்கத்திலேயே இப்படி வார்த்தை ஜாலம் புரிந்து வாசகனை  மயங்க வைக்கிறார் ஜோதிடச் சக்ரவர்த்தி.
‘ரகசியம்’ என்னும் சொல்லுக்கு நாம் பொருள் அறிவோம். அதென்ன ‘சூட்சுமமான ரகசியம்’? 

‘விஞ்ஞான பூர்வமான சக்தி’  என்கிறார். சக்தியின் ஓர் உட்பிரிவா இது? புரியவில்லையே!?

இந்தக் கட்டுரையில் மகான்களின் ‘ஜீவசமாதி’ பற்றியும் பேசுகிறார். 

சமாதி என்பது, சடலத்தை அடக்கம் செய்த இடமாகும். ஒருவர் மரணமுற்ற பின்னர், அவர் உடம்பிலிருந்து உயிர்[ஜீவன்] பிரிந்துவிடுவதாக ஆன்மிகவாதிகள் பலரும்  சொன்னார்கள்; சொல்கிறார்கள். 

உடம்பிலிருந்து பிரிந்து வெளியெங்கும் அலைந்து திரியும் ஜீவனுக்குச் சமாதி கட்டிச் சிறை வைக்க இயலுமா? குறிப்பாக, மகான்கள் எனப்படுபவர்களின் ஜீவன்களைச் சமாதிகளுக்குள் சிறை வைப்பது இயலாத செயலன்றோ?

உண்மை இதுவாக இருக்க..........

'ஜீவசமாதி’ என்று இவர் குறிப்பிட்டிருப்பது பெரும் பிழையாகும்.

‘தங்கள்[மகான்கள்] சரீரத்தைவிட்டு வெளியேறிய அந்த வினாடியே சூட்சும திவ்ய சரீரம் ஒன்று தயாராக இருக்கும். அந்தச் சூட்சும சரீரத்தில் இருந்துகொண்டு, தங்களை நாடி வரும் பக்தர்களின் துயர்களைக் களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்கின்றனர் சித்த மகா புருஷர்கள்’ என்கிறார் இந்த ஜோதிடக்கலை வேந்தர்.

சித்த மகா புருஷர்கள், தம்மைத் தேடி வரும் பக்தர்களுக்கு மட்டும்தான் நல்வாழ்வு அளிப்பார்களா? உலகெங்கும் கோடானுகோடி பக்தர்கள் தாங்கொணாத் துயரங்களில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அவர்களையெல்லாம் தேடிப் போய்த் துயர் தணிக்கும் பணியில்  ஈடுபட மாட்டார்களா?

அரிய பெரிய ஜோதிடக்கலை சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் ராஜகோபாலன் பதில் தருவாரா?

‘சித்த புருஷர்களுக்கும் அவதார மகான்களுக்கும் ‘மரணம்’ என்ற அனுபவம் கிடையாது’ என்றும் குறிப்பிடுகிறார்.

மரணம்...சரி. அதென்ன ‘மரண அனுபவம்’?

மரணத்தை அனுபவித்தல்; அதாவது, செத்துப்போதல்.

மரண அனுபவம்  இல்லை என்று சொல்வதன் மூலம் மகான்களுக்கு மரணமே இல்லை என்கிறார் ஜோதிடர் திலகம். அவர்கள் மரணம் அடைவதில்லை; தாமாக, சரீரத்தைவிட்டு வெளியேறுகிறார்களாம்; சூக்கும திவ்விய சரீரத்தில் தம்மை நுழைத்துக்கொள்கிறார்களாம்!

இது நடைமுறை சாத்தியமா?

இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

இம்மாதிரிக் கதைகளைக் கட்டிவிட்டவர் எவராகவோ இருக்கலாம். இன்றளவும் மக்கள் மத்தியில் இவற்றைப் பரப்பும் கொடுஞ்செயலை ஜோதிடம் கற்ற ஆன்மிகவாதியான ராஜகோபாலனும் செய்துகொண்டிருக்கிறார்.

இவர் போன்றோருக்கு ஓர் உண்மையை  நினைவுபடுத்துவது என் போன்ற எளியவர்களின் கடமை.

குருதியும் நிணமும் எலும்பும் சதையுமாகப் பிறந்து வளர்ந்து, வயிற்றுப் பசி போக்கத் தின்று, ஜீரணித்து, மூத்திரம் பெய்து, மலம் கழித்து வாழும் அத்தனை மனிதர்களுக்கும்[உயிர்களுக்கும்] மரணம் என்பது தவிர்க்க இயலாதது. இவர் பட்டியலிடுகிற குல ஆச்சார்யர்கள், தவத்தினால் உயர்ந்த அருளாளர்கள், சித்த புருஷர்கள், மகான்கள் எனப்படும் எத்தனை பெரிய  மனிதர்களும்[மனிதர்களேதான்!] மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப் பிழைப்பது நடவாத செயல். மரணத்திற்குப் பிறகு இந்த உடம்பிலிருந்து ஆன்மாவோ ஆவியோ வெளியேறுவது உண்மையோ பொய்யோ, மகான்கள் தாம் விரும்பிய போது தாமாக வெளியேறுகிறார்கள் என்றுரைப்பது பொய்...பொய்யே. அவ்வாறு வலிந்து உயிரைப் போக்கிக்கொள்வதற்குப் பெயர் தற்கொலை.

கட்டுரையின் முற்பகுதியில், மேற்கண்டவாறு பல பொய்களைப் பட்டியலிட்டதோடு,  வாழ்ந்து மறைந்த ஓர் ‘அழுக்கு[ச்] சாமியார்’ பற்றிப் புனைந்து, புகழ்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜகோபாலன்.

‘அழுக்குச் சித்தர், அவதரிக்கும்போதே தன[ம]து சரீர உணர்ச்சிகளுடன் இணைந்து ஒட்டாமல் தனித்தே நிற்கும் இயல்புடன் பிறந்தவர்’ என்கிறார் ஜோதிடச் சக்ரவர்த்தி. இந்த மண்ணுலகில் வாழும் அத்தனை பேர் காதுகளிலும் பூச்சுற்ற ஆசைப்படுகிறார் இவர். இவர்தம் ஆசை நிறைவேற, தத்தம் சமாதிகளைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் அவதார புருஷர்களின் ஜீவன்கள் அருள் புரிவதாக!

‘மகான் அழுக்குச் சித்தரின் சரியான அவதாரத் தேதி தெரியவில்லை’ என்று குறிப்பிடுகிற ஜோதிடர், ‘அழுக்குச் சாமியார்’ என்று அழைக்கப்பட்ட இம்மகான், சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை மாதத்தில், மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பது மட்டும் தெரிகிறது’ என்கிறார். எப்படித் தெரிந்தது என்பது, ராஜகோபாலன், திவ்ய சரீரத்தில் அருள்பாலித்து வரும் அழுக்குச் சாமியார் என இருவர் மட்டுமே அறிந்த சூட்சும ரகசியம்!

‘மகான் ஸ்ரீ அழுக்குச் சித்தர் தமது ‘அவதார காரியம்’ நிறைவேறிவிட்டதை[???] அறிந்து கி.பி.1918ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம், மிருகசீர்ஷம் நட்சத்திர தினத்தன்று, தமது தூலசரீரத்தைத் துறந்து, வேட்டைக்காரன் புதூரில், தானே தேர்ந்தெடுத்த புனித[இறைவன் படைப்பில் அனைத்து இடங்களும் புனிதமானவைதாமே???] இடத்தில் ஜீவசமாதி நிலையில் அமர்ந்தார். கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளியாய் ஸ்வாமிகள் அவரது திவ்ய சரீரத்திலிருந்து வெளி வந்ததை, அருகிலிருந்த திரு.ராமு முதலியாரும், அவரது மனைவியார் திருமதி அலர்மேலுவும் கண்டு திகைத்துக் கற்சிலை ஆயினர்’ என்று எழுதிச் செல்கிறார் ஜோதிடக்கலை ஏந்தல்.

ராமு முதலியாரும் அலர்மேலுவும் சொன்னதை இவர் நம்பலாம். இவர்தம் எழுத்தை வாசிக்கிற பிறரும் நம்ப வேண்டும் என்று ராஜகோபாலன் எதிர்பார்க்கிறாரா? அது நடக்காது.

போதைப் பொருள்களை விற்று, உண்போரை மயக்கத்திற்குள்ளாக்குவது குற்றம் என்றால், மாயாஜாலக் கதைகள் புனைந்து மக்களை நம்பச் செய்து  மயக்கத்தில் ஆழ்த்துவதும் குற்றமே.

ராஜகோபாலன் போன்றவர்கள் குற்றவாளிகளே என்பதை மக்கள் உணரும் காலம் வருமா?!

*****************************************************************************************************************************************************











வியாழன், 12 மார்ச், 2015

“அடப் போய்யா... நீயும் உன் கடவுளும்” [வினோதமான அனுபவப் பகிர்வு!!]

பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை!   அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கவே தகுதி இல்லாதவர்கள்.

சிக்குப் பிடித்த தலைக்கு ஷாம்பு தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப் போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, அவர்கள் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறுகிறார்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்!

கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய் [அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி”  என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான். 

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. 

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய்  கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?
அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.

பார்வையை அலைய விட்டதில்,  நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப் படுத்துகிறேன்.


இரண்டு: 
‘இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

மூன்று:
“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

நான்கு:
“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

ஐந்து:
‘கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

ஆறு:
”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

ஏழு: 
“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”

எட்டு:
“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.” [கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].

ஒன்பது:
“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?

ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”

“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” 

“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே. போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.

=============================================================================================












திங்கள், 2 மார்ச், 2015

பருவ நாடகம்!

ள்ளப் பார்வையுடன் கமுக்கமாய் நடந்துகொண்டிருந்த தொப்பை ஆசாமி, ‘படிகிற’ பார்ட்டிதான் என்று பட்டது பட்டாபிக்கு. மதுபானக்கடை இருக்கையைக் காலி செய்துவிட்டு அவரைக் குறிவைத்து நடந்தான்.

ஒரே நிமிடம்தான்...அந்த ஆளை நெருங்கி, சமமாய் நடந்து, கிசுகிசுப்பாய்க் கேட்டான்: “சார், வர்றீங்களா?”

‘நீ நினைக்கிற மாதிரியான ஆளில்லை நான்’ என்பது போல, அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்தார் அவர்.

“எல்லாமே டீசண்டான பொண்ணுங்க சார். காலேஜ் குட்டிகளும் இருக்கு. ஆணுறைக்கு அவசியமே இல்ல. அத்தனை சுத்தம்...” நாக்கில் தேன் தடவிக்கொண்டு சொன்னான் பட்டாபி.

அவர், அவன் பக்கம் திரும்பாமலே கேட்டார்: “ரேட் எப்படிப்பா?”

“ஒரு மணி நேரத்துக்குப் பத்தாயிரம். ஒரு ராத்திரிக்கு அஞ்சு லட்சம், பத்து லட்சம் போற சரக்கெல்லாம் இருக்கு. பெரிய இடத்துப் பொண்ணுகளும், சினிமா ஸ்டார்களும், வி.ஐ.பி.களும் வந்து போற இடம் சார் அது. வர்றீங்களா?”  ஐந்துக்கும் பத்துக்கும் அலைகிற ஆள் நானல்ல; பெரிய இடத்துச் சகவாசம் உள்ளவன்  என்பதாகப் பந்தாக் காட்டினான் பட்டாபி.

“அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுப்பா.”

முகம் சுழித்தான் பட்டாபி.

“அதோ தெரியுதே, சினிமா தியேட்டரை ஒட்டி ஒரு லாட்ஜ். அதுல சிங்கிள் ரூம் போடுங்க. உங்க ரேஞ்சுக்கு ஐநூறு ஆயிரம் ரேட்ல லாட்ஜ்காரன் குட்டிகளை நிறுத்துவான். ஆனா, எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம்” என்று சொல்லிவிட்டுப் ‘பார்ட்டி’யிடமிருந்து பதிலை எதிர்பார்த்தான்.

அவர், தீவிர யோசனையில் இருந்தார்.

“என்ன சார் யோசனை?”

“நீ சொன்ன இடத்துக்கு மட்டும் போலீஸ் வராதா?”

“நான்தான் சொன்னேனே, வி.ஐ.பி.க்கள் வர்ற இடம்னு. அங்கே போலீஸ் வராது. அப்படியே வந்தாலும், பேருக்கு நாலஞ்சி தொழில்காரிகளைத் தள்ளிட்டுப் போவாங்க. விடியறதுக்குள்ள ஜாமீனில் விட்டுடுவாங்க. வாடிக்கையாளர்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. தைரியமா என்கூட வாங்க சார்.”

“அது வந்துப்பா.....”

அது தேறாத பார்ட்டி என்பது பட்டாபிக்குப் புரிந்தது. “உனக்கு இங்கே எதுவும் சரிப்பட்டு வராது. நேரே மங்கம்மா குப்பம் போயிடு. ஊர்வசி தியேட்டருக்குப் பொறத்தாண்ட..... போலீஸ் அங்கே தலைகாட்டுறதே இல்ல. அதிகபட்சமே நூறு ரூபாதான்.” சொல்லிவிட்டு, “சாவு கிராக்கி” என்று முணுமுணுத்தவாறு நடந்தான்.

அதற்கப்புறமும் கண்கொத்திப் பாம்பாய் நோட்டம் விட்டு, சளைக்காமல் வலை வீசியதில், லாரி அதிபர் ஒருவர் மாட்டினார். ஆனந்தவல்லியின் ‘தொழில்’ கூடத்திற்கு அவரை அழைத்துப் போனான்.

‘பலான’ தொழில் நடத்துபவள் ஆனந்தவல்லி. பெரிய புள்ளிகளின் தொடர்பும் உண்டு. பேருந்து நிலையம், ரயில் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் என்று வெளியூர் ஆட்கள் வந்து போகிற மையங்களில் ஆனந்தவல்லிக்குப் புரோக்கர்கள் உண்டு. அவர்களில் பட்டாபியும் ஒருவன்.

அவனுக்கு ஆறு வயதாகும்போது, அம்மாக்காரி செத்துப் போனாள். அப்பன்காரன் இன்னொரு திருமணம் செய்துகொண்டான்; ஏழு வயதில் அவனை ஒரு திரையரங்கில் எடுபிடியாய்ச் சேர்த்துவிட்டான்.

வயது கூடியபோது, நுழைவுச் சீட்டு கிழித்தான் பட்டாபி. பதினைந்து வயது தொடக்கத்திலேயே, குப்பை கூட்டும் லட்சுமியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுவிட, முதலாளி அவன் சீட்டைக் கிழித்துவிட்டார்.

ஒரு சினேகிதன் உதவியால் ஆனந்தவல்லியிடம் வந்து சேர்ந்தான். இப்போது அவனுக்குப் வயது பதினாறு முடிந்திருந்தது.

“பட்டாபி.”

ஆனந்தவல்லி அழைத்தாள்.

லாரி அதிபரை உள்ளே அனுப்பிவிட்டுக் காத்திருந்த பட்டாபி, அவளை நெருங்கினான்.

“இன்னிக்கி ஒரே ஒரு பார்ட்டிதான் மாட்டிச்சா?” என்று கேட்டுக்கொண்டே நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள் ஆனந்தவல்லி.

பட்டாபிக்குப் பயங்கரப் ‘பசி’.

இரவு நேரச் சிற்றுண்டிக் கடைக்குப் போனான்; புரோட்டா, ஆம்லெட் சாப்பிட்டான்.

வயிறு நிறைந்துவிட்ட நிலையில் இன்னும் பசிப்பது போல உணர்ந்தான். அது வேறு பசி என்பது வெகு சீக்கிரத்தில் புரிந்தது. அதைத் தணிப்பதற்கான வழிமுறையும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. மங்கம்மா குப்பத்து வாலைக் குமரிகள் அவன் மனக்கண் முன் வந்து வந்து போனார்கள்.

சட்டைப் பையைத் துழாவினான் பட்டாபி. ஆனந்தவல்லி கொடுத்த நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. கடைக்காரர் பழக்கப்பட்டவர் என்பதால், கடன் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

அவனைத் தடுத்து நிறுத்தி, “அது மாதிரி இடத்துக்கெல்லாம் போக வேண்டாம். அது புதைகுழி. விழுந்தால் எழ முடியாது” என்று சொல்லித் திருத்தவோ, புது வழி காட்டவோ யாருமில்லாத நிலையில் அவன் கால்கள் மங்கம்மா குப்பம் நோக்கி நடந்தன.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$