அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 14 மார்ச், 2015

குமுதம் இதழில் ஜோதிடச் சக்ரவர்த்தி ஏ.எம் ராஜகோபாலனின் ‘புளுகு’ப் புராணம்!!!

ஜோதிடத்தின் பெயரால் புதிய புதிய மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பிரபல ஜோதிடர்களில் தலையாயவர் ஏ.எம்.ராஜகோபாலன். ‘பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும்’ என்னும் தலைப்பில் ‘குமுதம்’[16.03.2015] இதழில் இவர் புளுகத் தொடங்கியிருக்கிறார். 

‘அண்டப் புளுகு’, ‘ஆகாசப் புளுகு’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றிற்கு உதாரணம் தேடி வேறு எங்கும் அலைய வேண்டாம். இவர் எழுதும் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்தாலே போதுமானது.

‘மிகவும் சூட்சுமமான பல ரகசியங்கள், மந்திரப் பிரயோக முறைகள், விஞ்ஞானபூர்வமான சக்திகள் ஆகியவற்றைத் தங்கள் கடினமான தவத்தினால் கண்டறிந்த நம் வேத கால மகரிஷிகள்....’ என்று தொடங்குகிறது இவரின் இந்த வாரக் குமுதம் கட்டுரை.

கட்டுரையின் தொடக்கத்திலேயே இப்படி வார்த்தை ஜாலம் புரிந்து வாசகனை  மயங்க வைக்கிறார் ஜோதிடச் சக்ரவர்த்தி.
‘ரகசியம்’ என்னும் சொல்லுக்கு நாம் பொருள் அறிவோம். அதென்ன ‘சூட்சுமமான ரகசியம்’? 

‘விஞ்ஞான பூர்வமான சக்தி’  என்கிறார். சக்தியின் ஓர் உட்பிரிவா இது? புரியவில்லையே!?

இந்தக் கட்டுரையில் மகான்களின் ‘ஜீவசமாதி’ பற்றியும் பேசுகிறார். 

சமாதி என்பது, சடலத்தை அடக்கம் செய்த இடமாகும். ஒருவர் மரணமுற்ற பின்னர், அவர் உடம்பிலிருந்து உயிர்[ஜீவன்] பிரிந்துவிடுவதாக ஆன்மிகவாதிகள் பலரும்  சொன்னார்கள்; சொல்கிறார்கள். 

உடம்பிலிருந்து பிரிந்து வெளியெங்கும் அலைந்து திரியும் ஜீவனுக்குச் சமாதி கட்டிச் சிறை வைக்க இயலுமா? குறிப்பாக, மகான்கள் எனப்படுபவர்களின் ஜீவன்களைச் சமாதிகளுக்குள் சிறை வைப்பது இயலாத செயலன்றோ?

உண்மை இதுவாக இருக்க..........

'ஜீவசமாதி’ என்று இவர் குறிப்பிட்டிருப்பது பெரும் பிழையாகும்.

‘தங்கள்[மகான்கள்] சரீரத்தைவிட்டு வெளியேறிய அந்த வினாடியே சூட்சும திவ்ய சரீரம் ஒன்று தயாராக இருக்கும். அந்தச் சூட்சும சரீரத்தில் இருந்துகொண்டு, தங்களை நாடி வரும் பக்தர்களின் துயர்களைக் களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்கின்றனர் சித்த மகா புருஷர்கள்’ என்கிறார் இந்த ஜோதிடக்கலை வேந்தர்.

சித்த மகா புருஷர்கள், தம்மைத் தேடி வரும் பக்தர்களுக்கு மட்டும்தான் நல்வாழ்வு அளிப்பார்களா? உலகெங்கும் கோடானுகோடி பக்தர்கள் தாங்கொணாத் துயரங்களில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அவர்களையெல்லாம் தேடிப் போய்த் துயர் தணிக்கும் பணியில்  ஈடுபட மாட்டார்களா?

அரிய பெரிய ஜோதிடக்கலை சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் ராஜகோபாலன் பதில் தருவாரா?

‘சித்த புருஷர்களுக்கும் அவதார மகான்களுக்கும் ‘மரணம்’ என்ற அனுபவம் கிடையாது’ என்றும் குறிப்பிடுகிறார்.

மரணம்...சரி. அதென்ன ‘மரண அனுபவம்’?

மரணத்தை அனுபவித்தல்; அதாவது, செத்துப்போதல்.

மரண அனுபவம்  இல்லை என்று சொல்வதன் மூலம் மகான்களுக்கு மரணமே இல்லை என்கிறார் ஜோதிடர் திலகம். அவர்கள் மரணம் அடைவதில்லை; தாமாக, சரீரத்தைவிட்டு வெளியேறுகிறார்களாம்; சூக்கும திவ்விய சரீரத்தில் தம்மை நுழைத்துக்கொள்கிறார்களாம்!

இது நடைமுறை சாத்தியமா?

இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

இம்மாதிரிக் கதைகளைக் கட்டிவிட்டவர் எவராகவோ இருக்கலாம். இன்றளவும் மக்கள் மத்தியில் இவற்றைப் பரப்பும் கொடுஞ்செயலை ஜோதிடம் கற்ற ஆன்மிகவாதியான ராஜகோபாலனும் செய்துகொண்டிருக்கிறார்.

இவர் போன்றோருக்கு ஓர் உண்மையை  நினைவுபடுத்துவது என் போன்ற எளியவர்களின் கடமை.

குருதியும் நிணமும் எலும்பும் சதையுமாகப் பிறந்து வளர்ந்து, வயிற்றுப் பசி போக்கத் தின்று, ஜீரணித்து, மூத்திரம் பெய்து, மலம் கழித்து வாழும் அத்தனை மனிதர்களுக்கும்[உயிர்களுக்கும்] மரணம் என்பது தவிர்க்க இயலாதது. இவர் பட்டியலிடுகிற குல ஆச்சார்யர்கள், தவத்தினால் உயர்ந்த அருளாளர்கள், சித்த புருஷர்கள், மகான்கள் எனப்படும் எத்தனை பெரிய  மனிதர்களும்[மனிதர்களேதான்!] மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப் பிழைப்பது நடவாத செயல். மரணத்திற்குப் பிறகு இந்த உடம்பிலிருந்து ஆன்மாவோ ஆவியோ வெளியேறுவது உண்மையோ பொய்யோ, மகான்கள் தாம் விரும்பிய போது தாமாக வெளியேறுகிறார்கள் என்றுரைப்பது பொய்...பொய்யே. அவ்வாறு வலிந்து உயிரைப் போக்கிக்கொள்வதற்குப் பெயர் தற்கொலை.

கட்டுரையின் முற்பகுதியில், மேற்கண்டவாறு பல பொய்களைப் பட்டியலிட்டதோடு,  வாழ்ந்து மறைந்த ஓர் ‘அழுக்கு[ச்] சாமியார்’ பற்றிப் புனைந்து, புகழ்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜகோபாலன்.

‘அழுக்குச் சித்தர், அவதரிக்கும்போதே தன[ம]து சரீர உணர்ச்சிகளுடன் இணைந்து ஒட்டாமல் தனித்தே நிற்கும் இயல்புடன் பிறந்தவர்’ என்கிறார் ஜோதிடச் சக்ரவர்த்தி. இந்த மண்ணுலகில் வாழும் அத்தனை பேர் காதுகளிலும் பூச்சுற்ற ஆசைப்படுகிறார் இவர். இவர்தம் ஆசை நிறைவேற, தத்தம் சமாதிகளைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் அவதார புருஷர்களின் ஜீவன்கள் அருள் புரிவதாக!

‘மகான் அழுக்குச் சித்தரின் சரியான அவதாரத் தேதி தெரியவில்லை’ என்று குறிப்பிடுகிற ஜோதிடர், ‘அழுக்குச் சாமியார்’ என்று அழைக்கப்பட்ட இம்மகான், சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை மாதத்தில், மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பது மட்டும் தெரிகிறது’ என்கிறார். எப்படித் தெரிந்தது என்பது, ராஜகோபாலன், திவ்ய சரீரத்தில் அருள்பாலித்து வரும் அழுக்குச் சாமியார் என இருவர் மட்டுமே அறிந்த சூட்சும ரகசியம்!

‘மகான் ஸ்ரீ அழுக்குச் சித்தர் தமது ‘அவதார காரியம்’ நிறைவேறிவிட்டதை[???] அறிந்து கி.பி.1918ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம், மிருகசீர்ஷம் நட்சத்திர தினத்தன்று, தமது தூலசரீரத்தைத் துறந்து, வேட்டைக்காரன் புதூரில், தானே தேர்ந்தெடுத்த புனித[இறைவன் படைப்பில் அனைத்து இடங்களும் புனிதமானவைதாமே???] இடத்தில் ஜீவசமாதி நிலையில் அமர்ந்தார். கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளியாய் ஸ்வாமிகள் அவரது திவ்ய சரீரத்திலிருந்து வெளி வந்ததை, அருகிலிருந்த திரு.ராமு முதலியாரும், அவரது மனைவியார் திருமதி அலர்மேலுவும் கண்டு திகைத்துக் கற்சிலை ஆயினர்’ என்று எழுதிச் செல்கிறார் ஜோதிடக்கலை ஏந்தல்.

ராமு முதலியாரும் அலர்மேலுவும் சொன்னதை இவர் நம்பலாம். இவர்தம் எழுத்தை வாசிக்கிற பிறரும் நம்ப வேண்டும் என்று ராஜகோபாலன் எதிர்பார்க்கிறாரா? அது நடக்காது.

போதைப் பொருள்களை விற்று, உண்போரை மயக்கத்திற்குள்ளாக்குவது குற்றம் என்றால், மாயாஜாலக் கதைகள் புனைந்து மக்களை நம்பச் செய்து  மயக்கத்தில் ஆழ்த்துவதும் குற்றமே.

ராஜகோபாலன் போன்றவர்கள் குற்றவாளிகளே என்பதை மக்கள் உணரும் காலம் வருமா?!

*****************************************************************************************************************************************************











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக