அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 28 செப்டம்பர், 2015

நீங்கள் ‘புதிர்’க்[suspense] கதைப் பிரியரா? மகா மகா புத்திசாலியா? ஒரு தேர்வு’! [பழையது]

“இந்தக் ‘குமுதம்’ கதையின் கடைசி இரண்டு பத்திகளைப் படிக்காமல் கதையின் முடிவைச் சொல்ல முடியுமா?” சவால் விட்டாள் என் தோழி. ஒரு வாரம் போல யோசித்தேன். ஊஹூம்...!!! உங்களால் முடிகிறதா பாருங்கள்.


தலைப்பு:                                   கவலை

எழுதியவர்:                              ‘மலர்மதி’

வெளியான இதழ்:                 ‘குமுதம்’ வார இதழ் [28.08.1986].
“என்ன கண்ணபிரான், ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கீங்க? என்ன ஆச்சு?”

“அதை ஏன் கேட்குறீங்க? என் மனைவி, மூனு மாசம் முழுகாம இருக்கும்போதே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரைக் காக்கா பிடிச்சேன்!”

“எதுக்கு?”

“வேற எதுக்கு? எல்.கே.ஜி. அட்மிஷனுக்குத்தான்!”

“சரி.....!”

“அந்தக் கான்வெண்ட் பிரின்சிபால் அவருக்கு ரொம்ப தோஸ்து!”

“அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு!”

“அவர் என்னை அழைச்சுட்டுப் போயி முதல்வர்கிட்டே அறிமுகப்படுத்தினார்.”

“அப்புறம்?”

“ரெண்டு ஆண்டுக்கு மூச்சு விடக் கூடாது. எல்லா இடங்குளும் நிறைஞ்சிடிச்சி. மூணாவது வருசத்துக்கு வேணும்னா நீங்க முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு சொல்லிட்டார்!”

“நல்லதுதானே? உங்க குழந்தைக்கு மூனு வயசு ஆகறதுக்கும் சீட் கிடைக்கிறதுக்கும் சரியா இருக்குமே!”

“அப்படித்தான் நானும் நினைச்சி சந்தோசப்பட்டேன். அவர் ரெண்டாயிரம்   நன்கொடை [இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு!] வேறு கேட்டார். சரின்னு சொல்லி, அலைஞ்சி திரிஞ்சி ரெண்டாயிரத்தைத் திரட்டி அவர் கையில் திணிச்சேன். அவரும் 1989ஆம் ஆண்டுக்கான சேர்க்கைச் சீட்டைக் கைப்பட எழுதிக் கொடுத்துட்டார். என்னோட சீட்தான் கடைசி. எல்லாம் பூர்த்தி ஆயிடிச்சி!”

“அடடா...! ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்க!”

“தாய் வீட்டுக்குப் போன என் பெண்டாட்டிக்குப் பிரசவம் ஆயிடிச்சி.....”

“வாழ்த்துகள். சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் இது. ஆனா, நானும் வந்ததிலிருந்து 
கவனிச்சிட்டிருக்கேன், நீங்க ஏன் இப்படி இடிஞ்சி போயி உட்கார்ந்திருக்கீங்க?”
தொடரும்.....
........................................................................................................................................

“அடுத்து, கதையின் முடிவு வரப்போகுது. அட்டகாசமான புதிர் காத்திருக்கு. கடைசி ரெண்டு பத்தி படிக்காம, ‘முடிவை’ச் சொல். சொல்லிட்டா, நீ  மகா மகா புத்திசாலி”ன்னு குமுதம் இதழைப் பிடுங்கிட்டா என் தோழி. 

நான் ஏற்கனவே மகா புத்திசாலின்ற மிதப்பில் இருக்கிறவன். “மகா மகா புத்திசாலி நீ”ன்னு அழகான தோழியால் புகழப்படணும்ங்கிற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா என்ன?

ஒரு நாள் அல்ல; ரெண்டு நாள் அல்ல; ஒரு வாரம் போல,  ‘பசி’ நோக்காமல், மெய் வருத்தம் பாராமல் சிந்தித்தும் என்னால் கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்கவே முடியவில்லை.


உங்களால் முடிந்ததா? நீங்கள் மகா மகா புத்திசாலியா?!

“ஆம்” என்றால் பாராட்டுகள்.

‘முடிவு’ கீழே..........














கதை முடிவு.....

“எல்.கே.ஜி.ல ஒரே ஒரு சீட் பிடிக்க நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இப்ப என்னடான்னா, என் பெண்டாட்டி ரெட்டைக் குழந்தை பெத்துத் தொலைச்சிருக்கா!”

“அடப் பாவமே!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக