வெள்ளி, 30 டிசம்பர், 2016

நாமக்கல் ஆஞ்சநேயரும் 54 ஆயிரம் உளுந்து வடையும் நானும்!!!

“எந்தவொரு பொருளோ உயிரோ தானாகத் தோன்றுவது சாத்தியமில்லை. அதைப் படைத்திட ஒரு படைப்பாளன் தேவை. அவனே[அவரே!] கடவுள்” என்பார்கள் ஆன்மிகவாதிகள்.

அனைத்தையும் கடவுளே படைத்தார் என்பதை இப்போதைக்கு ஏற்போம். 

கல்லையும் மண்ணையும் கடவுள் படைத்தாரென்றால், கல் கல்லாகவும் மண் மண்ணாகவும் பயன்படத்தான்; படைக்கப்பட்ட கல்லையும் மண்ணையும் தன்னின் மாற்று வடிவங்களாகக் கருதி மனிதன் வழிபடுவதற்காக அல்ல. மனிதனைப் படைத்ததும் அவன் மனிதனாக வாழ்வதற்குத்தான்.

எனவே, உண்டு செரித்து உடம்பை வளர்த்து இன விருத்தி செய்து வாழ்ந்து மரிப்பதற்கென்றே படைக்கப்பட்ட மனிதர்களைக் கடவுளின் அவதாரங்கள் என்றும் புதல்வர்கள் என்றும் தூதர்கள் என்றும் போற்றியதும் போற்றுவதும் நகைப்புக்குரிய செயலாகும்.

ஐந்தறிவு உயிர்களையும் உயிரற்ற பிண்டங்களையும் கடவுளாக்கி வழிபடுவதும் இது போன்றதே.

இதிகாசக் கற்பனைக் கதாபாத்திரமான அனுமனுக்கு உயிர் கொடுத்துக் கடவுளாக்கிச் சிலையும் வைத்து, அஷ்டமி துஷ்டமி அமாவாசை பௌர்ணமிகளில் சிறப்புப் பூஜை செய்து, விலை மதிப்புள்ள மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், வெண்ணெய், தேன் போன்ற விலை மதிப்புள்ள பொருள்கள் வீணாக்கப்படுகின்றன.

மேற்சொன்னவை போன்ற பொருள்கள் மாந்தரின் உணவுப் பொருள்களாகவும் மருந்துப் பொருள்களாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுபவை.

இவை படைக்கப்பட்டது மனிதர்களுக்காகத்தான்; கடவுளுக்கோ கடவுள்களுக்கோ அல்ல.

நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தியாம்.
தினமலர், 29.12.2016
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடைமாலை சாத்தப்பட்டுச் சிறப்பு அபிஷேகம் நடந்ததாம்.

[ஐம்பதல்ல நூறல்ல, 54 ஆயிரம்! அதென்ன கணக்கு? கணக்கிட்டது யார்? நம் முன்னோர்கள். அனைத்து மூடநம்பிக்கைகளையும் அழியாமல் கட்டிக் காப்பவர்கள் காலஞ்சென்ற நம் முன்னோர்களே. வாழ்க அவர்களின் திருநாமம்.]

54 ஆயிரம் பொத்தல் உளுந்து வடைகள் சரம் சரமாய்க் கோக்கப்பட்டு அனுமனுக்குச் சாத்தப்பட்டதாம். பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாம்.

வடையும்  மனிதர்களுக்கான ஓர்   உணவுப்பொருள்தான். இதை அனுமன் என்னும் கடவுளுக்குப் படைப்பதன் நோக்கம் என்ன?

வடையில் புனிதத்தை ஏற்றுகிறார்களா? அதைப் பெறுவதன் மூலம் பக்தகோடிகள் புண்ணியம் சேர்க்கிறார்களா?

இப்படிக் கேள்விகள் எழுப்பினால் நேரடியான பதில் கிடைக்காது; ‘இதெல்லாம் ஐதீகம்’ என்பதே பதிலாக இருக்கும்; அடிஉதையும் கிடைக்கக்கூடும்.

கடவுள் ஒருவரே என்றார்கள். அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்று சொல்லி விதம் விதமாய் வகை வகையாய்க் கற்றுக்குட்டிக் கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். அர்த்தமற்ற சடங்குகளைச் செய்து மூடநம்பிக்கைகளை வளர்த்தார்கள்.

மற்ற மதங்கள் எப்படியோ, மூடநம்பிக்கைகளை வளர்த்துத் தம் மதத்தைக் காக்கவும் வளர்க்கவும் நினைக்கிறார்கள் இந்துமதவாதிகள். விளைவு என்னவாக இருக்கும்?

இது வாழுமா, அழியுமா?

காலம் பதில் சொல்லும்.
***********************************************************************************************************************










  

புதன், 28 டிசம்பர், 2016

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு என் அன்புமிகு வேண்டுகோள்!

ஒரு நடிகையின் மகளாகப் பிறந்து, ஒரு நடிகையாகப் புகழ் பெற்று, உங்களின் புரட்சித் தலைவருக்குப் பின் புரட்சித் தலைவியாகி, தமிழகத்தின் முதல்வராகி, அம்மாவாகி, இதய தெய்வமாகவும் தெய்வத்தின் தெய்வமாகவும்  உங்களால் வழிபடப்பட்டவர் செல்வி ஜெயலலிதா.
கடவுள் என்றொருவர் இருக்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மனிதப் பிறவியான ஜெயலலிதாவைத் தெய்வம் ஆக்கினீர்களே அது பகுத்தறிவுக்கு முரணான செயல் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

அவரின் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதாவது, ‘தெய்வத்தை நோய் தாக்குமா?’ என்று கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால் அவர் கடவுளல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் சிந்திக்கவில்லை.

அவர் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில்[74 நாட்கள்], உங்களின் அவரைக் காப்பாற்றுவதற்காகக் கண்ட கண்ட குட்டித் தெய்வங்களிடமெல்லாம் நேர்ந்துகொண்டீர்கள்.

ஆயிரக்கணக்கானவர் ஒன்றுகூடிப் புனித நீர் சுமந்தீர்கள்; அக்கினிச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தீர்கள்; மண்சோறு சாப்பிட்டீர்கள்; சாமியார்களை வரவழைத்து, அக்கினிக் குண்டம் வளர்த்து விடிய விடியப் பூஜைகள் செய்தீர்கள். பலன் மட்டும் பூஜ்யம்.

உலகில் எந்தவொரு தலைவருக்காகவும் தொண்டர்கள் இந்த அளவுக்குத் தங்களை வருத்திக்கொண்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் பட்ட பாட்டுக்குப் பலன் ஏதும் விளையவில்லை என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

கடவுள் என்றொருவர் இருக்கிறாரோ இல்லையோ, அவரைப் பிரார்த்திப்பதால் எந்தவொரு பயனும் விளைவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இனியேனும் நீங்கள் கொண்டாடுகிற உங்களின் தலைவர் அல்லது தலைவி மனிதப் பிறவியே என்பதை நம்புங்கள்; தலைமைப் பண்புகள் அவருக்கு இருக்குமாயின், மனதாரப் போற்றுங்கள்; பின்பற்றுங்கள். மறந்தும்.....

இதய தெய்வம்...மனித தெய்வம் என்றெல்லாம் ஊரறியப் பறை சாற்ற வேண்டாம்.

இது என் அன்பான வேண்டுகோள்!
===============================================================================

செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஏன் பிறந்தாய் மானிடா, நீ ஏன் பிறந்தாய்!?

பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களுக்கு உணவாகி அழிந்துபோகிறோம்.

போராட்டம் நிறைந்த, பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச்  சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். 

தலைமுறை தலைமுறையாக..... 

மனித இனத்தில் மட்டுமன்று, மற்ற உயிரினங்களிலும் இதே நிகழ்வுகள்தான்.

இந்நிகழ்வுகளுக்கெல்லாம் வித்திட்டது எது,  எவை,  எவர், எவரெல்லாம் என்பனபோன்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடையில்லை. விடை கிடைக்கிறதோ இல்லையோ விடை தேடும் முயற்சியில் மனித இனம் தொடர்ந்து ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதை மறுத்து, அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுளே  என்று எவரும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டாம். அப்படியொருவர் இருந்தால்....

உயிர்களுக்கு நிலையற்ற வாழ்வும் அற்ப சுகங்களும்  தந்து அளப்பரிய துன்பங்களில் உழலச் செய்வாரா?

சிந்தியுங்களேன்!
                                      *                                 *                                  *
இப்பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்த ‘ஔவை’யின் பாடலைக் கீழே பதிவு செய்கிறேன். இது உங்களின் சிந்தனையை விரிவுபடுத்துவதாக அமையும் என்பது என் நம்பிக்கை.

‘வருந்தி            அழைத்தாலும்        வாராத           வாரா
பொருந்துவன போமென்றால் போகா -  இருந்தேங்கி 
நெஞ்சம்   புண்ணாக   நெடுந்தூரம்    தாம்நினைந்து
துஞ்சுவதே     மாந்தர்    தொழில்’                                            [துஞ்சுதல் - இறத்தல்]   
===============================================================================  



ஞாயிறு, 18 டிசம்பர், 2016

“நான் சுகவாசி அல்ல” - பெரியார்

கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் மட்டுமல்ல,  சுகபோகங்களையும் வெறுத்து வாழ்ந்தவர் பெரியார். தம் [அ]சுகபோக வாழ்வு குறித்து அவரே சொல்கிறார். படியுங்கள்.
#சாதாரணமாக நான் ஈசிசேரில் உட்காருவதே கிடையாது. எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கிறதென்றாலும் ஈஸிசேர் கிடையாது. இருந்தாலும் அதை நான் உபயோகிக்க மாட்டேன்.

சாய்ந்த நிலையில் கால்களை நீட்டிக்கொண்டு உட்காரும் பழக்கம் எனக்கு இல்லை; அதை நான் விரும்புவதும் இல்லை. இம்மாதிரிப் பழக்கமெல்லாம் சுகவாசிகளுக்கு உரியவை. 

என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்றபோதிலும், பிரயாணக் காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக்கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக்கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம்.

இப்படி எனக்கு, ‘தூங்குவது’ என்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது. தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. 

இப்படிச் சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும்  எனக்கு வெறுப்பாகிக்கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது.............

.............எனது வார்த்தைகளும் எழுத்துகளும் செய்கைகளும் தேசத் துரோகம் என்றும், வகுப்புத் துவேஷம் என்றும் பிராமண துவேஷம் என்றும், மான நஷ்டம் என்றும், அவதூறு என்றும், ராஜ துரோகம் என்றும், நாஸ்திகம் என்றும், மத தூஷணை என்றும் சிலர் சொல்லவும் ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள் என்பவர்கள் என்னை வையவும் என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அவர்கள் அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும் என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்; நாம் ஏன் இவ்வளவு தொல்லைகளையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணமும் புகழும் சம்பாதிக்கிறோமா?

நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியதுண்டா? ஒரு தலைவராவது உதவியது உண்டா?

‘இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல்’ இருக்கிறது என்பதாகக் கருதி விலகிவிடலாமா என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய ஆயுள் காலம் தீர்ந்துவிட்டது. இனி நாலோ ஐந்தோ, அல்லது, அதிகமிருந்தால் பத்து வருட காலமோ இருக்கலாம்.  இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நம் மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்றெல்லாம் யோசித்து மறுபடியும் இதிலேயே உழன்றுகொண்டிருக்கிறோமே தவிர வேறில்லை#
===============================================================================

நன்றி: ‘பெரியார் சாதித்தது என்ன?’, தொகுப்பு: செந்தமிழ்க்கோ; குடியரசு பதிப்பகம். 2ஆம் பதிப்பு, 2009.



புதன், 14 டிசம்பர், 2016

புரட்சித் தலைவி அம்மா ஆலயம்!

ஒரு புண்ணியவான், புரட்சித் தலைவிக்கு ஆலயம் கட்டியிருப்பதாக இன்று[14.12.2016] செய்தி [www.newsfast.in/news/temple-for-amma ]படித்தேன்; செய்தி: www.dinamani.com/.../தஞ்சாவூரில்-ஜெயலலிதாவுக்க...

#மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள கொங்கணேசுவரர் கோயில் அருகே ஆட்டோ நிறுத்துமிடம் உள்ளது. இதையொட்டி, புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என்ற பெயரில் இக்கோயில், மொத்தம் 130 சதுர அடியில் ரூ. 1.50 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
கோயிலுக்கான சுவர் எழுப்பப்பட்டு, மேற்கூரை வேயப்பட்டு, பீடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இதில், ஒன்றரை அடி உயரத்தில் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்படவுள்ளது. பீடத்தின் மேல்புறம் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயிலை அமைத்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த மாமன்ற முன்னாள் உறுப்பினரும், மாமன்ற முன்னாள் அதிமுக கொறடாவுமான எம். சுவாமிநாதன் தெரிவித்தது:
இக்கோயில் கட்டும் பணி டிச. 7-ம் தேதி இரவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணி நடைபெற்று கட்டுமானம் முடிந்துவிட்டது. அடுத்து சிலை வடிவமைப்பதற்கான ஆணை சுவாமிமலையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் சிலை வந்துவிடும். ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24-ம் தேதி சிலை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பீடத்தில் தாற்காலிகமாக 5 அடி உயரமும், 4 அடி அகலமும் உடைய புகைப்படம் வைக்கப்படவுள்ளது. தேக்கு வேலைப்பாட்டுடன் கூடிய இப்புகைப்படம் ரூ. 17,000 செலவில் தயார்செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருபுறமும் அண்ணா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களும் வைக்கப்படவுள்ளன. இக்கோயில் திறப்பது குறித்து தெற்கு மாவட்டச் செயலர் வைத்திலிங்கத்திடம் கூறியுள்ளேன். ஓரிரு நாளில் கோயில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்#
செய்தி படித்துச் சிலிர்த்தேன்!

திருப்பதி ஏழுமலையானும் கேரளாவின் ஐயப்பனும் கோடி கோடியாய்ச் சம்பாதிப்பதை நினைத்து, இவர்களைப் போல ஒரு கொழுத்த பணக்காரச் சாமி தமிழகத்தில் இல்லையே என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கிக்கொண்டிருப்பவன் நான். அங்கெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் கொண்டுபோய்க் கொட்டுபவன் இளிச்சவாய்த்  தமிழன்தான்.

புரட்சித் தலைவிக்கென்று  தமிழ்நாட்டில் ஒரு  கோயில் எழுப்பப்பட்டதால், ஆந்திராவுக்கும் மலையாள தேசத்திற்கும் செல்லும் பக்தர் கூட்டம் இனி ஒட்டுமொத்தமாய்த் திசை மாறும்; அம்மா ஆலயத்தில் சங்கமம் ஆகும்;  இங்கே கட்டுக்கட்டாய் பணமும் கொத்துக் கொத்தாய்த் தங்க நகைகளும் குவியும். ஏழுமலையானும் ஐயப்பனும் பரம ஏழைகள் ஆவார்கள். புரட்சித் தலைவி அம்மா உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமி ஆவார். நம் போன்றவர் ஆத்மா சாந்தி அடையும். 

ஆகையினால் தமிழர்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆலயப் பணிக்கும் அதன் வளர்ச்சிக்கும் இன்றே உங்களை அர்ப்பணித்திடுங்கள்.

வாழ்க தமிழன்! வெல்க தமிழினம்!!
===============================================================================



வெள்ளி, 9 டிசம்பர், 2016

இப்படியும் ஒரு நோயா?!...அடக்கடவுளே!!

“அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!” -சொன்னவர் மறைந்த கவிஞர் இன்குலாப். இது நடந்த நிகழ்ச்சி.
படம்: google
#றைந்த கவிஞர் ‘இன்குலாப்’ அவர்களுக்குச் சர்க்கரை நோய் முற்றிய நிலையில் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு காலை இழந்த நிலையிலும் தீரத்துடன் அவரின் போராட்டம் தொடர்ந்தது...இருத்தலுக்கான போராட்டம்.

சில மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் வைகறையும் கவிஞரைச் சந்திக்கச் சென்றோம். அவர் முகம் வாடியிருந்தது. அவரே சொன்னார்: “சமீப காலமாக ஒரு சித்ரவதையை அனுபவிக்கிறேன். அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!”

“என்ன சொல்கிறீகள் இன்குலாப்? இல்லாத காலின் கட்டை விரலில் வலியா?” என்றேன்.

“ஆமாம்! இல்லாத காலின் கட்டை விரல்தான் வலிக்கிறது...தாங்க முடியாத வலி. கால் அரிக்கிறது. கையைக் கொண்டுபோனால் அங்கே கால் இல்லை. வெற்றிடம்! ஆனாலும் அரிப்பு தாங்க முடியவில்லை...துடிக்கிறேன்” என்றார் வேதனையோடு.

“டாக்டரிடம் காண்பித்தீர்களா?”

“என் மகளே ஒரு மருத்துவர்தானே! மூளையில் முன்னரே பதிவான வலியாம் அது! அதுக்குப் பேரு ‘ஃபாண்டம் பெயின்’ என்கிறார்கள். அவயவத்தை இழந்த பின்னரும் வலி தொடர்வானேன்? அப்படியானால், உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? நமது இருத்தலை உணரவைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா? என்ன...என்ன இதெல்லாம்?”

கண்களில் ஆயாசத்துடன் இன்குலாப் கேட்டார். விடை தெரியாத கேள்விகள்!#

கவிஞர் இன்குலாப்பைச் சந்தித்து உரையாடியவர் ‘தஞ்சாவூர்க் கவிராயர்’.

கவிராயருக்கும் இப்பேட்டிக் கட்டுரையை வெளியிட்ட ‘தி இந்து’[09.12.2016] நாளிதழுக்கும் நம் நன்றி.

இப்பதிவு, கட்டுரையின்  ஒரு பகுதி மட்டுமே.
===============================================================================


புதன், 7 டிசம்பர், 2016

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவாக.....

எத்தனை பெரிய மனிதராயினும் மரணம் எய்திய ஒருவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் பிரார்த்தனை செய்வதும் வரவேற்கத்தக்க மனித நாகரிகம் எனினும் அவற்றால் பயனேதுமில்லை என்பது என் எண்ணம். அத்தகையோர் நினைவாக மரண பயத்தைக் குறைக்கவும், மரணத்தைத் தள்ளிப் போடுவதற்குமான ஆய்வுகளில் ஈடுபடுவது மனித குலம் ஆற்ற வேண்டிய அரிய பணியாகும்.

அம்மையார் தமிழகத்திற்கு ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து இப்பதிவை முன்வைக்கிறேன்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதை நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள். அவர்களில் எளியவனான நானும் ஒருவன். அடிக்கடி மரணம் குறித்துச் சிந்திப்பதாலோ என்னவோ, அது குறித்துக் கொஞ்சம் பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றுக்கான சிறு பட்டியலையும் [பழையவை] தந்திருக்கிறேன். அவற்றை ஏற்கனவே படித்தவர்களும் படிக்க விரும்பாதவர்களும் அவற்றைப் புறம்தள்ளி மேலே தொடரலாம்.

அ] http://kadavulinkadavul.blogspot.com/2013/05/blog-post_5539.html

ஆ] http://kadavulinkadavul.blogspot.com/2011/08/27.html

 இ] http://kadavulinkadavul.blogspot.com/2011/09/28.html
தோன்றுவதும் அழிவதுமாகப்  பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில், நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோமே அது ஏன் என்று எண்ணி எண்ணி மயங்கி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் இன்றியமையாத் தேவைகளாகும்.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................
அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன.
பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் 'காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
***********************************************************************************************************************



புதன், 30 நவம்பர், 2016

காதலும் உடலுறவும்!

‘தன் காதலை எதிர்த்ததால் தாய், தந்தை, சகோதரி என மூவரைக் கொன்ற இளைஞன்...’ - இது, இன்றைய பத்திரிகை[30.11.2016 தி இந்து]ச் செய்தி. காதல் குறித்து நான் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் சிலவற்றைப் படித்துவிட்டு மேலே தொடருங்கள்.

1. காதலைப் புனிதம் என்றவன் முட்டாள்! அதை நம்புகிறவன் அடிமுட்டாள்!! http://kadavulinkadavul.blogspot.com/2015/03/blog-post_57.html

3.காதல்...கொலைகள்...தற்கொலைகள் http://kadavulinkadavul.blogspot.com/2015/07/blog-post_4.html

4. தேவதைகள் வேண்டாம்! தேவலாம்கள் போதும்!!  http://kadavulinkadavul.blogspot.com/2015/07/blog-post_17.html

மனித குலத்தில், ‘காதல்’ என்று தனியான உறவு ஏதுமில்லை; தூய அன்பும் காமமும் காதல் என்னும் பெயரிலும் அழைக்கப்பட்டன. காதல், பிற்காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தப்பட்டது...படுகிறது.

ஆணாகட்டும் பெண்ணாகட்டும், காதல் போதைக்கு அடிமை ஆகிறவர்கள் திருமணம் ஆகாதவர்கள். தெள்ளத் தெளிவாகச் சொன்னால்.....

‘உடலுறவு’ சுகத்தை அனுபவித்திராதவர்களே காதல் என்னும் புதைகுழியில் வீழ்ந்து மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள். ஒருமுறை உடலுறவு இன்பத்தை நுகர்ந்த ஒருவர், மீண்டும் அவ்வின்பத்தைப் பெற முனைவாரே தவிர,  காதல் என்னும் பொய்யுணர்ச்சிக்கு அடிமையாக மாட்டார். சில நேரங்களில் காரியம் ஆவதற்காகக் காதலிப்பது போல் நடிக்க மட்டுமே செய்வார்.

மிகப் பழைய ஆனந்த விகடன் வார இதழில்[கையடக்க வடிவம்] படித்த ஒரு சிறுகதை  என் நினைவுக்கு வந்தது. அதன் சாரம்.....

காதலில் தோற்ற ஓர் இளைஞன் சித்தம் கலங்கிப் பித்துப் பிடித்தவனாக அலைந்துகொண்டிருப்பான். அவனின் உற்ற நண்பன் ஒருவன் நிறையப் புத்திமதிகள் சொல்லி எதார்த்த வாழ்வைப் புரிய வைக்க முயல்வான். முயற்சி தோல்வியில் முடிகிறது. இடையறாது வற்புறுத்தி, ஒருவகையாக உடன்பட வைத்து ஒரு விலைமகளிடம் அனுப்பி வைப்பான். இந்தக் கிறுக்கன் அவளோடு உடலுறவு கொள்கிறான். உறவு தொடர்கிறது. காதல் பித்தம் தெளிகிறது. படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறான். 

விலைமகளுடனான தகாத உறவை நியாயப்படுத்துவது இக்கதையின் நோக்கமன்று; எதார்த்த வாழ்வைப் புரிந்துகொள்ள வைப்பது மட்டுமே என்பது என் எண்ணம்.

மணமாகாத ஆணும் பெண்ணும் பழகலாம். உணர்வுகளும் பழக்கவழக்கங்களும்[பெரும்பான்மை] ஒத்திருந்தால் நண்பர்கள் ஆகலாம். இருவரின் குடும்பச் சூழலும் ஒத்தமைந்தால் மணம் புரிந்து ஆசை தீர உடலுறவு சுகத்தை அனுபவிக்கலாம். 

இதைத் தவிர்த்து, காதல் புனிதமானது, தெய்வீகத்தன்மை வாய்ந்தது என்றெல்லாம் பிணாத்திக்கொண்டு அலைவது தவிர்க்கப்படவேண்டிய, தடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
===============================================================================






ஞாயிறு, 27 நவம்பர், 2016

எங்க ஊர்க் கருப்பாயி கதை!...பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

இந்த முரட்டுப் பெண்ணின் கதை, சில முன்னணி இதழாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை!

ருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக் கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்; கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது. அவள் கணவன், சந்தை சந்தைக்குக் கால்நடைகளை வாங்கி விற்கும் ‘தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி..... 
எருமை & மாடு[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்து வருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்குச் சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள். முதல் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

“எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ளே வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழி விடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  “உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம். அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு ஒத்துழைக்கவில்லை.

அவளிடமிருந்து ‘அவற்றை’ விடுவிக்க நினைத்தான். அதுவும் சாத்தியப்படவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது. நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன. விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, “பிழைச்சிப்  போடா நாயே” என்று சொல்லிக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

அடுத்த நாள், பால் கொண்டு போன போது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்த போது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்.
=============================================================================================
பழைய கதைதான். கொஞ்சம் மெருகேற்றப்பட்டது.




வெள்ளி, 25 நவம்பர், 2016

வெங்காய விதி!!!

ஆகம விதிகளை மீறினால் ஆபத்து நேருமா? யாருக்கு?  ஆளுபவருக்கா, நாட்டுக்கா, கடவுளுக்கா?! கொஞ்சம் யோசனை பண்ணுங்கய்யா.

#திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் 108 வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். இந்த நேரத்தில் மட்டும்தான் கோயிலில் மூலவருக்கு 5 கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. அந்த நேரத்தில் மற்ற யாக பூஜைகள், அதுவும், நல்ல நேரம் பார்த்துதான் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.

ஆனால், கோயில் நடை சாத்தப்பட்ட பிறகு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில்  ஆகம சாஸ்திர விதிமுறைகளை மீறி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கூடுதல் ஆணையர் கவிதா,  ஜோதிடர் ஒருவர், பட்டாச்சாரியர்கள் ஆகியோர் கோயில் நடையில் உள்ள சிறிய பாதையைத் திறந்து கோயிலுக்குள் சென்று யாக சாலை பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் நலம்பெற வேண்டி இந்தப் பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவில் 3 மணிவரை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.

கோயிலில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோயில் நடையைத் திறந்தது உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது மட்டுமின்றி நாட்டுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்#

மேற்கண்டது, சற்று முன்னர் இன்றைய தினகரன்[25.11.2016] நாளிதழில் நான் படித்த செய்தி.
இதைப் படித்தவுடன் என் மனத்திரையில் ஓடிய எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

கடவுள் உண்டு என்று சொன்னவர்கள் மனிதர்கள். கோடி கோடியாய்ப் பணத்தையும் உடல் உழைப்பையும் வீணடித்துக் கோயில்களைக் கட்டியவர்களும் இவர்களே. தாங்களே எழுதி வைத்துக்கொண்ட வேத ஆகமங்களின் பெயரால்,  இன்ன இன்ன நேரத்தில் இன்ன இன்ன விதமாய்ப் பூஜைகள் நடத்தவேண்டும்; இன்ன இன்ன நேரத்தில்தான் கோயிலைத் திறக்க வேண்டும்; சாத்த வேண்டும் என்றெல்லாம் விதிகள் செய்ததும் இவர்களே. இந்த விதிகளை மீறுபவர்களும் இவர்களே.

இந்த விதி மீறல்களால் தலைவர்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளையும் என்று அபாயச் சங்கு ஊதுவோரும் இவர்களே.

என்ன கூத்துடா இது!

கடவுளின் பெயரால் இவர்கள் நடத்தும் கூத்துகளால் தலைவர்களுக்குக் கேடு விளையுமோ இல்லையோ, மக்களின் சிந்திக்கும் அறிவு சிதைக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சீரழியும் என்பது சர்வ நிச்சயம்.
***********************************************************************************************************************


வியாழன், 24 நவம்பர், 2016

ஜோதிடம்...கொஞ்சம் புரிதல்! கொஞ்சம் ஆராய்ச்சி!!

வானில் உள்ள கோள்கள் பலவும்[துணைக்கோள்கள் உட்பட] குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.
இவற்றில், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய 9 கோள்களும் [இவற்றில் உள்ள முரண்பாடுகள் குறித்து 15.11.2016 தேதியிட்ட என்  பதிவில் http://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post.html குறிப்பிடப்பட்டுள்ளன] அடங்கும். அவற்றிற்குப் பின்னால் பெரும் எண்ணிக்கையில் நிலைகொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டத்தை 12 பகுதிகளாகப் பிரித்தார்கள் ஜோதிட முன்னோடிகள்[9 க்குப் பதிலாக 12 ஆக ஏன் பகுத்தார்கள் என்பது புரியவில்லை!]. 12 பகுதிகளையும் 12 ‘வீடுகள்’ என்று அழைத்தார்கள். ஆக, ஒவ்வொரு கோளின் பின்னாலும் ஒரு வீடு இருப்பது அறியத்தக்கது[ஒரு கடிகாரத்தில் 12 முட்களும் 12 எண்களும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். 12 முட்களின் பின்னணியில் 12 எண்கள் இருப்பது போல]   . இந்த வீடுகளைத்தான், ‘ராசி’, ‘ஓரை’, ‘மடம்’ என்று வேறு வேறு பெயர்களில் அழைத்தார்கள்; அழைக்கிறார்கள் ஜோதிடர்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பெயரும் சூட்டினார்கள்.

மேஷம்.   ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றிவ்வாறு. 

பெயர் சூட்டியது எப்படி?

நட்சத்திரக் கூட்டங்கள் மனதில் எழுப்பிய கற்பனைகளுக்கு ஏற்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். எடுத்துக்காட்டு.....

மேஷம்[ஆடு என்று பொருள்.] 

பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் நம் தலைக்குமேல் சூரியன் வரும் நாள் மார்ச் 23 ஆகும். அன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் இரவும் பகலும் ஒரே அளவாக இருக்குமாம். அன்றுதான், ஆடுகளின் உணவான இலைகள் தளிர்க்கக்கூடிய ‘தளிர் காலம்’[Spring Season] தொடங்குகிறதாம். அதனால் மக்கள், ஞாயிறு[சூரியன்] தங்கியிருக்கும் வீட்டையே முதல் வீடாக[மேஷ ராசி]க் கொண்டார்களாம். இவ்வாறாக, மற்ற ராசிகளுக்கான பெயர் சூட்டுதலுக்கும் மனம்போனபடி கற்பனை செய்திருக்கிறார்கள்[பல முறை படித்தும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை].

12 பிரிவுகளாகப் பாகுபடுத்தப்பட்டு, வீடுகள் அல்லது ராசிகள் என்று அழைக்கப்பட்டு, மேஷம் முதலாகப் பெயரும் சூட்டப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள் இருந்த இடத்திலேயே நிலைகொண்டிருக்கின்றன[ஜோதிட முன்னோடிகள்  நட்சத்திரங்கள் எல்லாம் ‘வானக் கூரையில்’ ஒட்டப்பட்டிருப்பதாக நம்பினார்கள்; எல்லா நட்சத்திரங்களும் ஒரே தொலைவில் இருப்பதாகவும் எண்ணினார்கள்]. 

பூமி சுழன்றபடி இருப்பதால், இந்த மேஷம் முதலான ராசிகள்[வீடுகள்] ஒன்றன்பின் ஒன்றாகக் கீழ்த் திசையில் எழுந்து உயர்ந்து, பின்னர் மேற்றிசையில் தாழ்ந்து மறைகின்றன[மறைவதுபோல் தோன்றுகின்றன].

ஒவ்வொரு ராசியும் எழுச்சிக் காலத்தில்[மேலே எழும்பும்போது] மிகுந்த ஆற்றல் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு குழந்தை பிறக்கும்போது, எழுச்சி பெற்றிருக்கும் ராசி எது என்று ஜோதிடர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

எழுச்சியில் இருக்கும் ராசியைத்தான் ‘லக்கினம்’ என்கிறார்கள்.

லக்கினத்தைப் பொருத்து, பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் அமையக்கூடும். ஒரே நேரத்தில் சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கும் கன்னி லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கும் வேறு வேறு குண நலன்கள் அமையக்கூடும் என்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பிறக்கும் பல ஆயிரம் குழந்தைகளின் லக்கினத்தைக் கணிப்பதில் பிழைகளே நேராமலிருக்குமா என்பதும் ஆய்வுக்குரியது.

கோள்கள் வட்ட வடிவில் சுழன்றுகொண்டிருக்கின்றன. சுழலுகிற ஒவ்வொரு கோளும் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கேற்ப[ராசி] பூமியில் பிறக்கும் குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதா என்பது தவிர்க்க இயலாத கேள்வியாகும்.

அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை வளர்ந்துகொண்டிருக்கும் அறிவியலை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்க இயலுமா?

முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

“ஜோதிடம் என்பது விஞ்ஞானம் அல்ல. அறிவியல் பூர்வமாக இதை ஏற்க முடியாது” என்று கூறுகிறார்கள். பிரபஞ்சக் கதிர்களிலுள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர்கள் போன்ற கதிரியக்கக் கதிர்கள் மனித செல்களைப் பாதிக்கின்றன என்பதை ஒத்துக்கொள்கிற  அவர்கள், “சூரியனைத் தவிர பிற கோள்களிலிருந்து எவ்விதமான சக்தி அலைகளும் வருவதில்லை. அவற்றிற்கு ஈர்ப்பு விசை மட்டுமே உள்ளது. எனவே, கோள்களின் இயக்கம் எவ்விதத்திலும் மனிதரைப் பாதிப்பதில்லை” என்றும் சொல்கிறார்கள்.

வானக் கூரையில் விண்மீன்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்றும், கோள்கள் வீடுகளில்[ராசிகளில்] தங்குகின்றன என்று ஜோதிடர்கள் சொல்வது நகைப்புக்கிடமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வியாழன் கோள் நன்மை பயக்கும் தன்மையுடையது. சனி தீமை செய்வது என்றிவ்வாறாக, ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு குணத்தைக் கற்பித்திருப்பதும் அறிவுடையார் செயலல்ல என்றும் அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

ஆக, கோள்களையும் நட்சத்திரங்களையும் வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் மக்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள்; விளையாடுகிறார்கள் என்பதே அறிவியலாளரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
===========================================================================================================

‘சோதிடம் அறிவியல் ஆகுமா?’ என்னும் தலைப்பில் k.s.மகாதேவன்,B.Sc., M.A. அவர்கள் எழுதிய கட்டுரை வாயிலாக ஜோதிடம் குறித்து நான் அறிந்தவற்றை எளிமைப்படுத்தி என்னுடைய நடையில் பதிவிட்டிருக்கிறேன்.

என் எழுத்து உங்களுக்குப் புரியும் வகையில் அமைந்தால் மகிழ்வேன். மற்றபடி, என்னை ‘ஜோதிடத்தில் புலி’ என்று நினைத்துக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்க வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

புதன், 23 நவம்பர், 2016

வெங்காயப் பதிவு!

  1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீர்த் தொற்றால் அவதிப்பட்டேன். மருத்துவரைச் சந்தித்து, 'complete urine test', 'urine culture test'  ஆகிய பரிசோதனைகள் செய்து, மருந்து மாத்திரை சாப்பிட்டும் நோயிலிருந்து விடுதலை பெற ஒரு மாதத்திற்கும் மேல் ஆயிற்று. இதே நோய் கடந்த ஆண்டும் என்னைத் தாக்கித் துன்புறுத்தியது. கூகுளாரின் உதவியால் சிறுநீர்த் தொற்று தொடர்பான பதிவுகளைப் படித்தேன். அவற்றுள் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். இப்போதெல்லாம் என் தினசரி உணவுப் பட்டியலில் வெங்காயம் இடம்பெறத் தவறுவதே இல்லை. பதிவர் மோகன் குமாருக்கு நன்றி.
  2. வெங்காயம்:
  3. வெங்காயம் காரத்தன்மை மிக்கது. அதற்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
  4. * முருங்கைக்காயைவிட அதிகப் பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
  5. * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளையும் சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
  6. * சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தப் பழக்கத்தைத் தொடர்பவர்களுக்குச் சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்துக் கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
  7. * யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
  8. * முதுமையில் வரும் மூட்டு அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
  9. * செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தைத் தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
  10. * சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
  11. * புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
  12. நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  13. * வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
  14. * வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
  15. * வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
  16. * அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.









    வெள்ளி, 18 நவம்பர், 2016

    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமும் அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் பேட்டியும்!

    “கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும் மருத்துவர்களின் சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்.....” என்று முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்[பாலிமர் தொலைக்காட்சி; 17.11.2016, பிற்பகல் 02.15] கூறியிருக்கிறார்.

    நம் முதல்வர் அவர்கள் முழுமையாகக் குணமடைந்ததில் மெத்த மகிழ்ச்சி.
    நன்றி:Oneindia Tami
    இப்பதிவின் நோக்கம், மருத்துவர் பிரதாப் சி. ரெட்டியின் பேட்டியில் இடம்பெற்றுள்ள தவற்றினைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே.

    பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர், ஜாதி, மதம், இனம், மொழி, கடவுள் நம்பிக்கை, நாத்திகம் என எந்தவொரு வரையறைக்கும் கட்டுப்படாதவர் ஆவார்[தனிப்பட்ட வாழ்க்கையில் இது பொருந்தாமலிருக்கலாம்]. 

    தம்மிடம் சிகிச்சை பெறும் நோயாளியின் நிலை குறித்து அறிவிப்புச் செய்யும்போது, முந்தைய பத்தியில் குறிப்பிட்டவாறு தாம்  சார்பும் அற்றவர் என்பதை மறத்தல் கூடாது. ஆனால் ரெட்டியோ.....

    தாம் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும்...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    சொந்தபந்தம் என்று எந்தவொரு நாதியும் இல்லாத அனாதை நோயாளிகளுக்கு எவரும் பிரார்த்தனை செய்வதில்லை; செய்யப்போவதும் இல்லை. அத்தகையவர்களைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சை மட்டும் போதாது என்று நினைக்கிறாரா ரெட்டி?

    பணம் படைத்தவர்கள் எப்படியோ, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடுகிற ஏழை எளியவர்கள்,  நோயைக் குணப்படுத்த அல்லும் பகலும் ஆண்டவனைப் பிரார்த்தித்துப் பலன் கிடைக்காத நிலையில்தான் மருத்துவர்களை நாடுகிறார்கள் என்பதை பிரதாப் சி .ரெட்டி போன்ற மருத்துவர்கள் மறந்துவிடக் கூடாது.
    ===============================================================================











    செவ்வாய், 15 நவம்பர், 2016

    நம்பாதீர், நம்பாதீர்.....ஜோதிடத்தை நம்பாதீர்!

    http://naanmaanudan.blogspot.com என்னும் ஒரு புதிய வலைப்பக்கத்தில் வெளியான பதிவின் நகல் இது. அதன் உரிமையாளருக்கு நன்றி.


    விண்ணில் உலவும்  கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை பற்றிய தங்களுக்குள்ள அரைகுறைப் புரிதலுடன் நீண்ட நெடுங்காலமாய் மக்களை ‘அறிவிலிகள்’ ஆக்கிகொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

    நீங்கள் ஜோதிடம் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், கீழ்க்காணும் கேள்விகளை அவர்களிடம் கேட்டுவையுங்கள். சிலரேனும் திருந்தக்கூடும்.


                                                            கேள்விகள்:
    ஒன்று:
    கோள்கள் வரிசையில் உள்ள ராகுவையும் கேதுவையும் ‘நிழல் கோள்கள்’ என்கிறீர்கள். அவை பூமி, சந்திரன் ஆகியவற்றின் நிழல்கள்தான்.  நீங்கள் சொல்வதுபோல், ‘நிழல் கோள்கள்’ என்று எவையும் இல்லை. அவற்றையும் கணக்கில் கொண்டு நீங்கள் பலன் சொல்வது தவறு அல்லவா? 

    இரண்டு:
    பூமியும் ஒரு கோள்தான். இதைக் கணக்கில் கொள்ளாமல் மக்களுக்குப் பலன் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்குப் பெரும் தீங்குகள் விளையும் என்பதை அறிவீர்களா?

    மூன்று:
    திங்கள்[சந்திரன்] என்பது பூமியைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். அதை முதன்மையான ஒரு கோளாகக் கருதிப் பலன் சொல்லுகிறீர்கள். இது தவறு என்பதை நீங்கள் உணர்ந்தது உண்டா? இல்லையெனில், இனியேனும் உணர்வீர்களா?

    நான்கு:
    மற்ற கோள்கள் தெறித்து விலகித் திசை கெட்டு ஓடிவிடாதவாறு அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது ஞாயிறு[சூரியன்],  அந்த ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்று ஜோதிட முன்னோடிகள் அறியாமையால் சொன்னதையே இந்த அறிவியல் யுகத்திலும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். திருந்தவே மாட்டீர்களா? ஜோதிடத் தொழிலைக் கைவிடவே மாட்டீர்களா?

    ஐந்து:
    யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன. உங்கள் ஜோதிடக் கணக்கில்  இவை இடம்பெறவில்லை.  இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் எப்படி ஜாதகம் கணிக்கிறீர்கள்?

    ஆறு:
    செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களுக்கும் துணைக்கோள்கள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்வதில்லை.

    உங்களின் ஜோதிடக்கலை முன்னோடிகள் தங்களுக்கிருந்த அரைகுறை வானிலை அறிவைப் பயன்படுத்தித்தான் ஜோதிடக் கணக்கை வகுத்துவிட்டுப் போனார்கள் என்னும் உண்மை இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இனியும் பொய்யான பலன்களைச் சொல்லி மக்களின் வாழ்க்கையை வீணடிக்கப் போகிறீர்களா?

    இக்கேள்விகளை என் கணினியிலேயே நகல்கள் எடுத்து அவ்வப்போது, அறிந்தவர் அறியாதவரிடமெல்லாம் வினியோகித்து வருகிறேன். எனக்கான பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று!
    ===========================================================================================================
    உதவி: ‘பெரியார் சாத்தித்ததுதான் என்ன?’, தமிழ்க்குடி அரசுப் பதிப்பகம், சேப்பாக்கம், சென்னை - 600 005.

    புதன், 21 செப்டம்பர், 2016

    ‘நான் லட்சத்தில் ஒருவன்!’ [அனுபவக் கதை!!]

    து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

    அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

    ‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை. கொடுமையிலும் கொடுமை.

    அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

    “இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    “கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

    “அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

    ”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

    “கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

    “கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

    இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

    “ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

    அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

    கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

    நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

    ‘சே, என்ன மனிதர்கள்!’

    ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

    ஆண்களா இவர்கள்?

    ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

    இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

    லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

    கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

    யோசிக்கிறீர்கள்?

    ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

    “இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

    ஆறு மாசம் முந்தி.

    “எங்கே?”

    சேலத்தில்.

    “உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

    இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

    “அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

    அது வந்து.......

    “என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

    அது வந்து.....அது வந்து.....வந்து.....



    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$