அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

இதோ ஒரு மனிதன்! வாருங்கள் இவன் வழி நடப்போம்.

விபத்து அவன் உடலை இரு துண்டாக்கியபோது, “ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலறவில்லை; கடவுளை நினைந்து கசிந்துருகிக் கண்ணீர் சிந்தவில்லை; “நான் பிழைப்பது கடினம். என் உடல் உறுப்புகளைத் தானம் செய்யுங்கள்” என்று சக மனிதர்களிடம் கை கூப்பி அழுதான். இது 18.02.2016 ‘தி இந்து’ நாளிதழ்ச் செய்தி.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ‘ஹரீஷ்’[26]; அங்கிருந்து, தான் வேலை பார்க்கும் பெங்களூருவுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இவரை முந்திச் சென்ற ஒரு லாரி மோதியதில் ஹரீஷின் உடல் இரண்டு துண்டுகளானது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த இவரைக் காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களிடம், இரு கரம் குவித்துக் கதறி அழுதவாறு ஹரீஷ் சொன்னார், “நான் பிழைப்பது கடினம். என் உறுப்புகளைத் தேவைப்படுவோருக்குத் தானம் செய்யுங்கள்” என்று.

இவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதம் அடைந்துவிட்டன. ஹெல்மெட் அணிந்திருந்த இவரின் கண்கள் மட்டும் சிதையாமல் இருந்தன.

உயிருக்குப் போராடும் அந்தக் கணங்களில் தன்னையும் தன் உறவுகளையும் அலட்சியப்படுத்தி, தன் உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்குப் பயன்பட வேண்டும் என்றெண்ணும் உயர்ந்த உள்ளம் இவருக்கு எப்படி வாய்த்தது?

‘இவர் ஓர் அறிவுஜீவியா, சாமானியரா? ஆத்திகரா, நாத்திகரா? பரம்பரை ஏழையா, பணக்காரரா? படித்த வர்க்கமா, பாமரர் குடியில் பிறந்தவரா?’ என்பன போன்ற கேள்விகளில் எந்த ஒன்றுக்கும் நாம் விடை அறியோம்.

நாம் அறிந்தது, ‘இவர் ஒரு மனிதர். மனிதத்தின் மொத்த உருவமாக வாழ்ந்து மடிந்த ஒரு மாமனிதர்’ என்பது மட்டுமே.

ஞானிகளையும் மேதைகளையும் வகை வகையான கடவுளர்களையும் போற்றுகிறோமோ இல்லையோ, ‘ஹரீஷ்’களைப் போற்றி, முழு மனிதர்களாய் வாழ முயல்வது நம்மவரின் தலையாய கடமையாகும்.
=============================================================================================

  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக