செவ்வாய், 31 மே, 2016

நடுவணரசுக்கு ஒரு நடுநிலைச் சிந்தனையாளனின் கடிதம்!

“ஹரித்வார், ரிஷிகேஷில் இருந்து தூய்மையான கங்கை நீரை இ-காமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்[தி இந்து, 31.05.2016].
‘மதச்சார்பற்றது’ என்று சொல்லப்படும் ஓர் அரசு, குறிப்பிட்ட ஒரு மதத்தின் ஏஜண்டாகச் செயல்படுவது தவறு என்பதை நடுவணரசு இன்றளவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சிவபெருமான் தன் தலையில் சுமந்திருப்பதால் கங்கையே புனிதமானது என்று நம்பியது பழைய நம்பிக்கை. அது மூடநம்பிக்கையும்கூட என்பதை நடப்பு அறிவியல் யுகத்திலும் இந்த அரசு உணரத் தவறிவிட்டது. அரசின் இச்செயல், மக்களிடமுள்ள மூடநம்பிக்கைகளை அடியோடு களைவதற்குப் பதிலாக, நீர் வார்த்து வளர்த்தெடுக்கவே செய்யும். இது பற்றியும் நடுவணரசு சிந்தித்ததாகத் தெரியவில்லை.

அனைத்துப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள பஞ்சபூதம் எனப்படும் மண், நீர், காற்று, நெருப்பு, வெளி ஆகிய ஐந்துமே  ஆண்டவனால் படைக்கப்பட்டவைதாம் என்றால் மற்ற நான்கிற்கும் இல்லாத அத்தனை புனிதம் நீருக்கு, குறிப்பாகக் கங்கை நீருக்கு மட்டும்  வாய்ப்பது சாத்தியமே இல்லை என்பதை ஆளும் வர்க்கம் அறியாமலிருப்பது விந்தையிலும் விந்தை!

புனிதமான ஆறுகளிலும் குளங்களிலும் நீராடுகிற பக்த கோடிகளில் எவரும், புனிதமானது என்று கருதிக் கடவுளின் படைப்பான நெருப்பில் குளிக்காமலிருக்கும் ‘இரகசியம்’ இவர்கள் அறியாததன்று.

தூய்மையான கங்கை நீரைத் தலையில் தெளித்துக்கொண்டால் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என்பது மக்கள் பலரின்  நம்பிக்கை. இவர்கள் அத்தனைபேரும் ஹரித்வாருக்கும் ரிஷிகேஷத்திற்கு சென்று கங்கையில் மூழ்கிப் பாவம் தொலைப்பது சாத்தியமற்றது என்பதால், தபாலில் ‘புனித நீர்’ அனுப்பும் பணியை மேற்கொள்ள நடுவணரசு முன்வந்துள்ளது போலும்.

எது எப்படியோ, புனிதத்தை விற்பனை செய்வது ஒரு தப்பான காரியம் மட்டுமல்ல, திட்டத்தை நிறைவேற்றக் காலதாமதமும் ஆகும் என்பதையேனும் இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்; தபால் மூலம் காசுக்குக் கங்கை நீரை விற்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

“இது சாத்தியமே இல்லை” என்று அது பிடிவாதம் பிடிக்குமேயானால், இந்த அரசுக்கு நாம் முன்வைக்கும் ஒரு நல்லெண்ணப் பரிந்துரை.....

புனித கங்கை நீரை விமானங்களில் எடுத்துச் சென்று இந்தப் புண்ணிய பூமியெங்கும் தெளிக்கலாம்[சில நாட்களில் இந்தப் பணி முடிந்துவிடும்]. இங்கு வாழும் அனைத்து மக்களும் புண்ணியவான்களாக ஆவார்கள்!!!

எம் பரிந்துரையை ஏற்குமா நம் நடுவணரசு?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++















ஞாயிறு, 29 மே, 2016

‘புகழ்’ பெறத் துடிக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு.....

கருப்பொருள் எதுவாயினும், வாசகரின் மனம் கவரும் வகையிலும் அவர்களுக்குப் பயன்படும் வகையிலும் எழுதினால் புகழ் பெறலாம் என்பது உண்மைதான். புனைகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில் அது சாத்தியமாவதற்கு    நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. தவிர்க்க வழியே இல்லையா? உண்டு என்பதே நம் பதில். படியுங்கள்.
மேலே, 'எதையும்’ என்றதில் ‘பாலுணர்வுக் கதை’களைச் சேர்க்க வேண்டாம்.

இவ்வகைக் கதைகளைத் தனிமையில் படித்து மனதுக்குள் சிலாகித்தாலும், பொது இடங்களில் பழித்துப் பேசுவதே நம்மவரில் மிகப் பெரும்பாலோர் வழக்கம். 

விறுவிறு நடையில் மண் மணம் கமகமகமக்கும் அற்புதமான புனைகதைகளைப் படைத்தளித்த, கரிசல் காட்டு எழுத்தாளர்  கி. ராஜநாராயணன், கொஞ்சம் பாலுணர்வுக் கதைகளையும்[பாலுணர்வைப் பதப்படுத்துபவை அல்ல; தூண்டுபவை!] எழுதியதற்காகக் [’தாய்’ என்னும் வார இதழில் வெளி வந்தன; நூல் வடிவமும் பெற்றது] கடும் கண்டனங்களுக்கு  ஆளானார் என்பது வாசகர் பலரும் அறிந்ததே.

சிறந்த நாவல்களும் சிறுகதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கிய, எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ தொகுத்ததற்காக எழுந்த எதிர்ப்பலையில்  எதிர் நீச்சல் போட்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் பாலுணர்வைத் தூண்டும் படைப்புகளைத் தரும் எண்ணம்  வேண்டவே வேண்டாம்.

வேறு எதை எழுதுவதாம்?

குடும்பக் கதைகளும் மர்மக் கதைகளும் பேய்க் கதைகளும் எழுதுவதற்கு நம்மில் ஏராள எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சரித்திரக் கதைகளுக்கும் அறிவியல் கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது.

சாண்டில்யனுக்குப் பிறகு வரலாற்றுக் கதைகள் எழுத ஆட்கள் இல்லை. 

அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குத் தமிழில் எழுதத் தெரிவதில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லை. எனவே, தமிழில் அறிவியல் கதைகள் உதிப்பதற்கான தருணம் எப்போது மலருமோ தெரியாது.[சுஜாதா, இத்துறையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை]

கல்கி, தேவன், துமிலன், சாவி போன்றோருக்குப் பிறகு, நகைச்சுவைக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி மட்டுமே.

இவரும் காலமாகிவிட்டார்[தகவல் அளித்த நண்பர் பகவான்ஜிக்கு நன்றி].]

இவரையடுத்து......................

தமிழ்ப் புனைகதை உலகில் ஒரு பரந்த வெற்றிடமே தென்படுகிறது.

நீங்கள் எழுத்தாளராக இருந்தால், ஏதாவது ஒரு தளத்தில் முதல் ஆளாகக் கால் பதிக்கலாம். 

குறிப்பிடப்பட்ட மூன்றில் நகைச்சுவையாக எழுதுவது சற்றே எளிது. ஆனால் அதற்கும்கூட, ஆழ்ந்த நகைச்சுவை உணர்வும் தளராத மன உறுதியும் கடின உழைப்பும் அவசியத் தேவை.

எனக்கும் ஆசை இருந்தது; இருக்கிறது; போதிய உழைப்பு மட்டும் இல்லை. அதனால்தான் இந்தப் ‘பரிந்துரை’ப் பதிவு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இது, புதுப்பிக்கப்பட்ட பதிவு.




புதன், 25 மே, 2016

“கை குடுங்க சாரு[நிவேதிதா]!”.....

நான் சாருவைச் சாடி எழுதியிருக்கிறேனே தவிர, பாராட்டிப் பதிவிட்டதில்லை. இன்று அதற்கான வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
.....‘இன்றைய தினம் பெரும்பான்மையான இளைஞர்களிடம் தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவருவதை நீங்கள் கவனிக்கலாம். தமிழை ஒழுங்காக நான்கு பக்கம் எழுதக்கூடிய இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலை நாடுகளில் இந்த அவலம் இல்லை.......

.....ஒரு ஃபிரெஞ்சு மாணவரை எடுத்துக்கொண்டால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில்கூட அவர் படித்து முடிக்கும் வரையிலும் - ஆய்வுப் படிப்பிலும்கூட - ஃபிரெஞ்சு மொழித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும்.....

.....இப்படித் தன் மண்ணின் மொழியை எந்தச் சமூகம் கைவிடாமல் இருக்கிறதோ அந்தச் சமூகமே உயர்வுறும். தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார, அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தமிழைக் கைவிட்டுவிட்டோம் என்பதுதான். உங்களுக்குத் தெரியுமா, இங்கே உள்ள 99% தனியார் கல்லூரிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள். என்னால் பெயர்கூடச் சொல்ல முடியும். தமிழ்ப் பேராசிரியர்கள்கூட இங்கே திக்கித் திக்கி ஆங்கிலத்திலேயே பேசவேண்டியிருப்பதன் அவலத்தை வேறு எந்த மண்ணிலும் காண முடியாது. “நல்லவேளை, தமிழை ஆங்கிலத்தில் கற்பிக்கச் சொல்லி உத்தரவு போடவில்லை” என்று பகடி செய்தான் என் நண்பராக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்!’.....

‘தி இந்து[25.05.2016]’வில், ‘சென்ற நூற்றாண்டின் இலக்கியம்’ என்னும் தலைப்பிலான ‘சாரு நிவேதிதா’வின்  ‘பேட்டி’யிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பு இது.

சாருவுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டும் நன்றியும்.
===============================================================================

சனி, 21 மே, 2016

தேர்தலில் வென்றால் அரியணை! தோற்றால் சமாதி!! விமர்சனம் செய்தால்?


.....முன்னதாக அவர்[ஜெயலலிதா] வெளியிட்ட அறிக்கையில், ‘திமுகவின் பொய்ப் பிரச்சாரங்களைப் பொடிப்பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான. உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்.....  -தி இந்து, வெள்ளி, மே20, 2016[சேலம் பதிப்பு; பக்கம் 7]

கவனியுங்கள்...‘குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்’!

இது குறித்து நான் விமர்சனம் ஏதும்  எழுதினால்.....???
===============================================================================
                                                                             

ஞாயிறு, 15 மே, 2016

ஊத்திக் கொடுத்த ‘அம்மா’!

“இப்பதிவின் நோக்கம் எவருடைய மனதையும் நோகடிப்பதல்ல...அல்லவே அல்ல” என்று உறுதி மொழிகிறேன்.


ள்ளாடியவாறு குடிசைக்குள் நுழைந்த மாரிமுத்து, “இந்தா இன்னிக்கி வருமானம்” என்று தன் கையிலிருந்த சில ரூபாய் நோட்டுகளைக் கண்ணம்மா இருந்த திக்கில் வீசிவிட்டுத் தரையில் கிடந்த பழைய கோரைப்பாயின் மீது மல்லாந்து சரிந்தான்.

“நாள் தவறாம குடிச்சிட்டு வர்றே. உன்னோட வருமானத்தில் பாதி டாஸ்மாக்குக்குப் போயிடுது. மூனு பொட்டப் புள்ளைகளை ஆளாக்கிக் கரையேத்தணும். குடிக்காதேன்னு சொன்னா அடிக்க வர்றே. நீ திருந்தவே மாட்டியா?” என்று குழைவான குரலில் சொல்லி வருந்தினாள் கண்ணம்மா. 

“பகல் முழுக்க மூட்டை சுமக்கிறேன். உடம்பு வலியை மறக்கக் குடிக்கிறேன். பழகிப் போச்சு. வம்பு பண்ணாம உன் வேலையைக் கவனி” என்றான் மாரிமுத்து.
நேரம் நடுநிசியைக் கடந்துகொண்டிருந்தது. குடிசைக்குள், சிம்னி விளக்கின் உபயத்தில் லேசான வெளிச்சம் பரவியிருந்தது.

நாசியில் ஊடுருவிய ‘சரக்கு’ வாசனை, உறக்கத்திலிருந்த மாரிமுத்துவுக்கு விழிப்பைத் தந்தது; எழுந்து அமர்ந்தான்.

கண்ணெதிரே விரிந்த காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மூன்று பெண் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கைகளில் அலுமினியக் குவளைகள். தன் கையிலிருந்த டாஸ்மாக் மதுப்பாட்டிலைத் திறந்து, மூன்று குவளைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றினாள் கண்ணம்மா; “ம்ம்ம்...குடிங்கடி” என்று அவர்களை அதட்டினாள்.

‘திடுக்’ கென எழுந்து, கண்ணம்மாவிடமிருந்த பாட்டிலையும், மகள்களின் கைகளிலிருந்த குவளைகளையும் பறித்து வீசிய மாரிமுத்து, “ஏண்டி, உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?” என்று சீறினான்.

"சுய புத்தியோடதான் இருக்கேன். “போதையில் போட்டதைத் தின்னுப்புட்டு நீ படுத்துட்டே. நீ குடுத்த பணத்தில் பிள்ளைகளின் அரை வயிறுதான் நிறைஞ்சுது. பாதித் தூக்கத்தில் கண்முழிச்சி, பசிக்குதுன்னு அழுதாங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னு புரியல. நீ குடிச்சுட்டு மிச்சம் வெச்ச பாட்டில் கண்ணில் பட்டுது. சரக்கை ஊத்திக் கொடுத்தா பசியை மறந்து தூங்கிடுவாங்கன்னு நினைச்சித்தான் இப்படிச் செஞ்சேன். நீ உடம்பு வலியை மறக்கக் குடிக்கிறே இல்லியா, அது மாதிரி. நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்....."

குறுக்கிட்டு, “என்னை மன்னிச்சுடு கண்ணம்மா. புள்ளைகள் மேல சத்தியமா இனி குடிக்கவே மாட்டேன்” என்றான் மாரிமுத்து.

தான் நள்ளிரவில் போட்ட நாடகத்துக்கு உடனடிப் பலன் கிடைத்ததில் கண்ணாம்மாவுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
===============================================================================

வியாழன், 12 மே, 2016

இப்பதிவு, ‘குமுதம்’ இதழ் ஆசிரியருக்குச் சமர்ப்பணம்!

ஓர் எழுத்தாளரின்  படைப்பை அச்சரம் மாறாமல் இன்னொருவர்  தன் பெயரில் வெளியிட்டால் அது ‘கதைத் திருட்டு’. ‘கரு’வை மட்டும் சுட்டால் அதுவும் திருட்டுதான். அப்படியொரு திருட்டுக்குக் குமுதம் ஆசிரியர் உடந்தையாக இருந்திருக்கிறார்[!!!].

கீழ்க் காண்பது, 30.03.2015 குங்குமம் இதழில், ‘வேண்டாம்’ என்னும் தலைப்பில் சிறியேன்[நாமக்கல் பரமசிவம்] எழுதிய ஒரு பக்கக் கதை.
இனி நீங்கள் வாசிக்கவிருப்பது இந்த வாரக் குமுதத்தில்[18.05.2016] ‘ஒரு சொல்’ என்னும் தலைப்பில், ‘விஜயலட்சுமி’ என்பவர் பெயரில் வெளியாகியிருக்கும் ஒ.ப.கதை.
குமுதம் ஆசிரியர், ‘நம்பர் 1 போட்டி’ இதழான குங்குமம் வார இதழை வாசிக்கவே மாட்டாரா? இதழின் மற்ற அம்சங்களை வாசித்தாலும் ஒ.ப.கதைகளைப் படிக்கும் வழக்கம் அவருக்கு இல்லையா? பரமசிவம் போன்ற, குமுதம் இதழைச் சற்றே கடுமையாக விமர்சனம் செய்யும் கத்துக்குட்டிகளின் கதைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாரா?

இப்பதிவு, மிகச் சிறந்த புனைகதைப் படைப்பாளரும், அசத்தும் ஆன்மிக எழுத்தாளரும்,  இங்கிதம் தெரிந்த இதழாசிரியரும், நம் மரியாதைக்கு உரியவரும் ஆன குமுதம் ஆசிரியர் ‘ப்ரியா கல்யாணராமன்’ அவர்களுக்குச் சமர்ப்பணம்.
===============================================================================






வெள்ளி, 6 மே, 2016

பாரு பாரு...குஜராத்தைப் பாரு! குருட்டுத் தமிழா பாருடா!!

ருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாநிலங்கள் பலவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன; எதிர்ப்பதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கின்றன.

‘கடந்த 9 வருடங்களாக நுழைவுத் தேர்வே இல்லாததால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகவில்லை. 2009இல் மருத்துவக் கவுன்சில் கொண்டுவந்த சட்டத்திருத்தம், தமிழகத்தில் செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று சட்டம் உள்ளதால், அதற்குப் பதிலாக நாடாளுமன்றம் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே தமிழக அரசின் சட்டத்திற்குத் தடை ஏற்படும்’ என்பது தமிழக அரசின் வாதம்[தினகரன், மே 6, 2016].

நாடாளுமன்றம் சட்டம் இயற்றுமேயானால் இந்த அரசு என்ன செய்யும்? அதை எதிர்க்குமா, இல்லை, மறுப்பேதும் சொல்லாமல் நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தச் சம்மதிக்குமா?

குஜராத் அரசின் வாதம் இக்கேள்விகளுக்கெல்லாம் இடம்தரவே இல்லை. ‘எங்கள் மாநிலத்தில் குஜராத்தி மொழியில்தான் அனைத்து மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர். இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டதால் எங்கள் மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, எங்கள் மாநிலத்திற்கு விலக்களிக்க வேண்டும்[தினகரன், மே 6, 2016]’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறது.
“தமிழ் வழியில் படித்தால் மத்திய அரசில் வேலை கிடைக்காது. இந்தி அல்லது ஆங்கில வழியில் பயில வேண்டும்” என்று சொல்லித் திரிபவர்கள் நாம். சோத்துக்கும் சுகபோக வாழ்வுக்கும் தாய்மொழியைப் புறக்கணிப்பவர்கள் நாம். நம்போன்றவர்கள் அல்லர் குஜராத்திகள்.

நடுவணரசின் அனைத்துத் துறைப் பணிகளுக்குமான நுழைவுத் தேர்வுகளைத் தங்கள் தாய்மொழியாம் குஜராத்தியில் நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்; சாதித்தும் இருக்கிறார்கள்.

‘ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ. பி.டெக் படிக்க வேண்டுமெனில் ஜேஇஇ என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது . இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வழக்கமாக இத்தேர்வுக்கான கேள்வித்தாள் ஆங்கிலத்திலும், இந்திலும் மட்டுமே இருக்கும். ஆனால், இம்முறை குஜராத்தி மொழியிலும் தேர்வெழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.’ -இது 2015இல் தினசரிகளில் வெளியான தகவல். இவ்வறிவிப்பை எதிர்த்தும் ஆதரித்துக் கருத்துகள் வெளியாயின. அவற்றை விவரிப்பது இங்கு தேவையற்றது.

“தாய்மொழி வழியில் கல்வி பயின்றால் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான்” என்று குஜராத்திகள் சொல்வதில்லை. தாய்மொழியைப் போற்றும் அவர்கள் பிறமொழி பயில்வதற்கும் தயக்கம் காட்டியதில்லை. அயல்நாடுகளில் பணிபுரிகிறார்கள்; தொழில் செய்கிறார்கள்; வணிகத் துறையில் கோலோச்சுகிறார்கள்.

கிரிக்கெட் விதிகளை வகுப்பது இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் (http://www.lords.org) நிர்வாகம். அந்தத் தளத்தில் கிரிக்கெட் குறித்த சட்டங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. அம்மொழிபெயர்ப்புகளில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்திய துணைக்கண்ட மொழி 'குஜராத்தி'! இந்தி அல்ல; குஜராத்தி! இங்கிலாந்தில் வாழும் குஜராத்திய மக்களின் மொழிப்பற்றின் வெளிப்பாடு இது!

குஜராத்திகள் [மலையாளிகளும்தான்] நம்மைப்போல் மேடை மேடையாக முழங்க மாட்டார்கள். ஆனால், செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அவர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இன்னும் எவ்வளவோ உள்ளன.

இன்னும் எழுதலாம். பயணம் மேற்கொள்ளவிருப்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.
===============================================================================






















புதன், 4 மே, 2016

‘அறிவிலிகள்!’...[எச்சரிக்கை! இப்பதிவு உங்கள் மனதைப் புண்படுத்தக்கூடும்!!]

னைத்து உலகங்களையும் கோடி கோடி கோடானுகோடியோ கோடி உயிர்களையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எனவே, ஆறறிவு ஜீவன்களாகிய நம்மைப் படைத்தவரும் அவரே.
நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மைத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது என்பது என் நம்பிக்கை.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்[அடிமனதில் அழுத்தமாய்ப் பதிவு செய்யுங்கள்]வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது  100% உறுதி. மகான்களோ ஞானிகளோ இதற்கு விதிவிலக்கானவர் எவருமில்லை.

சாவு நம்மைத் தேடி வரும்வரை காத்திருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் அதைத் தேடிப் போக நம்மில்[மனநிலை பாதிக்கப்பட்டோர் தவிர] எவரும் தயாராக இல்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசை காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தக் கடவுளே[அல்லவா?]!

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், மரணம் நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்ளத் தவறுவதே இல்லை.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நம்மவர் நாள்தோறும் போற்றித் துதிபாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான  கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். சாவதற்குள் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல்கள் வேறு.

இந்தக் கடவுளைத்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் ஆள்பவர்; அருள் வடிவானவர் என்று போற்றிப் புகழ்ந்து வழிபடுகிறது உலகம்.

என்னால் இந்தக் கடவுளைப் போற்றிப் புகழ முடியவில்லை; வழிபடவும் இயலவில்லை.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் அறிவுடைமை என்கிறார்கள் சான்றோர்கள். அந்த அறிவுடைமை எனக்கில்லை. எனவே.....

நான் அறிவிலி. நீங்களும் என்போன்றவர்தானே?

======================================================================
இது புதுப்பிக்கப்பட்ட பதிவு



செவ்வாய், 3 மே, 2016

ஐயோ பாவம் ஐயப்பசாமி!!!

ஐயப்பசாமி பிரமச்சாரியாம். அழகிகளைப் பார்த்தால் காமம் வரும் என்று மரங்கள் அடர்ந்த மலை உச்சியில் போய் ஒளிந்துகொண்டாராம்! பிரமச்சரியம் காக்கும் பக்தர்கள் எங்கே போய் ஒளிவார்கள்?!?!
கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோவிலுக்குள்       பெண்களை [10 முதல் 50 வயது] அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளமை யாவரும் அறிந்ததே.

‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி சபரிமலைக் கோயிலில் ஆண் பெண் பாகுபாடு கூடாது’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில்.....

‘ஐயப்பன் ஒரு பிரமச்சாரி. தன் பிரமச்சரியத்திற்குப் பங்கம் நேரக் கூடாது என்று வனப்பகுதியில் மலை உச்சியில் அமர்ந்துள்ளார். கோயிலுக்குப் பெண்கள் வருவதை அவர் விரும்பவில்லை’ என்று கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்’[காலைக்கதிர், 03.05.2016] என்பது செய்தி.

“கடவுளுக்கும் காமம் வருமா? அதைக் கட்டுப்படுத்துவது ஆனானப்பட்ட கடவுளுக்கே சாத்தியம் இல்லையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினால்.....

“ஆமாம். ஐயப்பனென்ன, அவருக்கு அப்பனான சிவபெருமானையே பெண்ணாசை ஆட்டிப்படைத்திருக்கிறது” என்று சொல்லி, மோகினி வடிவெடுத்த ஆண் கடவுளான விஷ்ணுவை அவர் புணர்ந்ததால் ஐயப்பன் அவதரித்த கதை, அவர் குந்தவைத்து இரு கால்களையும் இறுகக் கட்டிவைத்திருக்கும் கதை, தேவர்களின் குருவான வியாழபகவான் இட்ட சாபத்தால் சிவலிங்கம்[சிவ லிங்கம்] தோன்றிய கதை, சிவபெருமான் பேரழகி வடிவம் கொண்டு முழு நிர்வாணமாய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கு அடக்கிய கதை என்றிவற்றையும் இவை  போன்ற பிற ‘உன்னதமான’ கதைகளையும் நீதிபதிகளிடம் எடுத்தியம்புங்கள். ஊடகங்கள் வழியாக ஒட்டுமொத்த மனிதகுலமும் இவற்றை அறிந்து இன்புறட்டும். ஐயப்பன் புகழ் பரவட்டும்.

“ஐயப்பன், பெண்கள் வருவதை விரும்பவில்லை என்கிறீர்கள். அவர் அப்படி எப்போது சொன்னார்? யாரிடம் சொன்னார்?” என்றெல்லாம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டுக் குடைந்தால், “தனிப்பட்ட முறையில் யாரிடமும் சொல்லவில்லை; அசரீரியாகச் சொன்னார். அது அண்டவெளியெங்கும்  எதிரொலித்தது. ஞானிகள் எழுதி வைத்தார்கள்” என்று சொல்லிவிடலாம்.

தேவைப்பட்டால், ‘அண்டசராசரம்...வேதம்... பூதம்...கடவுள்...அசரீரி...’ என்று கண்ட கண்ட கப்சாக் கதைகளை அள்ளிவிடலாம். அதற்கப்புறம் நீதிபதிகள் கேள்வி கேட்கமாட்டார்கள்; ‘இது கடவுள் சமாச்சாரம். நமக்கெதற்கு வம்பு’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிடக்கூடும்.

ஆக, வாலிபப் பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குள் நுழைவது இனியும் சாத்தியப்படாதென்றால், ஐயப்பன் எந்தவித இடையூறுமின்றித் தன் பிரமச்சரிய வாழ்வைத் தொடர்வார்; வருகைபுரிவோருக்கு அருள்பாலிப்பார்.

வாழ்க...வளர்க ஐயப்பசாமி புகழ்!
**********************************************************************************************************








திங்கள், 2 மே, 2016

ராகுகாலத்தில் தாலி கட்டிய நம் அண்டை மாநில முதலமைச்சர்!!!

“மூடநம்பிக்கை மீதான நம்பிக்கை எனக்குச் சிறு வயதிலிருந்தே இல்லை. நல்ல நேரம் பார்த்து என் திருமண நாள் [முகூர்த்தம்] நிச்சயிக்கப்பட்டது என்றாலும், நான் தாலி கட்டியது என்னவோ ராகுகாலத்தில்தான்” [தினகரன், 02.05.2016] என்று சொல்லியிருப்பவர் நம் அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள்.

"சாம்ராஜ் நகருக்குச் சென்றால் பதவியை இழந்துவிடுவேன் என்று கூறினார்கள். கடந்த காலங்களில் ஆறு முறை அங்கே சென்றுள்ளேன். மூன்றாண்டுகளாக முதல்வர் பதவியில் தொடர்கிறேன். எஞ்சியுள்ள இரண்டாண்டுகளும் பதவியில் நீடிப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் சித்தராமையா.

தம் நெஞ்சில் மூடத்தனங்களுக்குக் கிஞ்சித்தும் இடம் தராத கர்நாடக முதல்வர், மக்கள் மனங்களிலிருந்தும் அவற்றை முற்றிலுமாய் அகற்ற்றிடவும் முடிவெடுத்திருக்கிறார். 
அதன் பொருட்டு, ‘மூடநம்பிக்கைக்கு எதிரான வலிமையான  தடைச்சட்டம் கொண்டுவரப்படும்’ என்றும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிபடக் கூறியிருக்கிறார்; மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைத் தடைச் சட்டம் அமலில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைமைச் செயலகம் கட்டுவதற்கு[அது, மதச் சார்பற்ற ஓர் அரசின் உடைமை என்பதை மறந்து] வாஸ்து பார்க்கும் ‘வாஸ்து அடிமை’யான ஆந்திர முதல்வரையும், வாயுப்பிடிப்புக்கும் வயிற்றுவலிக்கும்கூட ‘யாகம்’ நடத்தும் தமி்ழ்நாடு முதல்வர், தெய்வத்தின் தெய்வம் ‘அம்மா’ அவர்களையும் நோக்க, கர்நாடக முதல்வர் மிகப் பல மடங்கு மேம்பட்டவராகத் தெரிகிறார். 

அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். அவர்தம் நல்லுணர்வைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்புத் தருவது கர்நாடக மக்களின் தலையாய கடமையாகும்.
===============================================================================