வெள்ளி, 1 ஜூலை, 2016

இந்தக் கதையில்... வயாகரா 30%, சிரிப்பு 30%, சஸ்பென்ஸ் 40% !!!

“எழுபது வயதுக் கிழவன் நீ. எழுதுவதற்கு நல்ல விசயமே இல்லையா?” என்று என்னை ஏசாதீர். இது என் வாலிப வயதில்[21] எழுதிய கதை!


றத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” -நான்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் கழன்றுகொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாகவமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” -விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” -கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யா?"ன்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

"இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

[முன்னணி வார இதழான ‘ராணி’யில் பற்பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது]

****************************************************************************************************************************************************
முதல் முறை வாசித்தவர்களுக்கு...“நன்றி”

ஏற்கனவே ஒரு முறை வாசித்தவர்களுக்கு...“மன்னியுங்கள். சரக்கு தீர்ந்துடிச்சி”



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக