அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மரணத்திற்குப் பின்.....மதங்கள் சொல்வதென்ன?

செத்துத் தொலைத்த பிறகு,  ஆவி என்றோ ஆன்மா, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு  வடிவில், கடவுளைப் போலவே மரணமில்லாப் பெருவாழ்வு வாழ நம் எல்லோருக்கும் ஆசைதான். 
அந்த ஆசைதான் சொர்க்கம், மறுபிறவி, இறைவனின் திருவடி நீழல் என்று எதை எதையோ நம்மவர்களைக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது.

ஆவி முதலானவை இருப்பது உண்மை என்றாலும், அவற்றிற்கு ஐம்புல நுகர்ச்சி உண்டா, பரு உடலுடன் வாழ்ந்தபோது பெற்ற அனுபவங்களை அசை போடும் திறன் உண்டா, உணர்ச்சியுண்டா என்பன பற்றியெல்லாம் நம்மவர்கள் சிந்திப்பதில்லை. ஆயினும், நம்மில் பெரும்பாலோர் அவற்றை நம்புகிறார்கள். காரணங்கள்.....

இறந்த பிறகு என்ன ஆவோம் என்று யோசிப்பதால் தோன்றும் அச்சம்!... அனுபவித்த சுகங்களை மீண்டும் பெறப்போவதில்லை என்பதால் உண்டாகும் ஏக்கம்!!

செத்த பிறகு, சடலத்திலிருந்து ஏதோ ஒன்று வெளியேறுகிறது; அது யுக யுகாந்தரங்களுக்கும் அழிவதே இல்லை. ஆவியாய்ப் புகையாய் விண்ணில் அலைந்தாலும், கணக்கிலடங்காத பிறவிகள் எடுத்தாலும் அது அழிவதே இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டால் கடவுள்கூட மனிதனின் கண்களுக்கு வெறும் துரும்பாகத்தான் காட்சியளிப்பார்!

நிரூபிக்கப்படாததால்தான்.....

தத்தம் கற்பனைத் திறனுக்கேற்பப் பலரும் பல்வேறு கதைகளைக் கட்டிவிட்டிருக்கிறார்கள்.

கூகிள் தேடலில் முங்கி எழுந்தால்  அம்மாதிரி கதைகள் கொட்டிக் கிடப்பதைக் காண முடிகிறது.

அவற்றில் கீழ்க்காண்பதும் ஒன்று.

1975ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில்தான்இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர்இறக்கும் நிலையில்,  அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்.பிறகு ஒரு சத்தம்அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால்தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர்முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறாந்ர். ஒரு ஒளிசக்திஅவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில்அவருக்கு அமைதிசந்தோஷம்அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.

பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடிமிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். [ http://www.livingextra.com/2011/01/2.html#ixzz4IVX929A0]

செத்த பிணம் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பே இல்லை; இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர், உயிர் பிரியாத நிலையில், ஏதோவொரு கனவு நிலையில் கண்டறிந்ததை மேற்கண்டவாறு உளறியிருக்கக்கூடும்.  

மருத்துவர்கள் செத்துப்போனதாகச் சொல்லி, தகன மேடையில் கிடத்தப்பட்டவர்கள் கண் விழித்துப் பார்த்துச் சுற்றியிருப்பவர்களைத் திடுக்கிட வைத்திருக்கிறார்களே என்றால், அங்கே மருத்துவர் தவறிழைத்திருக்கிறார் என்பதே உண்மை.

அயல்நாட்டு ‘ரொமாண்ட் மூடி’களையும் தாடிகளையும் தூக்கிச் சாப்பிடுகிற ஆட்களெல்லாம் நம் ஊரில் இருக்கிறார்கள். நோயில் கிடந்து பிழைத்தெழுந்த ஒருவர் சொன்னார்:  “சொந்தபந்தங்களெல்லாம் என்னைச் சூழ்ந்து ஒப்பாரி வைத்து அழுவதைப் பார்த்துக்கொண்டே யமகிங்கரருடன் யமலோகம் போனேன். ‘இவனை ஏன் கொண்டுவந்தீர்கள்? இவன் ஆயுள் கெட்டி’ என்று சித்தரபுத்திரன் கடிந்துகொண்டார். எனக்குக் களி உருண்டையும் அகத்திக்கீரையும் சாப்பிடக் கொடுத்துத் ‘தொப்’ என்று அங்கிருந்து வீசிவிட்டார்கள்.”

இப்படியான கதைகளை இங்கே பட்டியலிடுவது என் நோக்கமன்று; மரணத்திற்குப் பின்னரான நம் நிலைமை குறித்து மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை விவரிக்கவே இப்பதிவு.

இந்துமதம்:
உடல் அழியும்போது அதிலிருந்து வெளியேறுகிற ஒன்றுக்கு ‘ஆன்மா’[ஆத்மா] என்று பெயர். இவ்வுலகில் மனித உருவெடுக்கிற அது, செய்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்பப் பல பிறவிகள் எடுக்கும். இறுதியில் பிரமத்துடன்[கடவுள்] இரண்டறக் கலக்கும்.

கிறித்தவ மதம்:
மனிதன் ஒரு முறை மட்டுமே இவ்வுலகில் பிறந்து வாழ்கின்றான்; பிறக்கும்போது ஆன்மாவுடன் பிறக்கிறான்.  இறந்தவுடன் ஆன்மா மேலே செல்கிறது. தீர்ப்புக் காலத்தில் அது கடவுள் முன் நிறுத்தப்படுகிறது; கடவுளின் தீர்ப்புப்படி மோட்சத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுகிறது. உலகில் தூய வாழ்க்கை வாழ்ந்தவனின் ஆன்மா மோட்சம் பெற்றுப் பின்னர் கடவுளின் அருகில் அமரும் வாய்ப்பைப் பெறுகிறது.

இஸ்லாம் மார்க்கம்:
செத்த பிறகு எல்லோரும்[ஆவியா ஆன்மாவா தெரியவில்லை] அல்லாவின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். அவரவர் செய்த பாவபுண்ணியங்கள் பட்டியலிடப்பட்டு மோட்சத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவார்கள். நரகம் சென்றவர்கள் தீயில் தள்ளப்பட்டு வதைக்கப்படுவார்கள்.

புத்த மதம்:
[கடவுளின் ‘இருப்பை’க் கண்டுகொள்ளாத புத்த மதம் ‘ஆன்மா’வை நம்புகிறது]. மனிதன் தனக்கு வாய்த்த ஆறாவது அறிவால் இவ்வுலகைப் புரிந்துகொள்கிறான். அதன் மூலம் தன் ஆன்மாவை மறுவாழ்வுக்கு[மறுபிறப்பு] இட்டுச்செல்கிறான்.

சமண மதம்:
மரணத்தின் பின்னர் ஆன்மா வெளியேறுகிறது. ஆற்றிய வினைகளுக்கேற்ப மறுபிறவியில் புதிய உருவத்தைப் பெறுகிறது.

உலகின் மிகப் பெரிய மேற்கண்ட மதங்கள் எல்லாம், அழிவுறும்   மனித உடம்பிலிருந்து ஆன்மா வெளியேறுவதாகச் சொல்லியிருக்கின்றன.

நம்புவதா, வேண்டாமா?

என்னுடைய பழைய சில பதிவுகளின் முகவரிகளைக் கீழே தந்திருக்கிறேன். விருப்பம் / நேரம் இருந்தால்  அவற்றை ஒருமுறை வாசியுங்கள். கேள்விக்கான பதில் உங்களுக்குக் கிடைத்திடக்கூடும்![ஒன்றில் இடம்பெற்ற கருத்து மற்றொன்றிலும் இடம்பெற்றால் பொறுத்தருளுங்கள்]
===============================================================================

http://kadavulinkadavul.blogspot.com/2011/10/31.html

http://kadavulinkadavul.blogspot.com/2011/11/33.html

http://kadavulinkadavul.blogspot.com/2012/07/53.html

http://kadavulinkadavul.blogspot.com/2015/03/blog-post_49.html

http://kadavulinkadavul.blogspot.com/2013/03/blog-post_14.html
===============================================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக