புதன், 7 செப்டம்பர், 2016

ஓர் ‘அரைகுறை’ப் பகுத்தறிவாளனின் மனசாட்சி!

நம்புகிறவர்களுக்கு இது ஓர் அனுபவப் பகிர்வு. நம்பாதவர்களுக்கு..... வெறும் கற்பனைக் கதை! இதை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்!
து நடந்து மிகப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, சென்னைக் கல்லூரி ஒன்றின் மாணவன் நான்.

விடுமுறையைச் சொந்தக் கிராமத்தில் கழித்துவிட்டு, அன்று சென்னை திரும்ப இருந்தேன்.

“பரமு.....” அப்பா அழைத்தார்.

“சொல்லுங்கப்பா.”

“மெட்றாஸ் போனதும் கடுதாசு போடு. மறக்காம திருப்பதி போயி ஏழுமலையானைத் தரிசனம் பண்ணிட்டு இதை உண்டியலில் போட்டுடு” என்று என்னிடம் இரண்டாயிரம் ரூபாயையும் நீட்டினார்.

அப்பா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மூன்று பொட்டைக் கழுதைகளுக்கு [அப்பா அடிக்கடி கையாண்ட வசவு வார்த்தைகள் இவை] அப்புறம், அறிந்த அறியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துப் பெற்ற ‘தவப் புதல்வன்’ நான் என்பது காரணம்.

அவர் மனம் நோகும்படியாக நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லைதான். இருப்பினும், பள்ளிப் பருவத்திலேயே ஒரு தமிழாசிரியரால் பக்குவப்படுத்தப்பட்ட என் பகுத்தறிவு மூளை இப்படிக் கேட்டது..........

“எதுக்கு உண்டியலில் போடச் சொல்றீங்க? சாமியா செலவு பண்ணுது?”

அப்பாவின் முகம் சுண்டிச் சிவந்துபோனது; சொன்னார்: “லாபம் கிடைச்சா போடுறேன்னு சாமிகிட்ட வேண்டிகிட்டேன். சாமி கருணை காட்டிச்சி. சொன்ன வாக்குத் தவறாம நடந்துக்க நினைக்கிறேன். உனக்கு இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு. நானே போய்ப் போட்டுட்டு வர்றேன்” என்று கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொள்ளக் கை நீட்டினார்.

நான் தொடர்ந்து வாதம் புரிவதற்கான ஆயத்த நிலையில் இருந்தாலும் பணத்தைத் திருப்பித் தராமல், சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

பரம்பரை விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா விவசாயத்தை ஆள் வைத்துக் கவனித்துக்கொண்டே பக்கத்து டவுனில் தானிய மண்டி வைத்து வியாபாரமும் செய்து வந்தார்.

அவருக்குத் தெய்வ பக்தி அதிகம். பக்திக்கு முன்னால் ஐந்தாறு ‘மிக’ போடுவது பொருத்தமாக இருக்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ‘லாப நட்ட’க் கணக்குப் பார்ப்பார். கிடைக்கும் லாபத்தில் 5% ஐ ஏழுமலையான் கோயில் உண்டியலில் போட்டுவிடுவார். நான் சென்னையில் இருந்ததால், முதல் தடவையாக அந்தக் கடமையை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

நான் சென்னை போய்ச் சேர்ந்ததும் தந்தை சொல்படி கடிதம் எழுதினேன்; திருப்பதியும் போனேன்; கோயில் குளமெல்லாம் ‘சுற்றிப்பார்த்துவிட்டு’, லட்டு[லட்டும் எள்ளுருண்டையும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை] வாங்கி ருசித்துச் சாப்பிட்டேன். உண்டியலில் பணம் மட்டும் போடவில்லை! என் பகுத்தறிவு போட விடவில்லை.

பணத்தை என் வங்கிக் கணக்கில் பத்திரப்படுத்தினேன்!

அதற்கப்புறமும் இந்த என் கைங்கரியம் தொடர்ந்தது; தொகையும் பெருகிக்கொண்டே போனது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். வியாபாரத்தில் அப்பாவுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இந்தச் சேமிப்பு உதவும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தத் தப்பான காரியத்தில் ஈடுபட்டேன்.

கடவுள் நம்பிக்கை இல்லயென்றாலும், மனதில் அவர் இருந்த இடத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் பெற்ற தகப்பனை அமரவைத்து வழிபட்டவன் நான். அவருக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தியதில்லை.

எதிர்பாராத வகையில், நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி மனம் ஒடிந்து போனார் என் தந்தை.

பூர்வீக நிலத்தை விற்றேனும் கடனை அடைக்க வேண்டிய நெருக்கடியான நிலையில், பணம் சேமித்த வகையைச் சொல்லி என்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னேன்.

நான் செய்தது தப்பா சரியா என்பது பற்றி வாயே திறக்காமல், “சந்தோஷம்ப்பா” என்று பணத்தைப் பெற்றுக்கொண்டவர் சற்றே தாமதித்து, “நான் அப்பப்பக் குடுத்த பணத்தை நீ ஒழுங்கா உண்டியலில் சேர்த்திருந்தா எழுமலையான் நஷ்டம் வராம காப்பாத்தியிருப்பான்” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.

அப்புறம் ஒருநாள், அவரே திருப்பதி சென்று நான் கொடுத்த ஒட்டுமொத்தத் தொகையையும் கோயில் உண்டியலில் போட்டுவிட்டுத் திரும்பினார். 

அதற்கப்புறமும், ஒரு மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்யத் தவறியதில்லை என்றாலும், ஆர அமற மனம் திறந்து என்னுடன் பேசியதே இல்லை.

அவருடைய அறுபதாவது வயதில் இது நடந்தது. அறுபத்தைந்தில் காலமானார்.

அவர் சொன்னது போல, உண்டியலில் பணம் போட்டிருந்தால் ஏழுமலையான்  காப்பாற்றியிருப்பார் என்பதில் இன்றளவும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், பாசமிகு தந்தையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக நான் நடந்துகொள்ள இல்லையே என்னும் வருத்தம் என்னுள் உறைந்து கிடக்கிறது.
*******************************************************************************











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக