அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தீக்குண்ட[பூக்குழி] நெருப்பு சுடாமலிருப்பது பக்தியினாலா?!

கோயில் திருவிழாக்களில், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்றவை இன்றளவும் பரவலாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள். இவற்றைச் சாதிக்கக் கடவுள் பக்தியும் விரதமும் இன்றியமையாத் தேவைகள் என்று நம்புவது மூடத்தனத்தின் உச்சமாகும்.

தண்ணீரில் குளித்து, நீர் சொட்டும் ஈரமான ஆடையுடன் நெருப்பின் மீது நடக்கும்போது காலில் உள்ள ஈரமானது நெருப்பில் பட்டு ஆவியாவதால், காலுக்கும் நெருப்புக்கும் இடையே ‘ஆவித்திரை’ உருவாகிறது. இந்த ஆவித்திரையைக் கடந்துதான் வெப்பம் தீ மிதிப்பவரின் காலைச் சுட முடியும். இதற்குச் சிறிது அவகாசம் தேவை. அவசர அவசரமாக உரிய தூரத்தை நடந்து முடித்துவிடுவதால் பாதங்களில் தீக் காயங்கள் ஏற்படுவதில்லை. சூடு தாக்காமல் இருப்பதற்கு, நெருப்பின்மீது படிந்திருக்கும் சாம்பலும் ஒரு காரணம்.

மற்றபடி, விரதம் இருந்து பெறும் கடவுள் சக்தியால் இது சாத்தியமாகிறது என்பது வெறும் குருட்டு நம்பிக்கைதான்.

பூக்குழி மிதிப்போர், ஐந்தே ஐந்து நிமிடம் நெருப்பின் மீது அசையாமல் நிற்பார்களா? குழியில் உருண்டு எழுந்து வருவார்களா?

தீச்சட்டி தூக்குவதும் இதைப் போன்றதுதான்.

சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு, நெருப்பை எரியச் செய்து தூக்கினால், பொறுக்க முடியாத அளவுக்குச் சட்டி சுடாது. மண் பானைக்குள் நெருப்பிட்டுத் ‘தீச்சட்டு’ தூக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன செம்பு அல்லது, எவர்சில்வர் குடத்தில் நெருப்பிட்டுக் கோயிலை வலம் வருவார்களா?

மேற்கண்டவை போலவே, கூரிய அரிவாள் மீது ஏறி நிற்பதற்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வித்தையை எவர் வேண்டுமானாலும் செய்து காட்டலாம்.

அரிவாள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் வெட்டும் முனை நீளமாக இருப்பதும், உடலின் எடை வெட்டும் முனையில் சமமாகப் பரவியிருப்பதும் முக்கியம். அரிவாள் மீது ஏறும்போது, கவனமாக இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு, முழு எடையையும் ஏற்றி நிற்றல் வேண்டும்.

அரிவாளைச் சாய்த்துப் பிடித்து ஏறுவதோ, குதித்து ஏறுவதோ கூடாது. ஒரு வெட்டும் கருவி எந்தவொரு பொருளையும் வெட்டுவதற்கு , வெட்டும் கோணம், வெட்டும் வேகம், அழுத்தம் ஆகியவை காரணமாக அமைகின்றன.

அரிவாள் மீது ஏறி நிற்கும் பக்தர்கள், நீண்ட பெரிய ஊசிகளை நட்டு வைத்து அவற்றின் மீது ஏறி நின்று, தம் பக்தியின் மேன்மையைப் பறைசாற்றுவார்களா?

அலகு குத்துவதிலும் சில நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும். பக்தி விரதம் என்று எதுவும் தேவையில்லை.
‘கூர்மை’யான கொக்கியைத் தோலில் குத்துவதால் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத்தான் வலி இருக்கும். சில குறிப்பிட்ட காரணங்களால் ரத்தம் கசிவதில்லை. கொக்கி தாங்கக்கூடிய அளவுக்கு எடை இருத்தல் அவசியம். எடைக்கு ஏற்பவே கொக்கிகளின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு கொக்கி ஐந்து கிலோகிராம் எடையைத் தாங்கும் என்றால், 100 கிலோகிராம் எடையைச் சுமப்பதற்கு அல்லது, இழுப்பதற்கு 20 கொக்கிகளை மாட்டிக்கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க விரதமோ பக்தியோ தேவையில்லை.

===============================================================================

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனபாலன்.

      தமிழ்மணம் முகப்புப் பட்டியலைக் கவனித்தீர்களா? இன்று பிற்பகல் முதல், ‘தமிழறிவோம்’ என்னும் பதிவை முதலாவதாகக் கொண்ட பட்டியல் நகராமல் நின்றநிலையிலேயே உள்ளது.

      தமிழ்மணத்தின் தானியங்கி எந்திரம் பழுதடைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

      நிர்வாகிகளும் இதைச் சரி செய்ய முயற்சிப்பதில்லை போல் தெரிகிறது.

      தமிழ்மணத்தை விட்டால் வேறு நல்ல திரட்டியும் இல்லை.

      என்ன செய்வது?

      நின்றநிலையில் இருக்கும் பட்டியல் நகர ஆரம்பித்தால், பட்டியலில் இடம்பெறக் காத்திருக்கும் புதிய பதிவுகள் முகப்புப் பக்கத்தைக் கடந்து அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்றுவிடுகின்றன. இதனால் அவற்றின் பக்கப் பார்வை எண்ணிக்கையும் குறைகிறது.

      இதையெல்லாம் நிர்வாகிகள் எப்போது கவனிப்பார்கள்?

      கருத்துரை வழங்கியமைக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் கூட இதையெல்லாம் செய்து காட்டுகிறார்கள் ,இருந்தாலும் மக்கள் திருந்துவதாக இல்லை !

    தமிழ்மணம் நிர்வாகிகள் திரட்டியை கைவிடுவதை விட ,விருப்பம் உள்ளவர்களிடம் இதை நடத்தச் சொல்லலாம்!ஏன் ,மௌனமாகவே இருக்கிறார்கள் என்று புரியவில்லை :)

    பதிலளிநீக்கு
  3. திருந்துவதற்கு இன்னும் நீண்டநெடுங்காலம் ஆகும்போலிருக்கிறது.

    தமிழ்மணம் எந்தவொரு புகாரையும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

    பொறுத்திருந்து பார்ப்போம் பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  4. //பூக்குழி மிதிப்போர், ஐந்தே ஐந்து நிமிடம் நெருப்பின் மீது அசையாமல் நிற்பார்களா? குழியில் உருண்டு எழுந்து வருவார்களா ?//

    நண்பரே பிறகு கொலைப்பழியில் கைதாவது யார் ?

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.
    டாஸ்மாக் அருந்தியவர் விழுந்து அடிபட்டாலும் தள்ளாடி எழுந்து வலியேதெரியாமல் நிற்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக் போதை பக்திப் போதையைவிட வலிமையானது?!

      நன்றி நண்பரே.

      நீக்கு