ஞாயிறு, 11 ஜூன், 2017

வெறிநாய் மனிதர்கள்!!!.....தண்டனைதான் என்ன???

ஜமீலா நிர்வாணப்படுத்தப்பட்டு, அவளுடைய மார்புக் காம்புகளில் வயர்கள் மூலம் மின்சாரம் செலுத்தப்பட்டது என்றும் அவளுடைய பெண்ணுறுப்பு அந்த அரக்கர்களுக்கு ஆஷ்ட்ரேயாய்ப் பயன்பட்டது என்றும்.....

#லிபியா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி ஜமீலா. அறுபதுகளில், லிபியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்த ஃப்ரெஞ்ச் (அல்லது இத்தாலிய) அராஜகவாதிகளை எதிர்த்துப் போராடிய புரட்சிப் பெண் அவர்.
ஜமீலாவின் குடும்பமே சிறைபிடிக்கப்பட்டுக் கொடுமை செய்யப்பட்டதாம். ஜமீலாவின் தந்தையுடைய வயிறு பலூன் மாதிரி உப்புகிற வரைக்கும் தண்ணீரால் நிரப்பிப் பிறகு அந்த வயிற்றின் மேல் குதிப்பார்களாம். உடம்பில் எங்கெங்கே துவாரங்கள் இருக்கின்றனவோ, அத்தனை துவாரங்களிலும் தண்ணீர் வெளியே பீய்ச்சியடிக்குமாம்.
ஆண் போராளிகளுக்கு இப்படியான சித்ரவதை என்றால் பெண் போராளிகளின் வேதனைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெண் போராளிகளைக் கொடுமைப்படுத்துவது அதிகாரத்திலிருக்கிற அராஜகவாதிகளுக்கு அல்வா தின்கிற மாதிரி.
ஜமீலா நிர்வாணப்படுத்தப்பட்டு, அவளுடைய மார்புக் காம்புகளில் வயர்கள் மூலம் மின்சாரம் செலுத்தப்பட்டது என்றும் அவளுடைய பெண்ணுறுப்பு அந்த அரக்கர்களுக்கு ஆஷ்ட்ரேயாய்ப் பயன்பட்டது என்றும் வாசித்தபோது, அந்தக் கொடியவர்களை அப்படியே குதறிப் போட்டாலென்ன என்கிற வெறி ஏறியது, அந்த வயசிலேயே.
ஜமீலாவின் மீது பிரயோகிக்கப்பட்டது உச்சக்கட்டச் சித்ரவதை. அது ஒரு கூட்டுக் கற்பழிப்பு.
அயோக்கியர்களின் கைகளில் அபலைப் பெண்கள் சிக்கிக் கொண்டால், உடனே காமம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். முதற்கட்ட நடவடிக்கையே கற்பழிப்புதான்.
போர்க்காலங்களில், கற்பழிப்பு என்பது அன்றாடம் நடக்கிற ஒரு சடங்கு. 1971 பாகிஸ்தான் – பங்களாதேஷ் யுத்தத்தின் முடிவில் பார்த்தால், ஆயிரக்கணக்கான வங்காளதேசப் பெண்கள் கர்ப்பமாம். பாகிஸ்தான் படை வீரர்களின் கைங்கர்யம்.
அது சரி, வீரர்களென்று அவர்களைக் குறிப்பிட முடியுமோ? இப்படித்தான் நாம் அடிக்கடி தவறு செய்கிறோம். கிரிக்கெட் விளையாடுகிறவனைக்கூட வீரன் என்கிறோம். கற்பழிப்பதற்கு எப்படி வீரம் தேவையில்லையோ அப்படித்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கும் வீரம் தேவையில்லைதானே!
இந்தியப் படையினர் கூடக் காஷ்மீரில் இந்த இழி செயலில் ஈடுபட்டிருப்பதாய்த் தகவல்கள் வருகின்றன.
பங்களாதேஷ் யுத்தத்தில் நடந்த கற்பழிப்புகள் மாதிரி அல்லது அதைவிடக் கொடூரமான கற்பழிப்புகள் சமீபத்தில் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் சிங்களப் படைக் காடையர்களால் நிகழ்த்தப்பட்டிருப்பதைச் சனல் 4 தொலைக்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
துப்பாக்கி, ஏ.கே-47, பயோனட், பீரங்கி மாதிரி, கற்பழிப்பு கூட ஒரு போர்க்கால ஆயுதம்தான். பெண்ணினத்துக்கெதிராய்ப் பிரயோகிக்கப்படுகிற படுபாதகமான ஆயுதம்!
கற்பழிப்பு என்கிற வார்த்தைக்கு இலங்கைத் தமிழில் வலுப் பொருத்தமான சொற்றொடர் ஒன்று வைத்திருக்கிறார்கள்.
பாலியல் வல்லுறவு.
வார்த்தை எதுவானாலும் வேதனை பெண்களுக்குத்தான்.
நம்ம ஊர்ப் போலீஸ் ஸ்டேஷன்களில் கற்பழிப்பு அல்லது பாலியல் வல்லுறவு என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம். ஓய்வுநேர வீர விளையாட்டு.
இந்த இடத்தில், ‘வீர’ என்பது உயர்வு நவிற்சி அணி.
1992 ஆம் வருடம், வாச்சாத்தி கிராமத்துப் பழங்குடியினர் மேலே, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், வனத்துறையினர் அனைவரும் இணைந்து பிரயோகித்த வன்முறையில், அந்தக் கொடுங்கோலர்களால் கற்பழிக்கப்பட்ட பதினெட்டுப் பெண்களில் பதினைந்து பேர் மைனர் சிறுமிகள் என்கிற பயங்கரத்தை பகிரங்கப்படுத்தியிருக்கிறது பாரதி கிருஷ்ண குமாரின் ஆவணப்படமான ‘உண்மையின் போர்க்குரல்’.
போலீஸோடு இணைந்து கற்பழிப்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட வனத்துறையை, வனத்துறை என்று நாகரிகமாய்க் குறிப்பிடாமல் காட்டுத் துறை என்று கொச்சையாய்ச் சொன்னால் சரியாயிருக்காது?
கற்பழிக்கிற போலீஸ்காரர்களும் லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரர்களும் திருந்திவிட்டாலே நாடு ஓரளவு சுபிட்சமாகிவிடும்.
இணங்க மறுக்கிற, முரண்டு பிடிக்கிற, தற்காப்புக்காக நகங்களால் பிறாண்டுகிற, விட்டுவிடும்படி மன்றாடுகிற, கண்ணீரோடு கதறுகிற, வசவுகளையும் சாபங்களையும் வாரியிறைக்கிற ஒரு பாவப்பட்ட பெண்ணின்மேல் காமம் கொண்டு, அவளை முழுமையாய் ஆக்கிரமித்து, அமுக்கிப் பிடித்து இந்தக் கயவர்கள் எப்படித்தான் வல்லுறவு கொள்வார்களோ!
தங்களுடைய மனைவிமாருக்கோ, சகோதரிகளுக்கோ, பெண் மக்களுக்கோ இது போன்ற கொடுமை நேர்ந்தால் எப்படியிருக்கும் என்று அந்த எக்கச்சக்கமான தருணங்களில் இவர்கள் நினைத்துப் பார்க்கவே மாட்டார்களா?
திருட்டு, கொள்ளையை விடவும் கொடுமையான, சொல்லப்போனால் கொலையை விடவும் கொடூரமான வல்லுறவு வக்கிரத்தில் ஈடுபடுகிற பாவிகளுக்கு அதிகபட்சத் தண்டனையாய் என்ன வழங்கலாம்? கிராமங்களிலும் தமிழ்த் திரைப்படங்களிலும் அதிகபட்சத் தண்டனையாக ஓர் ஆனந்தமான தண்டனையை வழங்குவார்கள். கற்பழிக்கப்பட்ட பெண்ணை, கற்பழித்த கயவனுக்கே கட்டி வைத்துச் சோலியை முடித்து நீதியை நிலைநாட்டி விடுவார்கள்.
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குத் தாலி. காமுகனுக்கு ஜாலி.
இதுவா தண்டனை? காமுகனுக்கு கத்னா செய்து விடுவது அல்லவா சரியான தண்டனையாயிருக்கும்?
இந்தக் கத்னா என்பது முஸ்லிம்கள் செய்கிற, ஆண்குறியின் மேல் தோலைச் சீவி விடுகிற, ஸர்க்கம்ஸிஷன் என்கிற இஸ்லாமிய கத்னா அல்ல.
மேற்படி (அல்லது கீழ்ப்படி) உறுப்பையே சீவி விடுவதுதான் நான் சொல்கிற ‘கத்னா’.
சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் கடுமையான ஒரு தண்டனை முறை அமலில் இருக்கிறது. திருட்டுக் குற்றத்துக்கு, திருடிய கையை மணிக்கட்டோடு துண்டித்து விடுவது. அந்தத் திருடன் இனி திருடவே முடியாது. கையிருந்தால்தானே திருடுவான்!
அதே மாதிரி, கற்பழிப்புக் கயவன் வேரோடு கத்னா செய்யப்பட்டு விட்டால், பிறகு கற்பழிப்பில் ஈடுபடவே முடியாது இல்லையா!
ஐட்டம் இருந்தால்தானே ஆட்டம் போட முடியும்?
இந்த சப்ஜக்ட்டை வைத்து விவகாரமான ஒரு சிறுகதை கூட வந்திருக்கிறது. எழுதியது யாராயிருக்கும்? இது ஒன்றும் கஷ்டமான கேள்வியில்லை. ஈஸியாய் ஊகித்து விடலாம்.
கோடிகளில் புரள்கிற சவூதி அரேபிய ஷேக்குகளெல்லாம் கற்பழிக்கிற பாவச் செயலில் ஈடுபடவே மாட்டார்கள். ரெண்டோ மூணோ நாலோ மனைவிகளைக் கைவசம் எப்போதும் வைத்திருப்பார்கள். அதையும் மீறி உடம்பு உணர்ச்சிவசப்படுகிறபோது, விமானமேறி பம்பாய்க்கு வந்து, அஞ்சு நட்சத்திர ஹோட்டேலொன்றில் அறையெடுத்துத் தங்கி, சில லட்சங்கள் செலவில் ஆறாவதாய் ஒரு நட்சத்திரத்தை அமர்த்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஊர் போய்ச் சேருவார்கள்.
அதன் பிறகு, இருக்கவே இருக்கிறது ஹஜ் என்கிற வசதி. வருஷா வருஷம் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிற வசதி கூட இருக்கிறது, லோக்கல் சவூதிகளுக்கு. ஹஜ் ஸீஸனில் புனித மக்காவுக்குப் போய், பாவ மன்னிப்புக்காக அல்லாவிடம் அப்ளிகேஷன் போட்டுவிட்டால் பாவங்களெல்லாம் பைசல் செய்யப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போலப் புனிதம் பெற்று விடுவார்கள். பிறகு, அக்கம் பக்கம் ஒரு நோட்டம் விட்டு விட்டுத் திரும்பவும் பம்பாய்க்குப் பிளேன் ஏறி விடலாம்.
இத்தனை வசதிகள் இல்லாத, சாமான்ய சவூதிகள் சிலர் கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபடுகிறபோது, நாம் முன்மொழிந்த கத்னா தண்டனை அவர்களுக்கு வழங்கப்படுவதாய்த் தெரியவில்லை. சவூதி மன்னரின் பார்வைக்கு இந்த நாவலை அனுப்பி வைக்கலாமென்றால், அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. தமிழ் வாசகங்களை இடமிருந்து வலமாய் வாசிக்க வேண்டுமென்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
நம்ம நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாம்#
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

====================================================
இன்று[11.06.2017], ‘தி இந்து’[’பெண் இன்று’ - இணைப்பு]வில் ‘நாட்டுல என்ன நடக்குது?’ என்னும் தலைப்பின் கீழ், கீழ்க்காணும் செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவை.....

* தனா: டெல்லியில் நடந்த சம்பவம் மனதை உலுக்கிடிச்சி. ஆட்டோவில் சென்ற 19 வயது இளம் பெண்னை அந்த ஆட்டோவின் ஓட்டுநரும் உடன் பயணித்த இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்காங்க. இவங்களையெல்லாம் என்ன செய்யுறது?

* விஷாலி: இங்கே தமிழ்நாட்டில் நடந்த கொடுமையை என்னன்னு சொல்லுறது? சேலம் ஓமலூரைச் சேர்ந்த 15 வயதுப் பெண்ணைப் பேருந்தில் வைத்து, கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார்கள்

கட்டுரை எழுதிய பிரபல கதாசிரியர் ’ஏ.ஏ.ஹெச்.கே.கோரி’ அவர்களுக்கு என் நன்றி.



4 கருத்துகள்:

  1. இந்திய அமைதிப் படை செய்த அத்து மீறல்களை மறந்து விட்டீர்களே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாளர் ஏ.ஏ.ஹெச்.கே.கோரி அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே இணைத்திருக்கிறேன். என் கருத்து எதையும் சேர்க்கவில்லை.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கொடியவர்கள் வேரறுக்கப்படவேண்டுமே. எப்போது சாத்தியமாகும்?

      நன்றி தனபாலன்.

      நீக்கு