ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஒரு வேலைக்காரியின் விலை? [அதிகபட்சம்]

ம்சவேணி எங்கள் வீட்டு வேலைக்காரி; விதவை; அம்சமான தேகக்கட்டுக்குச் சொந்தக்காரி. 

“என் குடிகாரப் புருஷன் பத்தாயிரம் கடன் வெச்சிட்டு மண்டையைப் போட்டுட்டான். வீட்டு வேலை செஞ்சி சம்பாதிக்கிறது வயித்துப்பாட்டுக்கே கட்டுபடியாகல. எப்படித்தான் கடனை அடைக்கப்போறனோ?” என்று என் இல்லத்தரசியிடம் அவள் புலம்புவது வழக்கம். அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்தால் படிந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். 

கார்காலத்தின் ஒரு இதமான காலைப்பொழுது.

வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் அம்சவேணி.

“அம்சா.” -அழைத்தேன்.

“என்னங்கய்யா?” -நெருங்கி வந்தாள்.

“பத்தாயிரம் இருக்கு. வெச்சிக்கோ” -பணக்கட்டை நீட்டினேன்.

“எதுக்குங்க?”

“உன் கடனை அடைக்கத்தான். திருப்பித் தரவேணாம்.”  -என் ஒரு கை ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டுச் சரிந்து வழவழப்பான இடையைத் தடவியது.

என்னை ஏறிட்டுப் பார்த்த அம்சவேணி, “இது ஒரு தடவைக்கா, ஒரு நைட்டுக்கா, ஒரு மாசத்துக்கா?” என்று கேட்டாள்.

அவளின் இந்தக் கேள்வி என்னை நிலை தடுமாற வைத்தது. 

“உடம்பை வித்துப் பிழைக்கறவகூட, ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு வாங்குறா. என் புருஷன் கை தவிர இன்னொரு கை என்னைத் தொட்டதில்லை. கட்டுக் குலையாத கவர்ச்சியான உடம்பும் எனக்கிருக்கு. பத்தாயிரம் தர்றேன்னு சொல்லாம, பத்து லட்சம் தர்றேன். எனக்கு ‘வைப்பாட்டியா இரு’ன்னு  சொல்லியிருந்தா ரொம்பப் பெருமைப் பட்டிருப்பேன். ஒரு வேலைக்காரிதானேன்னு ரொம்பச் சீப்பா நினைச்சிட்டீங்க." -வாய்விட்டுச் சிரித்தாள் அம்சவேணி. அது கட்டுப்படுத்தப்பட்ட கடுங்கோபத்தின் வெளிப்பாடு.

“கிராமத்துக்குப் போன அம்மா வந்ததும், ‘நீ இல்லாத நேரத்தில் அம்சவேணி பத்தாயிரம் பணம் கேட்டா. அவள் நல்ல நடத்தையுள்ளவளாத் தெரியல. இனி வேலைக்கு வராதேன்னு விரட்டிட்டேன்னு சொல்லுங்க. தனக்கு வாய்ச்சவர் உத்தம புருஷன்னு அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால எனக்கொன்னும் பாதிப்பு இல்ல. ஏன்னா,  நான் வேலைக்காரிதானே.”

கையிலிருந்த துடைப்பத்தைத்  தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள் அம்சவேணி.
===============================================================================

சனி, 29 ஜூலை, 2017

அணுக்கள் போடும் குத்தாட்டம்!

அணு, அண்டம், கடவுள் குறித்தெல்லாம் அறிந்துகொள்வதில் அளப்பரிய ஆர்வம் கொண்டவன் நான். ‘அணு’ குறித்து நான் சேகரித்த கருத்துகளில் சிலவற்றை முறைப்படி இங்கு தொகுத்திருக்கிறேன். என்னைப் போன்ற அறிவியல் ஆர்வலர்களுக்கான பதிவு இது. நிறைவான அறிவியல் அறிவு உள்ளவர்கள், இதில் பிழை காணின் அலட்சியப்படுத்துக. [G+ பின்னூட்டப் பெட்டியை இணைத்தபோது உண்டான குளறுபடியில் ஏற்கனவே இருந்த பின்னூட்டப் பெட்டியும் காணாமல் போய்விட்டது. எவ்வளவோ முயன்றும் மீட்டெடுக்க இயலவில்லை!]

‘அணு’ என்றால் என்ன?

‘ஒரு பொருளை உடைத்துக்கொண்டே போனால் இறுதியில் எஞ்சி நிற்கிற அந்த ஒன்றுக்கு, ‘அணுத்திரளை’ அல்லது ‘மூலக்கூறு’[Molecule] என்று பெயர். அணுத்திரளையை வேதியியல் மாற்றங்களின் மூலம் உடைக்கலாம். அவ்வாறு உடைக்கும்போது மிஞ்சுவது எதுவோ அதுதான் ‘அணு’ஆகும்.

அணு மிக மிகச் சிறியதொரு துகள் ஆகும். அதனைக் கண்ணால் காண முடியாது. அரைக்கோடி அணுக்களை அணி வகுத்து நிற்க வைத்தால், நாம் எழுதும்போது வைக்கும் ஒரு முற்றுப்புள்ளிக்குள் அடங்கிவிடும்.

இந்த அணுவைச் சிறிய அணு, பெரிய அணு என்றும் பாகுபடுத்துகிறார்கள்.

அணுவில் மிகச் சிறியது நீரிய அணு[Hydrogen Atom]. இதன் குறுக்களவு ஓர் அங்குலத்தில் பத்துக் கோடியில் ஒரு பங்கைக் காட்டிலும் குறைவானது. இதன் உட்கருவில் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. வட்டத்தில் ஒரே ஒரு எலக்ட்ரான் சுற்றுகிறது. மிகப் பெரிய அணு ‘யுரேனிய’ அணு. இதன் குறுக்களவு நீரிய அணுவின் குறுக்களவைக் காட்டிலும் இரண்டரை மடங்கு பெரியதாகும். இதன் உட்கருவில் 92 புரோட்டான்களும் 143 நியூட்ரான்களும் செறிந்துள்ளன. இதைச் சுற்றியுள்ள ஏழு வட்டங்களில்92 எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன.

அணுவின் நடுப்பகுதியை ‘உட்கரு’ என்பார்கள். அணுவின் எடை முழுதும் இந்த உட்கருவிலேயே செறிந்துள்ளது. உட்கருவில்[Nucleus] புரோட்டான்களும் சிலவகை அணுக்களில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் அடங்கியுள்ளன. உட்கருவைச் சுற்றியுள்ள பல வட்டங்களில் எலக்ட்ரான்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன [எலக்ட்ரானும், ப்ரோடானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம அளவில் இருப்பதால் இவற்றின் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகின்றன -www.kalanjiam.com/science/physics/ atoms ].

நியூட்ரான் என்பது ப்ரோடானும், எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டதட்ட ப்ரோடானின் எடை 1.0087amu. இது இல்லாமல் ப்ரோடான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணுக்கள் உள.

இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் (திட, திரவ, மற்றும் வாயுக்கள்)அணுக்களால் ஆனவை. எனவே அணுக்கள் பொருட்களின் (matter) அடிப்படை ஆதாரமாக கருதப்படுகின்றன. இருந்தாலும் இவ்வணுக்கள் பெரும்பாலும் பிற அணுக்களுடன் கூட்டுச் சேர்ந்தே காணப்படுகின்றன. ஹீலியம் போன்ற ஒரு சில வாயுக்கள்   மட்டும் தனிப்பட்ட அணுக்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

ஓர் அணுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என்று கூறமுடியும். அணுவைப் பிரித்த பிறகோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். எல்லா அணுக்களிலும் அணுக்கூறுகள் ஒரே மாதிரியாக உள்ளன. அணுக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவற்றின் தன்மை வேறுபடுகிறது.

ஓர் அணுவின் அமைப்பை வரைபடமாக வரைய இப்படத்தை ஞாபகத்தில் வைக்கலாம்.[https://oseefoundation.org/2013/06/24/%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]
19_1_atoms__isotopes
அணுவை/அணுக்களைச் சிதைக்கும்போது அது/அவை மிகப் பெரும் ஆற்றலாக மாறுகிறது/மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கிராம் எடையுள்ள நிலக்கரியை அணுச்சிதைவு செய்தால், 2500 டன் நிலக்கரியை எரித்தால் எவ்வளவு வெப்பம் கிடைக்குமோ அவ்வளவு வெப்பம் கிடைக்கும். கதிரவனின்[சூரியன்] மேற்பரப்பிலுள்ள வெப்பம் சுமார் 6000 டிகிரி செண்டிகிரேட்தான். அதே சூரியனை அணுச்சிதைவு செய்தால், கோடானுகோடி சூரியன்களின் வெப்பத்தைப் பெற முடியுமாம்.

சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையே வெட்டவெளி இருப்பது போல,  அணுவின் உட்கருவுக்கும் சுழன்றுகொண்டிருக்கும் எலெச்ட்ரானுக்குமிடையே மிகப்பெரும் வெட்டவெளி காணப்படுகிறது.

உட்கருவுக்கும் சுழன்றுகொண்டிருக்கும் எலெக்ட்ரானுக்குமிடையே மின்னாற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலைவிட, அணுவின் உட்கருவில் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள அணுத்திரளைகளின் ஆற்றல் பல லட்சம் மடங்குகள் பெரியது; வலிமை வாய்ந்தது. அணுத்திரளைகள் அணு அணுவாக உடைக்கப்படும்போது அவற்றில் முடங்கிக் கிடக்கும் ஆற்றல் அளவிறந்த வெப்பமாக வெளிப்படுகிறது. இந்த ஆற்றல்தான் ஹீரோஷீமாவை அழித்தது; நாகசாகியை நாசமக்கியது.

அணுக்கள் பெருக்கமடையும் இயல்புடையவை. ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஓர் அங்குல விட்டமுள்ள பந்து போல் பெருக்கம் அடைவதாகக் கற்பனை செய்தால் அந்தத் திராட்சைப் பழம் இந்தப் பூமியின் அளவு பெருக்கம் அடைந்துவிடுமாம்[அடேங்கப்பா!].

இதற்கு மேலும், வாசித்தறிந்தவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் சொல்லும் திறன் எனக்கு இல்லாததால் இத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி.
===============================================================================
நன்றி: 1.www.kalanjiam.com 2.https://oseefoundation.org 3.‘அறிவியல் விருந்து’[சுப்பு ரெட்டியார்], அய்யனார் பதிப்பகம், சென்னை.

 



செவ்வாய், 25 ஜூலை, 2017

சுதந்திரத் ‘திராவிடநாடு’ உருவாகியிருந்திருந்தால்.....?

“தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய இவை ஒரு தனிநாடாக இருந்திருந்தால், உலகின் 30 வளர்ச்சிபெற்ற நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்திருக்கும்”  -சொல்பவர் ‘ருச்சிர் சர்மா’ என்னும் பொருளாதார வல்லுநர்.

“இந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 22 சதவீதமாகவும், மொத்த வேலை வாய்ப்பில் 28 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் பங்கு 11.27% ஆகும்.

38% பொறியாளர்களையும் 49% மருத்துவப் பட்டதாரிகளையும், 25% முதுநிலைப் பட்டதாரிகளையும் இவை உருவாக்குகின்றன” என்கிறார் வல்லுநர்.

இந்தி மொழி தெரியாததால் வடமாநிலங்களிலான வேலை வாய்ப்பைத் தமிழர்களாகிய நாம் இழக்கிறோமா என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் என்ன?[இந்திவாலாக்களின் அடிவருடிகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியது]

“இந்தி கற்காததால் 1% தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்படக்கூடும். அவர்கள் இங்கே இந்தி கற்றுக்கொள்வதில் எந்தவொரு தடையும் இல்லை. இந்த ஒரு சதவீதத்தினருக்காக ஒட்டுமொத்த தமிழர்களும் இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், இப்போது தமிழ்மொழியால் காக்கப்படும் வணிக பொருளாதார வாய்ப்புகள் இந்திச் சந்தைக்குத் திறந்துவிடப்படும். வடநாட்டுக் காட்சி ஊடகங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெறும். இந்தித் திரைப்படங்கள் வாயிலாக இந்திக்காரர்களின் கலாச்சாரம் இங்கே பரவும்” என்கிறார் ருச்சிர் சர்மா.

அவர் தொடர்ந்து தரும் தகவல்கள்.....

‘தமிழ்நாட்டவர்கள் வெளி மாநிலங்களில் வேலை செய்வதைவிடவும் இங்கே வேலை செய்யும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகம்.

வட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக ருசிக்கத் தொடங்கியுள்ளன. 2007 - 2010 ஆண்டுகளுக்கிடையே வட மாநிலங்களின் சராசரிப் பொருளாதாரம் 4.5 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அவர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை ஏறுமுகத்தில் தக்கவைத்துக்கொள்ள அவர்களின் வணிகங்கள் எல்லை கடந்து பரவ வேண்டும். அதற்குத் தடையாக உள்ள மொழி என்னும் தடைச் சுவர் உடைக்கப்பட வேண்டும்.

அந்தக் காரியத்தை இந்திய அரசாங்கத்தைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆகையால்.....

வடநாட்டவர் ஆளுமை செய்யும் மத்திய அரசைக்கொண்டு மொழிச்சுவர் உடைக்கப்பட்டுவருகிறது. இது வெறும் ‘ஒற்றை இந்தியா’ கொள்கையின் விளைவல்ல; ஒரு பெரும் பொருளாதாரத் திட்டமிடலின் செயல் வடிவம் ஆகும்.

இந்தியைத் தென் மாநிலங்களில் பரப்புவதன் மூலம், தென் மாநிலங்களில் வடவருக்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியும். அதனால், தென் மாநிலத்தவருக்குப் பெரும் இழப்புகள் ஏற்படும்.

இது வடமாநிலத்தவர் தென் மாநிலத்தவர் மீது தொடுத்துள்ள மறைமுகமான பொருளாதார அடக்குமுறையாகும். தமிழகத்தைப் பொருத்தவரை தமிழும் ஆங்கிலமும் தவிர வேறு எந்தவொரு மொழியையும் படித்தாக வேண்டிய பொருளாதார, சமூக, சமயக் கட்டாயம் ஏதுமில்லை.
===============================================================================
இங்கு, ‘தி இந்து’[25.07.2017]வில் ‘திருச்செந்தில்’அவர்கள் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்செந்திலுக்கும் ‘தி இந்து’வுக்கும் என் நன்றி.


திங்கள், 24 ஜூலை, 2017

‘அது’க்கு ஏது காலமும் நேரமும்!!!

மீனாட்சியின் நடவடிக்கை  குணசீலனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

தொட்டுத் தழுவிப் படுக்கைக்கு இட்டு வந்தால், தட்டிக் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு வெளியெ போகிறாளே! கொஞ்சம் முன்னால், என்னைத் தொடு; இன்பத்தில் துவட்டி எடு என்று அழைப்பு விடுத்த அவளின் ஏக்கப் பார்வை எங்கே போனது?
குழப்பத்துடன் படுக்கையில் புரண்டான் குணசீலன்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த மீனாட்சி, தெரு முனைக் கடையில் காய்ச்சல் மாத்திரை வாங்கியாந்தேன் என்று ஒரு தம்ளரில் சுடுநீருடன் மாத்திரையும் நீட்டினாள்.

எனக்குக் காய்ச்சல்னு யார் சொன்னது?” எரிந்து விழுந்தான் குணசீலன்.

உன் உடம்பு சொல்லிச்சி. நம்மளோடது திடீர்க் கல்யாணம்; சொந்த பந்தங்கள் எதிர்த்ததால போலீஸ் ஸ்டேசனில் மாலை மாத்திகிட்டோம். முதலிரவிலாவது என்னைப் பட்டுச் சேலையில் பார்க்கணும்னு ராத்திரி பகலா ஆட்டோ ஓட்டினே. உடம்பு கெட்டுப் போச்சு. முதலிரவை இன்னொரு நாள் வெச்சுக்கலாம்.”

இன்னிக்கி ரொம்ப நல்ல நாள்னு சோதிடர் சொன்னாரு. அதில்லாம விடிஞ்சா ஆடி மாசம் பொறக்குது.”

மீனாட்சி, முகத்தில் குறும்பு கொப்பளிக்கச் சிரித்தாள். ஆடி மாசத்தில் ராத்திரியே வராதா?”

அப்படியில்ல. ஆடி மாசம் ’அதுக்கு’ ஆகாத மாசம்னு சொல்லுவாங்க.”

ஆன மாசம் ஆகாத மாசம்; கெட்ட நேரம் நல்ல நேரம்; ராகு காலம் எமகண்டம் இதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான். உழைச்சிச் சம்பாதிக்கிற நமக்கு எதுக்கய்யா? சந்தோசம் நம்மைத் தேடி வர்றதில்ல; நாமதான் அதைத் தேடி அலையறோம். அது கிடைக்கும்போது தவற விட்டுடக் கூடாது. உடம்பு குணமானதும்அது வெச்சுக்கலாம்என்றாள் மீனாட்சி.

குண்சீலனை இழுத்து அணைத்து மடியில் கிடத்தி மாத்திரையை ஊட்டினாள்; அவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்; நெஞ்சில் இதமாகத் தட்டிக் கொடுத்தாள்; ஆராரோ...ஆரிரரோ...” என்று கிறங்கடிக்கும் குரலில் சிரித்துகொண்டே தாலாட்டுப் பாடினாள்.

ஐம்புலன்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிப் போராட்டம் இல்லாத ஒருவித இன்ப சுகத்தில் மிதந்து உறங்கிப் போனான் குணசீலன்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஞாயிறு, 23 ஜூலை, 2017

‘வெறுமை’யில் உறைதல்!!!

பிரபஞ்ச வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள், மனித இனம் கண்டிராத ஏனைய பொருட்கள், அனைத்துக்கும் ஆதாரமாக விளங்கும் கணக்கிலடங்காத அணுக்கூட்டங்கள், இருள், ஒளி, ஒலி என்று எவை எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் நீங்கிய அல்லது நீக்கப்பட்ட ஒரு நிலையை ‘வெறுமை நிலை’ என்கிறோம்.

எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சவெளியில் இத்தகைய ஒரு ‘வெறுமை நிலை’ சாத்தியமா? [இது குறித்து 2011 ஆம் ஆண்டிலும் பின்னரும் எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்]

‘சாத்தியமே இல்லை’ என்பதுதான் விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக இருக்கக்கூடும். ஒருவேளை அது சாத்தியம்தான் எனின்.....

அது  எப்படியிருக்கும் என்பதை ஆழ்ந்து...மிக ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் [அந்த ‘வெறுமை’யை] உணர இயலுமா?

’இயலாது’ என்பதே இன்றளவும் ஏற்புடைய கருத்தாக இருக்கக்கூடும்.

‘பிரபஞ்ச வெளி’யில் வெறுமை உருவாவதும் அதை உணருவதும் சாத்தியமே இல்லை என்றாலும்.....

ஆழ்ந்த[கனவுகளற்ற] உறக்கத்தின்போதும், முழு மயக்கதின்போதும் மரணத்தைத் தழுவிவிட்ட நிலையிலும்  நம் எண்ணங்களையும், ஆசாபாசங்களையும், உணர்ச்சிகளையும் சிந்திக்கும் திறனையும், ‘நான்’ என்னும் உணர்வையும் முற்றிலுமாய் இழந்துவிடுவதும்கூட ஒரு ‘வெறுமை நிலை’தானே? ஆக.....

புறத்தே ஒரு வெறுமையை உணர்வது சாத்தியம் இல்லையென்றாலும் அகத்தளவில்  அந்த ‘வெறுமை நிலை’யை எய்துகிறோம்; அதில் உறைகிறோம் என்று தயக்கமின்றிச் சொல்லத் தோன்றுகிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






சனி, 22 ஜூலை, 2017

டாஸ்மாக் ‘சரக்கு’ம் ஒரு பருவக் குமரியும்! [ஒ.ப.கதை]

“அப்பா, மண்டிக்குத்தானே போறீங்க?” - சிலம்பி கேட்டாள்.

“அங்கதானே எனக்கு வேலை. நீ வேற ஏதோ சொல்ல வர்றே. சொல்லும்மா” என்றான் செல்லப்பன்.

“அப்பா...அது வந்துப்பா...” -எஞ்சிய சில வார்த்தைகள் தொண்டைக் குழியில் தேங்கி நின்றன.

“சொல்லு சிலம்பி.”

“மூட்டை சுமந்துட்டு வீடு திரும்பும்போது தவறாம டாஸ்மாக் போறீங்க. குடிச்சுட்டு வழில அலங்கோலமா விழுந்து கிடக்குறீங்க. என்னோட படிக்கிற தோழிங்க பார்த்துட்டுக் கமுக்கமா சிரிக்கிறாங்க. எனக்கு ரொம்ப அவமானமா இருக்குப்பா” என்றாள் சிலம்பி.

மகளை நெருங்கிய செல்லப்பன் கை உயர்த்தி, “உன் மேல சத்தியமா இனி....”

குறுக்கிட்டாள் சிலம்பி. “சத்தியம் பண்ணாதீங்கப்பா. சாமி மேல, தாய் மேலன்னு நீங்க பண்ணின சத்தியம் எதையும் நேத்துவரை காப்பாத்தினதில்ல. அதனால....”

“...............”

“அம்மா போடுற சண்டைக்குப் பயந்து, வீட்டுக்கு வாங்கி வராம வெளியிலேயே குடிச்சிட்டிருந்தீங்க. அந்த அம்மாவும் உங்ககிட்ட அடி உதை பட்டு உடம்பு நலிஞ்சி சீரழிஞ்சி செத்துப்போனாங்க. இனி இங்க உங்களைக் கண்டிக்க யாருமில்ல. அதனால.....”

“சொல்லுடா கண்ணு. தயங்காம சொல்லு.”

“இனி நீங்க நம்ம வீட்டிலேயே குடிக்கலாம். குடிச்சிட்டு வீட்டுக்குள்ள எங்க வேணுன்னாலும் விழுந்து கிடக்கலாம். என் தோழிங்களோ அக்கம்பக்கத்து ஜனங்களோ யாரும் பார்க்க மாட்டாங்க; சிரிச்சிக் கேலி பண்ணவும் மாட்டாங்க. நீங்க டாஸ்மாக் போனா அங்கேயே குடிப்பீங்க. அதனால, உங்களுக்குத் தேவையான சரக்கைக் காலேஜ் முடிஞ்சி வரும்போது டாஸ்மாக் போயி நானே வாங்கி வந்துடுறேன்” என்ற சிலம்பி, அலமாரியிலிருந்து ஒரு குவார்ட்டர் மது பாட்டிலை எடுத்துவந்து, “இதை நேத்திக்கே வாங்கிவந்துட்டேன். வேலை முடிஞ்சி வந்து குடிங்க” என்றாள்; பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்துவதற்காக,  சுவரில் தொங்கிய தன் தாயின் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தாள்.

பதற்றத்துடன் சிலம்பியின் கைகளைப் பற்றிக்கொண்ட செல்லப்பன், “ஐயோ என் செல்லமே, என்ன காரியம் செஞ்சே? கண்ட கண்ட காலிப் பசங்க குடிச்சிட்டுக் கும்மாளம் அடிக்கிற இடத்துக்கு உன்னைப் போகவிட்ட நான் மனுஷனே அல்ல. பெண்டாட்டியைத்தான் சாக விட்டுட்டேன். பெத்த மகளான உன்னையாவது நல்லா வாழவைப்பேன். இது சத்தியம் மகளே. உயிருள்ளவரை இனி குடிக்க மாட்டேன்” என்று சொல்லி, நீர் வடியும் கண்களுடன் வெளியேறி நடந்தான்.
===============================================================================

வியாழன், 20 ஜூலை, 2017

'கடவுள்!’...சிறு சிறு சிறு குறிப்புகள்!!

நேற்றிரவு, நான் தேர்வு எழுதுவதுபோல் ஒரு கனவு கண்டேன். தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில், ‘கடவுள்...சிறு குறிப்புகள் வரைக’ என்பதும் ஒன்று. அதற்கான என் விடை கீழே!
கடவுள்:
*இந்தச் சொல் இடம்பெறாத  மொழி அகராதி எதுவும் இல்லை. ஆனால் இதற்கான, புரிந்துகொள்ளும்படியான முழுமையான விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை.

*அண்டசராசரத்திலுள்ள அணுக்கள், கோள்கள், மனித இனம், பிற உயிரினங்கள் என்று அனைத்திற்குமே தோற்றமும் அழிவும் உண்டு. இவை இல்லாதவர் இவர் மட்டும்தானாம்!

*அனைத்துப் பொருள்களும் உயிர்களும் அஃறிணை, உயர்திணை, ஆண்பால், பெண்பால் என்று ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும். எந்த ஒன்றிலும் அடங்காத பெருமைக்குரியவர் இவர் என்கிறார்கள்[இதனால்தான், ஞானிகள் ‘கடவுள் அவனாகவும் அவளாகவும் அதுவாகம் எதுவாகவும் இருப்பார். அவ்வாறு இல்லாமலும் இருப்பார்’  என்று தாமும் குழம்பி மக்களையும் குழப்பினார்கள்].

*கோள்கள் பல. உயிர்கள் பல. அணுக்கள் பல பல பல. ஆனால், இவர் மட்டும் ஒரே ஒருவர்தான் என்கிறார்கள்.

*எந்தவொரு அளவுகோளுக்கும் கட்டுப்படாத விரிந்து பரந்த பிரபஞ்ச வெளியில் இருந்துகொண்டிருக்கும் அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்தும்  இவருக்கு மட்டுமே சொந்தம். உரிமை கொண்டாட வேறு எதுவோ எவையுமோ எவரோ எவர்களுமோ இல்லாதது இவரின் அதிர்ஷ்டம்.

*அன்பு, பாசம், நேசம் என்று அனைத்துப் பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக விளங்குபவர் இவர் மட்டுமே என்பதும், இவரிடமிருந்துதான் இப்பண்புகள் நம்மால் பெறப்பட்டன என்பதும், வரம்பு கடந்த பேரறிவும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர் என்பதும்  அளப்பரிய இவர்தம் பெருமையின் அடையாளங்கள் என்றியம்புகிறார்கள்.

*உடல் உழைப்பையும் அறிவாற்றலையும் பயன்படுத்திப் பிற மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்க, கணக்குவழக்கில்லாமல் பொய்யான [கடவுள்]கதைகள் சொல்லிச் சிலபேர் பிழைப்பு நடத்துவதற்குக் காரணமாய் அமைந்தவர் இவர்.

*இவரால் நல்லது ஏதும் நடக்காவிட்டாலும், இவரை நம்பும் மனிதர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது புரியாத பெரும் புதிர்.

*இவர் சொன்னதாக, மதவாதிகள் இல்லாதது பொல்லாதது என்று மதப்புத்தகங்களில் எதை எதையோ எழுதி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்கும் திராணி கொஞ்சமும் இல்லாதவர் இவர்.

*இவர் படைத்ததாகச் சொல்லப்படும் அனைத்திலும் எத்தனை குறைகள்/குளறுபடிகள் இருப்பினும், இவரின் புகழ் பாடுவதற்கென்று எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டிருப்பது இவர் பெற்ற பேறு.

மேலும்.....

அதிகாலையில் என் மனைவி தயாரித்துக்கொண்டிருந்த காபியின் ‘கம கம’ வாசனை என் தூக்கத்தைக் கலைத்ததால், கண்டுகொண்டிருந்த கனவை, முழுமையாகப்  பதிவு செய்வது தடைபட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
===============================================================================
தளத்தின் தலைப்பில்[Header] உள்ள கழுதைக் கூட்டத்துக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய வேண்டாம். கழுதைகளின் அழகு என்னைக் கவர்ந்தது. அவ்வளவுதான். அதோடு, அந்தக் கூட்டத்துக்குள் நான் இல்லை என்பதையும் அறிந்திடுக!










திங்கள், 17 ஜூலை, 2017

பாலாபிஷேகமும் பக்தி வளர்ப்போரின் உள்நோக்கமும்!

கீழ்வரும் படத்தைக் கவனியுங்கள். ஒரு கற்சிலையின் மீது அருவியாய்ப் பால் கொட்டுகிறது. கொட்டப்பட்டது 108 குடம் பால். சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்குச் செய்யப்பட்ட அபிசேகம் இது. [செய்தி: தி இந்து 17.07.2017]
இந்தக் காட்சியைக் காணும்போது நம் மனம் பற்றி எரிகிறது. ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு உணவாக வேண்டிய பால் குடம் குடமாய்க் கொட்டி வீணடிக்கப்படுவது ஒரு துரோகச் செயல். ஏழை மக்களுக்குச் செய்யும் துரோகம். இதைச் சகித்துக்கொள்வதற்கான மன உறுதி நம்மில் எவருக்கு உண்டு?!

பக்தர்களின் ‘பாஷை’யில் சொன்னால் இதுவொரு பாவச் செயல். பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் பலரும் பசியால் துடித்துக்கொண்டிருக்க, கல்லால் வடிக்கப்பட்ட ஒரு சிலைக்குக் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுவது பாவச் செயல் அல்லாமல் வேறு என்ன? 

ஆளும் வர்க்கங்களின் ஆதரவு இந்தப் பாவச் செயல் புரிவோருக்கு எப்போதும் உண்டு. பின்னணியில், பல்லாயிரக்கணக்கான பக்திமான்கள் இருக்கிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராடுவதற்கான பலம் நல்ல மனம் கொண்டவர்களுக்கு இல்லை..

இது ஒரு கற்சிலை. உள்ளே கடவுள் இருப்பதாகக் கொண்டாலும் நம் கட்புலனால் அறியப்படுவது  கற்சிலை மட்டுமே.  இதன்மீது தூசு படிவதும், சுற்றுச் சூழல் காரணமாக அழுக்குச் சேர்வதும் தவிக்க இயலாதவை. அவற்றைப் போக்குவதற்குத் தண்ணீர் கொட்டிக் கழுவலாம்; தவறில்லை. பாலையும் பழங்களையும் மஞ்சள் சந்தணம் போன்ற அரிய பொருள்களையும்  கொட்டி வீணடிப்பது அறியாமையா, அறிந்து செய்யும் ஆதிக்கப் போக்கா?

சிலை மீது கொட்டுகிற பாலும் பழக்குழம்புகளும் உள்ளே இருக்கிற கடவுளின் பசியைத் தணிக்கின்றனவா? கடவுளுக்கும் பசிக்குமா?

பூசுகிற சந்தணமும் மஞ்சள் குழம்பும் உள்ளே இருக்கிற சாமியின் பொன் மேனியைக் குளிர்விக்கின்றனவா? 

இம்மாதிரி பயனற்ற பழக்க வழக்கங்கள் எப்போதிருந்து தொடர்கின்றன?

தொடங்கிவைத்த புத்திமான் யார்? எவரெல்லாம்?

விடைகளை எதிர்பார்த்து எழுப்பப்படும் கேள்விகள் அல்ல இவை. காரணம், இவற்றிற்கான  நியாயமான பதில்களை எவரும் தருதல் இயலாது என்பதுதான்.

விடைகள் நமக்குத் தேவையில்லை எனினும் ‘விடியல்’ தேவை. இம்மாதிரி மூடத்தனமான சடங்குகளின் உள்நோக்கத்தைப் பக்தர்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்.  
===============================================================================


ஞாயிறு, 16 ஜூலை, 2017

வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் ‘அகோரி’கள்!...“அபச்சாரம்...அபச்சாரம்”!!

இன்றைய, மண்டை காயவைக்கும் ஒரு செய்தி: ‘தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் நடத்திவரும் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் இரண்டு அகோரிகள்[மனித மாமிசம் உண்பவர்கள்; வீரபத்திரரையும் பைரவரையும் வழிபடுபவர்கள்] நுழைந்தனர்’[தினகரன் நாளிதழ் 16.07.2017]
“அகோரிகள் உற்சவர் முன்பு நிர்வாண[கண்கொள்ளாக் காட்சி!] நிலையில் அமர்ந்து வணங்கினார்கள். இதனால் கோயிலின் புனிதத்திற்குத் தீங்கு நேரிட்டுவிட்டது” -பட்டாச்சாரியர்கள்.

அந்தத் தீங்கைப் போக்குவதற்காக,  15.07.2017 அதிகாலை கோயிலின் நடை சாத்தப்பட்டு, 05.00 மணி முதல் 08.30 வரை ‘சுத்தி யாகம்’ நடத்தப்பட்டதாம். யாகம் செய்வதற்கு முன்பு கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்யப்பட்டதாம்

யஜூர் வேதத்தில் 30 வகையான யாகங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அவற்றில் இதுவும் ஒன்றா அல்லது இதுவொரு புதுவகையான யாகமா தெரியவில்லை.  கடவுள் சொன்னதாக வேதம், ஆகமம் என்று எதையெதையோ எழுதிவைத்துக்கொண்டு இன்றளவும் அவற்றின் பெருமை பேசிக்கொண்டிருக்கும் மகானுபவர்களுக்கே வெளிச்சம். ஒரு காலத்தில், கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்லி, பொருட்களையும் விலங்குகளையும், ஏன்... மனிதர்களையும்கூட நெருப்பிலிட்டார்கள். இப்போதெல்லாம் குடம் குடமாக நெய்யை வீணாக்குவதோடு சரி.

இந்தச் 'சுத்தி யாகம்' என்னும் புனித யாகத்தைச் செய்யாமல் இருந்திருந்தால் பெரும் தீங்குகள் விளையும் என்றார்களாம் பட்டாச்சாரியர்கள்.

கடவுள் அணுவிலும் இருக்கிறார்; தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்...அதாவது, அவரால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இவர்களின் கூற்றுப்படி, அகோரிகளுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது உறுதியாகிறது. கடவுளைச் சுமந்துகொண்டிருக்கும் அவர்களால் புனிதம் கெட்டதாகச் சொல்வது பேதைமை. அதோடுகூட, அவர்கள் அற்ப மானிட வடிவில் நடமாடுபவர்கள். அவர்களின் நுழைவால் கடவுள் குடிகொண்டிருக்கிற கோயில் வளாகம் தூய்மை இழந்தது என்று சொல்வதை எவ்வகையிலும் ஏற்க இயலாது.

பட்டாச்சாரியர்கள் சொல்வது உண்மையே எனின்.....

அகோரிகளின் நுழைவால் கெட்டுப்போன புனிதம் ஒரே ஒரு முறை 'சுத்தி யாகம்' செய்வதால் நீங்கிவிடாது. யஜூர் வேதம் சொல்லுகிறபடி[எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்பது பட்டாச்சாரியர்களுக்குத் தெரியாதா என்ன!!!] நடையைச் சாத்திவிட்டுத் தினம் தினம் கோயிலைச் சுத்தம் செய்து ’சுத்தி யாகம்’ செய்துகொண்டே இருத்தல் வேண்டும்.....கடவுள் அண்டவெளியில் தோன்றியோ அசரீரியாகவோ “போதும்” என்று சொல்லும்வரை.

ஆம். அனைத்து மக்களும்[வேத ஆகமங்களை மகான்களுக்கு மட்டும் சொன்னார்] கேட்டறியும் வகையில் அவர்  சொல்லுவார்! இது சர்வ நிச்சயம்!

வாழ்க திருப்பதி வெங்கடேசப் பெருமாள் திருநாமம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எச்சரிக்கை!
வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குள் புகுந்த அகோரிகள். மனித மாமிசம் உண்பவர்கள். இப்போதைய இவர்களின் உணவு உயிருள்ள மனிதர்களின் மாமிசமா, செத்த மனிதர்களின் மாமிசமா  தெரியவில்லை. எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்!!














வியாழன், 13 ஜூலை, 2017

‘சிறு’நீரின் ‘பெரும்’ பயன்கள்!!

‘ஆத்திரத்தை அடக்கலாம். மூத்திரத்தை அடக்க முடியாது[கூடாது]’ என்பார்கள். அதை அடக்கி ஆள்வதோ அடங்கிப்போவதோ அவரவர் விருப்பம். ஒன்றுக்கும் உதவாதது என்று நாம் நினைக்கிற அந்த ‘ஒன்னு’க்கின்  பயன்கள் குறித்துச்  சில சுவையான தகவல்கள்! 
*சிலவகைத் தோல் நோய்களுக்குச் சிறுநீர் தடவுவது பண்டைய இந்திய மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

*ஒரு காலத்தில், ரோமானியர்கள் துணைகளைச் சுத்தம் செய்வதற்கான பிளீச்சிங் பொருளாகப் பயன்படுத்தினார்கள்.

*போர்களின்போது காயங்கள் ஏற்பட்டு, போதிய ஆண்டிசெப்டிக் களிம்புகள் கிடைக்காதபோது வீரர்கள் காயங்களில் தடவிக்கொள்வார்கள். பாக்டீரியாவைக் கொல்லும் குணம் சிறுநீருக்கு உண்டு என்பதால் உலகெங்கிலும் இது நடைமுறையில் இருந்திருக்கிறது.

*சிறுநீரில் நிறைய ‘யூரியா’ உள்ளது.  யூரியாவில் ‘நைட்ரஜன்’ அதிக அளவில் இருக்கும். மரங்களுக்கோ செடிகளுக்கோ பாய்ச்சினால் அது நல்ல எருவாகி உரம் சேர்க்கிறது. ஆனாலும், சிறுநீர்ப் பாசனம் அதிகமானால் செடிகள் வாடிவிடக்கூடும்.

*[சிறுநீரின் மஞ்சள் நிறத்திற்கும் தங்கத்திற்கும் முடிச்சுப் போட்டு, சிறுநீரிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க விதம் விதமான முயற்சிகளைச் செய்து விஞ்ஞானிகள் தோற்றார்கள்].

மேற்கண்ட தகவல்களை நமக்குத் தந்து உதவிய நூல்: ‘கிட்னியைக் கவனி’, ‘சூரியன் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை. முதல் பதிப்பு: டிசம்பர், 2014.


கீழ்க்காணும் தகவல்களை நமக்குத் தருபவர்: ‘சர்வரோக நிவாரணி’ நூலைத் தொகுத்த சுவாமி பூமானந்தா[[ http://tamilnatural.blogspot.in/2016/07/blog-post_248.html#.WWdIBLpuLIU ]

சிறுநீரை..........
*தினமும் 3 வேளை   அருந்தினால் ஆரோக்கியமாக வாழலாம்”

*லேசாகச் சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும்.  

*கண்களைக் [சிறுநீரினால்] கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும்.

*அருந்துவதால் ஜலதோஷம், பீனிசம்[மூக்கடைப்பு, மூக்கில் புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும்] ஆகிய நோய்களும்   குணமடையும். 

*உடம்பில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும். 

*‘சிறுநீரை அருந்தலாம் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாவதற்கான காரணியாக அமையும்’ என்று மிரட்டுபவர்களும்[‘தமிழ் மருத்துவர்’] உள்ளனர்http://www.tamildoctor.com/pissing-mater/

விரும்புவோர் பயன்படுத்துங்கள். நல்லது நடந்தால் என்னைப் பாராட்டுங்கள். எதிர்மறை விளைவு என்றால் சூரியன் பதிப்பகத்தாரையும் சுவாமி பூமானந்தாவையும்.....என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்!

முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள்,  மிகு சிறுநீர்ப் பிரியர் என்பதை நினைவுபடுத்திப் பதிவை நிறைவு செய்கிறேன்.
===============================================================================

கடவுள் தேவைப்படுகிறார்.....சில நேரங்களில்!!!

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, சில நேரங்களில்  சில/பல முட்டாள்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளக் ‘கடவுள் தேவைப்படுகிறார்’ என்பதென்னவோ உண்மை!
“டாக்டர் கூப்பிடுறாருங்க.” -செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன். 

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் மதன்.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுள் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் மதன். வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“டாக்டர், நீங்க நாத்திகர்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னீங்க?” -கேட்டார் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த நோயாளி.

“அதுவா.....?” -சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் மதன்.

“சில நேரங்களில் நோயாளி செத்துடுவார்னு டாக்டர் சொன்னா, அவர் கணிப்பையும் மீறிப் பிழைச்சுடறது உண்டு. பிழைச்சுடுவார்னு சொல்லிச் செத்துடுறதும் உண்டு. இந்த மாதிரி நேரங்கள்ல நோயாளியைச் சார்ந்தவன் கும்பல் சேர்த்துட்டு வந்து, “டாக்டர் ஒழிக”ன்னு கோஷம் போடுறான். நஷ்ட ஈடு கேட்குறான். கொடுக்க மறுத்தா கண்ணுல பட்டதையெல்லாம் அடிச்சி நொறுக்குறான். அதனால, நோயாளி பிழைச்சுடுவாரா செத்துடுவாரான்னு தீர்மானமா ஒரு முடிவைச் சொல்லாம கடவுளைக் கைகாட்டி விட்டுடுறோம். இதுல, டாக்டர் ஆத்திகரா, நாத்திகரா என்ற கேள்விக்கே இடமில்லை.”

“மக்கள் மனசை ரொம்ப நல்லாப் படிச்சிருக்கீங்க” என்றார் நோயாளி..

“டாக்டர்கள் நோய்களைப் படிச்சா மட்டும் போதாது. மக்கள் மனசையும் படிச்சாத்தான் இன்னிக்கெல்லாம் தொழில் நடத்த முடியும். இது காலத்தின் கட்டாயம்” என்றார் மதன்.

‘பிழைக்கத் தெரிந்த டாக்டர்’ என்று மனதுக்குள் முணுமுணுத்தார் நோயாளி.
****************************************************************************************************************************************

செவ்வாய், 11 ஜூலை, 2017

நுண்ணறிவாளன் கம்பன்!

சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன எனினும், அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்க  ‘முடிவு’ எட்டப்படவில்லை. கடவுள் இருப்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டால், அடுத்து எழும் கேள்விகளுள் ஒன்று.....

“படைப்புத் தொழிலை அவர் ஏன் மேற்கொண்டார்?” என்பது.

உலக அளவில் இக்கேள்விக்கு விடை காணும் முயற்சியைத் தத்துவ அறிஞர்கள் பலரும் மேற்கொண்டார்கள்/மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஆயினும், விடை சொன்னவர் எவருமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது[இருந்தால், எவரொருவரும் இங்கே பதிவு செய்யலாம்].

இந்நிலையில், நம் தமிழ்க்கவிஞன் கம்பன் மட்டுமே ஒரு காரணத்தை அனுமானித்திருக்கிறார் என்பதைக் கம்பராமாயணம் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் அறிய இயலுகிறது. அவர்தம் அனுமானம் நிரூபிக்கப்படவில்லை எனினும் அவரின் நுண்ணறிவு குறித்து நாம் பெருமைப்படலாம்.
‘கடவுள் உலகங்களைப் படைத்தது ஏன்?’

கம்பன் சொல்லும் காரணம்.....

கடவுள் ‘விளையாடுகிறார்’ என்பதே. பாடல்.....

’உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடை யாரவர்
தலைவரன்ன வர்க்கேசரண் நாங்களே’


[பொருள்: அனைத்து உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கின்ற அளவில்லாத விளையாட்டை நிகழ்த்துகிற அவரே எங்கள் தலைவர். அத்தகையவரை நாங்கள் சரணடைகிறோம்]

[‘அலகிலா’ > அளவில்லாத]

’கடவுள் விளையாடலாமா? விளையாட்டின் விளைவுகள் என்ன?’ என்பன போன்ற கேள்விகள் எழுவதும் அவற்றிற்கான விடை தேடலும் வரம்பு கடப்பவை எனினும், கடவுளின் படைப்புத் தொழிலுக்குத் தன்னளவில் கம்பன் ஒரு காரணத்தைக் கண்டறிந்திருப்பது பாராட்டுக்குரியதே.

கம்பனின் நுண்ணறிவைப் போற்றுவோம்.
=========================================================





திங்கள், 10 ஜூலை, 2017

உலகமகா கிறுக்கன்[ர்]!!!

நாமெல்லாம் உள்ளூர்க் கிறுக்கர்கள். உலகமகா கிறுக்கர்களும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவரைக் கீழே சந்தியுங்கள்.
#‘நட்டநடுச் சாலையில் கடவுளானவர் சிவலிங்க வடிவில் காட்சிதர அனுமதிக்கலாமா கூடாதா?’ -தெலங்கானா மாநிலத்துக் காவல்துறையினர்தான் இப்படியொரு குழப்பத்தில் சிக்கினார்கள். காரணம்..... 

ஹைதராபாத்திலிருந்து வாராங்கல் செல்லும் நெடுஞ்சாலையில் ஒருவர் போக்குவரத்தைத் தடை செய்து நடுரோட்டில் குழிதோண்டிக் கொண்டிருக்கிறார்’ என்று காவல்துறையினருக்குத் திடீர் தகவல் வந்தது. 

உடனே அந்த இடத்துக்கு மின்னலாக அவர்கள் சென்றபோது, வெயிலையும் பொருட்படுத்தாமல் 15 அடி ஆழம் தோண்டியதோடு, இன்னும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மனிதரை அரும்பாடுபட்டுத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் பக்குவ விசாரணையில், “ரோட்டில் தன்னுடைய லிங்கம் இருக்கிறது என தோண்டச் சொன்னதே சிவன்தான்!” என்றாராம் அவர்! 

“...ஆனால், இன்னும் லிங்கம் கிடைக்கவில்லை...” என பயபக்தியோடு விளக்கம் கொடுத்து மிரள வைத்திருக்கிறார் அந்த ஆள். அவர், தெலுங்கானாவின் ஜன்காவோன் மாவட்டத்தைச் சேர்ந்த லக்கான் மனோஜ் என்பவர்[அவரும் அவரால் மூளைச்சலவை செய்யப்பட்ட அவரின் ஊர்க்காரர்களும் காவல் கைதிகளாகிக் கம்பி எண்ணுவதாகத் தகவல்!].#

நம் கேள்வி 1:
“சிவலிங்கம் உன் நெஞ்சக்கூட்டுக்குள்தான் இருக்கு”ன்னு அந்தப் பித்தன்[‘பித்தா பிறை சூடி.....’] சொல்லியிருந்தால் இந்தப் பித்தன்ர்[கிறுக்கன்ர்] என்ன செய்திருப்பான்ர்?!

கேள்வி 2:
பிறை சூடிய பித்தன் தன் பக்தனை இம்சைப்படுத்தாமல், சிவலிங்க வடிவில் மண்ணைத் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டு நெடுஞ்சாலையில் பிரசன்னமாகியிருந்தால், அதற்குத் ‘தான்தோன்றி சிவலிங்கேஸ்வரர்’ என்று நாமகரணம் சூட்டி, அங்கேயே கோயில் கட்டி, வேத விற்பன்னர்களை வைத்து மகாகும்பாபிஷேகமும் நடத்தியிருப்பார்களே நம் மகா ஜனங்கள், ஏன் செய்யவில்லை?!
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசி
நன்றி: குங்குமம் வார இதழ்[14.07.2017].



சனி, 8 ஜூலை, 2017

“வதந்தீ...பரப்புங்கள்!” -‘மாநில, மத்திய’ அரசுகளுக்கு வேண்டுகோள்!!

‘மாங்கல்யத்தில் சிவப்பு நிறப் பவளம் இருந்தால் கணவரின் உயிருக்கு ஆபத்து’ -இப்படியொரு செய்தி கர்னாடகாவில் காட்டுத்தீ போல் பரவிவருகிறதாம்! விளைவு?

அதிர்ச்சிக்குள்ளான மணமான பெண்கள் தங்களின் மாங்கல்யத்தில் உள்ள சிவப்பு நிறப் பவள மணிகளை அகற்றிவருகின்றனர்[தி இந்து 08.07.2017] என்பது இன்றைய சூடான செய்தி.
இச்செய்தியால்  கர்னாடக அரசும் அதிர்ச்சி அடைந்ததாம். அவசரகதியில், ‘ஏதோ ஒரு சுயநலக்கும்பல் திட்டமிட்டு இந்த மூடநம்பிக்கையைப் பெண்கள் மத்தியில் பரப்பிவருகிறது. இந்த வதந்தியைப் பெண்கள் எவரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஓர் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இந்தவொரு எச்சரிக்கை அறிக்கையை அரசு வெளியிட்டது தவறு என்பது எம் கருத்து.

கர்னாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் பெண்கள் தத்தம் மாங்கல்யத்திலுள்ள சிவப்பு நிறப் பவள மணிகளை ஓரிரு நாட்களில் அகற்றிவிடுவர் என்பது 100% உறுதி. காரணம்.....

இவ்வாறான, வதந்தியாக[விரைவில் அண்டை மாநிலங்களிலும் பரவிட வாய்ப்புள்ளது] உலாவரும் மூடநம்பிக்கைகளின் மீது எப்போதுமே பெண்களுக்கு[மக்களுக்கு] அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு.

எனவே,

உடனடியாக ஆற்ற வேண்டிய கடமை ஒன்று கர்னாடக அரசுக்கு மட்டுமல்லாமல் மற்ற மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உள்ளது.

*****இம்மாதிரியான வதந்திகளுக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, இதுபோன்ற சில வதந்திகளை அரசாங்கங்களே அவ்வப்போது கிளப்பிவிட்டு, அரசு எந்திரங்கள் மூலமாகவும் ஜோதிடர்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரப்பிடவேண்டும். உதாரணத்துக்குச் சில.....

‘பாரததேசத்துத் திருமணமான பெண்கள் புனிதமான மாங்கல்யத்தைத் தவிர வேறு பொன்னாலான அணிகலன்களை அணியக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்தம் கணவன்மார்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும்’ என்பது ஒன்று[இதன்மூலம் பெண்களின் தங்கநகை மோகம் முற்றிலுமாய் அழிந்தொழியும்].

‘மணமான மங்கையர்கள் தத்தம் கணவன்மார்களையே தெய்வம் என்று மதித்து வழிபட வேண்டும். கணவன்களும் தத்தம் மனைவியரைத் தவிர வேறு சாமிகளை ஏறெடுத்தும் பார்த்தல் குற்றமாகும். மீறினால், அவர்தம் துணையின் உயிருக்குப் பங்கம் நேர்வது நிச்சயம்’ -இது பிறிதொரு வதந்தி[இதன் மூலமாகக் கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளுக்குச் சமாதி கட்டலாம்].

சமுதாயச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது இம்மாதிரி வதந்திகளைப் பரப்புவதை மாநில மத்திய அரசுகள் தத்தம் கடமை எனபதை உணர்தல் அவசியம்.

எத்தனை எத்தனை பெரியார்கள் வந்து பிறந்தாலும் நம் மக்களின் மனங்களில் வெகு ஆழத்தில் வேரோடிவிட்ட மூடநம்பிக்கைகளை அகற்ற முடியாது என்பதால் மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

ஒரு பரிந்துரை: வதந்திகளைப் பரப்புவதற்கென்றே ஒரு தனித் துறையை[ரகசியமானது] ஆரம்பிக்கலாம். அதற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் பிரபல வி.வி.வி.ஐ.பி. ஜோதிடர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
============================================================================================



வியாழன், 6 ஜூலை, 2017

ஆதலினால் ‘காமம்’ செய்வீர்!

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா உறக்கம்’   -இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான். இவை முற்றிலும் செயற்கையானவை.

இந்தத் தேவையற்ற ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.................

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தன்னிச்சையாய் உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது. மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு, இது சாத்தியம் இல்லாமல் போனது. காரணம்.....

பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும். 

இவற்றோடு, தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே ஆண்டுக் கணக்கில் செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இந்தச் செயற்கை உடலுறவிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலையில், ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து உருகுவதிலும் முழுத் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரிக் கற்பனைச் சுகங்களுக்குக் கவிதை, கதை, ஓவியம், சிற்பம் என்று பல்வேறு கலை வடிவங்கள் தரப்பட்டன.  

இம்மாதிரியான கற்பனைச் சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’[இதுவும் காமத்தைக் குறித்த சொல்தான்] என்று புதுப்பெயர் சூட்டப்பட்டது[இது எப்போது நிகழ்ந்தது என்பது தனி ஆய்வுக்குரியது].

முற்றிலும் பொய்யான, கற்பனையான இந்தக் காதல், வாலிப உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது; படுத்துகிறது.

காதல் தோல்வியால், பலர் தம் அரிய உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆதலினால், இளசுகளுக்கு நாம் சொல்லும் புத்திமதி.....

‘காதல் செய்ய வேண்டாம். உரிய தருணத்தில், ‘காமக்கலை’யை நல்ல நூல்களின் வாயிலாக ஓரளவேனும் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர், இயன்றவரை மனப் பொருத்தமும் உடல் பொருத்தமும் அமைந்த துணையைத் தேடி இல்லற வாழ்வை மேற்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பும் பாசமும் பொழிந்து, அவரவர் தேவையை உணர்ந்து அறிந்து ஆசைதீரக் காமசுகத்தை  அனுபவியுங்கள்’ என்பதே!
============================================================================================
நீண்டதொரு என் பதிவிலிருந்து பிய்த்தெடுத்துப் புதுப்பித்தது இப்பதிவு!