செவ்வாய், 25 ஜூலை, 2017

சுதந்திரத் ‘திராவிடநாடு’ உருவாகியிருந்திருந்தால்.....?

“தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய இவை ஒரு தனிநாடாக இருந்திருந்தால், உலகின் 30 வளர்ச்சிபெற்ற நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்திருக்கும்”  -சொல்பவர் ‘ருச்சிர் சர்மா’ என்னும் பொருளாதார வல்லுநர்.

“இந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 22 சதவீதமாகவும், மொத்த வேலை வாய்ப்பில் 28 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் பங்கு 11.27% ஆகும்.

38% பொறியாளர்களையும் 49% மருத்துவப் பட்டதாரிகளையும், 25% முதுநிலைப் பட்டதாரிகளையும் இவை உருவாக்குகின்றன” என்கிறார் வல்லுநர்.

இந்தி மொழி தெரியாததால் வடமாநிலங்களிலான வேலை வாய்ப்பைத் தமிழர்களாகிய நாம் இழக்கிறோமா என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் என்ன?[இந்திவாலாக்களின் அடிவருடிகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியது]

“இந்தி கற்காததால் 1% தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்படக்கூடும். அவர்கள் இங்கே இந்தி கற்றுக்கொள்வதில் எந்தவொரு தடையும் இல்லை. இந்த ஒரு சதவீதத்தினருக்காக ஒட்டுமொத்த தமிழர்களும் இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், இப்போது தமிழ்மொழியால் காக்கப்படும் வணிக பொருளாதார வாய்ப்புகள் இந்திச் சந்தைக்குத் திறந்துவிடப்படும். வடநாட்டுக் காட்சி ஊடகங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெறும். இந்தித் திரைப்படங்கள் வாயிலாக இந்திக்காரர்களின் கலாச்சாரம் இங்கே பரவும்” என்கிறார் ருச்சிர் சர்மா.

அவர் தொடர்ந்து தரும் தகவல்கள்.....

‘தமிழ்நாட்டவர்கள் வெளி மாநிலங்களில் வேலை செய்வதைவிடவும் இங்கே வேலை செய்யும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகம்.

வட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக ருசிக்கத் தொடங்கியுள்ளன. 2007 - 2010 ஆண்டுகளுக்கிடையே வட மாநிலங்களின் சராசரிப் பொருளாதாரம் 4.5 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அவர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை ஏறுமுகத்தில் தக்கவைத்துக்கொள்ள அவர்களின் வணிகங்கள் எல்லை கடந்து பரவ வேண்டும். அதற்குத் தடையாக உள்ள மொழி என்னும் தடைச் சுவர் உடைக்கப்பட வேண்டும்.

அந்தக் காரியத்தை இந்திய அரசாங்கத்தைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆகையால்.....

வடநாட்டவர் ஆளுமை செய்யும் மத்திய அரசைக்கொண்டு மொழிச்சுவர் உடைக்கப்பட்டுவருகிறது. இது வெறும் ‘ஒற்றை இந்தியா’ கொள்கையின் விளைவல்ல; ஒரு பெரும் பொருளாதாரத் திட்டமிடலின் செயல் வடிவம் ஆகும்.

இந்தியைத் தென் மாநிலங்களில் பரப்புவதன் மூலம், தென் மாநிலங்களில் வடவருக்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியும். அதனால், தென் மாநிலத்தவருக்குப் பெரும் இழப்புகள் ஏற்படும்.

இது வடமாநிலத்தவர் தென் மாநிலத்தவர் மீது தொடுத்துள்ள மறைமுகமான பொருளாதார அடக்குமுறையாகும். தமிழகத்தைப் பொருத்தவரை தமிழும் ஆங்கிலமும் தவிர வேறு எந்தவொரு மொழியையும் படித்தாக வேண்டிய பொருளாதார, சமூக, சமயக் கட்டாயம் ஏதுமில்லை.
===============================================================================
இங்கு, ‘தி இந்து’[25.07.2017]வில் ‘திருச்செந்தில்’அவர்கள் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்செந்திலுக்கும் ‘தி இந்து’வுக்கும் என் நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக