திங்கள், 9 அக்டோபர், 2017

கெடுக்கப்பட்டவள் பாவி! கெடுத்தவர்கள்?!

குட்டையும் நெட்டையுமாய் வரிசைகட்டி நிற்கும் கவின்மிகு கட்டடங்களையும், எதிரும் புதிருமாய் அணிவகுத்துச் செல்லும் வண்ண வண்ணக் ஊர்திகளையும், நடமாடும் நவநாகரிக மனிதர்களையும் கண்டு ரசித்து, மனித குலத்தின் அதிரடி அறிவியல் வளர்ச்சியை வியந்தவாறே அந்த நகரத்தின் நீண்ட பெரிய வீதியின் வழியாக அரூப வடிவில் சென்றுகொண்டிருந்தார்கள் இறைவனும் இறைவியும்.

கொஞ்சம் இடைவெளியில் தன்னவரைப் பின் தொடர்ந்த இறைவி, திடீர்ப் பாய்ச்சலில் அவரைத் தடுத்து நிறுத்தி, “அங்க பாருங்க” என்று ஒரு குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன்,  “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.

“பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது அப்பட்டமாத் தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே? இவளைப் பைத்தியம் ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோட நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க”

வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, "என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப் படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்.

“இவளுக்கு அப்போ பதினாறு வயது. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போன போது, நான்கு 'காலிகள்’ இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க.........................ஐயோ........என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சி கூக்குரல்  எழுப்பினா இவ. இவள் கற்பைக் காப்பாத்த யாருமே முன் வரல......

.....கடவுளே....ஏ ஏ ஏ.........ஓ ஓ ஓ கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே, அழுது புலம்பி அபயக்குரல் எழுப்பினா. துடிதுடிச்சி, ஓடோடிப் போயிக் காப்பாத்த வேண்டிய நீங்களும் இவளைக் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க; அந்த வினாடியே மோனத்திலும் மூழ்கிட்டீங்க. சாதாரண மனுசங்களுக்கு இந்த மோனமும் தியானமும் தேவைப் படலாம். முழுமுதல் கடவுளான நீங்க எதுக்கு அடிக்கடி மோனத்தில் மூழ்கிக் கிடக்கிறீங்கன்னு எனக்குப் புரியல..........

...அது கிடக்கட்டும். உங்க மெத்தனத்தால நடக்கக் கூடாத ஒரு கொடூரம் நடந்து முடிஞ்சி போச்சி. சூதுவாது அறியாத ஒரு இளம் வயசு அப்பாவிப் பொண்ணைச் சீரழிச்சி, சித்திரவதை பண்ணி, அந்த நாலு கயவர்களும் நடுத் தெருவில் அலைய விட்டுட்டாங்க. இதுதான் நடந்தது.

தனக்குக் ‘கடவுள் தந்த பரிசை’ நினைச்சி நினைச்சி எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையற இந்தப் பைத்தியகாரியைப் பாருங்க; ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்து ரசிங்க” என்று குரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் வழிந்திட, சிரமப் பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி, “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன? சொல்லுங்க” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்” உணர்ச்சியற்ற குரலில் சொன்னார் இறைவன்.

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது நீ.........ண்.....டதொரு பாவபுண்ணியச் சங்கிலித் தொடர். எப்போதெல்லாமோ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணும்கிறது ஏற்கனவே விதிக்கப் பட்டது. கேட்கப்படுற ஒவ்வொரு கேள்விக்கும் கணக்குப் பார்த்துப் புள்ளிவிவரம் தர்றது என்னுடைய வேலை இல்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இந்தப்பிறவியில் அனுபவிக்கிறாள். அவ்வளவுதான்.”

இனியும் பேச விரும்பாதவர் போல் நடையில் வேகம் காட்டினார் இறைவன்.

”நில்லுங்க.”

கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட அந்த வார்த்தை இறைவனின் செவிகளில் பேரிடியாய் இறங்கி மேலும் நகரவிடாமல் ஆணி அடித்தாற்போல் அவரை நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாள். சரி........... இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு மனுச நாய்களுக்கும் வாய்ச்சுதே, அந்தச் சுகத்துக்கு அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம்தான் காரணமா? அந்தப் புண்ணியம் என்னன்னு சொல்லுங்க” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மீண்டும் மோனத்தில் புதையுண்டார்!
=====================================================================================