புதன், 29 நவம்பர், 2017

'காலை மலர்' தளத்துக்கு நன்றி!

ஜூன் 20,2016இல் என் பதிவை எடுத்தாண்டதுடன் மே 12, 2017இல் புதுப்பித்துள்ளது[சற்று முன்னர்தான் இதை அறிய நேர்ந்தது].  'காலை மலர்' தளத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.














‘தி இந்து’[19.06.2016] வின் மூடநம்பிக்கை திணிப்பு['காலை மலர்' கொடுத்த தலைப்பு]

‘தி இந்து’[19.06.2016]வில் நான் படித்து நொந்த ஒரு செய்தி!!! http://kadavulinkadavul.blogspot.com/2016/06/19062016.html

.கீழே ஒரு படம் இணைத்திருக்கிறேன். அதைக் கூர்ந்து நோக்குங்கள். 
13427731_259793664387374_1859389908559154847_n
.உங்களுக்குத் தெரிவது என்னவாகவோ இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை அது வெறும் பாறை மட்டுமே.
.
இப்போது படத்தின்[தி இந்து,19.06.2016] கீழே இடம்பெற்றுள்ள குறிப்புரையைப் படியுங்கள்.
.
‘பாறையில், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள[து] பெருமாள் திருவுருவம்’ என்கிறார் மகேஷ்குமார் என்னும் அன்பர்.
.
கண்கள் இல்லை; புருவங்களைக் காணோம். உருக்குலைந்த மண்டை; சீரற்ற மூக்கு. இதுதான் பெருமாளின் திருவுருவமா? பாவம் பெருமாள்.
.
காணுகிற பொருளிலெல்லாம் தனக்கு உவப்பானவரின் உருவத்தை ஏற்றிப் பார்ப்பது ஒருவித மன நோய். இந்நோய்க்கு அதீத கடவுள் பக்தியும் ஒரு காரணம்.
.
வானத்தில் மிதக்கும் கருமேகக் சிதறல்களிலும், காரை பெயர்ந்த சுவரில் தென்படும் கோணல்மாணல்களிலும் யானை குதிரை போன்றவற்றின் உருவங்களைப் பொருத்திப் பார்ப்போமே, அது போலத்தான் இதுவும்.
.
வடிவம் சிதைந்த பாறையைப் பெருமாளின் உருவம் என்று நம்பிய மகேஷ், அந்த நம்பிக்கையை ‘தி இந்து’ மூலமாக பிறர் மனங்களிலும் திணிக்க முயன்றிருக்கிறார். மூடநம்பிக்கைத் திணிப்பு.
.
அன்பர் மகேஷ்குமாருக்கு ஒரு வேண்டுகோள்.
.
மீண்டும் ஒருமுறை, ‘நான் ஆறறிவு படைத்த ஒரு மனிதன்’ என்னும் நினைப்புடன் பாறையை உற்றுப் பாருங்கள். பெருமாளுக்குப் பதிலாக உயரமான கற்பாறையைக் காண்பீர்கள்.
.
மகேஷ்குமாருக்கு மட்டுமல்ல, ஏனைய பக்தகோடிகளுக்கும் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது…..
.
கல்லை நோக்கும்போது அது கல் என்பதை உணருங்கள். மண்ணை மண்ணாக உணருங்கள்.
.
கண்ணில் காணும் பொருளையெல்லாம் இம்மாதிரி கடவுளாக உருவகம் செய்யும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.
.
இது உங்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை நம்புங்கள்; உங்களின் அதீத கடவுள் பக்தி மிகவும் ஆபத்தானது என்பதையும் ஆழ்மனதில் பதித்திடுங்கள்.
.
நன்றி.
.
‘பசி’பரமசிவம்
Posted by ‘பசி’பரமசிவம் at 6/19/2016 05:48:00 PM
.
கடவுளின் கடவுள் பிலாக்ஸ்பாட்.
ஆதாரம்: http://kadavulinkadavul blogspo

ஞாயிறு, 26 நவம்பர், 2017

யார் 'இந்த' மகா.....பெரியவர்?

மன்னார்குடி.

அது தன்மான இயக்கத்தின் தொடக்க காலம்.

பெரியதொரு பொதுக்கூட்டத்தில் 'அவர்' பேசிக்கொண்டிருந்தார்.

மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த ஒருவர், தாள்களில் பென்சிலால் எழுதிய கேள்விகளைப் பேச்சாளருக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். பேச்சாளரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அனாவசியக் கேள்விகளால் சொற்பொழிவுக்கு இடையூறு நேர்வதைச் சகிக்காத பார்வையாளர்கள், மனம் கொதித்துக் கேள்விகள் எழுப்பியவரைச் சாட முற்பட்டார்கள்.

சொற்பொழிவாளரோ, அவர்களை அமைதிப்படுத்தியதோடு அல்லாமல், கேள்வி எழுப்பியவரை மேலும் தொடருமாறு மரியாதையுடன் வேண்டிக்கொண்டார்.

அந்த நபரும் தொடர்ந்து கேள்விகளை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தார்; பேச்சாளரும் பதில் தந்துகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில்.....

கேள்வியாளரின் பென்சில் உடைந்துவிட்டது.

செய்வதறியாது திகைத்த அவரை அழைத்து, "அய்யா, இதனால் எழுதுங்கள்" என்று சொல்லித் தம்மிடமிருந்த பேனாவை அவரிடம் தந்தார் பேச்சாளர்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் பெரிதும் மனம் நெகிழ்ந்த அந்த நபர் பேனாவைத் திருப்பித் தந்துவிட்டு, "நாயக்கர்வாள், என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப் பற்றிக் கூறுவது முற்றிலும் தவறு. நீங்கள் மகாப் பெரியவர். நமஸ்காரம்" என்றார்.

கேள்வியாளர் ஒரு பிராமணர்[அய்யர்].

அவரால் "நீங்கள் மகாப் பெரியவர்" என்று பாராட்டப்பட்டவர் சக அரசியல்வாதிகளால் 'நாயக்கர்' என்று அழைக்கப்பட்ட 'பெரியார் ஈ.வெ.ரா' ஆவார். நூலில்[பெரியாரின் பெண்ணுரிமை'] 'வே'என்று தவறாக அச்சாகியுள்ளது.
=====================================================================================
பெரியாரை 'மகாப் பெரியவர்' ஆக்கிய இன்னுமொரு நிகழ்வு பிறிதொரு பதிவில்! 
====================================================================================
நன்றி: 'பெரியாரின் பெண்ணுரிமை[என்.டி.சுந்தரவடிவேலு], மணி புத்தக நிலையம், விழுப்புரம். பதிப்பு ஆண்டு: 2013.






சனி, 25 நவம்பர், 2017

ஒரு தேவதையும் சில வெறி நாய்களும்!!!...'பகீர்' சிறுகதை.

நினைத்தபடி வாழ முடிவதில்லை; நினைத்தபடி சாவதும் சாத்தியமாக இல்லை. இப்படியொரு அவல வாழ்வுக்கு நம்மை ஆளாக்கியது யார்? நம்மில் மிகப் பெரும்பாலோர் நம்பும் கடவுள்தானே?!
வள் அழகானவள்..

பெயர்?

உண்மைப் பெயர் வேண்டாம். ‘பாமா’ என்று அழைப்போம்.

நான்கு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே பெற்ற தாயை இழந்தவள் பாமா. கனவுகளும் கற்பனைகளுமாய் இன்ப உலகில் சஞ்சரிக்க வேண்டிய பதின் பருவத்தில்  அவளுக்கு வாழ்க்கை வெறுத்துப்போனது.

காரணம்.....

நச்சு மனம் படைத்த சித்தி. அவளின் குடிகாரத் தம்பி பாமாவிடம் அத்துமீற முயன்ற போதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாத அவளின் கயமைக் குணம். பல முறை அழுது முறையிட்டும் சித்தியைக் கண்டிக்காத பெண்டாட்டி தாசனான தந்தை.

“உன் தம்பி மொடாக்குடியன். அவனை எனக்குப் பிடிக்கல. அடிக்கடி இங்க வந்து என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசுறான். அசிங்கமாப் பேசிட்டுக் கட்டிப் பிடிக்கிறான்” என்று சித்தியிடம் சொன்னால், “அவன்தானே உன்னைக் கட்டிக்கப் போறவன். தொட்டா என்ன?” என்பாள் சித்தி. அப்பாவிடம் முறையிட்டால், “உன் சித்தியிடம் சொல்லி அவனைக் கண்டிக்கச் சொல்றேன்” என்பார்; ஒரு நாளும் சொன்னதில்லை.

இப்படியொரு நிராதரவான நிலையில்தான் தற்கொலை முடிவுக்கு வந்தாள் பாமா.

இரண்டு முறை  முயன்றாள்.

முதல் முறை, நைந்துபோன பழைய தாவணியில் தூக்கிட்டுக்கொள்ள, அது அறுந்து விழுந்ததில் அவளின் மரணம் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது முயற்சியாகப் பூச்சி மருந்து குடித்தாள். அது காலாவதி ஆகியிருந்ததால் மரணத்தின் வருகை தாமதப்பட்டபோது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு  உயிர் பிழைத்துவிட்டாள்.

அன்று மொட்டை மாடியில் துணிகளை உலர்த்திவிட்டுப் பார்வையை உயர்த்திய போது, எதிரே அந்த மலை தென்பட்டது.

அதை மலை என்பதைவிட, ஒற்றக் கல்லால் ஆன பிரமாண்டமான குன்று என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

அந்தக் குன்று ஊரின் நடுவே இருந்தது. உச்சியில் பழைய கோட்டைச் சுவர்கள்.

தோழிகளுடன் இரண்டு முறை அங்கே போயிருக்கிறாள் பாமா.

கோட்டையின் வடக்குப் பக்கம் சரிவானது. அதில்தான் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருந்தன. மற்ற பக்கங்கள் செங்குத்தானவை. அங்கிருந்து குதித்தால், வழியில் ஒரு சிறு கீரல்கூட இல்லாமல் தரையை முத்தமிட்டுச் சாவைத் தழுவிக் கொள்ளலாம். சிலர் தவறி விழுந்தும், வேறு சிலர் தற்கொலை முயற்சியிலும் செத்திருக்கிறார்கள்.

குன்றை வெறித்தவாறு, சில கணங்கள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள் பாமா.

மீண்டும் தூக்கில் தொங்க நினைத்தாள். ஏற்கனவே மேற்கொண்ட தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிந்தது நினைவுக்கு வந்தது. குன்றின் உச்சிக்குப் போய், கோட்டைச் சுவர் ஏறிக் குதித்துவிடுவது  என்ற முடிவுக்கு வந்தாள்

வீட்டிலிருந்து வெளியேறினாள். “எங்கே போகிறாய்?” என்று கேட்க அப்போது அங்கு எவருமில்லை.

பாறையே உருகி ஆவியாவது போல, அனல் பறக்கும் நண்பகல் நேரம்.

மக்கள் நடமாட்டம் இல்லை.

படிகளில் தாவித் தாவி ஏறிக் குன்றின் உச்சியை அடைந்தாள் பாமா.

கோட்டைச் சுவர்மீது ஏறி நின்றாள்.

அவளின் அழகிய வதனம் கற்பாறை போல இறுகிக் கிடந்தது.

சில கணங்கள் அவள் பார்வை எங்கோ நிலைகுத்தி நின்றது. சற்று நேரம் எதையெதையோ யோசித்தாள்.

“இந்த முறை என் சாவு நிச்சயம்” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன. குதித்துவிட முடிவெடுத்து, இரு கண்ணிமைகளையும் இறுக மூடிய போது..........................

‘விசுக்’கெனத் தான் பின்னுக்கு இழுக்கப்பட்டதை உணர்ந்தாள் பாமா. அடுத்த கணமே, இரு கரங்களின் இரும்புப் பிடியில் தான் சிக்குண்டு கிடப்பதையும் அவளால் உணர முடிந்தது.

மீனெனெத் துள்ளி நழுவி விடுபட்டு நின்றாள்.

அவளெதிரே, கார்காலத்துத் தெரு நாய்கள் போல நான்கைந்து முரடர்கள் பல்லைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். களவாடிய பணத்தை வைத்து, அங்கே அந்த நேரத்தில் சூதாடும் ரவுடிக் கும்பல் அது.

“என்னம்மா பொண்ணு, காதல் தோல்வியா?” என்றான் ஒருவன்.

“காதல் பண்ணிக் கதையையும் முடிச்சுட்டுக் கம்பி நீட்டிட்டானோ அவன்?” என்றான் இன்னொருவன்.

“போனாப் போறான். கவலையை வுடு. நாங்க இருக்கோம்” என்று கண்சிமிட்டியபடி பாமாவை நெருங்கினான் மற்றொருவன்.

“ஐயோ.....” என்று அலற நினைத்தாள் பாமா. வறண்டுவிட்ட அவள் நாக்கு ஒத்துழைக்க மறுத்தது.

“கடவுளே...” என்று உள் மனம் அலற, உடல் நடுங்கப் பின்னோக்கி நகர்ந்தாள். கல்லொன்று அவள் கால்களை இடற மல்லாந்து சரிந்தாள்.

சரிந்து விழுந்த அவள் அதன் பிறகு எழவே இல்லை. கரைபுரண்டு வரும் காட்டாறெனப் பெருகிவிட்ட அந்த வெறி நாய்களின் வெறியுணர்ச்சி அவளை எழவிடவில்லை.

அந்த இளம் மொட்டு கசக்கிச் சீரழிக்கப்பட்ட போது, தன் முழுச் சக்தியையும் திரட்டி அவள் எழுப்பிய அவலக் குரலைப் பிறர் கேட்கவோ, அழகு கனிந்திட்ட இடங்களெல்லாம் கடித்துக் குதறப்பட்டு அவள் அலங்கோலமாய்க் கிடந்த காட்சியைப் பிறர் காணவோ இயலாதவாறு அந்தப் பழங்கோட்டை காவல் புரிந்தது.

பாவம் பாமா! அவள் சாவைத் தேடி ஓடினாள் என்பது உண்மைதான். அதற்காக இப்படியொரு சாவா?

அடக் கடவுளே!
********************************************************************************************************************













வியாழன், 23 நவம்பர், 2017

சொறிதலும் சொறிதல் நிமித்தமும்!

'ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே தவிர வேறென்ன?'[அர்த்தமுள்ள இந்துமதம் 69ஆம் பதிப்பு, 2005; பக்கம்: 121] என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
கண்ணதாசனின், கடவுள் குறித்த   கருத்துகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து, 'ஒரு தாயின் வயிற்றில் நாம் பிறக்க வேண்டிய நேரத்தை முடிவு செய்வதும் அவனே' என்கிறார் கவியரசு, 'நமக்குச் சூட்டப்பட வேண்டிய பெயரையும் அவனே குறிக்கிறான்' என்று  குறிப்பிடுவதோடு, 'மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளேயாவார். .....தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும் பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்து போன்ற ரேகை பொறித்து.....' என்னும் மதுரை ஆதீனக்கர்த்தரின் கருத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

தன் உள்ளங்கையிலிருந்த ரேகையைப் படித்திருப்பாரா கவிஞர்? 'ஆம்' என்றால் அதைப் பிரதி எடுத்து இந்த நூலிலும் இணைத்திருக்கலாம். மறந்துவிட்டார் போலும்!

தனக்குப் பெற்றோர் வைத்த 'முத்தையா' என்னும் பெயரும், 'கண்ணதாசன்' என்னும் புனைபெயரும்கூட, தான் தன் தாய் வயிற்றில் கருவாக வளரும்போதே இறைவனால் குறிக்கப்பட்டது என்கிறார்.

முத்தையா என்பது வைத்தீஸ்வரன் கோயில் சாமி பெயராம்!

கவிஞர் உயிரோடு இருந்தால், "வைத்தீஸ்வரன் சாமிக்குப்[சாமிக்கே] பெயர் சூட்டியது எந்தக் கடவுள்?" என்று கேட்கலாம். அவர் காலமாகிப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை.

அனைத்துப் பிரபஞ்ச நிகழ்வுகளுக்கும் கடவுளே காரணம் என்கிறார் கண்ணதாசன். அவ்வாறாயின் அந்த இறைவன் மனிதனுக்கு ஆறறிவைத் தந்தது ஏன்?

சுயமாகப் பெயர் சூட்டுவதற்குக்கூடப் பயன்படவில்லை என்றால், ஆறாவது அறிவு எதற்கு?

எதற்கு.....?

உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வதற்கா?

அரிப்பை உண்டாக்குபவனும் கடவுளே; சொறிந்துகொள்ளத் தூண்டுபவனும் அவனே என்கிறீர்களா?

உண்மைதான். எல்லாம் அவன் செயல்தான்.

அவனின்றி அணுவும் அசையாது. நம் ஆறறிவைப் பயன்படுத்திச் சுயமாகச் சொறிந்துகொள்ளக்கூட இயலாது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++








செவ்வாய், 21 நவம்பர், 2017

போற்றி...போற்றி! ஏழுமலையான் திருவடி போற்றி!!

குங்கமப்பூ ஸ்பெயினிலிருந்தும், கஸ்தூரி நேபாளத்திலிருந்தும், புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம்[?], நிரியாசம்[?] போன்றவை சீனாவிலிருந்தும் மேலும் சில வாசனைத் திரவியங்கள் பாரீசிலிருந்தும்.  ரோசாப்பூ[ஒரு பூவின் விலை ரூ80] ஐரோப்பாவிலுள்ள  ஆம்ஸ்ட்ராங்கிலிருந்தும் வரவழைக்கப்படுகின்றன['பாக்யா', அக்டோபர் 06-12; 2017] வார இதழ்ச் செய்தி].

பெரும் பொருட் செலவிலான இந்த இறக்குமதிகள் யாருக்காக? எதற்காக?
திருப்பதி ஏழுமலையான் என்னும் குபேரக் கடவுளுக்காக; அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக.

ஏழுமலையான் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய். இவற்றை இருப்பில் வைப்பதற்குப் போதுமான இடம் இல்லையாம்.

மேட்டுக்குடிக் கடவுளான இவருக்குச் சாத்தியிருக்கும் சாளக்கிராமத் தங்க மாலை 12 கிலோ எடை கொண்டதாம். மூன்று திடகாத்திரமான அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாத்த முடியுமாம்.

சூரிய கடாரியின்[?] எடை 5 கிலோ என்கிறார்கள். ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்புக் கொண்டதாம்.

இத்தனை பெரிய கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளுக்கான அபிஷேகத்துக்கு உள்ளூர் வாசனைப் பொருள்களைப் பயன்படுத்துவது மரியாதைக் குறைவு அல்லவா? அதனால்தான் பல்வேறு உலக நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது இந்த இறக்குமதி. தினமும் அபிஷேகம்தான். ஓர் அபிஷேகத்துக்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சம் ஆகிறதாம்.

இந்தப் பணக்காரக் கடவுள், அபிஷேகத்தின்போது மூன்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற அதிசயங்களையும் நிகழ்த்துகிறாராம். குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும்போது இவருக்கு வியர்ப்பதாகவும், பட்டு பீதாம்பரத்தால் அதை அர்ச்சகர்கள் துடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி அபூர்வ சக்திகள் வாய்த்த கடவுளாக இவர் இருப்பதால்தான், 'உள்சாத்து' வஸ்திரம் அணிவிப்பதற்காக ரூபாய் 20 ஆயிரம் செலுத்தி, 10 ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள் பக்தகோடிகள். 'மேல்சாத்து' வஸ்திரம் சாத்துவதற்காக, 12500 ரூபாய் செலுத்தி 3 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள்.

சாத்து வஸ்திரம் போர்த்துவதற்காகப் பெருந்தொகை செலவழிப்பதோடு மிகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் பக்தர்களும், அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை என்று தத்தம் இறைப்பணியைச் செவ்வனே செய்துவரும் அர்ச்சகர்களும்[?] வேண்டுகோள் வைத்தால்.....

மூன்றாம் கண்ணைத் திறந்து பார்க்கிற ஏழுமலையான் கண்டிப்பாக வாய் திறந்து பேசவும் செய்வார்.

பேசினால் என்னவெல்லாம் பேசுவார்?

"நான் கடவுள். உங்களின் பாரம்பரியமான உபசரிப்புகள் போதா. மண்ணுலக வாசனைத் திரவியங்களைத் தவிர்த்துத் விண்ணுலக வாசிகளின் தயாரிப்பான அமிழ்தத்தால் என்னைக் குளிப்பாட்டுங்கள். அவர்கள் அணியும் ஆபரணங்களால் என்னை அலங்கரியுங்கள்" என்று சொல்வாரா?  அல்லது.....

"அனைத்தையும் படைத்தவன் நான். விருப்பு வெறுப்பு அற்றவனும்கூட. புகழ்மொழிக்கும் வழிபாட்டுக்கும் நேர்த்திக்கடன்களுக்கும் மயங்குபவனல்ல. அபிஷேக ஆராதனைகளாலும் அலங்கரிப்புகளாலும் என்னை  மகிழ்வித்துப் பயனடையும் எண்ணத்தைக் கைவிட்டு, சக மனிதர்களையும் பிற உயிர்களையும் நேசிக்கப் பழகுங்கள்" என்பாரா?

என்னதான் பேசுவார் கடவுள்?

ஒரே ஒருதடவை வேண்டுகோள் வைக்கலாமே! செய்வார்களா?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


திங்கள், 20 நவம்பர், 2017

உயிரே...என் உயிரே! நீ போகுமிடம் சொல் ஆருயிரே!!

கடவுள் குறித்த ஆய்வுகளைக் காட்டிலும் ‘உயிர்’ பற்றிய ஆய்வுகளே மனித குலத்தின் மேன்மைக்குப் பெரிதும் பயன்படுவனவாக அமையும்.
கடவுள் உண்டா  என்னும் கேள்விக்கு இன்றுவரை விடை இல்லாதது போலவே, மரணத்திற்குப் பிறகு உடம்பிலிருந்து, உயிர், ஆவி, ஆன்மா என்னும் இவற்றில் ஏதோ ஒன்று வெளியேறுகிறதா என்ற கேள்விக்கும் விடையில்லை.

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும்’[இன்னொரு உடம்பிலிருந்து விடுபட்ட ஒன்றா அது? சிந்திக்கும் ஆற்றல் பெற்றதா? புதிய உடம்பில் புகும்வரை பரந்த வெளியில் அலைந்துகொண்டிருக்குமா? எங்கு? எங்கெல்லாம்? இப்படி அலையும் உயிர்களின் எண்ணிக்கை என்ன? கணக்கிட்டது யார்? யாரெல்லாம்? இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன].  [http://isha.sadhguru.org/blog/ta/udalil-uyir-nulaiyum-ragasiyam/] என்று அறிவியல் அடிப்படையிலான நிரூபணம் ஏதுமின்றி, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் கதையளந்து, தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

கடவுள் என்று ஒருவர் இருப்பதையோ, சாவுக்குப் பிறகு, மேற் சொன்னவற்றுள் ஏதோ ஒன்று உடம்பிலிருந்து வெளியேறுகிறது என்பதையோ நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள்.

பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோம். பார்த்த எதையும் இனி பார்க்கவே முடியாது; அனுபவித்த எதையும் இனி அனுபவிக்கவே முடியாது. இம்மாதிரியான அவலங்களுக்கு நாம் உள்ளாவது ஏன்? யார் காரணம்? எது காரணம்? இப்படிப் பலவாறாக எண்ணி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தவிர்க்க இயலாதவை.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................

அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன. பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

கரு உருவாகும் போது ஆன்மா என்ற ஒன்று அதனுள் புகுந்து விட்டது; உடம்பு அழியும் போது அதிலிருந்து வெளியேறுகிறது எனச் சொல்வதற்கும் கூட அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை. [இது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். ஆன்மாவும் மறுபிறப்பும் http://kadavulinkadavul.blogspot.com/2011/10/blog-post.html , ஆன்மாவுடன் ஓர் உரையாடல் http://kadavulinkadavul.blogspot.com/2011/11/blog-post_16.html ]

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஆசைதான். ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் ’காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
*******************************************************************************************************************
மிகப் பழைய பதிவு. புதுப்பிக்கப்பட்டது.

சனி, 18 நவம்பர், 2017

பெண்களுக்குக் ‘கற்பு’ ஏன்? கண்ணதாசன் கண்டறிந்த உலக நீதி!!!

#ஒருவன், தனக்குச் சொந்தமான நிலத்தை உழவு செய்து ‘வித்து’ இடுகிறான்[பயிர் செய்கிறான்]. அந்நிலத்தில் விளையும் பொருள் அந்த நில உரிமையாளனுக்குத்தான் சொந்தம்[இது உலக நீதி]. அது போல.....

மனைவி என்பவள் கணவனின் ‘உடைமை’. மனைவி என்னும் நிலத்தில் ‘வித்து’ இடுபவன் கணவன். எனவே, மனைவி பெற்றெடுக்கிற குழந்தைகள் கணவனின் குழந்தைகள் ஆகின்றன. அதனால்தான்.....

“நீ யாருடைய பிள்ளை?” என்று கேட்டால் தந்தை பெயரைச் சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால், தந்தை யார் என்பதைத் தாயார் சொல்லித்தான் அறிகிறோம்; அவரைத் தந்தையாக ஏற்கிறோம். தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பன் யார் என்பது தெரியாவிட்டால்[?!] தாயார் பெயர் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை#

‘ஆணுக்குப் பெண் அடிமையல்ல’ என்னும் உண்மையை ஏறத்தாழ உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், பெண் என்பவள் ஆணுக்குச் சொந்தமான விளைநிலம் ஆவாள்’ என்னும் பத்தாம்பசலித்தனமான கருத்துக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல; மறைந்த கவிஞர்[இவர் சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை] கண்ணதாசன்தான்.

தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலில் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரின்  கருத்தை மேற்கோள்  காட்டி அதைப் பாராட்டவும் செய்கிறார் கவிஞர்.

‘மனைவியானவள் கணவனின் உடைமை ஆதலால், அவள் கற்பு நெறி பிறழாமல் வாழ்வது அவசியம்; அது உலக நீதி’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
இப்படிப் பல அபத்தமான கருத்துகளின் தொகுப்புத்தான் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’[‘கண்ணதாசனின் அர்த்தமற்ற இந்துமதம்’என்னும் தலைப்பில் நூல் இருப்பதை அறிவேன். அதை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை].

இந்நூலில், பெரும்பான்மை மக்களின் மனங்களில் ஆழமாய்ப் பதிந்துவிட்ட மூடநம்பிக்கைகளுக்குப் பகுத்தறிவு முலாம் பூசியிருக்கிறார் கவிஞர்.

எளிய இனிய கவித்துவ நடையைக் கையாண்டு, மூடநம்பிக்கைகளைத் திணிப்பதில் கண்ணதாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கில் இந்நூல் விற்பனையாகியிருப்பதே இதற்குச் சான்று[இப்பதிவுக்குப் பயன்பட்டது ‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’, அறுபத்து ஒன்பதாம் பதிப்பு: ஃபிப்ரவரி, 2005].

தற்காலிக அல்லது, இறுதி மூச்சுவரை நீடிக்கிற துன்பங்களைத் தாங்குவதற்கான மன உறுதியைப் பெறுவதில் நம் மக்களுக்கு நாட்டமில்லை; அது குறித்துச் சிந்திப்பதும் இல்லை. கடின உழைப்பின் மூலம் பெற வேண்டியவற்றைக் கடவுளை வழிபடுதல், ஜோதிடனின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுதல் என்று குறுக்கு வழிகளில் பெற நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதுதான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ போன்ற நூல்கள் பல்லாயிரக் கணக்கில்  விற்பனையாவதற்கான காரணம் ஆகும்.

கண்ணதாசன் போன்ற ஆன்மிகப் பரப்புரையாளர்களையே பெரும்பாலான ஊடகங்களும் ஆதரிக்கின்றன; மிகச் சிறுபான்மையினராக உள்ள பகுத்தறிவாளர்களைச் சீந்துவதே இல்லை. 

ஊடகங்களைத் திருத்தும் முயற்சியில் சிறுபான்மைச் சிந்தனையாளர்கள்[எண்ணிக்கை என்ன?] ஈடுபடுவார்களா? அவர்களின் முயற்சி எள்ளளவேனும் பலன் தருமா?

ஆழ்ந்து சிந்தித்தால் கவலைதான் மிஞ்சுகிறது.

காலம் ஒரு நாள் மாறும்[?]. காத்திருப்போம்.

[அர்த்தமுள்ள இந்துமதத்தால் விளையும் அனர்த்தங்கள் குறித்து வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் எழுதுவேன்].

நன்றி.
=====================================================================================

வியாழன், 16 நவம்பர், 2017

காந்தி கண்ட கனவும் சிங்கப்பூர்ப் பெண்களும்!....[பத்து வரிப் பதிவு]

‘அழகான இளம் பெண்கள், நகையணிந்து நட்ட நடு இரவில் அச்சமின்றித் தன்னந்தனியாக நடந்து செல்லும் நிலை உருவாகும்போதுதான் நம் நாடு சுதந்திரம் பெற்றதாகக் கருத முடியும்’ என்றார் காந்தியடிகள்.

காந்தி கண்ட கனவை அவர் வாழ்ந்த இந்தப் புண்ணிய பாரதம் நனவாக்கவில்லை. குட்டி நாடான சிங்கப்பூர் அதைச் சாதித்திருக்கிறது. வாழ்க சிங்கம் நிகர் ‘சிங்கை’ ஆடவர்கள்!

சிங்கப்பூரில்.....

#பெண்கள், குறிப்பாக, நகையணிந்த  இளம் பெண்கள் தத்தம் பணி முடித்து, நடந்தோ வாகனங்களை ஓட்டிக்கொண்டோ நள்ளிரவில் கொஞ்சமும் அச்சமின்றி வீதிகளில் செல்கிறார்கள்#
=====================================================================================
நன்றி: பேரா.பா.சீதாராமன், ‘சிங்கையில் 50 நாட்கள்’, ஸ்ரீவிவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தர்மபுரி. முதல் பதிப்பு: 2008.

செவ்வாய், 14 நவம்பர், 2017

அடச்சீ...த்தூ...இவர்களா உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க உதவும் கடவுள்கள்?!?!

“ஜோதிடம் ஓர் அறிவியல் கலையே” என்று  வாதிடும் இன்றைய ஜோதிடர்கள் பலரும், நவக்கிரகங்களைக் கடவுள்களாக உருவகித்தே ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுகிறார்கள். 

நவக்கிரகங்கள் கடவுள்களா?

இந்தக் கடவுள்களின் அவதாரம் பற்றிய வேதபுராணக் கதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து முடித்து, இவர்களெல்லாம் கடவுள்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சூரியன்:
இந்தக் கடவுள், காசியப முனிவருக்கும் ‘அதிதி’ என்கிற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்ததால், ‘ஆதித்தன்’[சூரியனின் வேறு பெயர்] என்ற பெயரைப் பெற்றான் [பாரதம்]. அதிதி 12 சூரியன்களைப் பெற்றதாகவும்  ஒரு சூரியனே மாதந்தோறும் வேறு வேறு கோலம் பூணுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

[சூரியன் தோன்றுவதற்கு முன்பே காசியபர் போன்ற மானுடர்கள் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?]

மார்க்கணடேய புராணம் சொல்லும் இன்னொரு கதை.....

இருள் மயமான இந்த அண்டத்தைப் பிரமன் பிளந்தான்[எதற்கு?]. அப்போது ‘ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்துதான் சூரியன் தோன்றினான். 

[கற்பனையானவை எனினும் மேற்கண்ட கதைகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகமில்லை].

சந்திரன்:
வில்லிபுத்தூரார் சொல்கிறார்: “எங்கள் இறைவனாகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன் இவன்; நாள்தோறும்[?!?!?!?!?!] வானில் உள்ள நட்த்திர மங்கையரைக் கூடிக் குலபுபவன்.....”

இவனின் பிறப்பை விவரிக்கும் இதனினும் சுவையானதோர் அதிசயக் கதை.........

‘அத்திரி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரிடமிருந்து வெளிப்பட்ட ‘விந்தணு’அவரின் உள்ளுறுப்புகள் வழியாக மேல் நோக்கிச் சென்று அவரின் கண் வழியாக வெளிப்படலாயிற்று.

அதனைக் கண்ணுற்ற இந்திரன், ஒரு பெரிய யோகியின் விந்தணு வீணாவதைத் தவிர்க்க, அதைத் தன் கரங்களில் ஏந்தி[கர்மம்...கருமாந்தரம்...] ப் பக்குவமாய் ஒரு பாத்திரத்தில் சேமித்துத் தன் [இந்திர]விமானத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தான். அவ்விந்தணுவே காலப்போக்கில் சந்திரனாய் உருக்கொண்டது.

செவ்வாய்:
‘அங்காரகன். எனப்படும் செவ்வாய்க்கு, ‘மங்களன்’, ’ ‘குஜன்’ முதலான வேறு பெயர்களும் உண்டு.

சிவபெருமான் உமையம்மையைப் பிரிந்திருந்த காலத்தில், ஒரு நாள், அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வேர்வை வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் சந்திரனாக உருவெடுத்தது. இவனை நிலமகள் வளர்த்து ஆளாக்கினாள்.
[மனித உயிர்கள் தோன்றுவதற்கு விந்தணு தேவைப்படுகிறது. ஆனால், தேவர்களின் பிறப்புக்கு வெறும் வியர்வையே போதும் போலிருக்கிறது!]

பாரத்துவாச முனிவரின் விந்தணுவிலிருந்து சந்திரன் தோன்றினான் என்பதும் மற்றுமொரு புராணக்கதைதான்!

புதன்:
‘தாரை’ என்பவள் குருபகவானின் மனைவி. இவள் சிலகாலம் சந்திரனின் அழகில் கிறங்கி மயங்கி, அவனுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தாள்; கருவுற்றாள்.

கருவுற்ற நிலையில் மீண்டும் குருபகவானோடு இணைந்து இல்லற இன்பம் துய்க்கலானாள்[அடத் தூ.....!]. இந்நிலையில் புதனைப் பெற்றெடுத்தாள்.

‘குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்ற ஐயம் பலருக்கும் எழவே, “இக்குழந்தைக்குச் சந்திரனே தந்தையாவான்” என்று அறிவித்தாளாம் தாரை.

[தேவருலகில் எந்த அளவுக்குப் பெண்ணுரிமை போற்றப்பட்டிருந்தது பார்த்தீர்களா?]

இந்த உண்மையைப் பலரும் அறியும் வகையில் பிரமதேவனே அறிவிப்புச் செய்ததாகவும் புராணங்கள் சொல்லுகின்றன.

பிருகஸ்பதி [எ] வியாழ பகவான்:
தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கிய ‘குரு’வைத்தான் இவ்வாறு அழைப்பார்கள். இச்சொல்லுக்கு ‘அறிவில் சிறந்தவன்’ என்பது பொருள்.

பிரமதேவனின் பிரியத்திற்குரிய புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவரின் மகன் இவன். தாய் பெயர் சிரத்தா தேவி.

பிருகஸ்பதி பொன் வண்ண மேனி கொண்டவராம். நான்கு திருக்கரங்களை உடையவராம்[இரண்டு போதாதா?].

சுக்கிரன்:
இவர் பிருகு முனிவரின் திருமகனாக உதித்தவர்; அசுரர்களின் குரு.

முழுமுதல் கடவுளான சிவபெருமானின் திருவயிற்றில் தங்கியிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த அதிசயப் பிறவி இவர்![ஹே.....என்ன அதிசயம்!] இயல்பான தன் உடலிலிருந்து வெளி்யேறி, அந்தணன், அரசன், வேடன், மலைப்பாம்பு என்று பல உருவங்கள் பெற்று அலைந்து திரிந்து ஞானம் பெற்று, காலனின் ஆணையால் அசுரர்களுக்குக் குருவானான் என்பது கதை.

சனி:
இவன் சூரியனின் மகனாவான்.

சூரியன், சஞ்ஞிகை என்பாளை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான்.
சூரியனிடமிருந்து வெளிப்பட்ட சூட்டைத் தாங்கும் சக்தியில்லாத சஞ்ஞிகை, தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி அங்கே விட்டுவிட்டுத் தன் தந்தையிடம் சென்றாள்.

அந்த நிழல் பெண்ணுடன்  சூரியன் புணர்ந்ததால்[நம் காதில் பூ!] பிறந்தவனே ‘சனி’ ஆவான்.

ராகு & கேது:
‘விப்பிரசித்தி’ என்னும் அசுரனுக்கும் ‘சிம்ஹிகை’ என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைக்கப் பெற்ற அமுதத்தை அசுரர்கள் பருகுவதைத் தடுக்க நினைத்தார் திருமால். மோகினியாக வடிவெடுத்து, இனிமையாகப் பேசி, எல்லோரையும் வரி்சையில் அமரச் சொன்னார். வரிசையில் முந்துவதற்கு அசுரர்கள் முண்டியடித்த நிலையில் தேவர்களுக்கு மட்டும் அமுதம் வழங்கினார். இதைக் கண்ணுற்ற ராகு, தேவ உருக்கொண்டு அமுதம் பெற்றுப் பருகினான். உண்மை வெளிப்பட்டபோது, திருமாலின் சக்ராயுதத்தால் அவன் தலை துண்டிக்கப்பட்டது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றொரு பகுதி ஒரு தேசத்தில் விழுந்தது. அமுதம் பருகிய காரணத்தால் ராகு சாகாமல் இரு வேறு உருவங்களில் ராகுவாகவும் கேதுவாகவும் வளர்ந்தான்.

இவன் சூரிய சந்திரர்கள் மீது பகை கொண்டு அவர்களைப்பீடிக்கத் தொடங்கினான். கிரகணம் என்பது இதுதான்.

உண்மையில், ராகு கேது என்னும் பெயர்களில் கிரகங்கள் இல்லை. இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ என்று சொல்லி ஜோதிட வல்லுநர்கள்[கில்லாடி ஜோதிடர்கள்!] சமாளிக்கிறார்கள்.
********************************************************************************************************************

சனி, 11 நவம்பர், 2017

தியானமும் மயானமும்!!!

'தியானம் என்பது மனம் அமைதி பெற அதை ஒருநிலைப்படுத்திச் செய்யப்படும் பயிற்சி ஆகும்.'  -தியானத்திற்குத் ‘தமிழ் விக்கிப்பீடியா’ தரும் சுருக்கமானதொரு விளக்கம் இது.
தியானம் செய்வது குறித்துக் கூகிளிலும் புத்தகங்களிலும் பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் எந்த ஒன்றையும்  புரிந்துகொள்வது எளிதாக இல்லை.

#rightmantra.com என்னும் தளம், ‘உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். அங்கே 12 இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரை இருப்பதாகக் கற்பனை செய்யவும். அதில் உங்கள் இஷ்ட தெய்வம் வீற்றிருப்பதாக எண்ணவும். அந்தத் தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்கவும். இது உங்கள் உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தும்’ என்கிறது# 

அதென்ன ‘உணர்வு மையம்’? புரியவில்லையே. இதுவே புரியாத நிலையில் சிவப்புத் தாமரையைக் கற்பனை செய்வது எப்படி? இஷ்ட தெய்வத்தை அங்கே அமர்த்துவது எப்படி? கடவுளின் இருப்பே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில் இம்மாதிரியான தியான முறைகள் பித்துக்குளித்தனமானவை. 

#நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுக் காற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை செய்யலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

“நான் தளர்வாக இருக்கிறேன.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் தயாராக இருக்கிறேன்.

என் மனம் முழுவதும் என் மூச்சுக்காற்றின் மீது கவனமாக இருக்கிறது.

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்” 
என்று  மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்குத் தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமையும்# என்றிப்படிச் சொல்பவர்களும் உண்டு[http://www.eegarai.net/t3077-topic.

மூச்சுக்காற்றை இழுத்துவிடுவது நல்ல உடல்நலப் பயிற்சிதான்; ‘யோகா’வில் சேர்த்தி. எளிதாகச் செய்துவிடலாம். தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் தயாராகவும்[எதற்கு?] இருக்கிறேன் என்றெல்லாம் சொல்வதும் அரிய செயலல்ல; சொல்லிவிடலாம். மூச்சுக் காற்றைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன்னு சொல்லணுமாமே, அது எதற்கு?

மூச்சுக் காற்றை ஏன் கவனிக்கவேண்டும்? 


மனம் உருகிச் சொல்லணுமாம். சொன்னால் ஏழு நாட்களில் மன அமைதி கிட்டுமாம்.  கிட்டுமா?


ஊஹூம்...பைத்தியம்தான் பிடிக்கும்.

நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அய்யா தியானம் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அவற்றின் சுருக்கம் கீழே.....

#கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முடியும், ஒரு மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன. ‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத்தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? 

இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாகச் சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். 

எனவே, ‘மனம்‘ என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள் தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான். எனவே தியானம் என்பதன் நோக்கம், எவை நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களைத் தனியே பிரித்தெடுப்பதுதான்[http://isha.sadhguru.org/blog/ta/enakku-dhyanam-varuma]

எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்[மனிதர்களா கண்டுபிடித்தார்கள்?! அது இயற்கையானதல்லவா?]. ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல; நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு#

தான் சொல்ல நினைத்தவற்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சத்குரு ஜக்கி.

ஒரு வரியில் சொன்னால், உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பிரித்தெடுப்பதுதான்[மனதை வெறுமை ஆக்குவது] ‘தியானம்’ என்பது இவரின் கருத்து.

சொல்வது எளிது. செயல்படுத்த இயலுமா? 

இது சாத்தியப்பட்டால் மனத் துன்பம், உடல் துன்பம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்.

இவ்விரண்டிலிருந்தும் விடுபட்ட ஞானிகள், மகான்கள் ஆகியோருக்கான ஒரு பட்டியலை சத்குரு கொடுத்திருக்கலாம். செய்யவில்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், புட்டபர்த்தி சாயிபாபா, சீரடி சாயி, ரமண மகரிஷி என்றிவர்களைப் போன்ற மகான்களில் இவ்விரண்டு துன்பங்களிலிருந்தும் முற்றிலுமாய் விடுபட்டவர்கள் எத்தனை பேர்?

மனத் துன்பங்களிலிருந்து விடுபட்டார்களோ இல்லையோ, உடல் துன்பங்களிலிருந்து.....?


மேற்கண்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்.  அவர்களின் சாவுக்கான காரணங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்; அவர்கள் செய்த தியானத்தால் விளைந்த பயன்  புரியவரும்.

ஆக, செத்தொழிந்து மயானத்தில் அடைக்கலம் புகும்வரை உணர்ச்சி, எண்ணம் போன்றவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியமே இல்லை; இல்லவே இல்லை.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அகற்றி மனதை வெறுமையாக்குவது தேவையா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.

நம் பதில், தேவையற்றது என்பதுதான். தியானத்திற்குப் பதிலாக.....

தீய எண்ணங்களை மட்டும் மனதிலிருந்து அகற்றி எந்நேரமும் நல்ல எண்ணங்களை அதில் நிறைத்து வாழ்வது சிறந்தது.

நல்ல எண்ணங்களை மனதில் சேமிப்பதற்கு நேரம் காலம் ஏதும் தேவையில்லை. அது தனியிடமோ பொது இடமோ, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்.....

‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.


‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’


‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’


‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’

‘தன்னம்பிக்கையை வளர்ப்பேன். இறுதி மூச்சுவரை, தீய உணர்வுகளை அண்டவிடாமல் வாழ்ந்து முடிப்பேன்.’

என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் அவற்றைப் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முகப்புப் படம்[[Header] சத்குருவின் வலைப்பக்கத்திலிருந்து சுட்டது. அன்னாருக்கு நன்றி.