சனி, 11 நவம்பர், 2017

தியானமும் மயானமும்!!!

'தியானம் என்பது மனம் அமைதி பெற அதை ஒருநிலைப்படுத்திச் செய்யப்படும் பயிற்சி ஆகும்.'  -தியானத்திற்குத் ‘தமிழ் விக்கிப்பீடியா’ தரும் சுருக்கமானதொரு விளக்கம் இது.
தியானம் செய்வது குறித்துக் கூகிளிலும் புத்தகங்களிலும் பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் எந்த ஒன்றையும்  புரிந்துகொள்வது எளிதாக இல்லை.

#rightmantra.com என்னும் தளம், ‘உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். அங்கே 12 இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரை இருப்பதாகக் கற்பனை செய்யவும். அதில் உங்கள் இஷ்ட தெய்வம் வீற்றிருப்பதாக எண்ணவும். அந்தத் தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்கவும். இது உங்கள் உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தும்’ என்கிறது# 

அதென்ன ‘உணர்வு மையம்’? புரியவில்லையே. இதுவே புரியாத நிலையில் சிவப்புத் தாமரையைக் கற்பனை செய்வது எப்படி? இஷ்ட தெய்வத்தை அங்கே அமர்த்துவது எப்படி? கடவுளின் இருப்பே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில் இம்மாதிரியான தியான முறைகள் பித்துக்குளித்தனமானவை. 

#நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுக் காற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை செய்யலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

“நான் தளர்வாக இருக்கிறேன.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் தயாராக இருக்கிறேன்.

என் மனம் முழுவதும் என் மூச்சுக்காற்றின் மீது கவனமாக இருக்கிறது.

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்” 
என்று  மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்குத் தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமையும்# என்றிப்படிச் சொல்பவர்களும் உண்டு[http://www.eegarai.net/t3077-topic.

மூச்சுக்காற்றை இழுத்துவிடுவது நல்ல உடல்நலப் பயிற்சிதான்; ‘யோகா’வில் சேர்த்தி. எளிதாகச் செய்துவிடலாம். தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் தயாராகவும்[எதற்கு?] இருக்கிறேன் என்றெல்லாம் சொல்வதும் அரிய செயலல்ல; சொல்லிவிடலாம். மூச்சுக் காற்றைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன்னு சொல்லணுமாமே, அது எதற்கு?

மூச்சுக் காற்றை ஏன் கவனிக்கவேண்டும்? 


மனம் உருகிச் சொல்லணுமாம். சொன்னால் ஏழு நாட்களில் மன அமைதி கிட்டுமாம்.  கிட்டுமா?


ஊஹூம்...பைத்தியம்தான் பிடிக்கும்.

நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அய்யா தியானம் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அவற்றின் சுருக்கம் கீழே.....

#கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முடியும், ஒரு மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன. ‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத்தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? 

இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாகச் சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். 

எனவே, ‘மனம்‘ என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள் தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான். எனவே தியானம் என்பதன் நோக்கம், எவை நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களைத் தனியே பிரித்தெடுப்பதுதான்[http://isha.sadhguru.org/blog/ta/enakku-dhyanam-varuma]

எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்[மனிதர்களா கண்டுபிடித்தார்கள்?! அது இயற்கையானதல்லவா?]. ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல; நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு#

தான் சொல்ல நினைத்தவற்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சத்குரு ஜக்கி.

ஒரு வரியில் சொன்னால், உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பிரித்தெடுப்பதுதான்[மனதை வெறுமை ஆக்குவது] ‘தியானம்’ என்பது இவரின் கருத்து.

சொல்வது எளிது. செயல்படுத்த இயலுமா? 

இது சாத்தியப்பட்டால் மனத் துன்பம், உடல் துன்பம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்.

இவ்விரண்டிலிருந்தும் விடுபட்ட ஞானிகள், மகான்கள் ஆகியோருக்கான ஒரு பட்டியலை சத்குரு கொடுத்திருக்கலாம். செய்யவில்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், புட்டபர்த்தி சாயிபாபா, சீரடி சாயி, ரமண மகரிஷி என்றிவர்களைப் போன்ற மகான்களில் இவ்விரண்டு துன்பங்களிலிருந்தும் முற்றிலுமாய் விடுபட்டவர்கள் எத்தனை பேர்?

மனத் துன்பங்களிலிருந்து விடுபட்டார்களோ இல்லையோ, உடல் துன்பங்களிலிருந்து.....?


மேற்கண்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்.  அவர்களின் சாவுக்கான காரணங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்; அவர்கள் செய்த தியானத்தால் விளைந்த பயன்  புரியவரும்.

ஆக, செத்தொழிந்து மயானத்தில் அடைக்கலம் புகும்வரை உணர்ச்சி, எண்ணம் போன்றவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியமே இல்லை; இல்லவே இல்லை.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அகற்றி மனதை வெறுமையாக்குவது தேவையா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.

நம் பதில், தேவையற்றது என்பதுதான். தியானத்திற்குப் பதிலாக.....

தீய எண்ணங்களை மட்டும் மனதிலிருந்து அகற்றி எந்நேரமும் நல்ல எண்ணங்களை அதில் நிறைத்து வாழ்வது சிறந்தது.

நல்ல எண்ணங்களை மனதில் சேமிப்பதற்கு நேரம் காலம் ஏதும் தேவையில்லை. அது தனியிடமோ பொது இடமோ, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்.....

‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.


‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’


‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’


‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’

‘தன்னம்பிக்கையை வளர்ப்பேன். இறுதி மூச்சுவரை, தீய உணர்வுகளை அண்டவிடாமல் வாழ்ந்து முடிப்பேன்.’

என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் அவற்றைப் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முகப்புப் படம்[[Header] சத்குருவின் வலைப்பக்கத்திலிருந்து சுட்டது. அன்னாருக்கு நன்றி.