செவ்வாய், 21 நவம்பர், 2017

போற்றி...போற்றி! ஏழுமலையான் திருவடி போற்றி!!

குங்கமப்பூ ஸ்பெயினிலிருந்தும், கஸ்தூரி நேபாளத்திலிருந்தும், புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம்[?], நிரியாசம்[?] போன்றவை சீனாவிலிருந்தும் மேலும் சில வாசனைத் திரவியங்கள் பாரீசிலிருந்தும்.  ரோசாப்பூ[ஒரு பூவின் விலை ரூ80] ஐரோப்பாவிலுள்ள  ஆம்ஸ்ட்ராங்கிலிருந்தும் வரவழைக்கப்படுகின்றன['பாக்யா', அக்டோபர் 06-12; 2017] வார இதழ்ச் செய்தி].

பெரும் பொருட் செலவிலான இந்த இறக்குமதிகள் யாருக்காக? எதற்காக?
திருப்பதி ஏழுமலையான் என்னும் குபேரக் கடவுளுக்காக; அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக.

ஏழுமலையான் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய். இவற்றை இருப்பில் வைப்பதற்குப் போதுமான இடம் இல்லையாம்.

மேட்டுக்குடிக் கடவுளான இவருக்குச் சாத்தியிருக்கும் சாளக்கிராமத் தங்க மாலை 12 கிலோ எடை கொண்டதாம். மூன்று திடகாத்திரமான அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாத்த முடியுமாம்.

சூரிய கடாரியின்[?] எடை 5 கிலோ என்கிறார்கள். ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்புக் கொண்டதாம்.

இத்தனை பெரிய கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளுக்கான அபிஷேகத்துக்கு உள்ளூர் வாசனைப் பொருள்களைப் பயன்படுத்துவது மரியாதைக் குறைவு அல்லவா? அதனால்தான் பல்வேறு உலக நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது இந்த இறக்குமதி. தினமும் அபிஷேகம்தான். ஓர் அபிஷேகத்துக்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சம் ஆகிறதாம்.

இந்தப் பணக்காரக் கடவுள், அபிஷேகத்தின்போது மூன்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற அதிசயங்களையும் நிகழ்த்துகிறாராம். குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும்போது இவருக்கு வியர்ப்பதாகவும், பட்டு பீதாம்பரத்தால் அதை அர்ச்சகர்கள் துடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி அபூர்வ சக்திகள் வாய்த்த கடவுளாக இவர் இருப்பதால்தான், 'உள்சாத்து' வஸ்திரம் அணிவிப்பதற்காக ரூபாய் 20 ஆயிரம் செலுத்தி, 10 ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள் பக்தகோடிகள். 'மேல்சாத்து' வஸ்திரம் சாத்துவதற்காக, 12500 ரூபாய் செலுத்தி 3 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள்.

சாத்து வஸ்திரம் போர்த்துவதற்காகப் பெருந்தொகை செலவழிப்பதோடு மிகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் பக்தர்களும், அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை என்று தத்தம் இறைப்பணியைச் செவ்வனே செய்துவரும் அர்ச்சகர்களும்[?] வேண்டுகோள் வைத்தால்.....

மூன்றாம் கண்ணைத் திறந்து பார்க்கிற ஏழுமலையான் கண்டிப்பாக வாய் திறந்து பேசவும் செய்வார்.

பேசினால் என்னவெல்லாம் பேசுவார்?

"நான் கடவுள். உங்களின் பாரம்பரியமான உபசரிப்புகள் போதா. மண்ணுலக வாசனைத் திரவியங்களைத் தவிர்த்துத் விண்ணுலக வாசிகளின் தயாரிப்பான அமிழ்தத்தால் என்னைக் குளிப்பாட்டுங்கள். அவர்கள் அணியும் ஆபரணங்களால் என்னை அலங்கரியுங்கள்" என்று சொல்வாரா?  அல்லது.....

"அனைத்தையும் படைத்தவன் நான். விருப்பு வெறுப்பு அற்றவனும்கூட. புகழ்மொழிக்கும் வழிபாட்டுக்கும் நேர்த்திக்கடன்களுக்கும் மயங்குபவனல்ல. அபிஷேக ஆராதனைகளாலும் அலங்கரிப்புகளாலும் என்னை  மகிழ்வித்துப் பயனடையும் எண்ணத்தைக் கைவிட்டு, சக மனிதர்களையும் பிற உயிர்களையும் நேசிக்கப் பழகுங்கள்" என்பாரா?

என்னதான் பேசுவார் கடவுள்?

ஒரே ஒருதடவை வேண்டுகோள் வைக்கலாமே! செய்வார்களா?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000