ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மதம் கடந்த ஒரு 'பெருந்தகை'யின் மரண உரை!

#என் தன்[சுய]நினைவோடு எழுதும் கடிதம் இது. எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழ்நிலையில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது.

என்னை முழுமையாக என் மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன். ஆனால், எனக்கு நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பையும் தரவில்லை.

இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பின் மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை.

வாழ்ந்த மட்டும் சமயச் சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது. மக்களுக்கு முழுமையாக உரித்தாக்கும் வண்ணமே என் சிந்தனையும் செயலும் அமைய வேண்டும் என்று விரும்பிய போதிலும், அதை முழுமையாக்க முடியாத குறை என் மனத்தில் உண்டு.

இறப்பு உடலின் செயல்களை நிறுத்துகிறது. எனினும், என் உடல் இறப்புக்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், என் உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க என் குடும்ப உறுப்பினர்களும் தோழர்களும் ஆவன செய்ய வேண்டுகிறேன். அப்படி வழங்குவது என்னை, என் வாழ்க்கையை என் விருப்பப்படி அர்த்தப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த நான் இவ்வாறு விருப்பம் எழுதி வைப்பது சரியா என்று என் உறவினர்களும் இஸ்லாமிய நண்பர்களும் கருதலாம். 

மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்; மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்.

உறுப்புக் கொடையும் உடற்கொடையும் மானுடத்துக்குச் செய்யும் உதவி என்று கருதுகிறேன். எத்தனை முஸ்லிம் மாணவ மாணவியர் மருத்துவம் பயில்கின்றனர். உடற்கூறு சோதனையின்றிப் பயிலும் மருத்துவக் கல்வி நிறைவு பெறுமா? எனவே, சமயம் சார்ந்தவர்கள்கூட இக்கொடைகளைத் தயங்காமல் வழங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாழ்வது இனிமையானது - போராட்டங்களோடும் புன்னகையோடும் இறப்பது நிறைவானது.

                                                                                                                    அன்புடன்,
                                                                                             இன்குலாப்[செகசீ.சாகுல் அமீது]
முதுமை முற்றுகையிட்டபோது, நீரிழிவால் ஒரு கால் நீக்கப்பட்ட நிலையில் கவிஞர் 'இன்குலாப்'[மறைவதற்கு முன்பு] எழுதிய கடிதம் இது.

சாவுக்கு அஞ்சியும், செத்த பிறகு என்ன ஆவோம் என்று புலம்பிக் கலங்கியும், தாடிமுடி வளர்த்த சாமியார்களையும் போலி ஞானியார்களையும் சரணடைகிற  மாந்தருக்கிடையே, மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்ற கவிஞர் இன்குலாப்பின் மனப்பக்குவம் நம்மால் என்றென்றும் நினைவுகூரத்தக்கது; [சாதி]மதம் கடந்து வாழ்ந்த அவரின் மனித நேயம் எக்காலத்தும் போற்றத்தக்கது.

கவிஞர் இன்குலாப்: முந்தைய பதிவுகள்:
http://kadavulinkadavul.blogspot.com/2014/01/blog-post_29.html
http://kadavulinkadavul.blogspot.com/2016/12/blog-post_9.html
=====================================================================================
இந்த ஆண்டில்[2017] இக்கடிதத்தை[கவிஞர் 07.02.09இல் எழுதியது] வெளியிட்ட கவிஞர் இன்குலாப் அவர்களின் மகள் 'ஆமினா பர்வினா' அவர்களுக்கும், கவிஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் 'நினைவுகூர்தல்' கட்டுரை வழங்கிய மூத்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கும், வெளியிட்ட 'தி இந்து[03.12.2017]வுக்கும் நம் மனம் நிறைந்த நன்றிகள்.