வியாழன், 22 பிப்ரவரி, 2018

குமுதம் 'நல்ல' குமுதம்!!!

செப்டம்பர் 2002  ‘குமுதம் ஹெல்த்’ இதழில் வெளியான ‘சோம்பல் விழிகள்’ பேட்டிக் கட்டுரையை அண்மையில்[மீண்டும்] படிக்க நேர்ந்தது. மிகவும் பயனுள்ள பேட்டி. படியுங்கள்; நண்பர்களுடனும் பகிருங்கள்.

சோ ம்பல் விழிகள்’ [ஆங்கிலத்தில் Amblyopia] என்னும் இந்தக் கொடிய நோய் பற்றிச் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி சொல்வதைப் பதற்றப்படாமல் படியுங்கள்.

பொதுவாக இந்த நோய் ஒன்று முதல் பத்து வயதுவரை உள்ள குழந்தைகளையே பாதிக்கும். இந்தப் பாதிப்பில் மூளைக்கும் பங்குண்டு என்பதுதான் வேடிக்கை.

மூளைதான் கண் பார்வையின் வீரியத்தைத் தீர்மானிக்கிறது. சில சமயம் ஒரு கண்ணில் மட்டும் பார்வையின் வீரியம் அதிகமாக இருக்கும். மற்றொன்றில் குறைவாக இருக்கும். இந்தக் குறைந்த அளவிலான வீரியம் மேலும் மேலும் குறையும். ஒரு கட்டத்தில் கண் பார்வையே இல்லாமல் போய்விடும். மூளையும் இதைக் கண்டுகொள்ளாது. காரணம், குறிப்பிட்ட அந்தக் கண்ணிலிருந்து சமிக்ஞைகள் ஏதும் மூளைக்குப் போகாமலிருப்பதுதான்.

தனக்கு இந்தக் குறை இருப்பது பெரும்பாலும் குழந்தைக்குத் தெரியாமலே இருக்கும். பெற்றோர் அறிவதற்கும் வாய்ப்புகள் குறைவு.

அப்புறம் எப்படிக் கண்டுபிடிப்பது?

குழந்தைக்குத் தடுப்பூசி போடும் காலக்கட்டத்திலேயே இது பற்றிய விழிப்புணர்வு தேவை.

குழந்தையின் ஒரு கண்ணை மறைத்து மற்றொரு கண்ணில் பார்வை தெரிகிறதா என்று சோதிக்க வேண்டும். குறை இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இரு கண்களிலும் இப்பாதிப்பு வரலாம்; மாறுகண் உள்ளவர்களுக்கும் வரக்கூடும்.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்தப் பாதிப்பு மிகக் குறைவு. காரணம், ஐந்து வயதான எல்லாக் குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் இச்சோதனை செய்ய வேண்டும் என்று அங்கு சட்டமே உள்ளது.

இந்த நோய் பெரியவர்களைப் பாதிப்பதில்லை.

இந்தியாவில் 2 - 4% குழந்தைகளிடத்தில் [11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை] ‘சோம்பல் விழிகள்’ பாதிப்பு உள்ளது.

சிகிச்சை என்ன?

நன்றாகப் பார்வை தெரியும் கண்ணை மூடிவிட்டு [மூடுவதற்குப் பேட்ச்கள் உள்ளன] சோம்பல் விழியை மட்டுமே பயன்படுத்துவது ஒன்றுதான் இதற்கு வழி.

இந்தப் பயிற்சியை ஒரு நாளில் 12 மணி நேரம் செய்ய வேண்டும். இப்பயிற்சி பல மாதங்கள் செய்யப்பட வேண்டும்.

கண்ணாடி அணியும் குழந்தையாக இருந்தால் அதை அணிந்து கொள்ளலாம்.

சோம்பல் விழியை மட்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் இழந்த பார்வையை திரும்பப் பெறலாம்.

இதைக் குணப்படுத்த மருந்துகள் உண்டா?

இதுவரை இல்லை [2002 வரை]. {இப்போது உள்ளதா என்பது தெரியவில்லை-'பசி'பரமசிவம்} 
********************************************************************************************************************