வெள்ளி, 23 மார்ச், 2018

'சூப்பர் ஆன்மிகவாதி' சாமியார் ஆன கதை!!!

'அவர்' ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றார்.

ஜம்முவில், 'ரியாசி' மாவட்டத்தில் உள்ள 'ஷிவ்கோரி' மலைக் கோவிலில் உள்ள குகைக் கோவிலில் சிவபெருமானுக்குப் பூஜை செய்தார்.

'ஷிவ்கோரி' [140 கி.மீ] கோயிலுக்கு ஹெலிகாப்டரில் செல்லாமல், காரில் பயணித்தும், மலைச்சரிவுகளில் படுவேகமாக நடந்து சென்றும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசித்தார்.

தர்மசாலாவில் வழிபாடு நிகழ்த்திவிட்டு, 'பைஜாத்' பகுதியில் இருக்கும் குக்கிராமம் ஒன்றில் உள்ள 'மகா அவதார் பாபாஜி' ஆஸ்ரமத்தில் தங்கி ஆண்டவனைத் தியானித்தார்.

ரிஸிகேசில் உள்ள 'தயானந்த சரஸ்வதி' ஆசிரமத்திற்குச் சென்று அவரின் முழு உருவச் சிலைக்குப் பூஜை செய்தார். மேலும் அவர், அதாவது நடிகர் ரஜினிகாந்த் ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட முயன்றபோது, நிருபர்கள், பேட்டி என்னும் பெயரில் தொல்லை கொடுத்தார்கள்.
மனம் சலித்த ஆன்மிக ஞானி ரஜினி சொன்னார்: ''1995ஆம் ஆண்டிலிருந்து இங்கே வருகிறேன். அரசியல்வாதிகள் அல்லாத நல்ல நண்பர்களுடன்[அரசியல்வாதிகள் எல்லோரும் கெட்டவர்கள் என்பதை உய்த்துணர்க] கங்கை, இமயமலை, சுத்தமான காற்று, தியானம், அமைதி என்று சில நாட்களைச் செலவிடத்தான் வந்தேன்.....

.....முன்பெல்லாம் எனக்குத் தனிமை கிடைத்தது. இப்போதெல்லாம் அது இல்லவே இல்லை. எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. அதை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். கிட்டத்தட்ட ஜெயில் வாழ்க்கைதான் இப்போது. பிரபலம் என்றாலே பிரச்சினைதான். அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆகணும்'' என்று. 

அவருக்கு நாம் 'அட்வைஸ்' பண்ண நினைப்பது இதுதான்.....

''ரஜினி அவர்களே, நீங்கள் எதையும் மிஸ் பண்ணத் தேவையில்லை. ஜெயில் வாழ்க்கையையும் தவிர்க்கலாம். எதன் பொருட்டும் எந்தவொரு விலையையும் தருதல் வேண்டாம். இவற்றிற்கான ஒரே வழி நீங்கள் 'சாமியார்' ஆக மாறுவதுதான். அவ்வாறு மாறும்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது இயற்கை. அது.....

'தமிழ்நாட்டில் 'சிஸ்டம்' சரியாக இல்லையே. அதைச் சரி செய்வது யார்?'

கவலைப்படாதீர்கள். அதை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்!

நன்றி சூப்பர் ஆன்மிகவாதி அவர்களே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினியின் பயண நிகழ்ச்சித் திரட்டல்: குமுதம்[28.03.2018] கட்டுரையலிருந்து. ''குமுதமே நன்றி!''
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கீழே ஒரு 'சூப்பர்' மூடநம்பிக்கை ஒழிப்புக் கதை. பழசுதான். படித்துவையுங்கள்.

                                           கடைக்குட்டி

தரகர் வந்து போன சிறிது நேரத்தில், வெளியே கிளம்பினார் வேல்சாமி.

“பொருத்தம் பார்க்கவா அப்பா?” கேட்டவள் அவரின் கடைசி மகள் யாழினி.

“சொல்லும்மா.”

“மனசைத் திறந்து சொல்லுங்கப்பா. மூனும் பொண்ணாப் பெத்திருக்கீங்களே, ஏம்ப்பா”.

“அது வந்தும்மா...........” உடைந்து சிதறின வார்த்தைகள். பேசும் சக்தியை இழந்திருந்தார் வேல்சாமி.

“அம்மா சொல்லியிருக்காங்கப்பா.  உங்க ரெண்டு பேர் ஜாதகப்படி, முதல் குழந்தை ஆண்பிள்ளைதான்னு நம்புனீங்க. அது நடக்கல. பெரிய அக்கா சாரு பிறந்ததுக்கு அப்புறமும் பையன் வேணும்னு ஆசைப்பட்டீங்க. ஜோசியரைப் பார்த்தீங்க. அடுத்தது பையன்தான்னு அவர் அடிச்சிச் சொன்னாரு. ஆனா, பையனுக்குப் பதிலா, அகல்யா அக்கா பிறக்கவும் ஆடிப் போனீங்க. அப்புறமும் ஆண் வாரிசு ஆசை உங்களுக்குப் போகல. ஒரு வி.ஐ.பி.ஜோதிடரைத் தேடிப் போய் உங்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினீங்க. அடுத்தது ஆண் சிங்கம்தான்னு அவர் உத்தரவாதம் தந்தாரு. என்ன ஆச்சு?.............”

பேசுவதை நிறுத்தி, பெத்த அப்பன் முகத்தை விஷமப் புன்னகையுடன் ஆராய்ந்தாள் யாழினி.

“மேலே சொல்லுமா.” பின்னாலிருந்து அம்மாவின் குரல். அவருக்குப் பின்னால் சாருவும் அகல்யாவும்.

“.....நீங்க எதிர்பார்த்த ஆண் சிங்கத்துக்குப் பதிலா ஒரு பொட்டச் சிறுக்கி  நான் தப்பாப் பொறந்து தொலைச்சிட்டேன். இதெல்லாம் ஒரு ‘ஃப்ளாஷ் பேக்’தான். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஜோசியத்தை நம்பி மூனு பொம்பளப் புள்ளைகளைப் பெத்து ஏமாந்த நீங்க, அதே ஜோசியத்தை நம்பி அவங்களக் கரையேத்த நினைக்கிறீங்களே, இது நடக்குமா அப்பா? நியாயமா அப்பா?.......

.......கல்யாணம்கிற ஓட்டப் பந்தயத்துல, ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், செவ்வாய் தோஸம், புதன் தோஸம், மூலம், கேட்டை, கூமுட்டை, வரதட்சணைன்னு பல தடைகளையும் தாண்டி ஜெயிச்சி வந்தாத்தான்  ஒரு கன்னி கழுத்தில் ஒரு ராஜகுமாரன் மாலை சூட்டுவான். நடுவுல தடுக்கி விழுந்துட்டா அவ நித்திய கன்னிதான். உங்க மூனு பொண்ணுகளும் நித்திய கன்னிகளாவே இருந்துடட்டும்னு நினைக்கிறீங்களா அப்பா?”

“என்னை மன்னிச்சுடுமா.” -கையிலிருந்த ஜாதகங்களைப் பரண் மீது கடாசினார் வேல்சாமி.
=================================================================================