சனி, 5 மே, 2018

'பார்சி' மதத்தவரின் நல்ல கடவுளும் கெட்ட கடவுளும்!!

உலகின் மிகப் பெரும்பாலான மதங்கள். 'கடவுள் ஒருவரே' என்று வலியுறுத்திய நிலையில், 'நல்லது செய்ய ஒரு கடவுள்', 'தீமை விளைவிக்க ஒரு கடவுள்' என்று இரண்டு கடவுள்களை உலகுக்கு அறிமுகம் செய்த புதுமையானதொரு மதம் 'ஈரானிய மதம்' ஆகும். இது பின்னர் 'சோராத்சர் சமயம்'[பார்சி-ஜொராஸ்டிரிய மதம்] என்று வழங்கப்பட்டது.
[1000 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் 'பார்சி'களின் நெருப்புக் கோயில்]
2600 ஆண்டுகளுக்குமுன்பு ஈரானில் வாழ்ந்த 'சோராத்சர்'  என்பவரால் உருவாக்கப்பட்டது இது. இன்ப துன்பங்களுக்கான காரணம் யாது என்று ஓயாது சிந்தித்துப் பல உண்மைகளைக் கண்டறிந்து சொன்னவர் சோராத்சர்.

கீழ்க்காணும் வகையிலான விவாதம், அவரின் கடவுள் குறித்த கொள்கைகளை அறிந்திட உதவுகிறது.

''.....உலகில் நன்மைகள் விளையக் காரணமானவர் 'அவுரா மசுதா' என்னும் கடவுள்'' -அன்று ஈரான் நாட்டு அரசனின் அவையிலிருந்த பூசாரிகளுடனும் மந்திரவாதிகளுடனும்[உருவ வழிபாட்டை வலியுறுத்தியவர்கள்]  நிகழ்த்திய விவாதத்தின்போது சோராத்சர் கூறியது.

''அவ்வாறாயின் தீமைகள் விளையக் காரணமானவர் யார்?'' -இது எதிராளிகளின் கேள்வி.

பதில்:
அங்கிரா மான்யூ என்னும் தீய சக்தியே தீமைகளைப் படைத்தது.

கேள்வி:
அவ்வாறாயின் கடவுளர் இருவர் இருப்பதாகச் சொல்கிறீர்களா?

பதில்:
ஆம். ஆதியில் இரண்டு சக்திகளிருந்தன. அவை நன்மைச் சக்தி, தீமைச் சக்தி எனப்படும். இரண்டும் மாறுபட்ட நோக்கங்களைக் கொண்டிருந்தபடியால், இவை இரண்டும் தனித்தனியாகச் செயல்பட்டன. நன்மைச் சக்திக் கடவுள் உலகில் விளையும் நன்மைகளுக்குக் காரணமாக இருந்தது. தீயது, தீமைகளுக்குக் காரணம் ஆயிற்று.

கேள்வி:
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இரண்டு கடவுள்களையும் நாம் வழிபட்டாக வேண்டுமே?

பதில்:
தேவையில்லை. நன்மைக்குக் காரணமான கடவுளை மட்டுமே வழிபட வேண்டும். இரண்டு கடவுள்களுக்கும் இடைவிடாத போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தீய கடவுள் அழியும்; நல்ல கடவுள் வெற்றி பெறுவார். அவருக்கு எக்காலத்தும் அழிவு என்பது இல்லை.

கேள்வி:
''எந்தவொரு ஆதாரத்தில் இப்படிச் சொல்கிறீர்கள்?''

பதில்:
''தீமைக்குக் காரணமான கடவுளுக்கு, முன்பு நடந்தனவற்றையோ இனி நடப்பனவற்றையோ அறிந்திடும் ஆற்றல் இல்லை. இது நல்லன நிகழ்த்தும் கடவுளுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.''

கேள்வி:
சரி. இவர்களில் மனிதர்களைப் படைத்தவர் யார்?

பதில்:
நன்மை புரியும் கடவுள்தான். தீய எண்ணங்களை நம்மில் புகுத்துவது மட்டுமே தீய கடவுளின் வேலை.

கேள்வி:
நல்லவரான கடவுள், நம் மனதில் தீய எண்ணங்கள் புகாதவாறு தடுத்திருக்கலாமே?

பதில்:
நம்மைப் படைத்ததோடு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்துவிட்டார் நல்லவரான கடவுள். தீய கடவுள் திணித்த தீய எண்ணங்களை ஏற்றுக்கொண்டது நம் தவறு. இருப்பினும், தவறுகளைத் திருத்தி நாம் நல்லவர்களாக வாழ்ந்திட நல்லவரான கடவுள் உதவுகிறார்......

.....அவரைப் பொருட்படுத்தாமல் நம் இச்சைப்படி நாம் நல்லது செய்தோ தீமை புரிந்தோ வாழ்கிறோம். நாம் செய்யும் நன்மை தீமைகள் பதிவு செய்யப்படுகின்றன. நன்மை புரிந்து வாழ்ந்தால் நாம் இறந்த பிறகு நம் ஆவி சொர்க்கம் செல்லும்; தீமை புரிந்து வாழ்ந்து செத்தால் நரகம் புகும்.

கேள்வி:
இந்த அவல வாழ்வுக்கு ஒரு முடிவே இல்லையா?

பதில்:
உண்டு. நன்மை புரியும் கடவுள் ஒரு நாள் தம்முடைய இறுதித் தீர்ப்பை வழங்குவார். அந்த நாளில்.....

மாண்டவர் அனைவரும் உயிர் பெற்றுத் திரும்புவர். காய்ச்சி உருக்கிய இரும்பு ஆற்றில் எல்லோரும் நீந்த வேண்டிவரும். நன்மை புரிந்து வாழ்ந்தவர்கள், குளிர்ந்த பாலாற்றில் மூழ்கியவர்போல் இன்பத்தில் திளைக்க, தீமை புரிந்தோர் அனைவரும் பூமியின் நடுப்பாகமான நெருப்புக் குழியில் தள்ளப்படுவார்கள். இதன் பிறகு.....

உலகில் எஞ்சியிருப்போர் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இந்த உலகமும் நல்லவர்கள் வாழும் இடமாகவே இருந்துகொண்டிருக்கும். எனவே, நல்லனவற்றை எண்ணி, நல்லன சொல்லி, நல்லவர்களாக வாழ்வது நம் எல்லொருடைய கடமை ஆகும்.

விவாதத்தின் போக்கு ஆரம்ப கட்டத்தில் பகுத்தறிவுக்கு ஒத்ததாக அமைந்திருப்பினும், இறுதிப் பகுதியில் சோராத்சர் தம் சுய விருப்பு வெறுப்புகளை வலிந்து திணித்திருப்பது கவனிக்கத்தக்கது.

எது எப்படியிருப்பினும், எந்தவொரு பொருள் குறித்தும் ஆழ்ந்து சிந்திக்கும் முறையை ஈரானியர்கள் கையாண்டிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய நடைமுறையாகும்.

மதம் குறித்த கூடுதல் விவரம்:
சோராத்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்போதைய ஈரான் மன்னன், கிரீசு, இந்தியா போன்ற நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பி, இம்மதக் கொள்கைகளைப் பரப்பினானாம்.

ஒரு காலக்கட்டத்தில், வயது முதிர்ந்த நிலையில் பகைவரால் கொலை செய்யப்படுகிறார் சோராத்சர். அலெக்சாந்தரின் ஈரான் மீதான படையெடுப்புக்குப் பின்னர், இம்மதம் தடை செய்யப்பட்டதால், மறைவாக இதைப் பின்பற்றியோர் எண்ணிக்கையும் குறைந்தது.

பின்னர் 400 ஆண்டுகள் கழித்து, ஈரான் மீது படையெடுத்து அதை அடிமைப்படுத்திய அராபியர்கள் முகமதுவின் சமயத்தைக் கத்திமுனையில் பரப்பியதாகச் சொல்லப்படுகிறது. உயிருக்கு அஞ்சிய பலர் வெளிநாடுகளுக்கு ஓடினர். இந்தியாவிலும் குடியேறினர். அவர்களே இன்று 'பார்சிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்[இந்நிகழ்வுகள் 1300 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றவை].

பார்சிகள், தங்களுடைய சமயமே உலகில் சிறந்தது என்று நம்புகிறவர்கள். தம் சமயக் கொள்கைகளைப் பிறருக்குப் போதிப்பதில்லை. பிறர் தம் சமயத்தைத் தழுவுவதற்கும் அனுமதிப்பதில்லை. இன்று ஏறத்தாழ, உலகம் முழுதும் இலட்சம் மக்கள் மட்டுமே சோராத்சர் சமயத்தைப் பின்பற்றி வாழ்கின்றனராம்.

குறிப்பு:
[சூடான இடுகைகள் பட்டியலில் 7ஆம் இடம் பெற்றுள்ளது இப்பதிவு{இரவு 10.10 மணி}. ஆனால், தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் காண இயலவில்லை!!!]
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதார நூல்: 'உலக சமயங்கள்', தமிழ்க்கூத்தன், ராணி வெளியீடுகள், சென்னை -602 024.

5 கருத்துகள்:

  1. ஆக எல்லா மதங்களுமே தன்மதம் உயர்வானது என்றே வாதாடுகின்றது என்பது மட்டும் உண்மை.

    ஈரான் இஸ்லாமிய நாடாக ஆனது இப்போதுதானா ?

    ஒருவேளை அவர்களில் பெரும்பாலானோர் இன்றும் ஹிந்தி, உருது பேசுவதற்கு காரணம் எனக்கு இப்பொழுது பிடிபடுகிறது.

    இன்றைய இந்திய அரசியல்வாதிகளிடம் பேரம் பேசினால் சுலபமாக மதம் பரப்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஈரான் இஸ்லாமிய நாடாக ஆனது இப்போதுதானா? //

      ஆமாம், பார்சிகளை விரட்டிவிட்டுத்தான் இஸ்லாமியர் ஈரானில் குடியேறியிருக்கிறார்கள். நான் ஆதாரம் காட்டிய நூலில் இன்னும் நிறையத் தகவல்கள் உள்ளன.கூகுள் தேடலிலும் புதிய தகவல்கள் கிடைத்தன.

      நம் அரசியல்வாதிகளிடம் பேரம் பேசினால் எதையும் சாதிக்கலாம்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. ஈரானிய மத தகவல்கள் உங்க பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
    பார்சிகளில் நேர்பார்வை கொண்டவர்கள்,சுதந்திரமானவர்கள் ஒரு சிலருடன் பழகும் சந்தர்பம் எனக்கு சில வருடங்களுக்கு முன்பு கிடைத்தது. தம் மீதான அராபியர்களின் மத ஆதிக்கம் கொண்ட முகமதுவின் ஆக்கிரமிம்பை சொல்லி மிகவும் வருத்தபட்டார்கள்.நானும் பதிலுக்கு தமிழர்களும் மதங்களின் மீதான பைத்தியம் கொண்டவர்கள் என்று சொல்லி வருத்தப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்சிகள் மிகவும் நேர்மையானவர்கள்; கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள்.

      பிற மதத்தவர்களின் தாக்குதல்களால் இழந்த சொத்துகளையும் தாய்நாட்டையும் அவர்களால் மீட்டெடுக்கவே இயலவில்லை.

      நன்றி நண்பர் வேகநரி.

      நீக்கு
  3. 23.04.2016 விகடன் கட்டுரையிலிருந்து.....

    ஈரான் மக்கள் அனைவரையும் முஸ்லிமாக மாற்ற முயற்சி நடந்ததால்தான் இவர்கள் இந்தியா வந்தனர். இவர்களின் பழங்கால மத நம்பிக்கையைக் காப்பாற்ற, அங்கிருந்து தப்பித்து இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். 6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது 70,000 பார்சி மக்கள் உலகம் முழுக்க வசிக்கின்றனர். தொழில்துறை மற்றும் வியாபாரத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    "இந்தியாவில் பார்ஸிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அறப் பணி மற்றும் மனித நேயப் பண்புகளில் சிறந்து விளங்குகின்றனர்'' என்று மகாத்மா காந்தி பாராட்டி இருக்கிறார். பார்ஸி இன மக்களின் உழைப்பு, பம்பாய் நகரின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது.

    தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா போன்றோர், இந்திய சுதந்திர இயக்கத்தில் இருந்த முக்கியமான பார்ஸியர்கள். இயற்பியல் வல்லுநர் ஹோமி பாபா, பாடகர் ஃப்ரெட்டி மெர்குரி, இசை இயக்குநர் ஜுபின் மேத்தா, இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா, தொழில் அதிபர்கள் டாட்டா, கோத்ரெஜ் மற்றும் வாடியா ஆகியோர் பார்ஸிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

    பதிலளிநீக்கு