வியாழன், 4 அக்டோபர், 2012

'கிறுக்கு'ப் பிடிச்ச குமுதமும் [10-10-2012] ‘கில்லாடி’ தேவிபாலாவும்!

இந்த வாரக் குமுதத்தில் ஒரு ’தழுவல்’ [திருட்டு?] கதை’யும் இருக்கிறது!

எழுத்தாளர் தேவிபாலா, ’அரைப் பக்கக் கதை’யை ’ஆறு பக்கம்’ ஆக்குகிறார்! 

”சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த ஒரே மிருகம் மனிதன்தான். சிரிப்பாய்ச் சிரிக்கிற வாழ்க்கை வாழ்பவனும் இவன்தான்”னு சொல்லுவாங்க.

மனிதனுக்குச் சொன்ன இந்தக் கருத்துரை ‘குமுதம்’ இதழுக்கும் பொருந்தி வருது!

”கதைகள் மூலம் வாசகரைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த இந்தக் குமுதம்தான், ’அரைவேக்காட்டுக் கதைகளை’ப் பிரசுரம் பண்ணி, வாசகரின் அறிவை மழுங்கடிக்கவும் செய்யுது”ன்னு சொன்னா அதை மறுத்துரைப்பார் எவருமில்லை.

பந்தயத்தில் தோற்பவர் மொட்டை போட வேண்டும் என்பது நிபந்தனை. வென்றவர் தோற்றவர் இருவரும் சலூன் போகிறார்கள். மொட்டை போடப் பணம் தருவது யார் என்பதில் பிரச்சினை. இருவருக்கும் இடையே தகராறு. சலூன்காரர் சொல்கிறார்: “நான் ஒரு சலூன்காரரிடம் போட்ட பந்தயத்தில் தோத்துட்டேன். தோற்றவர் இலவசமா ஒரு மொட்டை போடணும்கிறது நிபந்தனை. நீங்க பணம் தர வேண்டாம்” [கதாசிரியர்: அண்ணாதாசன்].

இப்படியொரு, நினைத்ததும் சிரிக்கத் தூண்டும் நகைச்சுவைக் கதை.

லஞ்சம் வாங்குற மாமனாரைக் கண்டிக்கிறான் மருமகன். மாமனார் சொல்லுறார்: “ வாங்குற சம்பளம் குடும்பச் செலவுக்குக் கட்டுபடி ஆகல. உங்களை வேற ஐந்து லட்சமும் ஐம்பது பவுனும் கொடுத்து வாங்கியிருக்கேன். இன்னும் மூனு பொண்ணுக கல்யாணத்துக்குக் காத்திருக்கு. லஞ்சம் வாங்காதேன்னு சொல்றீங்களே, இது நியாயமா மாப்ள?”

இப்படிச் சமுதாயத்தின் புரையோடிய புண்களைக் அழுத்தமாய்க் கிழித்துக் காட்டும் கதைகள் [படைத்தவர்: விஜயகுமார்].

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைச் சாடிக்கொண்டிருக்கும் ஒருவர், தன் மகனுக்கு வங்கியில் வேலை கிடைத்திருப்பதை அறிந்த மறு வினாடியே வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசுகிறார் [’இறைவன்’ என்பவரின் படைப்பு].

மனிதனின் பச்சோந்தித்தனத்தைப் படம்பிடிக்கிறது இக்கதை.

இவை, குமுதத்தில் முந்தைய ஆண்டுகளில் வெளி வந்த கதைகள்.

இப்படி, அவ்வப்போது அசத்தலான படைப்புகளை வெளியிட்டு வந்த குமுதத்துக்கு அண்மைக் காலங்களில் புத்தி பேதலித்துவிட்டது!

ஒரு கல்லுரி மாணவன். காதல் தோல்வி காரணமாக, அருகிலிருக்கும் மலை உச்சியிலிருந்து குதித்து உயிர்விடக் கிளம்புகிறான். இவனின் பிறந்த ஊரிலிருந்து ஃபோன் வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் இவன் ஒழுங்காகப் படிக்காததை நினைத்து, இவனை நம்பி வாழ்ந்த சகோதரி தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதைப் போலக் கண்கலங்க வைக்கும் கதைகளை எப்போதாவதுதான் வெளியிடுகிறது குமுதம்.

மற்றபடி, 99 விழுக்காட்டுக் கதைகள் வாசகருக்கு எரிச்சலூட்டுபவையே.

                                     *                                 *                                      *

இந்த வாரக் குமுதம் கதைகளைப் பார்ப்போம்.

ஒரு ‘பக்கோடா’ கதை. படைப்பாளி: -ஜெயாப்பிரியன்’.

குடிப்பழக்கம் இல்லாத ஜெகன், ’டாஸ்மாக்’ அருகில் உள்ள கடையில் பக்கோடா வாங்குவான்.

அன்று,“பக்கோடா ‘சப்’னு இருக்கே?”ன்னு கடைக்காரர்கிட்ட கோபப்படுறான்.

”குடிப்பழக்கத்தால கெட்டுப் போன குடிகாரர்களின் வயிறு மேலும் கெட்டுடக் கூடாதுன்னுதான் காரம் குறைவாப் போடுறோம். ருசியைவிட எங்களுக்கு மனிதாபிமானம்தான் பெரிசு”ங்குறார் கடைக்காரர்!

அடங்கொப்புறானே!  இப்படியொரு கடைக்காரர் எங்கய்யா இருக்கார்?
அவரை நேரில் சந்திச்சிக் கை குலுக்கணும்னு இந்த அறுவை துடிச்சிட்டிருக்கான்.  ஜெயாப்பிரியன், முகவரி கொடுமய்யா.

குடிக்கிறவனுக்குத் தொட்டுக்கச் ‘சுருக்’னு எதுனாச்சும் வேணும். ’சப்’னு பக்கோடா போட்டா அந்தக் கடையை எந்தக் குடிகாரனும் சீந்த மாட்டானே. இந்த உப்புப் பொறாத விசயம்கூடத் தெரியாம ஏய்யா கதை எழுதி எங்க கழுத்தை அறுக்கிறீங்க?

குமுதம் எடிட்டரை எப்படி வளைச்சுப் போடுறதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடு தலீவா. 

                          *                                        *                                               *

அடுத்து வருவது, ஒரு ‘சூப்பர் ஐடியா’ கதை. வழங்கியவர்: எஸ்.முகம்மது யூசுப்.

மருமக வந்ததும் ஒரு அம்மாக்காரி நல்லாவே சமைக்கிறதில்லையாம். ஏதாவது குறை இருக்குமாம். அதுக்கு முந்தி அற்புதமா சமைப்பாங்களாம்.

“ஏன் இப்படி?”ன்னு அவங்க வீட்டுக்காரர் கேட்கிறார்.

அந்தம்மா சொல்றாங்க: “மகனும் மருமகளும் தனிக் குடித்தனம் போகப் போறாங்க. நான் ருசியா சமைச்சுப் போட்டா,  ‘எங்க அம்மா சமையல் மாதிரி இல்லே’ன்னு மகன் பெண்டாட்டியைக் குறை சொல்லுவான்”.

எழுத்தாளர் யூசுப்பு! ஹலோ எடிட்டர்!

குமுதம் படிக்கிற எல்லாருமே கூமுட்டைகள்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா?

இனியும் இந்த மாதிரி கதைகள் எழுதி எங்களை எரிச்சலூட்டினா, கூடை கூடையா அழுகின நாமக்கல் முட்டை தயாரா இருக்கு, உங்களை நாறடிச்சுடுவான் இந்த அறுவை! ஜாக்கிறதை!

தெரியாமதான் கேட்குறேன், ஏய்யா, கல்யாணம் ஆகிற வரைக்கும் அந்த அம்மா தன் மகனுக்கு ருசியா சமைச்சுப் போட்டிருப்பாங்கதானே, புதுப் பொண்டாட்டி மயக்கத்தில் அதெல்லாம் மறந்துடிச்சா?

                                        *                                         *                                 *

இனி இடம் பெறுவது, ஒரு தழுவல் கதை [திருட்டுக் கதைன்னு சொல்ல வேண்டாம்].

ஷாமு’ என்பவர் எப்பவோ எழுதினதைத் தழுவி எழுதினவர்: -வி.சகிதாமுருகன். கதை: ‘பரிசோதனை’

ஒரு டாக்டர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்து போன ஒரு நோயாளியிடம், “நோய் குணமாயிட்டுதா?”ன்னு கேட்கிறார்.

நோயாளி, “ஆமா”ங்கிறார்.

நர்ஸ் டாக்டரிடம், “இவரை மட்டும் இவ்வளவு அக்கறையா விசாரிக்கிறீங்களே?”ங்கிறா.

“அக்கறையெல்லாம் இல்ல. அவருக்கிருந்த வலி எனக்கும் இருக்கு. டெஸ்ட் பண்ணக் கொடுத்த மருந்து பலன் தந்ததான்னு தெரிஞ்சிக்கக் கேட்டேன்”கிறார்.

ஷாமு கதை: தன்னிடம் வந்த நோயாளியிடம், வயித்து வலி எப்படிக் குணமாச்சி?”ன்னு டாக்டர் கேட்க, அவர் தனக்கு முன்பு வைத்தியம் பண்ணின டாக்டர் பேரைச் சொல்லுறார். அவர் முகவரியை இவர் கேட்கிறார். இவருக்கும் அதே வயித்து வலிப் பிரச்சினையாம்!

இதெல்லாம் திரும்பத் திரும்ப, நகைச்சுவைத் துணுக்குகளா வந்ததுங்க.

குமுதம் ஆசிரியருக்கு ஒரு பக்கத்தை நிரப்ப மேட்டரே கிடைக்கல. என்ன செய்வாரு பாவம்! நிராகரிக்க வேண்டிய இந்த்த் துக்கடாக் கதையைப் பிரசுரம் பண்ணிட்டார்.

நடிகையின் கொடியிடையோ அடிவயிறோ தெரியுற மாதிரி ஒரு படம் போட்டிருக்கலாம். கெடக்குது விடுங்க.

                               *                                      *                                   *

நண்பரோட காரில் அலுவலகம் புறப்படுறார் ஒருத்தர்.

பூனை குறுக்கே வந்துச்சாம். வீட்டுக்குள்ளே போயிக் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றார். இப்படி மூனு நாள் நடக்குது.

இவருக்கிருந்த மூட நம்பிக்கையை வெறுத்த நண்பர், அதைப் பத்திக் கேட்க, இவர் சொல்றார்; “வீட்டில் எல்லாரும் ஊருக்குப் போய்ட்டாங்க. பூனை குட்டிகள் போட்டிருக்கு. வீட்டைப் பூட்டிட்டுப் போய்ட்டா, வெளியே வந்த பூனை குட்டிகளுக்குப் பால் தர முடியாது. பாவம் குட்டிகள். பசியால் துடிக்கும்”.

இந்தக் கதையைப் படிச்சுட்டு, நான் மெழுகா உருகிக் கரைஞ்சு போயிட இருந்தேன். நல்ல வேளை, என் உள் மனசிலிருந்து எழுந்த ஒரு சந்தேகம் அதைத் தடுத்துடிச்சி.

அந்தச் சந்தேகம்.....................

பூனை, மூனு நாளும் இவர் புறப்படுற நேரம் பார்த்து எப்படிங்க குறுக்கே வந்துது?

பூனையை வெச்சி எழுதின கதை: ‘சகுனம்’. எழுதியவர்: கீர்த்தி.

குமுதம் அதிகம் விற்குதுங்கிற மதமதப்பில், அதன் ஆசிரியர், மூளைக்கு வேலையே கொடுக்காம கதைகளைப் பிரசுரம் பண்றார். எல்லார்த்தையும் படிச்சதில் எனக்குத் தலைவலியே வந்துடிச்சி.

தேவிபாலா எழுதின ஒரு பெரிய சிறுகதை  மிச்சமிருக்கு. கோடாலித் தைலம் தடவிகிட்டு அதைப் பத்தியும் சொல்லிடறேன். கதை: ‘இரண்டில் ஒன்று’

’காமேஷ்’ங்கிற பெரிய படிப்பெல்லாம் படிச்சி, வெளி நாடெல்லாம் போய் வந்த பையனுக்குப் பெத்தவங்க பொண்ணுப் பார்க்கிறாங்க.

ஏராள பொண்ணுகளைப் பார்த்ததில் ’சரண்யா’, ’அபிநயா’ன்னு அழகான, படிச்சி  நிறையச் சம்பாதிக்கிற ரெண்டு குட்டிகள் தேறுது.

சரண்யா, சுமாரா சமைக்கத் தெரிஞ்ச, டூ வீலர்கூட ஓட்டத் தெரியாத, கட்டுப்பெட்டியா வளர்க்கப்பட்ட பொண்ணு.

அபிநயா, இவளுக்கு நேர் எதிர். அட்டகாசமா கார் ஓட்டத் தெரிஞ்ச, எல்லார்கிட்டேயும் ‘கலகல’ன்னு பேசுற, யாரும் தன்னை அடக்கியாளுறதை விரும்பாத ‘அலட்டல்’ நவநாகரிக யுவதி.

[சரண்யாவைத்தான் தேர்ந்தெடுப்பாங்கன்னு இப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்களே?]

“ஒரு மாணவி எனக்கு மனைவியா வரட்டும்.கத்துக் குடுக்குற டீச்சர் வேண்டாம்”னு கதாநாயகன் காமேஷ் சொல்லுறதா கதையை முடிக்கிறார் பிரபல நாவலாசிரியர் தேவிபாலா.

அரையே அரைப் பக்கத்தில் சொல்லி முடிக்கிற கதைங்க இது. இதே theme ல, சின்னதும் பெரிசுமான பல கதைகள் படிச்சிச் சலிச்சவன் நான். நீங்க மட்டும் படிச்சிருக்க மாட்டீங்களா என்ன?

காமேஷ், மூட்டை முடிச்சுகளோட லண்டன் போனது. திரும்பி வந்தது. அம்மா, இதய அறுவை பண்ணிட்டது. கல்யாணம் பத்தி விவாதம் பண்றது. வரன் தேடினது. பொண்ணுகளின் தகுதிகளை விளாவாரியா எடுத்துச் சொன்னதுன்னு, இந்தக் கதையை ஆறு பக்கத்துக்குத் தேவிபாலா தேத்துனது ஆச்சரியமோ ஆச்சரியமுங்க. 

புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லவா?

ஒரு வரிக் கதையை நூறு வரிக் கதையாவும், ஒரு பத்து வரிக் கதையைப் பக்கா நாவலாகவும் எழுதிடுவாருங்க!

பாவம் குமுதம் ஆசிரியர்! பிரபல எழுத்தாளர்கள் அவரை எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பார்த்தீங்களா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











                              











5 கருத்துகள்: